விரைவில் திரைக்கு வரவிருக்கும் "கடுக்கா" திரைப்படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. வீரமங்கை வேலுநாச்சியார் புகைப்படம் இடம் பெற்ற அந்த போஸ்டரை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்துவரும் நடிகை ஸ்ருதி நாராயணனை சிறப்பு விருந்தினராக அழைத்து, படக்குழு வெளியிட்டது. ஸ்ருதி நாராயணனின் வீடியோக்கள் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வேலுநாச்சியார் போஸ்டரை அவர் வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், "கடுக்கா" படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் விஜய் கெளரிஷ், அப்படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர், சண்டை பயிற்சியாளர், பாடகர் தேவா உள்ளிட்டோர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதனை பார்ப்போம்...

"கடுக்கா" திரைப்பட போஸ்டர் வெளியீட்டு விழாவில் நடிகை ஸ்ருதி நாராயணன்
படத்தின் கதாநாயகி குறித்து சொல்லுங்களேன்?
என்னுடன் நடித்த நடிகை சினேகா திறமை மிக்க ஒரு நல்ல நடிகை. இப்போது வெப் சீரிஸ் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார். ஒரு நடிகன் என்ற முறையில் படக்குழுவிலுள்ள அனைவருக்குமே என்னை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நடிகை சினேகா உள்பட படக்குழுவினர் எல்லோருமே என்னுடன் நன்கு ஒத்துழைத்தனர் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
ஆர்ட்டிஸ்ட் டச் என்று சொல்கின்றார்களே.. அப்படியென்றால் என்ன?
தமிழ்த் திரைப்படத்துறையை பொறுத்தமட்டில் நடிகர்கள் கமல் ரஜினி இருவருமே நல்ல திறமை மிக்க நடிகர்கள். இதில் நடிகர் கமல் ஒரு நிகழ்ச்சியின் டாப்பராக இருந்தாலும், நடிகர் ரஜினி அந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியையுமே கவர்பவராக இருப்பார். இருவருமே இரண்டுவிதமான வல்லவர்கள்தான். ஆகவே மக்கள் நமக்கு ஒரு நிமிடம் கொடுத்தால்கூட அந்த ஒரு நொடியில் ஒரு நடிகனாக நம்மால் எவ்வளவு திறமையை வெளிப்படுத்தி காண்பிக்க முடியுமோ அதை செய்துவிட வேண்டும். இதில் நடிகர் விக்ரம்கூட கை தேர்ந்தவர். திறமை மிக்கவர்.

கடுக்கா படத்தில் கதாநாயகியுடன் & தேனிசைத்தென்றல் தேவாவுடன் ஹீரோ விஜய் கொளரிஷ்
நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்புகளைத் தேடியலையும் நபர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை?
நீங்கள் கேட்பது போல அதில் நானும் ஒருவன்தான். வாய்ப்புக்காக தேடிக்கொண்டிருக்கின்றோம். "கடுக்கா" என்ற திரைப்படம் நான் கதாநாயகனாக அறிமுகமாகி, எனது முதல் படமாக வெளிவர உள்ளது. இயக்குநர் சொல்வதை அப்படியே கேட்டுச் செய்யவேண்டும். அதை நமக்கு பிடித்து செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு, நான் இப்படியெல்லாம் நடிக்கமாட்டேன் என்று கொள்கைகள் இருக்கலாம். ஆனால் மக்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சத்திற்கேற்ப நாம் அதனை செய்யவேண்டும். எனவே அதற்கேற்றபடி நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.
உங்களது படத்திற்கு இசை வெளியீடு செய்துள்ளதை பற்றி கூறுங்கள்..
இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே நான் கூற வேண்டும். காரணம் பெரிய நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் நடித்துள்ள பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவரும், பல நல்ல ஹிட் பாடல்களை கொடுத்தவருமான தேனிசைத் தென்றல் தேவா அவர்களது குரலில் நாங்கள் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளோம். இதுவே எனக்கு இந்த படத்தில் கிடைத்துள்ள மிகப்பெரும் ஆச்சர்யம்தரும் அனுபவமாக இருந்தது. வேண்டுமானால் நீங்கள் அந்த "பொல்லாத பார்வை" என்ற பாடலை கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே அது விளங்கும்.

நடிகர் விஜய் கெளரிஷை பாராட்டிய நடிகர் மோகன்
"கடுக்கா" இசையமைப்பாளரை பற்றி கூறுங்கள்...
எங்களது படத்திற்கு இசையமைத்துள்ளவர் கெவின் டிகோஸ்டா. அவர் எங்களுடன் ஏற்கனவே "ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்" என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில் இசையமைப்பாளர் தேவாவின் குரலில் ஒலிக்கப்போகும் இப்படத்தின் பாடலே இந்த வருடத்தின் ஹிட் பாடலாக அமையும் என்று நம்புகின்றேன்.
"கடுக்கா" படத்தை யாருக்கெல்லாம் திரையிட்டு காட்டியுள்ளீர்கள்?
நான் எனது நண்பர்கள் மற்றும் நிறைய திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு திரையிட்டுக் காட்டியுள்ளேன். இதில் குறிப்பாக இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்துவிட்டு தமிழ்த் திரையுலகின் சில்வர் ஜூப்லி கதாநாயகனான நடிகர் மோகன் பெரிதும் என்னை பாராட்டியது, வளரும் நடிகனான எனக்கு கிடைத்த பெரிய உத்வேகமாவும் பெருமையாகவும் இருக்கிறது. படமே வெளிவராத நிலையில் பாராட்டுவது என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. இந்த பாராட்டுகள் முழுவதும் என் இயக்குநரையேச் சேரும்.

