செவ்வாய் மற்றும் கேது கிரகங்களின் சேர்க்கை ஜோதிடத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். இந்த சேர்க்கை ஒருவரின் ஜாதகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தும். நன்மை, தீமை என்று இரண்டும் கலந்தே தரும். தினசரி வாழ்க்கை, உடல்நலம், தொழில் மற்றும் ஆன்மிகத்திலும் செவ்வாய் - கேது சேர்க்கை தாக்கத்தை உண்டாக்கும். அந்த தாக்கம், ஒரு நபருக்கு தீவிர உணர்ச்சிகளையும், மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். தொழில், உறவு மற்றும் பிற முயற்சிகளில் தடை, தாமதம், பிரச்சனைகளை உருவாக்கலாம். உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆன்மிகத் தேடலை அதிகரிக்கலாம். மேலும் செவ்வாய் மற்றும் கேது சேர்க்கை சிறப்பு திறமைகள் அல்லது குணாதிசயங்களைக் கொண்ட குழந்தைகளைக்கூட பிறக்க வைக்கலாம் என்கிறது ஜோதிடம். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் மற்றும் கேது சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இது உலக அளவில் விபத்து, மோதல் போன்ற தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த் ஏற்கனவே கூறியிருந்தார். அந்த நேர்காணலைதான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
செவ்வாய்-கேது சேர்க்கை ஜூலை மாதம்வரை நீடிக்கிறது
செவ்வாய், கேது சேர்க்கை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்? இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?
வானத்திலே எத்தனையா அரிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தற்போதோ செவ்வாய் மற்றும் கேது சிம்மத்திலே சேர்ந்திருக்கிறார்கள். இது அடுத்த மாதம்(ஜூலை) இறுதிவரை நிகழப்போகிறது. காலப்புருஷ தத்துவத்திலே ஐந்தாம் இடம் என்பது குலதெய்வத்தை குறிக்கக்கூடியது. கல்வி மற்றும் வயிற்றையும் குறிக்கும். சிம்மத்திலிருந்து நான்காம் பார்வை விருச்சிகம். சமீபகாலமாக உலகத்தில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளில் இந்த சிம்மம் மற்றும் விருச்சிகத்தின் செயல்பாடுகள் அதிகம் இருப்பதை உணர்த்துகின்றன. அத்துடன் எப்போதெல்லாம் செவ்வாய் மற்றும் கேது சேருகிறார்களோ, விபத்துகள், நிலம் சார்ந்த விற்பனைகளில் தடை, பொருளாதார சிக்கல், உறவுகளில் தடுமாற்றங்கள் என 12 ராசியினரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுவர்.
12 ராசிகளுக்கும் பாதிப்பு என்றாலும், எந்த ராசியினர் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்?
சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய 3 ராசிகளுக்கு பாதிப்பு சற்று அதிகமாக தெரியும். காரணம், கன்னி ராசிக்கு 12-ம் இடம் சிம்மம், மகரத்திற்கோ 8-ம் இடம், விருச்சிகத்திற்கோ 10-ம் இடம் என்ற வகையிலே பல்வேறு நிலைகளிலே பலருக்கும் ஒரு தடுமாற்றத்தை தந்துகொண்டே இருக்கும். இதெற்கெல்லாம் தீர்வென்பது இல்லையா? இந்த செவ்வாயும் கேதுவும் சேர்ந்ததிலிருந்தே ஏதோ ஒரு வகையிலே சோர்வு வந்துகொண்டிருக்கிறது, பொருளாதார தடைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று நிறையபேர் புலம்புகின்றனர்.
மீன ராசியினருக்கு சற்று பணத்தட்டுப்பாடு, கும்பத்திற்கு அலுவலகத்தில் பிரச்சனை, மிதுனத்திற்கு உறவுகளில் சிக்கல், ரிஷபத்திற்கோ இருக்கு ஆனா இல்லை என்பதுபோல பிரச்சனை, தனுசிற்கு தந்தை வழியில் சிரமம் என பல்வேறு ராசியினரும் பல்வேறு குழப்பங்களில் உள்ளனர்.
செவ்வாய் - கேது சேர்க்கை, இதற்கு முன் எப்போது ஏற்பட்டது?
1989-ஆம் ஆண்டு இதேபோன்று செவ்வாய் - கேது சேர்க்கை சிம்மத்தில் நடைபெற்றது. அப்போது கூட சனி பகவான் மீனத்தில் இல்லை. பல நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மீனத்தில் சனீஸ்வரர் இருக்கும்போது, செவ்வாய் - கேது சேர்க்கை சிம்மத்தில் நிகழ்கிறது.
