
(30-08-1981 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
சாவித்திரி டைரக்டு செய்யப்போகும் முதல் படம் என்பதால், "சின்னுரி பாப்பலு" படத் தொடக்க விழாவுக்கான வேலைகள் பெரிய அளவிலும், தீவிரமாகவும் நடந்தன. ஆனால், தொடக்க விழாவுக்கு ஒரு நாள் முன்னால், நான் டெல்லிக்குப் போக வேண்டியிருந்தது. அந்த ஆண்டு, நான் கதாநாயகனாக நடித்த "ராமு" படத்துக்கு ஜனாதிபதி பரிசு கிடைக்க இருந்தது.
பரிசு பெறுவதற்காக நான் டெல்லிக்குப் புறப்பட்டுப் போனேன். நான் புறப்படும் பொழுதே, "படத் தொடக்க விழாவுக்கு ஓடி வந்துவிட வேண்டும்" என்று சாவித்திரி சொல்லி இருந்தாள். எனவே, அவசர அவசரமாக பரிசைப் பெற்றுக்கொண்டு, பூஜைக்கு வந்து சேர்ந்தேன். "அய்யோ! என்னை இப்படி வம்பில் மாட்டி வைத்து விட்டீர்களே. என் உயிர் போகிறது" என்று அப்போதும் குறைபட்டுக் கொண்டாள், சாவித்திரி.
முயற்சி வெற்றி
அவள், டைரக்ஷன், புதுத் தொழில் என்று அலுத்துக் கொண்டாலும், அசட்டையாக இருக்கவில்லை. டைரக்ஷன் துறையில் தனது திறமையை பளிச்சிட, முழு மூச்சுடன் உழைத்தாள். சாவித்திரியின் உழைப்பு வீண் போகவில்லை. "சின்னுரி பாப்பலு" படத்துக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தார்கள். படம், நல்ல வெற்றி பெற்றதோடு, சாவித்திரிக்கு சிறந்த டைரக்டர் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொடுத்தது.
'சின்னுரி பாப்பலு' திரைப்படத்தின் வாயிலாக இயக்குநரான நடிகை சாவித்திரி
சாவித்திரி என் காலில் வந்து விழுந்தாள். நான் என்னவெல்லாமோ நினைத்து பயந்து கொண்டு இருந்தேன். இப்பொழுது உங்கள் முயற்சியாலும், ஆசியாலும் நான் டைரக்டர் ஆகிவிட்டேன் என்று மகிழ்ச்சியோடு சொன்னாள். தெலுங்கில் "சின்னுரி பாப்பலு" வெற்றி பெற்றதால், அதை, "குழந்தை உள்ளம்" என்ற பெயரில் தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம். தமிழிலும் சாவித்திரியே டைரக்டு செய்தாள். படம் சுமாராக ஓடியது.
ஆணவம்
ஆனால், அதுவரை அமைதியாகக் காரியம் ஆற்றிக்கொண்டு இருந்த சாவித்திரி, "குழந்தை உள்ளம்" படத்துக்குப் பிறகு, "நான் தமிழிலும் டைரக்டர் ஆகிவிட்டேன்" என்று இறுமாப்போடு சொல்லத் தொடங்கினாள்!
அன்றையில் இருந்து பிடித்தது, சனி! ஆணவம் என்பது ஆண்களுக்கு மட்டும் அல்ல; பெண்களுக்கும் அறவே கூடாது. யாருக்கும் தன்னம்பிக்கை இருக்கலாம். ஆனால், தான் என்ற தும்பிக்கை இருக்கக் கூடாது. இது, யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொள்வதைப் போல, நம்மையும் தப்பு செய்ய வைத்துவிடும்!
சாவித்திரி இயக்கிய 'குழந்தை உள்ளம்' திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ
விழுந்தாள் சாவித்திரி
மெத்தப்படித்த பல்லி, கழுநீர் பானையில் விழுந்ததாம் துள்ளி என்பார்கள்! அப்படி விழத் தொடங்கினாள், சாவித்திரி. அதிர்ஷ்டம் என்பது எப்பொழுதும் உதவுவது இல்லை. விதி, அதிர்ஷ்டத்தை விழுங்கி ஏப்பம் விடுவதும் உண்டு. இதை கொஞ்சம் எண்ணிப் பார்க்க மறந்துவிட்டாள், சாவித்திரி.
புகழ்ச்சிக்கு மயங்கினாள்
என்னிடம் இல்லாத ஒரு குணம் சாவித்திரியிடம் இருந்தது. அது, புகழ்ச்சி. நான் புகழ்ச்சியை வெறுப்பவன். நேருக்கு நேராக என்னை இந்திரன், சந்திரன் என்று புகழுபவர்களை நான் அதிகம் நம்புவது இல்லை. ஆனால், சாவித்திரி எனக்கு நேர் விரோதம். புகழ்ச்சிக்கு அடிமையாகும் குணம் சாவித்திரியிடம் இருந்தது. சாவித்திரியிடம் அடங்கிக் கிடந்த இந்த குணம், அவள் டைரக்டர் ஆனதும் விஸ்வரூபம் எடுத்தது.
சாவித்திரியின் மன மாற்றத்தை கண்டு அதிர்ச்சியான ஜெமினி கணேசன்
இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது, ஓர் கூட்டம்!. "அம்மா, நீங்கள் கடவுளம்மா. சாட்சாத் அம்மன்தான். உங்களுக்கு இருக்கும் ஆற்றல், படைத்தவனுக்குக் கூட கிடையாதம்மா. இன்று நீங்கள் இப்படி உயர்ந்து இருப்பதற்கு, நீங்களேதான் காரணம். உங்கள் முயற்சியும், உழைப்பும், சாமர்த்தியமும் திறமையும்தான் உங்கள் வெற்றிக்கு தூண்டுகோல்கள்" என்று சொன்னவர்களை எல்லாம், தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள் சாவித்திரி. எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம்தானே! சிலர் இதற்காகவே, சாவித்திரியைச் சுற்றத் தொடங்கினார்கள்.
(தொடரும்)
