இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

காவ்யா மாறனும் அனிருத்தும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக பரவும் செய்திக்கு முதல்முறையாக அனிருத் அளித்துள்ள பதில்; அடுத்த திருமண செய்தியாக வெளியாகிவுள்ள விஜயகாந்தின் மகன் குறித்த தகவல்; விஜய் தேவரகொண்டா பற்றிய கேள்விக்கு முகம் சிவந்து வெட்கத்துடன் பேசிய ராஷ்மிகா மந்தனா; இணையத்தில் வைரலாகும் நடிகர் சந்தானத்தின் புதுவீட்டு கிரகபிரவேச விழா ஃபோட்டோக்கள்; வீடியோவுடன் வெளியான முத்தமழை பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷன் ஆகியவற்றை இந்த வார ராணி ஆன்லைன் சினி பிட்ஸ் பகுதியில் பார்க்கலாம்.


காவ்யா மாறன் - அனிருத்

எனக்கு கல்யாணமா?

இசையமைப்பாளர் அனிருத்தும், தொழிலதிபர் கலாநிதிமாறனின் ஒரே மகளான காவ்யா மாறனும் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. மேலும் இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயமாகவும் இது இருந்துவந்த நிலையில், கடந்த வாரம், அனிருத்-காவ்யா மாறன் குறித்த தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல மீண்டும் பரவியது. இருவர் திருமணம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த், கலாநிதி மாறனிடம் நேரடியாக பேசியதாக சொல்லப்பட்டதால், டாக் ஆஃப் தி டவுனாக அனிருத் மாறினார்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் அதிரடியான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். எனக்கா திருமணம் என்னும் வகையில் அந்த பதிவு உள்ளது. "திருமணமா? லொல்... அமைதியா இருங்கப்பா. வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று அனிருத் பதிவிட்டுள்ளார். இதனிடையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் சி.இ.ஒ-வான காவ்யா மாறனோ, திருமண வதந்திகள் குறித்தெல்லாம் கண்டுகொள்ளாமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருகிறார்.


‘கொம்பு சீவி’ படக்குழுவினருக்கு பிரியாணி பரிமாறிய சண்முக பாண்டியன்

பிரியாணி விருந்து கொடுத்த சண்முக பாண்டியன்

நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகிவந்த ‘படைத்தலைவன்’ படம் கடந்த 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் சில காட்சிகளில் தோன்றுவது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப்படத்தை அடுத்து சீமராஜா பட இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்து வந்தார். ‘கொம்பு சீவி’ என்ற தலைப்பிலான இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் கிளிம்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் சண்முக பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில் ‘கொம்பு சீவி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனையொட்டி படக்குழுவினருக்கு சண்முக பாண்டியன் பிரியாணி விருந்து அளித்துள்ளார். அவரே அனைவருக்கும் உணவு பரிமாறியதுடன், தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு உடைகைள வழங்கினார்.


விஜய பிரபாகரனுக்கு நடந்த நிச்சயத்தார்த்தத்தின் புகைப்படம்

விஜயகாந்த் மகனுக்கு திருமணம்!

கேப்டன் விஜயகாந்திற்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் களம் கண்டுள்ளனர். இதில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள படைத்தலைவன் திரைப்படம், மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பிரஸ் ஷோவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் சண்முக பாண்டியன். அப்போது தனது அண்ணன் விஜய பிரபாகரனின் திருமணம் குறித்து அவர் வெளிப்படையாக பேசினார். தனக்கு அண்ணி விரைவில் வருவார்கள் என்றும், அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும், அதற்கு நேரம் விரைவில் வரும் என்றும் சண்முக பாண்டியன் கூறினார். விஜய பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் நடைபெறவில்லை. விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் திருமணம் நடைபெறவில்லை என்று கூறப்பட்டது.


சந்தானத்தின் புதுவீட்டு கிரகப்பிரவேச விழா...

