இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆரம்பத்தில் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த விஜயதேவரகொண்டா, தற்போது தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் தான் வெற்றியடைந்திருந்தது. அதன்பின் வந்த டாக்ஸிவாலா படத்தில் ஆரம்பித்து தற்போது திரையரங்கில் வெளியாகியிருக்கும் பேமிலி ஸ்டார் முதற்கொண்டு ரசிகர்களிடையே பெரிய வெற்றியை பெறவில்லை. இதற்கு முன் வெளியான குஷி திரைப்படம் விஜய் தேவரகொண்டா திரைப்பயணத்தில் மிகப்பெரிய தோல்வியடைந்திருந்தது. அதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் " பேமிலி ஸ்டார் ". எப்பொழுதும் மிருணாள் தாகூர் நடிக்கும் படங்கள் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் நிலையில், இதற்கு முன் அவர் நடித்த சீதாராமம் மற்றும் ஹாய் நானா திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருந்தன. அதனால்தான் பேமிலி ஸ்டார் திரைப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பேமிலி ஸ்டார் திரைப்படம் பூர்த்தி செய்ததா என்பதை இக்கட்டுரையில் காணலாம்.


பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் காட்சிகள்

பேமிலி ஸ்டார் படத்தின் கரு :

இரண்டு அண்ணன்கள், இரண்டு அண்ணிகள், அவர்களுடைய நான்கு குழந்தைகள், ஒரு வயதான பாட்டி என பெரிய கூட்டுக் குடும்பத்தையே ஒற்றை ஆளாக சுமக்கிறார் கோவர்தன் (விஜய் தேவரகொண்டா). ஆதார் கார்டுகளையே சீட்டுக் கட்டைப்போல தூக்கிக் கொண்டு போகும் அளவுக்கு இவ்வளவு பெரிய குடும்பத்தில் பணக் கஷ்டமும், சில பல சிக்கல்களும் இருக்கின்றன.கோவர்தனின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடி வருகிறார் கல்லூரி மாணவி இந்து (மிருணாள் தாகூர்). தன் குடும்பத்தில் ஒருவராக பழகும் இந்து மீது தேவரகொண்டாவுக்கு காதல் அரும்புகிறது. இருவருக்கும் இடையே காதல் மலரும் தருணத்தில் இந்துவைப் பற்றிய ஓர் உண்மையை தெரிந்து கொள்கிறார் கோவர்தன். இது இருவருக்கும் இடையிலான காதலை முறிப்பது மட்டுமின்றி, நாயகன் தன் குடும்பத்துக்காக வேறு சில முடிவுகளையும் எடுக்க காரணமாக அமைகிறது. கோவர்தன் எடுத்த முடிவுகளால் என்ன நடந்தது? நாயகன் - நாயகி இருவரும் கடைசியில் சேர்ந்தார்களா? என்பதுதான் ‘பேமிலி ஸ்டார்’ படத்தின் திரைக்கதை.


விஜய் தேவரகொண்டா - பரசுராம் கூட்டணி

வெற்றி கூட்டணியின் சொதப்பல் :

'கீத கோவிந்தம்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த விஜய் தேவரகொண்டா - பரசுராம் கூட்டணி மீண்டும் ஒருமுறை ஒன்று சேர்ந்துள்ளது. ரொமான்ஸ், மசாலா, இசை என மூன்றும் சரியான விகிதத்தில் அமைந்த ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்த ‘கீத கோவிந்தத்தை’ கொடுத்த இந்தக் கூட்டணி இம்முறை பெரியளவில் சறுக்கியுள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் கதையை எப்படி விஜய் தேவரகொண்டாவிடம் சொல்லி இயக்குநர் சம்மதிக்க வைத்தார் என்பதே ஓர் ஆச்சர்யமான விஷயம். காரணம், 70, 80-களில் வந்து நொந்துபோன ஒரு அதரப் பழைய டெம்ப்ளேட் கதை. கதைதான் பழையது என்றால் திரைக்கதையில் ஒரு பேச்சுக்கு கூட சுவாரஸ்யம் என்ற ஒரு வஸ்து இல்லை என்று கூறப்படுகிறது. படம் தொடங்கியது முதலே எந்த இடத்திலும் ஒட்டாமல் பயணிக்கிறது. நாயகனின் குடும்பத்துக்கு பணக் கஷ்டம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தோசை மாவை கூட கண்ணாடி போல மெல்லியதாக சுடும் அளவுக்கு நாயகன் சிக்கனமாக இருக்கிறார். ஆனால், அதற்கான எந்த நியாயமும் படத்தில் வைக்கப்படவே இல்லை. படம் முழுக்கவே அவர்கள் குடும்பம் ஒரு எலைட் ஏழைக் குடும்பமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


