
மனதில் பட்டதை வெளிப்படையாகவும், தைரியமாகவும் பேசக்கூடிய நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. பல நேரங்களில் சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், தான் கடந்துவந்த பாதைகளில் சந்தித்த சவால்கள் குறித்தும் வெளிப்படையாகவே பகிர்ந்திருக்கிறார். பெரிய நடிகரின் மகள் என்ற அடையாளத்தை தவறாக பயன்படுத்தாமல் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்தி பெயர்சொல்லும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார். குறிப்பாக, ஹீரோயின் கதாபாத்திரம் மட்டும்தான் வேண்டுமென கேட்காமல் வில்லி, குணச்சித்திரம் என முக்கியத்துவம் மிகுந்த எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடித்துவரும் இவர், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கதைகளை இன்னும் கனகச்சிதமாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கும் வரலட்சுமி, வெள்ளித்திரை மட்டுமல்லாமல் வெப் தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் என கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார். வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தி வெர்டிக்ட்’ என்ற திரைப்படம் மே 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வரலட்சுமி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்தும், அதில் ஈடுபடும் ஆண்களின் பிறப்புறுப்பை துண்டிக்கவேண்டுமென்றும் பளீரென பேசியிருக்கிறார். வரலட்சுமியின் இந்த துணிவுக்கு பலரும் வரவேற்பு கொடுத்துவருகின்றனர்.
‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் காட்சி...
தி வெர்டிக்ட்! - என்ன மாதிரியான கதை!
அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் அக்னி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பிரகாஷ் மோகன்தாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது ‘தி வெர்டிக்ட்’ திரைப்படம். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சுகாசினி, ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தில் தயாரிப்பாளரான பிரகாஷ் மோகன்தாஸும் ப்ளே பாய் போன்றதொரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஒரு வசதிபடைத்த பெண்ணின் கொலை மற்றும் அதுசார்ந்த புலனாய்வு, நீதிமன்ற வழக்கு மற்றும் தீர்ப்பை மையமாகக் கொண்ட இக்கதையின் டிரெய்லரே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதை குறித்து இயக்குநர் கிருஷ்ணா சங்கர் கூறுகையில், இந்த கதை முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டிருப்பதாகவும், மர்மமான முறையில் நடத்தப்பட்ட கொலையின் ரகசியத்தை திரில்லர் கதைக்களத்தில் எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த படம் பார்ப்போருக்கு புதிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார். அதேபோல் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது.
பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து பேசிய நடிகை வரலட்சுமி
காதலில் ஏமாற்றுபவர்கள் குறித்து வரலட்சுமி கருத்து!
‘தி வெர்டிக்ட்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வரலட்சுமி காதல் மற்றும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து பேசியிருந்தார். படத்தின் டிரெய்லரிலேயே ஹீரோ பல பெண்களிடம் நெருக்கமாக இருப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவதால் நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற ஆண்களை கடந்து வந்திருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வரலட்சுமி, காதலில் ஆண்கள் மட்டும்தான் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று இல்லை. பெண்களும் ஏமாற்றத்தான் செய்கிறார்கள். இதில் ஆண், பெண் என்றெல்லாம் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் யாராக இருந்தாலும் தவறு செய்கிறார்கள் என்று கூறினார். மேலும் இந்த விஷயத்தில் ஆண்களை மட்டும் குறை சொல்லக்கூடாது. பெண்களும் வீட்டில் வசதியான மாப்பிள்ளை பார்த்தால் காதலனை விட்டுவிட்டு பணத்துக்காக திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விடுகிறார்கள். இதுவும் தவறுதான். காதலை பொருத்தவரை யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றமுடியும். அது அவர்களுடைய குணாதிசயம்.
கண்ட இடங்களில் குப்பை போட்டால் இந்தியாவில் அபராதம் இல்லை - வரலட்சுமி
பாலியல் தொல்லைக்கு இங்கு தக்க தண்டனை இல்லை!
