இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முன்னேற்றம் என்பதை தொழில் ரீதியாகத்தன் பார்ப்பார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே தனிப்பட்ட முறையில் தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னென்ன? அதன்மூலம் வாழ்க்கையில் எந்த அளவிற்கு நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவார்கள். இதை மற்றொரு வகையில் சொல்லவேண்டுமானால் மெச்சூரிட்டி எனலாம். அப்படி இளம்வயதில் தன் வாழ்க்கையில் எடுத்த ஒருசில தவறான முடிவுகளால் கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டாலும், தனக்கான தேவை என்ன? யாருடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்? என்பது போன்ற கேள்விகளுக்கு அனுபவத்தின்மூலம் பதிலை கண்டறிந்து கணவர், குழந்தை என ஹேப்பி சோலாக வலம்வருகிறார் நடிகை அமலா பால். இவர் தனது காதல் குறித்தும், எக்ஸ் காதல்கள் குறித்தும், தாய்மை குறித்தும் பகிர்ந்துள்ளார்.


வேலையில்லா பட்டதாரி படக்காட்சி மற்றும் தனது கணவருடன் அமலா பால்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்!

‘மைனா’ திரைப்படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு நன்கு பரிச்சயமான நபராக மாறிய இவர், பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம்வந்தார். ‘தலைவா’ படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் காதலில் விழுந்தார். அவரை திருமணம் செய்துகொண்ட பிறகு ஒருசில மாதங்கள் நடிப்பிலிருந்து விலகியிருந்த அமலா பால், மீண்டும் தனக்கு பிடித்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று விஜய் கூறியதாகவும், ஆனால் தன்னால் நடிப்பை விடமுடியாது என்று கூறிய அமலா பால், ஒரு கட்டத்தில் கணவனை பிரிந்து நடிப்பை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறினார். விஜய்யை விவாகரத்து செய்தபிறகு திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அமலா பால், ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின்போது நடிகர் தனுஷுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இதற்கிடையே முன்னாள் கணவரான ஏ.எல்.விஜய் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அந்த நேரத்தில் அமலா பால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களில்தான் நடித்துவந்தார். இதனால் ‘ஏன் இவர் தனியாகவே இருக்கிறார்? இவரும் யாரையாவது திருமணம் செய்துகொள்ளலாமே!’ என்று அவருடைய ரசிகர்கள் அவரிடம் கோரிக்கை விடுத்துவந்தனர். அப்போதுதான் ஜகத் தேசாய் என்பவரை அறிமுகப்படுத்தினார் அமலா பால். தொழில் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை சந்தித்துக்கொண்டிருந்த அமலா பாலின் வாழ்க்கையில் வந்தவர்தான் ஜகத் தேசாய். கோவாவில் ஜகத் தேசாயுடன் சுற்றிய புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டுவந்த அமலா பால், திருமணத்திற்கு முன்பே அவருடன் கர்ப்பமானார். 2 மாத கர்ப்பமாக இருந்தபோது ஜகத் தேசாயை திருமணமும் செய்துகொண்டார். இப்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.


2 மாத கர்ப்பமாக இருந்தபோது ஜகத் தேசாயை திருமணம் செய்துகொண்ட அமலா பால்

என்னை புரிந்துகொண்ட காதல்!

எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசக்கூடிய அமலா பால், தனது உண்மையான காதலை கண்டறிந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். ஒருவருடைய மகிழ்ச்சியை பிறரிடம் தேடாமல் தனக்குள்தான் முதலில் தேடவேண்டும் என்ற வாழ்க்கைப்பாடத்தை தான் தாமதமாக கற்றுக்கொண்டதாக கூறும் இவர், தன்னை கண்டுபிடித்த பிறகு தனக்கான ஒரு உறவையும் தேடிக்கொண்டிருந்ததாக கூறுகிறார். “நான் என்னை கண்டுபிடித்தபிறகு, என்னுடைய ஹோம் எது என்பதை தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜகத்தை சந்தித்தேன். அவர் மிகவும் தாழ்மையான அன்பான ஒரு நபர். அதைவிட மிகவும் ரொமான்ட்டிக். எனக்கு சர்ப்ரைஸ் பண்ண ரொம்ப பிடிக்கும். ஆனால் என்னுடைய முன்னாள் காதல்களில் அது எனக்கு கிடைக்கவில்லை. இப்போது ஜகத் எனக்கு நிறைய சர்ப்ரைஸ் கொடுக்கிறார். டேட்டிங் கூட்டிப்போகிறார். முதலில் நாங்கள் காதலிக்க தொடங்கிய சமயத்தில் நான் ஒரு நடிகை என்றே அவருக்கு தெரியாது. அதனால் மிகவும் சாதாரணமாக நடந்துகொள்வார். அதுதான் எனக்கு பிடித்திருந்தது. நான் எப்போது என்னை கண்டுபிடித்தேனோ அப்போதுதான் எனக்கான காதல் என்னிடம் வந்தது. நாம் நமது மகிழ்ச்சியை எவ்வளவு வெளியே தேடுகிறோமோ அவ்வளவு டாக்சிக்கான ஆட்கள் வாழ்க்கையில் வருவார்கள். ஜகத் என் வாழ்க்கையில் வந்தபிறகு பெஸ்ட்டான விஷயங்கள்தான் எனக்கு தொடர்ந்து கிடைக்கிறது. சிறுவயதிலிருந்தே என் அப்பா எங்களை நன்றாக பார்த்துக்கொண்டாலும் நான் எதிர்பார்த்தது போன்று அவருடைய அன்பு எனக்கு கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் அப்பாவிடமிருந்து பாராட்டுகளை எதிர்பார்ப்பேன். ஆனால் அவர் இறந்தபிறகு யாரிடம் அதை எதிர்பார்ப்பது என ஏங்கி நின்றேன். அப்போதுதான் என்னை நான் கண்டுபிடிக்கும் பயணத்தில் இறங்கினேன். இப்போது வாழ்க்கையை திரும்பி பார்த்தால் அந்த பாடங்கள்தான் எனக்கு நிறைய வலிமையை கொடுத்திருக்கிறது” என்கிறார் பெருமையுடன்.