பேமிலி ஸ்டார் படத்தின் போஸ்டர்கள்

மிருணாள் தாகூரின் முதல் டிசாஸ்டர் :

நாயகி மிருணாளின் பாத்திர வடிவமைப்பு அதற்கு மேல். அவர் முதலில் யார் என்பதிலேயே குழப்பம். பெரிய கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியின் சிஇஓ என்று பின்னர் சொல்கிறார்கள், ஆனால் தனது துறைக்கு சம்பந்தமே இல்லாமல் புத்தகம் எழுதுவதில் பிஹெச்டி செய்வதாகவும் காட்டுகிறார்கள். மிருணாள் தாகூருக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும், ஒவ்வொரு பிரேமிலும் கண்களை நகர்த்த முடியாத அளவுக்கு வசீகரிக்கிறார்.

தொடரும் தோல்வி படங்கள் :

தெலுங்கு சினிமாவில் நன்றாக நடிக்கக் கூடிய ஒருசில நடிகர்களில் விஜய தேவரகொண்டாவும் ஒருவர். அவர் ஆரம்பகட்டங்களில் நடித்த திரைப்படங்கள் ‘டாக்ஸிக்’ தன்மையை கொண்டிருந்தாலும், அவரது நடிப்புத் திறனுக்கு அவை நல்ல தீனியாக அமைந்தன. ஆனால் தொடர் விமர்சனங்களுக்குப் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்ட தேவரகொண்டாவுக்கு இதுபோன்ற ‘கிரிஞ்சு’ படங்களாக அமைவது துரதிர்ஷ்டம். படத்தில் பல இடங்களில் அவரது நடிப்பு ஓவர்டோஸ் ஆகவே தெரிகிறது.


படத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள காட்சிகள்

ரசிகர்களின் பார்வையில் பேமிலி ஸ்டார் படம் :

காதல் காட்சிகளிலும் சரி, குடும்ப உறவுகள் குறித்த காட்சிகளிலும் சரி எந்த இடத்திலும் எமோஷனல் அம்சங்களே இல்லை. ‘பேமிலி ஸ்டார்’ என்ற தலைப்பு கொண்ட படத்தில் உணர்வுபூர்வமாக நெகிழ வைக்கும் ஒரு காட்சி கூட இல்லாமல் போனதுதான் முரண். கோபி சுந்தரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை சுமார். கே.யு.மோகனனின் கேமராவில் ஒவ்வொரு காட்சியும் பளிச்சென்று இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா தொடர்பான காட்சிகள் ப்ரெஷ்ஷாக இருக்கின்றன. மொத்தத்தில் முதல் பாதி குடும்ப உறவுகளையும், இரண்டாம் பாதி காதலையும் மையமாக கொண்ட படத்தில், குறிப்பிட்டு நினைவில் கொள்ளும்படியான ஒரு காட்சி கூட அமையவில்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. சுவாரஸ்யமோ, நெகிழ்ச்சியான தருணங்களோ எதுவும் இன்றி வெறும் ‘கிரிஞ்சு ஸ்டாராக’ வந்திருக்கிறதாம் இந்த ‘பேமிலி ஸ்டார்’.

Updated On 15 April 2024 6:24 PM GMT
ராணி

ராணி

Next Story