
தனித்துவமான நடிப்புத் திறமையால் மலையாளத் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நிவின் பாலி. 'பிரேமம்', 'ஒரு வடக்கன் செல்ஃபி', 'பெங்களூர் டேஸ்' போன்ற வெற்றிப் படங்கள் மூலம் மலையாள ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், தமிழ்த் திரையுலக ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றவர் ஆவார். தற்போது இயக்குநர் ராமின் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் மூலம் தமிழில் மீண்டும் தனது தடத்தை பதித்துவரும் நிவின் பாலி, லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் மாஸ் வில்லனாகக் களமிறங்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டில் தனது வசீகரமான நடிப்பு மற்றும் எளிமையான அணுகுமுறை மூலம் பல ரசிகர்களை கவர்ந்த நிவின் பாலியின் இந்த மாற்றம் குறித்தும், அவரது திரைப்பயணம் குறித்தும் இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
அசாத்திய துணிச்சல்
'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' திரைப்படத்தில் நிவின் பாலி
சினிமா குடும்பப் பின்னணி இல்லாத நிலையிலும், தனது அசாத்திய திறமையாலும், கடும் உழைப்பாலும் மலையாளத் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் நடிகர் நிவின் பாலி. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி, நவராத்திரி திருநாளில் பிறந்த நிவின் பாலியின் பெற்றோர் சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்தாலும் அவரது குழந்தை பருவமும், பள்ளிப்படிப்பும் இந்தியாவிலேயே அமைந்தது. பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே பெற்றோருடன் சுவிட்சர்லாந்தில் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு நிவினுக்கு கிடைத்ததாம். சிறு வயதிலிருந்தே நடிப்பு மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த நிவின் பாலி, தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு பெங்களூருவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். ஐ.டி. துறையில் ஒரு சௌகரியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், நிவின் பாலியின் மனதில் சினிமா மீதான காதல் என்பது தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இதனால் தனது சினிமா ஆர்வத்தை கைவிட மனமில்லாத அவர், இறுதியாக ஒரு துணிச்சலான முடிவை எடுத்து, தான் பணிபுரிந்து வந்த ஐ.டி. பணியை விட்டுவிட்டு, 2010 ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அவரது முயற்சியின் பலனாக பிரபல இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ திரைப்படத்தின் மூலம் நிவின் பாலி நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் பல அறிமுக நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும், நிவின் பாலியின் இயல்பான மற்றும் தனித்துவமான நடிப்பு விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படி தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிவின் பாலி, அதன் பிறகு அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடித்து, மலையாள சினிமாவில் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக மிக விரைவில் உருவெடுத்தார்.
வசீகரமான நாயகன்
'தட்டத்தின் மறையத்து' மற்றும் 'நேரம்' திரைப்படத்தில் நிவின் பாலி
'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படத்திற்குப் பிறகு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதாக விமர்சனங்களைச் சந்தித்த நடிகர் நிவின் பாலிக்கு, 2012-ல் மீண்டும் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான 'தட்டத்தின் மறையத்து' திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படம் அவருக்குப் புதிய பரிமாணத்தை கொடுத்ததுடன், அவரது நடிப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உயர்த்தியது. பிறகு தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடித்து வந்த நிவின் பாலி, 2013-ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான 'நேரம்' மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான இந்த டார்க் ஹியூமர் திரைப்படம், நிவின் பாலியின் யதார்த்தமான நடிப்பால் பாராட்டப்பட்டதுடன், இதில் வரும் "பிஸ்தா" பாடல் தமிழகம் முழுவதும் வைரலாகி அவரது ரசிகர் பட்டாளத்தை பெருக்கியது. பின்னர் 2014 ஆம் ஆண்டு நிவின் பாலியின் சினிமா வாழ்க்கையில் பொற்காலமாக அமைந்து, '1983', 'ஓம் சாந்தி ஓசனா', 'பெங்களூர் டேஸ்' என அடுத்தடுத்து மூன்று மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து திரையுலகில் மிகுந்த கவனம் பெற்றார். குறிப்பாக, '1983' திரைப்படத்தில் 10 வயது சிறுவனுக்கு தந்தையாக, 40 வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார் நிவின். அதேபோல் மலையாளப் படமான 'பெங்களூர் டேஸ்' தமிழக ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்று, ஒரு கல்ட் கிளாசிக்காக மாறியது. இருப்பினும் 'இவிடே' போன்ற அடுத்தடுத்து வெளிவந்த சில படங்கள் பெரிய அளவில் நிவினுக்கு கை கொடுக்கவில்லை.
