
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சிலர் முக்கிய பங்கு வகிப்பார்கள். அப்படி குழந்தைகளின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்தான் அவர்களது தாய், தந்தை. ஒருவரது வாழ்க்கையில் எந்த உறவுகளையும் விட தாய், தந்தை உறவு என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது. காரணம் யார் நம்மை விட்டுச்சென்றாலும் தாய், தந்தையர்தான் நம்மை எதிலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை கொண்டாடி தீர்க்க வேண்டும். இதில் தாயை போற்றும்வகையில் அன்னையர்தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் தந்தையர் தினம் என்பது இன்னும் அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை என்றுதான் கூறவேண்டும். தந்தையரை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக தந்தையர் தினம், வரும் ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தந்தையர் தினம் எப்படி வந்தது என உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்த தகவலோடு, திரையில் தந்தையை போற்றி எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் பாடல்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
டிக் டிக் டிக் திரைப்படத்தில் தன் மகனுடன் நடிகர் ரவி மோகன்
உலக தந்தையர் தினம்!
வாஷிங்டனை சேர்ந்த 'சோனோரா ஸ்மார்ட் டோட்' என்ற பெண்மணி,1909-ம் ஆண்டில் ஒருநாள் தேவாலயத்தில் அன்னையர் தின போதனையை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது தாய் இல்லாமல், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த இவருக்கு தந்தையர் தினம் குறித்து யோசனை தோன்றியுள்ளது. அன்னையர் தினத்தை போலவே தந்தையரை கௌரவப்படுத்த விரும்பினார். அதற்கான யோசனையையும் முன்மொழிந்தார்.
அதன்படி 1910-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி, முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1913-ம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1966-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் 'லிண்டன் பி.ஜான்சன்' ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகக் கொண்டாடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தந்தையர் தினம் 1972-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனால் தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தென்கொரியாவில் தந்தையர் தினத்தை பெற்றோர் தினமாகவும் கொண்டாடுகின்றனர். உலக தந்தையர் தினம் என்பது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு கொண்டாடப்பட்டாலும், சில நாடுகள் தேசிய அளவில் தந்தையர் தினத்தை வெவ்வேறு தினங்களில் கொண்டாடுகின்றன. போர்ச்சுகல், இத்தாலி, குரேஷியா போன்ற பல நாடுகள் மார்ச் 19-ம் தேதியை தந்தையர் தினமாக கொண்டாடுகின்றன.
தந்தையர்களை கௌரவிக்கும் தமிழ் திரைப்படங்கள்...
குடும்பத்தின் அஸ்திவாரமாக, தூணாக இருக்கும் தந்தையைப் பற்றி பல தமிழ் திரைப்படங்களும், திரைப்பட பாடல்களும் உரக்க பேசியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம். அபியும் நானும், விஸ்வாசம், தெய்வத்திருமகள், தங்க மீன்கள், பொம்மை நாயகி, மகாநதி போன்ற படங்கள் தந்தை - மகள் பாசத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்டவை. இந்த படங்களில், மகள்கள் மீது தந்தைகள் பொழியும் அன்பு அழகாக பேசப்பட்டிருக்கும். அதுபோல அப்பா - மகன் பாசத்தையும் பல திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. அவற்றில் சில டாடா, சிகரம் தொடு, டிக் டிக் டிக், தவமாய் தவமிருந்து.
அபியும் நானும் படத்தில் த்ரிஷா & பிரகாஷ் ராஜ் - தங்க மீன்கள் படத்தின் பாடல் காட்சி
அபியும் நானும்
தமிழ் சினிமாவில் அப்பா - மகள் என பேச்சு எடுத்தாலே அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது "அபியும் நானும்" திரைப்படம்தான். அபியும் நானும் 2008-ம் ஆண்டு வெளிவந்த குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தை ராதா மோகன் இயக்க, பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் வித்யாசாகர். ஒரு வளர்ந்த மகளின் தந்தை, விளையாட்டு பூங்கா ஒன்றில், ஒரு குழந்தையின் தந்தையைச் சந்தித்து, தனது மகளுடனான பாச உறவின் கதையை விவரிக்கிறார். அவளுடைய திருமணத்தை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு இருந்த சிரமங்கள் உட்பட அனைத்தையும் எடுத்துச்சொல்கிறார். இதுதான் படத்தின் கதை. படம் முழுவதும் அப்பா - மகள் பாசம் அனைவருக்கும் பிடிக்கும் நறுமணமாய் வீசும். அதுவும் இப்படத்தில் வரும் வா வா என் தேவதையே பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. குறிப்பாக, தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா... என்ற பாடல் வரி, ஒரு தந்தை தாயாக மாறியதை எடுத்து கூறியிருக்கும்.
