search-icon

‘ராணி’யின் வரலாறு!


மிழ்ப் பத்திரிகை உலகில் மாபெரும் புரட்சியை உண்டாக்கியவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்கள். ‘உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு’ என்ற கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர். பாமரனும் தமிழ் படிக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் ‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி சரித்திரம் படைத்தார். அவர் விதைத்த விதைதான் இன்று ஆல் போல் தழைத்து பல்வேறு இதழ்களாகக் கிளைகள் பரப்பி, தமிழக வாசகர்களின் உள்ளங்களில் நிலைத்து நிற்கின்றன. அதில் ‘ராணி’, ‘ராணிமுத்து’ இதழ்களும் அடங்கும்.

தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே ‘தினத்தந்தி’ நாளிதழ் உச்சம் தொட்டதும், வார இதழ் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று சி.பா.ஆதித்தனார் அவர்கள் விரும்பினார். அவரின் எண்ணத்தை 1962-ம் ஆண்டில் இனிதே நிறைவேற்றினார் அவரின் புதல்வர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.


புத்தகத்தை வெளியிடுவதற்காக ‘ராணி சிண்டிகேட்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். வாசகர்கள், விளம்பரதாரர்களின் ஏகோபித்த ஆதரவால் வெகு வேகமாக வளர்ந்த இந்த நிறுவனம் பின்னாட்களில் ‘ராணி சிண்டிகேட் பிரைவேட்’ நிறுவனமாக மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்திலிருந்து ‘ராணி’ வார இதழ், மாதம் இருமுறை வெளியாகும் ‘ராணி முத்து’ மற்றும் ‘ராணி முத்து காலண்டர்’ போன்றவை வெளிவருகின்றன.

தொடக்க காலத்தில், வார இதழுக்கு ‘பெண்மணி’ என்று பெயர் சூட்ட பா.சிவந்தி ஆதித்தனார் முடிவு செய்திருந்தார். ஆனால், அவ்வாறு பெயர் வைத்தால் அது பெண்கள் மட்டும் படிக்கும் பத்திரிகையாகவே இருந்துவிடுமே என்று கருதி அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் இந்த வாரப் பத்திரிகை இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ‘ராணி’ என்று பெயர் சூட்டினார். தொடக்க காலத்தில், அட்டையில் ‘குடும்ப வார வெளியீடு’ என்ற வாசகம் இடம்பெற்றது. பின்நாட்களில் இதுவே ‘குடும்பப் பத்திரிகை’ என்ற வாசகமாக மாறியது.


‘ராணி’ முதலாவது இதழ் 13.5.1962-ம் ஆண்டு வெளிவந்தது. அப்போதைய அதன் விலை 13 காசுகள். தொடக்கத்தில் 5 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன. முதல் இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்தவர், அப்போது திரையுலகில் மகாராணியாக வலம் வந்த நடிகை சரோஜா தேவி.

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவால் 10-வது இதழே 50 ஆயிரம் பிரதிகளாக உயர்ந்தன. மிகக் குறுகிய காலத்தில் 4 லட்சம் பிரதிகளைத் தாண்டி, புதிய சாதனையும் படைத்தது.

‘வாராந்தரி ராணி’ ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த பெரும்பாலான வார இதழ்களும், அளவில் சிறிய தோற்றத்துடன் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், மேலைநாடுகளில் அச்சிடப்படும் வார இதழ்கள் அளவில் பெரியதாக இருப்பது போன்றே ‘வாராந்தரி ராணி’யும் இருக்க வேண்டும் என்று கருதி, தொடக்கம் முதல் இன்று வரை அளவில் பெரியதாகவே ‘ராணி’ இதழ்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட நாட்டின் பல மாநிலங்களிலும் ‘ராணி’ இதழ்கள் விற்பனை ஆகின்றன.

இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ‘ராணி’ இதழுக்கு பெருவாரியான வாசகர்கள் உள்ளதால், அந்நாடுகளுக்கும் அச்சுப் பிரதிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆரம்ப காலம் முதலே தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்பதே ‘ராணி’யின் கொள்கையாக இருந்து வருகிறது. ‘ராணி’ இதழ் படித்து தூய்மையான தமிழ் கற்றுக்கொண்டதாகப் பிரபலங்கள் பலரும் கூறுவதே இதற்குச் சான்று. கிராமப்புற பெண்கள் மத்தியில் ‘ராணி’க்கு அமோக வரவேற்பு உள்ளது.

‘ராணி’ இதழின் வெள்ளி விழா 1987-ம் ஆண்டு பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. 2012-ல் ‘ராணி’ பொன் விழா கண்டது.


நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமையும் ‘ராணி’க்கு உண்டு. அரசியல் பிரபலங்கள், முன்னணி நட்சத்திரங்கள், பல்துறை வித்தகர்கள் பலரும் ‘ராணி’ இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

சமூக அக்கறையுடன் தீட்டப்படும் தலையங்கம், அரிய கருத்துக்களைக் கொண்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், சிந்தனையைத் தூண்டும் சீரிய கட்டுரைகள், ஆன்மிகத்தின் சிறப்பைப் பறைசாற்றும் படைப்புகள், அறிவை விசாலமாக்கும் பல்சுவைத் தகவல்கள், மூளைக்கு வேலை, பல்வேறு துறைகளிலும் சாதித்த பிரபலங்களின் நேர்காணல்கள், பலவிதக் கலைகள் மற்றும் கலைஞர்களின் சிறப்பை ஊக்கப்படுத்தும் படைப்புகள், சுவையான சினிமா செய்திகள், எளிமையான சமையல் குறிப்புகள், துல்லியமாகக் கணிக்கப்படும் ராசிபலன்கள் என்று பல தரப்பினரும் விரும்பும் விதம் பல்சுவைப் படைப்புகளை வாரம்தோறும் வெளியிடுவது ‘ராணி’யின் சிறப்பு.

அனைத்துத் தரப்பு வாசகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இதழின் ஒவ்வொரு பக்கங்களும் மிகச் சிறப்பாக- நேர்த்தியாக அலங்கரிக்கப்படுகின்றன.

‘ராணி’ வார இதழின் அட்டைப் படத்தில் இடம்பிடிக்க பிரபலங்கள் பலரும் போட்டி போடுவதுண்டு. இவ்வாறு இடம் பெறுவதைக்கூட சிறந்த விருதாகக் கருதுவதே இதற்குக் காரணம்.

உயர் தரமான படைப்புகள் எளிய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் மிகக் குறைந்த விலைக்கு ‘ராணி’ அச்சு இதழ்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, இணையத்தில் மின் இதழாகவும் ‘ராணி’ வார இதழைப் படித்து மகிழலாம். ராணி ‘APP’ மூலமும் படிக்கலாம்.


ராணி முத்து

வாசகர்கள் மத்தியில் ‘ராணி’ வார இதழ் பெரிய அளவில் வரவேற்புப் பெற்றதைத் தொடர்ந்து, இலக்கியத் தரம் வாய்ந்த நாவல்களுக்கென தனி இதழ் ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்து, ‘ராணி முத்து’ எனும் இதழும் கொண்டு வரப்பட்டது. இதன் முதலாவது பதிப்பு 1968-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று வெளிவந்தது. அப்போதைய அதன் விலை 1 ரூபாய். ஏராளமான எழுத்தாளர்களை உச்சத்துக்குக் கொண்டு சென்ற பெருமை ‘ராணி முத்து’வுக்கு உண்டு. 1994-ம் ஆண்டில் ‘ராணி முத்து’ வெள்ளி விழா கண்டது.

ஆங்கிலத் தேதி அடிப்படையில் 1 மற்றும் 16-ந் தேதி என மாதந்தோறும் இரண்டு நாவல்களை ‘ராணி முத்து’ வெளியிடுகிறது. ‘ராணி முத்து’வில் முன்னாள் முதல்வர்கள் அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி, ராஜாஜி போன்ற பலரும் நாவல்கள் எழுதியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 ராணி முத்து காலண்டர்

முழுமையான பஞ்சாங்கக் குறிப்புகள், கோயில் விசேஷங்கள், முக்கிய நாட்கள் என அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ‘ராணி முத்து காலண்டரும்’ இதே குழுமத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. முதலாவது நாட்காட்டி வெளியீட்டு விழா 1972 டிசம்பர் 2-ல் நடைபெற்றது.

இல்லத்துக்கு தெய்வாம்சம் சேர்க்கும் விதம் அழகிய முருகன் கடவுள் தோற்றத்துடன் வெளிவரும் இந்த நாட்காட்டிக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் மிகுந்த வரவேற்புக் கிடைத்து வருகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் ‘ராணி முத்து’ முருகனைக் கண்ட பிறகுதான் பலரும் தங்கள் பணியைத் தொடங்குவது வழக்கம். உலகம் முழுவதும் சென்றடையும் பொருட்டு டிஜிட்டல் மூலமாகவும் இந்த நாட்காட்டியை கணினி, செல்போன் மூலம் பார்க்கும் வசதியும் இருக்கிறது.

‘ராணி’ இணைய இதழ்

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் பேரனும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மகனுமாகிய திரு.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தற்போது ‘ராணி ஆன்லைன்’ இணைய இதழ் வெளியாகிறது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அடுத்த தலைமுறையைக் கருத்தில் கொண்டும் ‘ராணி ஆன்லைன்’ இணைய (Website) இதழ் 2023-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி முதல் வாசகர்கள் மத்தியில் வலம் வருகிறது. கருத்துச் செறிவான கட்டுரைகள், ஆடியோக்கள், வீடியோக்கள் என அமர்க்களமாகக் களமிறங்கி இருக்கிறது. ‘ranionline.com’ என்ற இணையதளம் மூலம் ‘பார்த்து- கேட்டு- படித்து’ மகிழலாம்.