குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமான நிலையம் அருகில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள், விமான பணியாளர்கள், பயணிகள் என விமானத்தில் பயணம் செய்த மொத்தம் இருநூற்று நாற்பத்தி இரண்டு பேரும் விபத்தில் சிக்கினர். இதில் அதிர்ஷ்டவசமாக ஒரேயொரு நபர் மட்டுமே உயிர் தப்பினார். விமானத்தில் பயணித்தவர்கள், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்த மருத்துவ விடுதி மாணவர்கள் என, விமான விபத்து தொடர்பாக 270-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்தது. பல கனவுகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்களின் உயிர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி பிரிந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்கு விமான கோளாறு, பறவை குறுக்கே வந்திருக்கலாம் என பல காரணங்கள் கூறப்படுகின்றன. தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அறிவியல்பூர்வமாக பல காரணங்கள் கூறப்பட்டாலும், இந்த விபத்தை ஜோதிடர்கள் சிலர் முன்பே கணித்ததாக வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்நிலையில் இதுபோன்ற குழு மரணங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து அறிய ஜோதிடர் அடிமுடி சுவாமிகள் சுந்தரராஜனிடம் ராணி ஆன்லைன் நேர்காணல் ஒன்றை நடத்தியது. அந்த நேர்காணலில் அடிமுடி சுவாமிகள் பகிர்ந்துகொண்ட தகவல்களை இங்கு காண்போம்.
நிறைய பேரின் ஆத்மாக்கள், உடலிலிருந்து வெளியேற முயலும்போது குழு மரணங்கள் ஏற்படும் - அடிமுடி சுவாமிகள்
குழு மரணங்கள் நிகழ்வதற்கான காரணங்கள் என்ன?
இதுபோன்ற கோர விபத்துகள் நடைபெற இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று கிரக சேர்க்கை. நமது உடலில் நான்கு விஷயங்கள் உள்ளன; உயிர், ஆத்மா, உடல், மனம். இவற்றில் ஆத்மா என்பது கடவுளின் அம்சம். ஆத்மாவிற்கு கடவுளோடு எப்போதும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இந்த ஆத்மாவிற்கு உடலில் வாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் போகும். அப்போது உடலில் இருந்து வெளியேற உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கும். இதனால் குறிப்பிட்ட அந்த நபர்களுக்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணங்கள் அதிகமாக வரும். ஆத்மாக்கள் செய்யும் இந்த முயற்சி மனிதனின் மனசுக்கு தெரியாது.
ஆத்மா உடலைவிட்டு பிரிய நினைப்பது மனிதர்களுக்கு தெரியாதா?
ஆத்மா உடலைவிட்டு பிரிய நினைப்பது மனிதர்களுக்கு தெரியாது. காரணம், எண்ணம் வேறு, ஆத்மா வேறு. ஆத்மாவின் திட்டம் மனதிற்கு தெரியாது. ஒவ்வொரு ஆத்மாவும், அதுவும் மனிதனின் உடலைவிட்டு வெளியேற துடிக்கும் ஆத்மாக்கள் அனைத்தும் மற்ற ஆத்மாக்களுடன் தொடர்பில் இருக்கும். இறக்கப்போகும் ஆத்மாக்கள் எல்லாம் முன்கூட்டியே முடிவுசெய்து, இதுபோன்ற குழு மரணங்களில் சிக்கும். உடலைவிட்டு வெளியேற விரும்பாத ஆத்மா, இந்தக் குழுவில் தவறாக சேர்ந்துவிட்டாலும், கடைசி நேரத்தில் அந்த நபர்கள் மனதை மாற்றிக்கொள்வர். ஆத்மாவை உடலைவிட்டு செல்லவிடாமல், மரணத்திலிருந்து தப்பிக் கொள்வார்கள். இந்த விபத்தில்கூட உயிர் தப்பியவர்கள் அப்படிதான். விமானத்தை தவற விட்டுவிட்டோம் என கவலைப்பட்டவர், விபத்திற்கு பின் ‘நல்லவேளை நாம் அதில் செல்லவில்லை’ என நினைத்திருப்பார். அனைத்துக்கும் ஆத்மாவின் செயலே காரணம்.
