இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரின் பேச்சுகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. விழாவில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து சென்னை வந்திருந்த ஸ்ருதிஹாசன், கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். இந்த தகவலோடு, சூரியின் மாமன் திரைப்பட வசூல், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்பட அப்டேட், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீதான குற்றச்சாட்டு, நடிகை ஆலியா பட் குறித்த முக்கிய விஷயம் உள்ளிட்டவை குறித்து ராணி ஆன்லைனின் இந்த வார சினி பிட்ஸ் பகுதியில் பார்ப்போம்.

முதலமைச்சர் கனவில் அரசியலுக்கு வரவில்லை - கமல் தக் மொமன்ட்

'தக் லைஃப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளதையொட்டி, பட புரொமோஷனுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். இந்தநிலையில்தான், சென்னை சாய்ராம் கல்லூரியில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார். சினிமா மட்டும் அல்லாமல் அரசியல் குறித்தும் அவர் பேசினார். குறிப்பாக தன்னுடைய அரசியல் வருகை பற்றி பேசிய கமல்ஹாசன், முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில், தான் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். "என்னுடன் இருந்த பல ரசிகர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களுக்கு எல்லாம் நான் எப்படி நன்றி சொல்வது? அதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். முதலமைச்சராக வேண்டும் என்று நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக ஒரு எம்.எல்.ஏ. ஒரு தொகுதிக்காக என்ன செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் மெதுவாகச் செய்து கொண்டிருக்கிறோம்" என்று கமல் கூறினார்.


'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் & ஸ்ருதிஹாசன் - கூலி திரைப்பட லுக்கில் ரஜினிகாந்த்

அப்பாவுடன் நடிக்க நான் ரெடி! - ஸ்ருதிஹாசன்

மும்பையில் தங்கியுள்ள நடிகை ஸ்ருதிஹாசன், 'தக் லைஃப்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துக்கொண்டு பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது பேசிய ஸ்ருதி, 'கூலி' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தது புதிய அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். தனது அப்பா கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க தான் தயாராக உள்ளதாக குறிப்பிட்ட ஸ்ருதி, அவர் சம்மதித்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நடிக்க ரெடிதான் என்று கூறினார். 'தக் லைஃப்' திரைப்படம் வெளியாகும் முதல்நாள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க உள்ளதாகவும், இப்படத்தில் பாட வாய்ப்பளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

இசை வெளியீட்டு விழாவில் பாடல்பாடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஸ்ருதி, தனது அழகில் அனைவரையும் சொக்கவைத்தார் என்றே சொல்லவேண்டும். கருப்பு நிற சேலையில் பேரழிகியாக காட்சியளித்தார். அவர் 40 வயதை நெருங்கும் நிலையில், வயதாக வயதாக ஸ்ருதிஹாசன் பேரழகி ஆகிக்கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கூறினர். பெண்களின் அழகு 40 வயதுகளில்தான் முழுவதும் தெரியும் என்று சொல்வதுபோல, ஸ்ருதிஹாசன் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.


கேன்ஸ் பட விழாவில் ஆலியா பட் - ஆலியா பட்டின் குடும்ப புகைப்படம்

நடிகை ஆலியா பட் மீண்டும் கர்ப்பம்?

ஹிந்தி நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர், 2022ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் முறையாக நடிகை ஆலியா பட் பங்கேற்று இருக்கிறார். விழாவில் அவர் கவர்ச்சி உடையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இறுக்கமான உடையில் அவரின் வயிறுபகுதி சற்று துருத்திக்கொண்டிருப்பது புகைப்படத்தில் தெரிகிறது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஆலியா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா என கேட்டு வருகின்றனர்.


மாமன் திரைப்படக் காட்சி

மாமன் படத்தின் 10 நாள் வசூல்!

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு உறவுசார்ந்த சென்டிமென்ட் படங்கள் எப்போதுமே கூடுதல் ஸ்பெஷல்தான். அதற்கு மெய்யழகன் திரைப்படம் அண்மை உதாரணம். அந்த வகையில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நடிகர் சூரியின் திரைப்படமான "மாமன்" நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தாய்மாமன் கதைக்களத்தில் மாஸ் காட்டும் மாமன் திரைப்படம், கிராமங்கள் மட்டமன்றி நகரங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளதாக படக்குழு கூறியுள்ளது. இப்படம் 10 நாட்களில் ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


'பராசக்தி' படம் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துடன் மோதும் என்று நாங்கள் அறிவிக்கவே இல்லை - சுதா கொங்கரா

விஜய்யுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சுதா கொங்கரா. இவர் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துவைத்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'பராசக்தி' தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடிக்க, அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் சுதா கொங்கராவிடம், இந்தப்படம் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துடன் மோதுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சுதா கொங்கரா, "பராசக்தி படத்திற்கு இன்னும் 40 நாட்களுக்கான காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளன. சிவகார்த்திகேயன் தற்போது 'மதராஸி' படப்பிடிப்பில் இருப்பதால் அவர் வந்தபின் 'பராசக்தி' படத்தின் ஷூட்டிங் தொடங்கும். 'பராசக்தி' படம் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துடன் மோதும் என்று நாங்கள் அறிவிக்கவே இல்லை. ரிலீஸ் முடிவை தயாரிப்பாளர்கள்தான் எடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.


இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

சாம் சி.எஸ். ஏமாற்றிவிட்டார்?

பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது திரைப்பட தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' என்ற படத்திற்கு இசையமைக்க பணத்தைப் பெற்றுக்கொண்டு சாம் சி.எஸ். ஏமாற்றிவிட்டதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் சமீர் புகார் அளித்துள்ளார். "அந்த புகாரில், 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்திற்கு இசையமைக்க கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.-க்கு ரூ.25 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டதாகவும், தற்போது அப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், படத்திற்கு இசை அமைக்க மறுப்பதுடன், கொடுத்த பணத்தை திரும்ப தராமல் சாம் சி.எஸ். ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2021-ம் ஆண்டு படத்திற்கு அட்வான்ஸ் வாங்கியபோது, சாம் சி.எஸ். மிகவும் பிரபலம் ஆகாத நிலையில், தற்போது, தான் பெரிய இசையமைப்பாளர் என்று கூறுவதாகவும், எனவே கூடுதல் பணம் கொடுத்தால் மட்டுமே படத்தை முடித்துக்கொடுப்பேன் என்று சொல்வதாகவும் சமீர் கூறியுள்ளார்". இதனிடையே குற்றச்சாட்டை மறுத்துள்ள சாம் சி.எஸ்., "என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும், புகாரளிக்கப்பட்ட காவல் நிலையத்திலிருந்து எந்தவொரு அழைப்பாணையும் தனக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Updated On 27 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story