
(26-07-1981 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
சுறுசுறுப்பாக படங்களை முடிக்க வேண்டிய நேரத்தில் எனக்கு மீண்டும் "டைபாய்டு" காய்ச்சல் வந்ததால், நான் நடிக்க வேண்டிய சில படங்களை, நானே வேறு நடிகர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது!.
அது போல சாவித்திரிக்கும் பல படங்கள் பறிபோகின. அவள் குழந்தை உண்டாகியிருந்ததால், அவசரமாக படத்தை முடிக்க விரும்பியவர்கள் வேறு கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்தார்கள். "நல்ல தீர்ப்பு" என்ற படத்தில் சாவித்திரி மூன்று நாள் நடித்த பிறகு, அவளை மாற்றிவிட்டு, ஜமுனாவை போட்டார்கள்.
1958 அக்டோபரில் இருந்து, சாவித்திரி படப்பிடிப்புக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தாள். குட்டி போடாமலே குட்டி போட்ட பூனை மாதிரி என்னையும், வீட்டையும் சுற்றிச்சுற்றி வந்தாள். அப்போது நான் "கல்யாணப் பரிசு", "நல்ல தீர்ப்பு" ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருந்தேன்.
வெள்ளையத்தேவன்
'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படத்தில் சிவாஜி, ஜெமினி
ஒருநாள் காலையில், 'தயாரிப்பாளர்கள் ஏ.எல். சீனிவாசன், வேலுமணி, பெரியண்ணன் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட இருபத்தைந்து பேர் எங்கள் வீட்டுக்கு படையெடுத்தார்கள்.
நான், என்னவோ ஏதோ என்று விழித்தபோது, பி.ஆர். பந்துலு மாமாதான் எங்களை உங்களை பார்க்கும்படி சொன்னார்கள். பந்துலு இப்பொழுது ஜெய்ப்பூரில் இருக்கிறார். "வீரபாண்டிய கட்டபொம்மன்" என்ற ஒரு படத்தை பிரம்மாண்டமான முறையில் எடுத்துக்கொண்டு இருக்கிறார். அதில் உங்களுக்கு ஒரு பாத்திரம் இருக்கிறது. நீங்கள் உடனே ஜெய்ப்பூருக்கு போகவேண்டும். மாட்டேன் என்று சொல்லக்கூடாது. மாமா உங்களை கைப்பிடியாகப் பிடித்து அனுப்பச் சொல்லியிருக்கிறார். தயவு செய்து சரி என்று சொல்லுங்கள் என்று என் கையைப் பிடித்தார், ஏ.எல். சீனிவாசன்.
"இருங்க... இருங்க... எனக்கு ஒண்ணும் புரியல, சிவாஜிதானே கட்டபொம்மனில் நடிக்கிறார்...!" என்று இழுத்தேன் நான்.
'ஆமாம், பிரதர்! அதில் இன்னொரு நல்ல பாத்திரம் இருக்கிறது. வெள்ளையத்தேவன் வேடம். அதற்கு நீங்கள்தான் பொருத்தமான ஆள். உங்களுக்கு ஜோடி பத்மினி. காதல் மன்னனுக்கு ஏற்ற ஜோடி என்று புகழ்ந்தார், ஏ.எல்.எஸ்.
"ஏன் பிரதர்! வெள்ளையத்தேவன் வேடத்தில், நம்ப எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பதாக அல்லவா சொன்னார்கள்" என்றேன், நான்! (எஸ். எஸ். ராஜேந்திரன்தான் வெள்ளையத் தேவன் பாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.)
“உண்மைதான், ஆனால், இப்பொழுது அவருக்கு சூழ்நிலை சரியில்லை. ஜெய்ப்பூருக்கு அவரால் போக முடியவில்லை" என்று சொன்னார், ஏ.எல்.எஸ்.
அப்படியென்றால், ஒன்று செய்யுங்கள். "என்னால் தற்போது ஜெய்ப்பூருக்கு வர இயலவில்லை. பிரதர் ஜெமினி கணேசன் வெள்ளையத்தேவனாக நடிப்பதில் எனக்கு விருப்பமே!" என்று, எஸ்.எஸ். ராஜேந்திரனிடம் ஒரு கடிதம் வாங்கிக் கொடுங்கள்" என்றேன், நான். அடுத்த அரை மணி நேரத்தில் கடிதம் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்கள்!
இன்றோ நாளையோ
ஜெமினி கணேசன் மற்றும் ஏ.எல்.எஸ் என்று அழைக்கப்பட்ட ஏ.எல்.சீனிவாசன்
இப்போது எனக்கு இன்னொரு சங்கடம் இருந்தது. சாவித்திரிக்கு பிரசவம் இன்றோ நாளையோ என்று இருந்த நேரம், அது. எங்கள் கணக்குப்படி நவம்பர் 15-ந் தேதி ஆகியிருக்க வேண்டும். ஆகவில்லை. ஒருவேளை எனது பிறந்த நாளான நவம்பர் 17-ந் தேதி குழந்தை பிறக்கப்போகிறதோ என்று, நாங்கள் நினைத்துக்கொண்டு இருந்தோம்!
இந்த நேரத்தில் ஜெய்ப்பூர் செல்வது என்றால் எப்படி? அதனால், பிரதர்! சாவித்திரியின் நிலைமை உங்களுக்குத் தெரியும். அவளுக்கு என்னைத் தவிர உதவிக்கு ஆள் கிடையாது. இந்த நேரத்தில், நான் வீட்டில் இல்லாதிருந்து, ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், நன்றாக இருக்காது என்று நான் தயங்கினேன்.