முற்பிறவியில் பணத்தை உதாசீனம் செய்தவர்கள் இப்பிறவியில் பணத்திற்காக யாசகம் ஏந்துவார்கள்
மோசமான இறப்புகளுக்கு காரணம் என்ன?
ஒருவர் அங்க, அடையாளங்களுடன் இறக்கிறார். ஆனால் அப்படி இறந்தவர்கள் எவ்வளவோ பேரின் உடல்கள் அரசு மருத்துவமனையில்தான் இருக்கின்றன. உடல்களை வாங்க யாரும் வரமாட்டார்கள். அதனை அனாதைப்பிணம் எனக்கூறுவார்கள். ஏன் அவர்களை தேடி யாரும் வரவில்லை?. இந்த நவீனகாலத்தில் ஒருவரை அடையாளம் காண்பது என்ன அவ்வளவு கடினமா? ஏன் அவர்களுக்கான இறுதிச்சடங்கை அரசே செய்கிறது? வாழும்போது உறவுகளை மதிக்காமல் இருப்பவர்களே இதுபோல அனாதைப் பிணங்களாகின்றனர். சொல்வதற்கு அநாகரீகமாக இருந்தாலும், இது கடவுளின் சட்டம். நாம் வாழும் காலத்தை வைத்தே நம்மை அனைவருக்கும் தெரியும். ஆனால் நம் பூர்வ ஜென்மம் குறித்து யாருக்கும் தெரியாது. பூர்வ ஜென்மத்தின் அடிப்படையிலேயே சம்பவங்கள் நிகழ்கின்றன. மேலும் ஆத்மாவிற்கு இறப்பு, ஆயுள் என எதுவும் கிடையாது. எல்லாமே உடலுக்குத்தான்.
பாவம்! பாவி!
இறந்தவர்களை பார்த்தால் பாவம் என்கிறோம்; யாராவது தடுக்கி விழுவதை பார்த்தால், அய்யோ பாவம் என்கின்றோம். இந்த பாவம் என்றால் என்ன? ஏன் நாம் அதை சொல்கிறோம். அது நம் ஆன்மாவில் இருந்து வரும் வார்த்தை. முன்வினையை, அதாவது முற்பிறவியில் செய்தவற்றின் தற்போதைய பலனை பாவம் என்கிறோம். பாவி என்றால் நிகழ்காலத்தில் செய்த வினைகள் என்று அர்த்தம். பூர்வ ஜென்மத்தில் பணத்தை மதிக்கமால், ஊதாரித்தனமாக வாழ்ந்தவர் இப்போது யாசகம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். நாம் அவர்களுக்கு பாவம் எனக்கூறி காசு கொடுப்போம். ஒருவன் எதை மதிக்கவில்லையோ, பிற்காலத்தில் அதற்காக ஏங்கியே ஆகவேண்டும். அன்னத்தை அவமதிப்பவர் அதற்காக ஏங்கியே ஆக வேண்டும். முன்வினையே பிற்பலனாக அமையும்.
உடல்களைவிட்டு வெளியேற துடிக்கும் ஆத்மாக்கள் ஒன்றை ஒன்று தொடர்புகொள்ளும் சக்தி படைத்தவை!
குழு விபத்தில் சிக்கும் அனைத்து ராசியினருக்குமா நேரம் சரியில்லாமல் இருக்கும்?