சிம்மம், விருச்சிகம் மற்றும் மகரம் ராசியினர் கவனத்துடன் இருக்க வேண்டும்
இதனால் அனைத்து ராசியினருக்குமே சிக்கலா?
எல்லா ராசியினருக்குமே சிக்கல் கிடையாது. ஆனால் இந்த சேர்க்கையின் போது அனைத்து ராசியினரும் அனுமன் வழிபாடு செய்வது நல்லது. யாரெல்லாம் சுமார் இந்த 2 மாத காலத்திற்கு இடைவிடாது, அவ்வப்போது அனுமன் பெயரை சொல்லி, ஓம் நமோ ஹனுமத்தே நமஹ, ஓம் நமோ ஹனுமத்தே நமஹ என்று மனதார அனுமனை வேண்டி வணங்குகிறார்களோ, அனுமனது பாடல்களை வீட்டில் ஒலிக்கச் செய்கிறார்களோ, அனுமன் சாலிஸாவை வீட்டில் கேட்டு, அருகில் உள்ள அனுமன் ஆலயத்திற்கு சென்று துளசி சாற்றி ஜெய்வீர ஆஞ்சநேய சுவாமிக்கு ஜே என்று வழிபடும்போது வீர என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு சொல்லிக்கொண்டே, மூன்று முறையோ, ஒன்பது முறையோ, 27 முறையோ அனுமனை சுற்றிவர வேண்டும். இதனை சனிக்கிழமைகளில் செய்தால் சிறப்பு. ஏனென்றால் சிம்மத்தில் இருக்கக்கூடிய செவ்வாய், எட்டாம் பார்வையாக மீனத்தில் உள்ள சனீஸ்வரரை பார்க்கிறார். எப்போதுமே, செவ்வாயும் ராகுவும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் வழிபாடு யோகத்தை தரும். ஆனால் இந்த இரண்டு மாதம் செவ்வாயும், கேதுவும் சேர்ந்து இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, உங்கள் வீட்டில் ஏதாவது குலதெய்வ தோஷம் இருந்தால், இந்த காலகட்டத்திலே அனுமனை வழிபட்டால், அது அடியோடு விலகிவிடும்.
அனுமனை வழிபட்டால் குலதெய்வம் தோஷம் விலகுமா?
பலருக்கு குலதெய்வத்தின் அருள் நமக்கு வேண்டுமே என்று ஒரு ஆசை இருக்கும். எனினும் குலதெய்வ வழிபாட்டில் சில தடைகள் வந்துவிடும். சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எங்கே இருக்கிறது என்றே தெரியாது. அப்படி தெரிந்தாலும் நினைத்த நேரத்தில் போய்வர முடியாது. அனைவரும் சேர்ந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்று படையலிட்டு வழிபடலாம் என்றால், உறவினர்கள் ஒன்றுபட்டு வரமாட்டார்கள். இப்படி ஏதோ ஒரு வகையிலே குலதெய்வ வழிபாட்டிற்கு தடை தடங்கல் வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள், இந்த காலகட்டத்தில் அனுமனை வழிபட்டால், குலதெய்வ வழிபாட்டு தடை தடங்கல் நீங்கிவிடும். குலதெய்வம் நமக்கு அருள்புரிய ஆரம்பித்துவிட்டால், ஏழே நாட்களில் வித்தியாசம் தெரிந்துவிடும். பெரிய கோடீஸ்வர யோகத்தை குலதெய்வம் கொடுத்துவிடும்.
செவ்வாய்-கேது சேர்க்கையில் அனுமனை வழிபடுவது நல்லது
செவ்வாய்-கேது சேர்க்கை காலத்தில் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது எப்படி?
காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள் சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம் நாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே...
என்று அனுமனை வேண்டி வணங்கி, ராமனை வேண்டி வணங்கி, ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் என்றெல்லாம் சொல்லி வழிபடலாம்.
மேலும்,
காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே... என்று சிவவாக்கியர் சொன்னதைப்போல, யாரெல்லாம் இப்போது ராம நாமத்தை சொல்லி அனுமனை வழிபடுகிறார்களோ, அவர்களின் உடம்பில் உள்ள அனைத்து சக்கரங்களும் ஆக்டிவேட் ஆகும். குண்டலினி யோகம் சித்திப்பதுடன், குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். இதன்மூலம் வாழ்க்கையில் தடை தடங்கல்கள் அகன்று, ஒரு பெரும் வெற்றி கிடைப்பதுடன், பொருளாதார வளர்ச்சியும் அபரிவிதமாக இருக்கும்.