மகிழ்ச்சியை பிறரிடம் தேடாமல் தனக்குள்தான் முதலில் தேடவேண்டும் - அமலா பால்

அது என்னுடைய ரிவென்ஜ்!

வாழ்க்கை குறித்த முழு புரிதலுடன் மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறும் அமலா பால், உண்மையான காதல் குறித்து சமீபத்திய மேடை ஒன்றில் கேள்வி எழுப்பினார். மேலும் காதல் என்ற வார்த்தைக்கு தனது கணவர்தான் தனக்கான அர்த்தம் என்றும் மனம்திறந்தார். அவரிடம் சமீபத்திய பதிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த பதிவில், 'Showing all my ex how it's done' என்று குறிப்பிட்டிருந்தார். அது குறித்து அமலா பால் மிகவும் வெளிப்படையாகவே பதில் அளித்தார். “நிறையப்பேர் லவ் என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள். உலகத்திலேயே மிகவும் தவறாக பயன்படுத்தப்படும் வார்த்தை என்றால் அது காதல்தான். காதல் என்ற பெயரில் டார்ச்சர்தான் செய்கிறார்கள். டாக்சிக்காக மாற்றிவிடுகிறார்கள். உண்மையான காதலை அனுபவித்தபோதுதான், இதுதான் காதலா? இப்படி ஒரு காதல் சாத்தியமா? காதலில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நான் நானாகவே இருக்கமுடியுமா? என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். அதற்கு பதில் கிடைத்தபிறகுதான் ஒரு சிறிய ரிவென்ஜ்ஜாக அந்த பதிவை போட்டேன்” என்று கூறியிருந்தார்.


கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக...

தாய்மையால் வந்த பொறுமை!

குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமென திரைப்படங்களிலிருந்து பிரேக் எடுத்திருக்கும் அமலா பால், தான் ஒரு புத்தகம் எழுதினால்கூட கர்ப்பகாலத்தை பற்றித்தான் எழுதுவேன் என்கிறார். “கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி அனுபவம் இருக்கும். நான் என்னுடைய கர்ப்பகால பயணத்தை உணர்வுப்பூர்வமானதாக பார்க்கிறேன். ஒவ்வொரு ட்ரைமஸ்டரும் மிகவும் கடினமானதாக இருந்தது. அந்த காலகட்டம் என்னை முற்றிலும் மாற்றியிருக்கிறது. இப்போது நான் என்ற வார்த்தை முற்றிலும் மறந்துவிட்டது. என்னுடைய உலகமே என்னுடைய குழந்தைதான். அவனுக்கு வேலைசெய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கை முழுமைபெற்றிருப்பதாக உணர்கிறேன். எனது மகனுக்கு ‘இலாய்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். அதன் அர்த்தம் கடவுள் அனுப்பியது, தெய்வீகமானது என்பதுதான். எனக்கும் என் கணவருக்கும் ஒரு பாதையை அமைத்து கொடுத்திருப்பது குழந்தைதான். குழந்தை மட்டும் இல்லாதிருந்தால் எங்களுடைய உறவு எப்படி போயிருக்கும் என்று தெரியாது. ஆனால் குழந்தை வந்ததால் எங்களுடைய ஈகோவை விட்டுவிட்டு அவனுக்காகவே இருக்கிறோம். அதனாலேயே எங்களுடைய உறவும் ஆரோக்கியமாக இருக்கிறது. குழந்தைக்கு முன்புவரை எனக்கு பொறுமை என்பது கொஞ்சம்கூட கிடையாது. அம்மாவான பிறகு மிகுந்த பொறுமை வந்திருக்கிறது” என்று தாய்மை குறித்து பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார் அமலா பால்.

Updated On 27 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story