சந்தானம் வீட்டு கிரகப்பிரவேசம்

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவரான சந்தானம், காமெடியில் இருந்து கதாநாயகனாக தன்னை உயர்த்திக்கொண்டார். அவர் காமெடியனாக நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் அடித்தநிலையில், அவர் ஹீரோவாக நடித்த படங்களில் சில, ஓரளவு ஓடினாலும், சில படங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. ஆனால் இன்றும் சந்தானத்தின் காமெடி, டிவி-யில் வந்தால் விழுந்துவிழுந்து சிரிக்கும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சந்தானம் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டில் பால் காய்ச்சி சமீபத்தில் குடியேறியுள்ளார். மனைவி, மகள், மகன் என குடும்ப சகிதமாக சந்தானம், புதுவீட்டில் அமர்ந்து கிரகப்பிரவேசம் செய்ததன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா என்று ஆச்சர்யத்துடன் பார்க்கும் ரசிகர்கள், அவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்தி வருகின்றனர்.


முத்தமழை வீடியோ பாடலில் நடிகை த்ரிஷா

நல்லவேளை படத்துல வைக்கல!

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பாடகி சின்மயி பாடிய முத்தமழை பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் அந்த பாடலை பாடகி தீ பாடியநிலையில், சின்மயி வெர்ஷன் பெஸ்டா, தீ-யின் வெர்ஷன் பெஸ்டா என்று விவாதமே நடந்தது. இதனால் இந்த பாடலின் வீடியோ காட்சிகள் எப்படி இருக்கும் என்று, பெரும் எதிர்பார்ப்புடன் தக் லைஃப் படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. படமே ரொம்ப சுமார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், முத்தமழை பாடல் படத்தில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு மேலும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் பாடலை படத்தில் வைத்திருந்தாலாவது நன்றாக இருந்திருக்கும், அந்த பாடலில் யார் வருவார்கள் என்றெல்லாம் தங்கள் கற்பனை குதிரையை தட்டி ஓட்டினர் ரசிகர்கள்.

இந்த சூழலில்தான் முத்தமழை பாடலின் வீடியோவை, சில தினங்களுக்கு முன்னர் படக்குழு தனியாக வெளியிட்டது. பாடலை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று பார்த்தால், பாடலின் வீடியோ வெர்ஷனைப் பார்த்த இணையதளவாசிகள் பாடலை சகட்டுமேனிக்கு ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக முத்தமழை பாடலில் த்ரிஷாவின் ரியாக்‌ஷனை கேலி செய்து வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில், நல்ல வேளை இந்த பாடலை இயக்குநர் மணிரத்னம் படத்தில் வைக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளனர்.


ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா

தேவரகொண்டாவை பற்றி பேசியதும் வெட்கப்பட்ட ராஷ்மிகா!

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் நாகார்ஜுனா, தனுஷ், நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு விருந்தினராக பங்கேற்று குபேரா ட்ரெய்லரை வெளியிட்டார்.

இந்த விழாவில் ராஷ்மிகா மந்தனாவிடம் விஜய் தேவரகொண்டா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ராஷ்மிகா வெட்கத்தில் முகம் சிவந்தார். நடிகர்கள் தனுஷ் மற்றும் நாகர்ஜூனாவிடம் இருந்து எந்த விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று ராஷ்மிகாவிடம் முதலில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, நாகர்ஜூனாவின் வசீகரத்தையும் தனுஷின் நடிப்பு, இயக்கம், நடனத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புவதாக ராஷ்மிகா கூறினார். இதனையடுத்து, விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து எதை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் வெட்கத்தில் முகம் சிவந்த ராஷ்மிகா, அனைத்தையும் என்று பதில் அளித்தார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாகவும், அவ்வப்போது ஒன்றாக இணைந்து பொது இடங்களுக்கு செல்வது, சுற்றுலா செல்வது என சுற்றி வருவதாகவும் புகைப்படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Updated On 17 Jun 2025 12:07 AM IST
ராணி

ராணி

Next Story