பிரேமம் தந்த பிரபலம்
2015-ஆம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் நடிகர் நிவின் பாலியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி, தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்று, சுமார் ரூ.60 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இது ஒரு சாதாரண காதல் கதையாக இருந்தாலும், நிவின் பாலியின் யதார்த்தமான நடிப்பு, ஜார்ஜ் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய இயல்பான உணர்வுகள், இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தன. அதிலும் ‘பிரேமம்' திரைப்படம் மலையாளத்தை கடந்து தமிழ் பேசும் ரசிகர்களிடமும் நிவின் பாலிக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. இந்தத் திரைப்படம் ஒரு இளைஞனின் மூன்று வெவ்வேறு காலகட்ட காதல் பயணங்களை அழகாகச் சித்தரித்த காவியமாகும். பள்ளிப் பருவத்து அன்பு, கல்லூரி காலத்து காதல், மற்றும் முதிர்ந்த வயது பிணைப்பு என ஒவ்வொன்றையும் நிவின் பாலி தத்ரூபமாக இப்படத்தில் வெளிப்படுத்திய விதம் பெரியளவில் பலரால் ரசிக்கப்பட்டது . குறிப்பாக இப்படத்தில் வரும் "மலரே" மற்றும் "ஆலுவா புழையின் தீரம்" போன்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன.
‘பிரேமம்' திரைப்படத்தில் மலர் டீச்சராக வரும் சாய் பல்லவியுடன் நிவின் பாலி
மேலும் ‘பிரேமம்' திரைப்படம் நிவின் பாலிக்கு தென்னிந்தியாவில் வசூல் ரீதியாக மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்ததுடன், மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்குப் பிறகு மலையாளத் திரையுலகில் ஒரு இளம் நடிகர் பெரிய வணிக ரீதியான வெற்றிகளைப் பெறாமல் இருந்த ஒரு வெற்றிடத்தையும் நிரப்பியது. இருப்பினும், 'பிரேமம்' படத்திற்குப் பிறகு நிவின் பாலி பல படங்களில் நடித்தாலும், 'பிரேமம்' அளவுக்குப் பெரிய வெற்றிகளை அவரால் மீண்டும் கொடுக்க முடியவில்லை. அதில் 'ஹேய் ஜூட்' போன்ற சில படங்களில் அவரது பேச்சு வழக்கு மற்றும் வசன உச்சரிப்பு விமர்சனங்களுக்கு உள்ளானது, மேலும் அவருக்கு பின்னடைவாக இருந்தது. இதேசமயம் அவரது உடல் எடை அதிகரித்ததால், சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் உருவகேலி விமர்சனங்களை எதிர் கொண்ட நிவின், மனரீதியாகவும் பாதிப்பிற்கு உள்ளானார். தைராய்டு பிரச்சினை காரணமாகவே தனது எடை அதிகரித்ததாகவும், உடல் கேலி விமர்சனங்கள் தன்னை மனதளவில் பெரிதும் பாதிப்பதாகவும் ஒருமுறை அவர் வெளிப்படையாகத் தெரிவித்தது அவரது ரசிகர்களை பெரிதும் கலங்கடித்தது. இருப்பினும், தொடர்ந்து படங்களில் நடித்துவந்த நிவின், நீண்ட இடைவேளைக்கு பிறகு 'வருஷங்களுக்கு சேஷம்' திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு வலுவான கம்பேக் கொடுத்தார்.
வில்லனாக புதிய பரிமாணம்
லோகேஷ் கனகராஜின் பென்ஸ் திரைப்படத்தில் நிவின் பாலியின் மிரள வைக்கும் தோற்றங்கள்
இப்படி மலையாளத் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிவின் பாலி, தற்போது மீண்டும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, இயக்குநர் ராமின் கைவண்ணத்தில், நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதுடன், வெளியீட்டிற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று உலக அளவிலான பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது ரசிகர்களை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் LCU-வின் நான்காவது படமான ‘பென்ஸ்’ திரைப்படத்தில் நிவின் பாலி 'வால்டர்' என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘வால்டர்’-ஆக நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று நிவின் பாலி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ க்ளிப்பை பார்த்து ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.
Thrilled to step in as ‘Walter’.
— Nivin Pauly (@NivinOfficial) June 4, 2025
Been waiting to Introduce you to him.
He's intense, he's different, and he's ready.
Get ready for 'Benz'.
Thankyou @Dir_Lokesh @Jagadishbliss @Sudhans2017
Lets rock it @bakkiyaraj_k @offl_Lawrence @SaiAbhyankkar ❤#Benz #LCU pic.twitter.com/w6UleNiaoT
இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மாதவன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன், சம்யுக்தா மேனன், மடோனா செபாஸ்டியன், பிரியங்கா மோகனன் போன்ற நட்சத்திரப் பட்டாளங்களும் இணைந்துள்ளனர். இதில் குறிப்பாக நிவின் பாலி 'ட்வின் ஃபிஷ் வால்டர்' என்ற பெயரில் இரட்டை வேடத்தில், ஒரு ஆபத்தான கேங்ஸ்டராகவும், அதே சமயம் அமைதியான, அப்பாவி தோற்றம் கொண்டவராகவும் தங்க நகைகள் மற்றும் தங்கப் பற்களுடன் ஒரு கவர்ச்சியான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது சமீபத்தில் வெளிவந்துள்ள அறிவிப்பு வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ளது . காதல் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நிவின் பாலி, ஒரு மிரட்டலான வில்லனாக LCU-வில் களமிறங்குவது, சூர்யா, ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியது போல, ஒரு ஐகானிக் ரோலாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மே 2025 இல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இத்திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக நிவின் பாலியின் இந்த துணிச்சலான தேர்வு, அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
