இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தென்னிந்திய திரையுலகில், ஒரு காலகட்டத்தில் வசீகரமான கண்களாலும், இயல்பான நடிப்பாலும், துறுதுறுப்பான அசைவுகளாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ராதா. தனது இளமைக்காலத்தில் சினிமா வாய்ப்பு தேடிவந்து, குறுகிய காலத்திலேயே பெரும் நட்சத்திரமாக ஜொலித்து, பின் திருமண வாழ்க்கை என அமைதியாக வாழ்ந்துவரும் இவர், இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இப்படிப்பட்ட அழகு பதுமையின் சினிமா பயணம் எப்படி துவங்கியது? இவர் கண்ட வெற்றிகள் என்னென்ன? தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உச்சம் தொட்ட இவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமண பந்தத்திற்குள் நுழைந்தது எப்படி? நடிகை என்பதை தாண்டி தற்போது ஒரு தொழிலதிபராகவும் வலம் வரும் நடிகை ராதா குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

சொல்லி கொடுத்த அம்மா

திருவனந்தபுரம் மாவட்டம், கல்லாரையை சேர்ந்த கருணாகரன் நாயர் - சரசம்மா தம்பதியரின் மூன்றாவது மகளாகப் பிறந்தவர் ராதா. இவருக்கு அம்பிகா, மல்லிகா என்ற இரு மூத்த சகோதரிகளும், அர்ஜுன் நாயர், சுரேஷ் நாயர் என்ற இரு இளைய சகோதரர்களும் உள்ளனர். ராதாவின் இயற்பெயர் உதய சந்திரிகா. இவரது மூத்த சகோதரி அம்பிகாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் என்பதால், ராதாவுக்குச் சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிப் பருவத்திலேயே கலைகளில் ஈடுபாடு காட்டிய ராதா, குறிப்பாக நடனத்தில் சிறப்புக் கவனம் செலுத்தினார். இதுவே அவரை சினிமாவுக்குள் நுழையும் சூழலையும் தந்தது. ஒருமுறை, இயக்குநர் பாரதிராஜா தனது புதிய படத்திற்காக அம்பிகாவை சந்திக்க வந்தபோது, ராதாவின் புகைப்படத்தைப் பார்த்து, "இந்த பெண் என் படத்திற்குச் சரியாக இருப்பாள்" என்று கூறி, ராதாவின் வீட்டிற்கே வந்து அவரிடம் நடிப்புக்கு சம்மதமா எனக் கேட்டுள்ளார்.


உதய சந்திரிகாவாக இருந்து ராதாவாக மாறிய 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படக் காட்சி

அப்போது 13 வயது சிறுமியாக இருந்த ராதாவுக்கு சினிமா பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், பாரதிராஜா வருவதற்கு முன்பே அவரது அம்மா, "நடிப்பு பிடிக்குமா என்று கேட்டால், ஆம் பிடிக்கும் என்று சொல். நீங்கள் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்வேன் என்று சொல், உனக்கு தெரிந்த நடனத்தையும் ஆடிக்காட்டு" எனப் பலமுறை சொல்லிக் கொடுத்துள்ளார். இதனால் பாரதிராஜாவின் கேள்விகளுக்கு மலையாளம், ஆங்கிலம், அரைகுறை தமிழ் என கலந்து பதிலளித்த ராதா தனது திறமையையும் வெளிப்படுத்தவே பாரதிராஜாவுக்கு மிகவும் பிடித்துப்போய் தனது "அலைகள் ஓய்வதில்லை" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். பொதுவாகவே பாரதிராஜா, தன் படம் மூலம் அறிமுகமாகும் கதாநாயகன், கதாநாயகிகளுக்கு 'ரா' எனத் தொடங்கும் பெயரை வைக்கும் பழக்கம் உண்டு. அதனால்தான் உதய சந்திரிகா என்ற பெயரை ராதா என்று மாற்றியுள்ளார். ஆரம்பத்தில் இந்தப் பெயர் ராதாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றாலும், படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், ராதா என்ற பெயரையே தொடர்ந்து வைத்துக் கொண்டாராம்.