"பிரதர், பத்து இலட்சம் ரூபாயை செலவு செய்துவிட்டு பந்தலு மாமா காத்துக்கிடக்கிறார். ஒரு பெரிய மிலிட்டரியையே அங்கே தயார்படுத்தி வைத்து இருக்கிறார். நிமிடத்துக்கு நிமிடம் செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது. பதினைந்துநாள் இடைவிடாது படப்பிடிப்பை முடித்துவிட்டு, 30-ந் தேதி ஊருக்குத் திரும்ப வேண்டும். அதுவரைதான் அனுமதி பெற்று இருக்கிறாரகள்" என்றார் ஏ. எல். சீனிவாசன்.
சாவித்திரி அனுமதி
அப்போது டெலிபோன் மணி ஒலித்தது. ஜெய்ப்பூரில் இருந்து பந்துலு மாமா பேசினார். "பிரதர்! எப்படியாவது வந்து என்னைக் காப்பாற்றுங்கள். சாவித்திரிக்கு சுகப்பிரசவம்தான். நீங்கள் கவலைப்படாமல் புறப்பட்டு வாருங்கள்" என்றார்.
அடுத்து சிவாஜி பேசினார், "மாப்பிள்ளை! அம்மாடிக்கு (சாவித்திரியை சிவாஜி அம்மாடி என்றுதான் அழைப்பார்) ஒரு கெடுதலும் ஏற்படாது. அவளை மகமாயி காப்பாற்றுவாள். நீ உடனே கிளம்பி வா" என்று சொன்னார்.
நான் என்ன சொல்லுவது என்று விழித்துக் கொண்டிருந்தபோது சாவித்திரி பேசினாள்.
“இந்த நேரத்தில் உதவி செய்வதுதான் உண்மையான நட்புக்கு அடையாளம். நீங்கள் கவலைப்படாமல் ஜெய்ப்பூருக்குப் புறப்பட்டுப் போங்கள். எனக்கு ஒன்றும் ஆகாது. தினசரி உங்களோடு டெலிபோனில் பேசுகிறேன். நீங்களும் டிரங்கால் போடுங்கள்" என்றாள், சாவித்திரி.
சாவித்திரியை அம்மாடி என்று அன்போடு அழைத்த சிவாஜி கணேசன்
கட்டித் தழுவல்
வீனஸ் கிருஷ்ண மூர்த்தி, தனது "கல்யாண பரிசு" படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, என்னை ஜெய்ப்பூருக்கு அழைத்துக்கொண்டு போனார். பந்துலு மாமாவும், சிவாஜியும் என்னை கட்டித்தழுவிக் கொண்டார்கள். "உன் உதவியை மறக்க மாட்டேன்" என்று கூறினார், சிவாஜி. ஜெய்ப்பூரில் இருந்து தினமும் சாவித்திரிக்கு டிரங்கால் போட்டு பேசுவேன். அப்பொழுது எல்லாம் சாவித்திரி, "நீங்கள் என்னைப் பற்றி கவலைப்படாமல் வேலையை கவனியுங்கள்" என்று என்னை உற்சாகமூட்டுவாள்.
"பிரதர்! குழந்தை பிறந்த செய்தி வந்ததும். ஆளுக்கு ஒரு பாட்டில் "சாம்பெயின்" (மிக உயர்ந்த ரக ஒயின்) வாங்கி கொடுத்துவிட வேண்டும்" என்றார், டைரக்டர் தாதா மிராசி. "தந்துவிட்டால் போகிறது" என்று சொல்லி வைத்தேன், நான்.
அதில் இருந்து, ஒவ்வொரு நாள் டிரங்கால் பேசி முடித்ததும், என்ன பிரதர்! என்றைக்கு சாம்பெயின் வாங்கித்தர போறீங்க? இன்னுமா குழந்தை பிறக்கவில்லை? என்று கலை டைரக்டர் கங்காவும், கேமராமேன் சுப்பாராவும் என்னைப் பிடுங்கினார்கள்.
படப்பிடிப்பு முடிந்து, 20-ந் தேதி சென்னைக்குப் புறப்படத் தயார் ஆனோம்.
அந்த நேரத்தில், இரண்டு நாள் எடுத்த படப்பிடிப்பை, திரும்பவும் நடத்த வேண்டியிருக்கிறது" என்று அங்கலாய்த்தார், சித்ரா கிருஷ்ணசாமி. அட ராவணா என்று, நான் தலையில் அடித்துக்கொண்டேன்.
30-ந் தேதி மாலையில் சாவித்திரிக்கு போன் செய்தேன். சாவித்திரி ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறாள் என்று வீட்டில் செய்தி சொன்னார்கள். நானும், சிவாஜியும் உடனே ஜெய்ப்பூரைவிட்டு கிளம்பினோம். டிசம்பர் 1-ந் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தோம். என்ன குழந்தை பிறந்து இருக்கிறதோ? சாவித்திரி எப்படி இருக்கிறளோ? என்று விமான நிலையத்தில் இருந்து நேரே மயிலாப்பூர் இசபெல்லா நர்சிங் ஹோமுக்கு விரைந்தோம். படுக்கையில் இருந்தாள், சாவித்திரி.
சாவித்திரி! என்றேன் நான். "அம்மாடி குழந்தை எங்கே!" என்றார், சிவாஜி. "குழந்தை இன்னும் என் வயிற்றுக்குள்தான் இருக்கு. அப்பாவும், மாமாவும் வந்த பிறகுதான் வெளியே வரும்போல இருக்கிறது" என்று புன்னகைத்தாள், சாவித்திரி.
டிசம்பர் 2-ந் தேதி சாவித்திரிக்கு பிரசவம் ஆனது. பெண் குழந்தை பிறந்தது!
(தொடரும்)