விஜய் கெளரிஷுக்கு பிடித்த நடிகர்கள்
விவசாய குடும்ப பின்னணியில் இருந்து சினமா துறைக்கு வந்தது எப்படி? குடும்பத்தாரின் வெறுப்பையம் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளீர்களா?
என் தந்தை ஒரு விவசாயி. ஆனால் சினிமா என்பது என்னுடைய ஃபேஷன். சினிமாவில் நடிக்க வந்ததற்காக என் குடும்பத்தினரின் வெறுப்பையும் எதிர்ப்பையும் மட்டுமல்ல, ஊராரின் வெறுப்பையும் எதிர்ப்பையும் கூட சம்பாதித்து கொண்டேன். ஏதேனும் ஒரு வேலைக்கு போனால் நன்றாக சம்பாதிக்கலாமே என்று அவர்கள் கூறினர். அந்த கருத்து, அவர்கள் என்மீது கொண்ட அன்பாகும். ஆனால் நான் திரையில் நன்கு நடித்து பெயரும் புகழும் பெற்று என் அன்பை அவர்களுக்கு காண்பிப்பேன்.
உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் யார்?
எம்ஜிஆர், கேப்டன் மற்றும் ரஜினி சார் மிகவும் பிடிக்கும்.

விஜய் கெளரிஷுக்கு பிடித்த நடிகைகள்
உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை என்றால் யாரைக் கூறுவீர்கள்?
எனக்கு எல்லா நடிகைகளையுமே மிகவும் பிடிக்கும். குறிப்பாக பழம்பெரும் நடிகையான சாவித்திரி மற்றும் கண்ணால் பேசி நடிக்கும் நடிகையான சில்க் ஸ்மிதா ரொம்ப பிடிக்கும்.
மிகப்பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க உங்களை அழைத்தால் நடிப்பீர்களா?
நிச்சயமாக அப்படியோர் வாய்ப்புக் கிடைத்தால் அவர்களுடன் நடிப்பேன். பெரிய பெரிய ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களின் படங்களில் ஒரு சீனில் ஒரு வினாடி நடிக்க வாய்ப்பு கிடைத்தால்கூட அது எனக்கு மிகப்பெரிய வெற்றிதான். குறிப்பாக விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், மணிகண்டன் உள்ளிட்டோருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியே.

விஜய் கெளரிஷுக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பாக்யராஜ்
உங்களுக்கு போட்டியாளராக நீங்கள் யாரைக் குறிப்பீடுவீர்கள்?
எனக்கு போட்டியாளர் என்றால் கண்ணாடி முன் சென்று நான் நிற்பேன். அதில் தெரியும் நான்தான் எனக்கு போட்டியாளர். காரணம் நேற்றைய நாளில் செய்ததைவிட இன்று சிறப்பாக செய்யவேண்டும் என்பதே என் நோக்கமாக இருக்கும். எனவே எனக்கு ஒரு போட்டியாளர் என்றால் அது நானாகவே இருப்பேன். மற்றவர்கள் இடத்தை நாம் பிடிக்கமுடியாது. நாம் நமக்கான இடத்தை பிடித்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர்கள்?
எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குநர் என்றால் அது மறைந்த திரு. மணிவண்ணன் சார்தான். காரணம் அரசியல் வெற்றிப் படமான அமைதிப்படை முதற்கொண்டு நூறாவது நாள் வரையில் அவர் எடுத்தது எல்லாமே ஹிட் படங்கள்தான். எம்ஜிஆரின் படங்களைப் போலவே அவரது படங்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போதுள்ள அனைத்து இயக்குநர்களையும் பிடிக்கும். இயக்குநர் விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார் என அனைவரையும் எனக்கு பிடிக்கும்.
வசனகர்த்தா என்றால் யாரை மிகவும் பிடிக்கும்?
எனக்கு மிகவும் பிடித்த வசனகர்த்தா பாக்யராஜ் சார்தான். காரணம், மக்களை சீரியஸாகவும் காமெடியாகவும் ரசிக்கவைக்க முடியும் என்பதற்கு அவரது வசனங்களே உதாரணம்.

பாடலாசிரியர் ஸ்நேகன் - நடன இயக்குநர் பிரபு தேவா - காமெடி நடிகர் கவுண்டமணி
பாடலாசிரியர் யார் பிடிக்கும்?
எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் என்றால் அது கவிஞர் சினேகன். கிராமத்து மணம் வீசும் பாடல்களை அவர் எழுதியுள்ளார் .
மிகவும் பிடித்த ஸ்டண்ட் மாஸ்டர் யார்?
எனக்கு மிகவும் பிடித்த சண்டை மாஸ்டர் என்னுடைய படத்தின் சண்டை மாஸ்டரான கண்ணன் ஆசான்தான். சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், கனல் கண்ணன் உள்ளிட்டோரையும் கூட மிகவும் பிடிக்கும்.
உங்களுக்கு மிகவும் பிடித்த நடன மாஸ்டர்?
எனக்கு பிரபுதேவா மாஸ்டர்தான் முதலில் பிடிக்கும். அவரை தொடர்ந்து ராஜு சுந்தரம் மாஸ்டர், தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர் போன்றோர் பிடிக்கும். இவர்களுடன் பணிபுரிய நான் மிகவும் விரும்புகின்றேன். எங்களது படத்திற்கு அபித் என்ற புதிய நடன மாஸ்டர் நடன அசைவுகளை அமைத்துள்ளார்.
மிகவும் பிடித்த காமெடி நடிகர் யார்?
எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் கவுண்டமணி சார்தான். அவர் மட்டுமின்றி நடிகர் நாகேஷ், மறைந்த நகைச்சுவை மேதை நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் இந்த சமூகத்திற்கு பல நல்ல கருத்துகளை காமெடியின் மூலம் மிக எளிதாக சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.