குறுகிய காலத்தில் உச்சம்

"அலைகள் ஓய்வதில்லை" படம் ராதாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் நடித்தபோதெல்லாம் மலையாளம் மட்டுமே ராதாவிற்கு தெரியும் என்பதால், வசனங்களை மலையாளத்தில் எழுதி மனப்பாடம் செய்து நடித்தாராம். ஆனாலும், முதல் படத்திலேயே ராதா தனது நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்திருந்தார். குறிப்பாக இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. அதிலும் இப்படத்தில் வந்த "ஆயிரம் தாமரை மொட்டுக்களே" பாடல் அன்று பட்டிதொட்டி எல்லாம் ஒரு கலக்கு கலக்கியது. இதனால் தொடர்ந்து இவ்விருவரும் பல படங்களில் இணைந்து நடித்ததோடு, இவர்கள் இருவரும் திரையில் "லக்கி ஜோடி" என்றும் அழைக்கப்பட்டனர். இதனால் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ‘இளஞ்சோடிகள்’, ‘பக்கத்து வீட்டு ரோஜா’, ‘வாலிபமே வா’, ‘நல்ல தம்பி’ போன்ற பல படங்களில் நடித்ததோடு, அப்படங்களும் மிகுந்த கவனம் பெற்றன.


கார்த்திக், கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து ராதா கொடுத்த வெற்றிப்படங்களின் காட்சிகள்

கார்த்திக்குடன் மட்டுமல்லாமல், ராதா தனது ஆரம்ப காலகட்டத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, மோகன், சத்யராஜ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்ததோடு, மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் மாறினார். இதில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் நடித்த "டிக் டிக் டிக்" படம் ராதாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இத்தனைக்கும் இப்படத்தில் ராதாவிற்கு சிறு வேடம்தான் என்றாலும், முதல்முறையாக மார்டனாகவும், மிக கிளாமராகவும் தோன்றி அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். இதனால் தொடர்ந்து கமல்ஹாசனுடன் ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘காதல் பரிசு’, ‘ஜப்பானில் கல்யாணராமன் ‘ உட்பட பல படங்களில் நடித்தார். இதில் குறிப்பாக, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் வரும் "வருது வருது விலகு விலகு" பாடலில் கமலுடன் இணைந்து ராதா ஆடிய நடனம் அனைவராலும் அன்று பெரியளவில் ரசிக்கப்பட்டது. இப்படி கமல்ஹாசனுடன் மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும் இணைந்து ‘ராஜாதி ராஜா’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘பாயும் புலி’, ‘துடிக்கும் கரங்கள்’, ‘நான் மகான் அல்ல’ போன்ற பல படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்தார். இதில் ‘ராஜாதி ராஜா’ படத்தில் வரும் "மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா" பாடலும், ‘பாயும் புலி’ படத்தில் வரும் "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்" பாடலும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படும் எவர் க்ரீன் ஹிட் பாடலாக உள்ளது.

ஒரே ஆண்டில் 100 படங்கள்

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறிய ராதா, நடிக்க வந்த ஒரே ஆண்டில் 100 படங்களிலும், 10 ஆண்டுகளில் 162 படங்களிலும் நடித்து அசத்தினார். இது இந்திய அளவில் எந்த ஒரு நடிகையும் செய்திராத பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் சில ஆயிரங்கள் சம்பளமாகப் பெற்றவர், சினிமா துறையைவிட்டு விலகும்போது லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி தனது புகழையும் நாட்டினார். தமிழில் ரஜினி, கமலோடு மட்டும் அல்லாமல் விஜயகாந்த், பிரபு, மோகன் போன்ற பிற நடிகர்களுக்கும் ஏற்ற ஜோடியாக பார்க்கப்பட்ட ராதா, அவர்களுடனும் இணைந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். அதில் விஜயகாந்துடன் ‘அம்மன் கோவில் கிழக்காலே’, மோகனுடன் ‘இதய கோவில்’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘அம்பிகை நேரில் வந்தால்’ என நடித்த படங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. இவர்கள் தவிர அப்போதைய டாப் நடிகையாக இருந்த தனது சகோதரி அம்பிகாவுடன் இணைந்து ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘காதல் பரிசு’, ‘அண்ணா நகர் முதல் தெரு’, போன்ற பல வெற்றிப் படங்களிலும் நடித்த ராதா அதிலும் தனி முத்திரை பதித்தார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் பல படங்களில் நடித்த ராதா, தெலுங்கில் அத்தனை சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து நடிப்பிலும், கிளாமரிலும் கலக்கினார். குறிப்பாக, வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பாக என்டி ராமராவ் - பாலகிருஷ்ணா, சிவாஜிகணேசன் - பிரபு, நாகேஸ்வரராவ் - நாகார்ஜுனா எனத் தந்தை-மகன் இருவருடனும் அதிக படங்களில் நடித்த ஒரே நடிகை ராதா.