காதலைத் தொடர்ந்து சிறுவர்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குவது குறித்து பேசிய வரலட்சுமி, இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மற்ற நாடுகளில் குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனை மிகவும் கடுமையாக இருப்பதாக கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு ஐக்கிய அமீரக நாடுகளில் திருடினால் கையை வெட்டிவிடுவார்கள். அதுபோல் பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்களின் பிறப்புறுப்பை வெட்டவேண்டும் என்பதே சட்டமாக இருக்கவேண்டும். மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளிப்பது பயத்தை கொடுக்காது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இது கோபத்தில் சொல்லும் ஒரு விஷயம் கிடையாது. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர் வாழ்நாள் முழுக்க அதன் தாக்கத்தை அனுபவிக்க வேண்டும். சிலருக்கு உடல் அளவில் பெரிய பாதிப்பு இல்லாமல் குணமடைந்துவிட்டாலும், மனதளவில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பர். சிலருக்கு உடலில் ஏற்பட்ட பிரச்சினை சரியே ஆகாமல் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நபருடைய உடல் மற்றும் வாழ்க்கை சீரழிந்து போகும். இதுபோன்ற வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பது எப்படி சரியாகும். முதலில் இந்த வழக்குக்கு ஜாமின் இல்லை என்று சொன்னாலும் இப்போது ஒருசில மாதங்களில் ஜாமினும் கிடைத்துவிடுகிறது. என்னை பொருத்தவரைக்கும் குற்றவாளிக்கும் தண்டனை கிடைத்தால்தான் திரும்ப அந்த தவறை செய்யமாட்டார்கள். அவரை பார்க்கிற மற்றவர்களும் அந்த தவறை செய்ய பத்து முறை யோசிப்பார்கள். உதாரணத்திற்கு, கண்ட இடங்களில் குப்பை போடுவதற்கு இந்தியாவில் அபராதம் இல்லை. அதனால் எங்கு வேண்டுமானாலும் போடுகிறார்கள். அதே நபரை வெளிநாட்டுக்கு கூட்டிச்சென்று குப்பை போட சொன்னால் நிறைய யோசிப்பார்கள். ஏனென்றால் அங்கு அபராதம் விதிக்கப்படும். இதனை வைத்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் பயம் என்ற ஒரு வார்த்தை இல்லையென்றால் எதுவுமே செய்யமாட்டார்கள். எனவே பயத்தை குற்றவாளிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தவறு செய்தால் ஜெயிலுக்கு போய்விட்டு வந்துவிடலாம் என்றில்லாமல் உறுப்பையே வெட்டிவிடுவார்கள், அதன்பிறகு அதனை பயன்படுத்தவே முடியாது என்றால்தான் பயம் வரும்” என்று கூறினார்.
குழந்தைகளுக்கு குட் டச் எது? பேட் டச் எது? என்று சொல்லிக்கொடுக்க வேண்டும் - வரலட்சுமி
நிறையப்பேர் தவறாக நடந்துகொண்டார்கள்!
வரலட்சுமி இப்போது தைரியமான துணிச்சலான பெண்ணாக வலம்வந்தாலும் சிறுவயதில் பலபேர் அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியதுபோது கண்ணீர் மல்க தெரிவித்தார். அவர் சிறுவயதாக இருந்தபோது பெற்றோர் இருவருமே வேலைக்கு சென்றுவிடுவார்களாம். அப்போது வீட்டில் அவரை தனியாக விட்டுச் செல்வார்களாம். அப்போது பலர் தன்னிடம் பலமுறை தவறாக நடந்துகொண்டதாக கூறி அழுதார். மேலும் தனக்கு குழந்தைகள் இல்லை என்றும், குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு குட் டச் எது, பேட் டச் எது என்பதை சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும் என்றும் அட்வைஸ் செய்தார். எனவேதான் தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்பதை அடுத்தடுத்த பேட்டிகளில் அழுத்தம் திருத்தமாக கூறிவருகிறார். பாலியல் தொல்லையை தாண்டி, விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் பெற்றோரின் பிள்ளைகள் எப்படி மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பது குறித்தும் பேசியிருக்கிறார். விவாகரத்து என்பது இரண்டு தனிப்பட்ட நபர்களால் ஒன்றாக இணைந்து வாழமுடியாதபோது எடுக்கப்படும் முடிவு. ஆனாலும் குழந்தைகளுடைய தேவையை பெற்றோர் பூர்த்திசெய்வது அவசியம். குழந்தையை பெற்றுக்கொள்ளும் முன்பு பெற்றோர் பத்து முறை யோசிக்கவேண்டும். அப்படி முடிவெடுத்து பெற்றுக்கொண்டால் அவர்களுடைய நல்லது கெட்டது பற்றியும் யோசிக்கவேண்டும். பிரிய முடிவெடுத்தாலும் அது குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