பொதுப்பலன்கள் நடைமுறைக்கு வராது. ராசியை வைத்து பொதுப்பலன்கள் கூறுவது ஏமாற்றுவேலை. ஒரு நாளில் 100 பேர் பிறப்பர்; 150 பேர் இறப்பர். இதில் பிறப்பவர்கள் எல்லாம் ஒரே ராசியை சேர்ந்தவர்களாக இருப்பர். ஆனால் இறப்பவர்கள் எல்லாம் ஒரே ராசியை சேர்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். எனவேதான் ராசியை வைத்து பொதுப்பலன்கள் கூறுவது ஏமாற்றுவேலை என்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ஜாதகம். அந்த ஒவ்வொரு ஜாதகமும் தனித்தனி தலையெழுத்தை காட்டும். அவர்களுக்கு தனித்தனி தசாபுத்தி, நேரம் இருக்கும். ஒருவர்போல மற்றொருவருக்கு இருக்காது. ஒரே நொடியில் பிறப்பவர்களுக்கு மட்டுமே இவை அனைத்தும் ஒன்றாக இருக்கும். இரட்டையர்களுக்கே ஒரேமாதிரி வாழ்க்கை அமைவதில்லை. இருவரில் ஒருவருக்கே ஜாதக பலன் கூறமுடியும். ஜோதிடத்தில் பொதுப்பலனே பார்க்கக்கூடாது.
குழு மரணங்களை தவிர்க்க என்ன செய்யலாம்?
குழு மரணங்களை தடுக்க முடியாது. அது கடவுளின் திட்டம். இந்த விமான விபத்திற்கு இயந்திரக்கோளாறு காரணமா? விமானி காரணமா? அல்லது பறவை மோதியதா? என பல ஆராய்ச்சிகள் செய்து, காரணங்களை கூறுவர். ஆனால் பல மரணங்களுக்கு காரணங்களே கூறமுடியாது. இதுபோன்ற குழு மரணங்கள் இனியும் தொடரத்தான் செய்யும். காலம் காலமாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்துதான் வருகின்றன. பஞ்சபூதங்களில் நான்கு பூதங்களுக்கு 12 ராசிகளை பிரித்து வைத்துள்ளோம். இந்த கிரக கூட்டங்கள் எல்லாம் எந்த ராசியில் இருக்கிறதோ, தண்ணீரில் இருந்தால் தண்ணீரில், ஆகாயத்தில் இருந்தால் ஆகாயதில் என விபத்துகள் நடக்கும். பூமியில் இருந்தால் நிலநடுக்கம் போன்றவை ஏற்படும். போர் வருவதற்கு காரணம் செவ்வாய் கிரகம். இதுபோன்று ஒவ்வொரு கிரகமும், ஒரு இடத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விபத்து வைகாசியில் நடைபெற்றுள்ளது. ஆனால் தமிழ் ஜோதிடர்கள் பலர் இந்த விபத்து ஆனி மாதத்தில் நடைபெறும் எனக் கூறியிருந்தனர்.
கிரக சேர்க்கைகளும் குழு மரணங்களுக்கு காரணமாக அமையும் - அடிமுடி சுவாமிகள்
நவக்கிரகங்களில் இரண்டு அணி உள்ளது. குரு பகவான், செவ்வாய், சூரியன், சந்திரன் இவை நான்கும் ஒரு அணி. மீதி ஐந்து கிரகங்களும் ஒரு அணி. இந்த ஐந்தையும் அசுர அணி எனவும், அந்த நான்கை. தேவ அணி எனவும் வைத்துக் கொள்ளலாம். இதில் ஒரே அணியை சேர்ந்தவர்கள் முழுவதும் ஒரே பக்கத்திற்கே சென்றால் அங்கு பாதிப்பு ஏற்படும். இது அவர்களின் ஜாதகத்தன்மையை பொறுத்து தோஷங்களாவும், யோகங்களாகவும் மாறும். கிரக சேர்க்கைதான் இவற்றிற்கு காரணம். ஆக்கபூர்வமான விஷயங்களில் மக்களுக்கு ஈர்ப்பு இல்லை; அழிவுப்பூர்வமான விஷயங்களிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் உலகம் அழிவது எப்போது என்றுதான் வந்து வந்து கேட்பார்கள்.