அக்கா அம்பிகாவுடன் மற்றும் 'முதல் மரியாதை' திரைப்படத்தில் சிவாஜியுடன் ராதா

இப்படி நடிப்பு மற்றும் கவர்ச்சி என இரண்டிலும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதாவிற்கு 'முதல் மரியாதை' திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்த ராதா மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். குறிப்பாக படப்பிடிப்பின்போது துவக்கத்தில் சில தடுமாற்றம் இருந்தாலும், இயக்குநர் பாரதிராஜாவின் எதிர்பார்ப்புக்கு இணங்க, கிராமத்துப் பெண்ணாக ராதா மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றிருந்தார். இருப்பினும், இந்தப் படத்தில் ராதாவிற்கு நடிகை ராதிகாதான் டப்பிங் கொடுத்திருந்தார். இந்த ஒரே ஒரு காரணத்தினால் ராதாவுக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது கிடைக்காமல் போனது. ஆனாலும், இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது ராதாவிற்குக் கிடைத்தது. இது தவிர பல்வேறு மாநில விருதுகள் மற்றும் வேறு சில படங்களுக்காகவும் ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ள ராதாவிற்கு இன்றுவரை ஒரு தேசிய விருது கூட கிடைக்காதது வருத்தமான ஒன்றே. இவ்வாறு 1981 துவங்கி 1991 ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ராதா கடைசியாக டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'சாந்தி எனது சாந்தி' படத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகினார்.

குடும்ப தலைவியாக ராதா


நடிகை ராதா மற்றும் மகள் கார்த்திகா திருமண புகைப்படங்கள்

புகழின் உச்சியில் இருந்தபோதே, 1991 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார் ராதா. பின்னர் நடிப்பு வாழ்க்கையை விட குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த ராதா, "நடிகைகளுக்கு உண்மையான வாழ்க்கை தொடங்குவதே குடும்ப வாழ்க்கையில் இருந்துதான்" என்று பலமுறை கூறியுள்ளார். அந்த அளவிற்கு திருமண பந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த ராதா மற்றும் ராஜசேகரன் தம்பதியருக்கு விக்னேஷ் நாயர், கார்த்திகா நாயர், துளசி நாயர் என மூன்று குழந்தைகள் உள்ளனர். ராதாவின் கணவர் ராஜசேகரன் நாயர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். இவர்களுக்குச் சொந்தமாக பல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், தியேட்டர்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் உள்ளன. கணவரின் அனைத்துத் தொழில்களிலும் ராதாவின் பங்களிப்பும் கணிசமாக இன்றுவரை இருந்து வருகிறது. ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், தெலுங்கில் 'ஜோஷ்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், தமிழில் 'கோ' படத்தில் நடித்துப் பெரும் கவனம் ஈர்த்தார். அதேபோல், இளைய மகள் துளசி நாயர், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்தவர், தற்போது பெரியளவில் படங்களில் கவனம் செலுத்துவதில்லை.


நடிகை ராதாவின் ஆரம்பகால மற்றும் தற்போதைய புகைப்படம்

இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரோஹித் மேனனை திருமணம் செய்து கொண்டார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், கண்ணைக் கவரும் பிரம்மாண்டத்துடன் நடந்த இந்தத் திருமண விழாவில், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்தருணத்தில், திருமணத்திற்காகச் செய்யப்பட்ட ஆடம்பரச் செலவுகள் குறித்து ஊடகங்களில் மிக பரபரப்பாகப் பேசப்பட்டது. தற்போது ராதா தனது குழந்தைகளுடனும், கணவருடனும் மும்பையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்துவரும் நிலையில், அவ்வப்போது சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தமிழ் ரசிகர்களை மீண்டும் குதூகலப்படுத்தி வருகிறார். 1980களில் தொடங்கி 1990கள் வரை தமிழ் சினிமா வரலாற்றில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த ராதா, தமிழ்நாட்டு மக்களின் மனதில் இன்றுவரை நம் சொந்தப் பெண்ணாகவே பார்க்கப்பட்டு வருகிறார். ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாக தனது சினிமா பயணத்தை துவங்கி சினிமாவிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றி கண்ட ராதா தனது 60-வது பிறந்தநாளை வரும் ஜூன் 3-ம் தேதி கொண்டாடுகிறார். அவரின் வாழ்வில் மேலும் மகிழ்ச்சி பொங்க ராணி ஆன்லைன் வாழ்த்துகிறது.

Updated On 27 May 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story