தங்க மீன்கள்
தந்தைக்கு ஒரு மகளின் சிறப்பு என்ன என்பதை தங்க மீன்கள் படம் எடுத்துக்கூறியிருக்கும். இப்படத்தில் வரும்,“மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் என்பது காமத்தை சேர்ந்தது அல்ல என்று” என்னும் வரியை பற்றிக் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. ஒரு பெண்ணை தன் தந்தையைவிட இவ்வளவு அழகாக யாரும் கொஞ்சிட முடியாது என்பதற்கிணங்க இப்படத்தின் ஆனந்த யாழை பாடல் அமைந்திருக்கும்.
“தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி...
உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி...”
விஸ்வாசம் மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படக்காட்சி
விஸ்வாசம்
2019-ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் விஸ்வாசம். மகளின் கனவை நிறைவேற்ற, அவரின் உயிரைக் காக்க, உறுதுணையாக இருந்து வெற்றி பெறச் செய்யும் தந்தையின் கதைதான் விஸ்வாசம். இப்படத்தில் கண்ணான கண்ணே என்ற சென்டிமென்ட் பாடல் இடம் பெற்றிருக்கும். இது பல தந்தை-மகளுக்கு ஃபேவரைட் என்றே சொல்லலாம். அந்த பாடலில் வரும்
"நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்...
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்ம்...
எல்லோரும் தூங்கும் நேரம்ம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்ம்” என்னும் வரிகள் இயல்பு வாழ்க்கையில் ஒரு தந்தை மற்றும் மகள் இடையே நடக்கும் நடைமுறைகளை அழகாக எடுத்துக் கூறியிருக்கும்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா
இயல்பு வாழ்க்கையில் அதிகம் கவனிக்கப்படாதது தந்தைக்கும் - மகனுக்கும் இடையேயான உறவும், பாசமும்தான். அதனை அழகாக தமிழ் சினிமாவில் எடுத்துக் காட்டியிருக்கும் படங்களில் ஒன்று கேடி பில்லா கில்லாடி ரங்கா. ஒரு தந்தை தனது கஷ்டங்களை பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த மாட்டார். பிள்ளைகள் முன் அழமாட்டார். மகனிடம் நேராக கோபத்தை மட்டுமே காட்டும் தந்தை, மனதில் அவ்வளவு பாசங்களையும், ஏக்கங்களையும் புதைத்து வைத்திருப்பார். இதுபோன்ற உணர்ச்சிகளை இப்படத்தில் வரும் நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் மிக அழகாக எடுத்துக் கூறியிருக்கும். இதோ அந்த வரிகள்...
“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்”……
கிரீடம் மற்றும் தவமாய் தவமிருந்து படக்காட்சிகள்
கிரீடம்
ஒரு தந்தை தனது மகனை காவல்துறை அதிகாரியாக்க தனது அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்தும் உணர்ச்சிபூர்வமான கதைக்களத்தை சித்தரிக்கும் திரைப்படம்தான் கிரீடம். வாழ்க்கை என்ன என்பதை மகன் புரிந்துகொள்வதை பார்த்து ஆனந்தமடையும் தந்தையின் உணர்வுகளை, கிரீடம் படத்தின் ‘கனவெல்லாம் பலிக்குதே’ பாடல் வரிகள் அழகாய் கூறியிருக்கும்.
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே!
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே!
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே!
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே!
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே!
தவமாய் தவமிருந்து
இயக்குநரும் நடிகருமான சேரன் எழுதி இயக்கிய 'தவமாய் தவமிருந்து' திரைப்படம், ஒரு தந்தை தனது குழந்தைகளின் நல்வாழ்வுக்காக எவ்வாறு கடுமையாக பாடுபடுகிறார் என்பதை மிக மிக எதார்த்தமாக கிராம பின்னணியில் காட்டியிருக்கும். நடிகர்களின் இதயப்பூர்வமான நடிப்பும், அழகான இசையும் இணைந்து இந்தப் படத்தை பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெறச் செய்தது. இப்படத்தில்வரும் 'ஒரே ஒரு ஊருக்குள்ளே' பாடல், பார்ப்பவர்களை அந்த நிகழ்வுக்கு இட்டு சென்றுவிடும்.
பள்ளிக்கூடம் நா போகையிலே பம்பரமா தினம் ஓடுவேண்டா
வாத்தியார நா பாக்கையிலே வணக்கம் சொல்லி நல்ல பாடுவேண்டா
அந்த கால படிப்பையெல்லாம் படிக்க தாண்டா பார்த்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம பரீட்சயில தோற்றேன்
நா படிக்க நெனச்சதெல்லாம் நீ படிக்கணும்
என்னுடைய கவலையெல்லாம் நீங்க போக்கணும்...
இதுபோன்று பல பாடல்களும் திரைப்படங்களும் தந்தையின் பாசத்தையும், அவர்களின் உணர்வுகளையும் அழகாக எடுத்துக் கூறியிருக்கும்.
