இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சின்னத்திரையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் இவர் பலராலும் கவனம் ஈர்க்கப்பட்டார். காரணம், தோழிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல, இவருடன் இணைந்து சின்னத்திரை நடிகைகளான ஷபானா, நட்சத்திரா, ரேஷ்மா முரளிதரன் ஆகியோர் எடுத்த போட்டோஷூட். இவர்களது குரூப் போட்டோஷூட்டும், ரீல்ஸ் வீடியோக்களும் ரசிகர்களிடையே பெரும் விருப்பத்தைப் பெற்றன. கொரோனா காலம் முடிந்ததும் இந்த தோழிகள் அடுத்தடுத்து திருமண வாழ்க்கையில் கமிட்டானார்கள். இந்நிலையில் இந்த அணியில் நடிகை ஷபானா மட்டும் இப்போது பிரிந்திருக்கிறார். இவர்களுக்குள் என்ன பிரச்சனை? எதனால் இவர்கள் பிரிந்து விட்டார்கள்? என்று பல கேள்விகள் எழுப்பப்பட்ட வந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார் நடிகை சைத்ரா ரெட்டி. அந்த பேட்டியில், தனது திருமண வாழ்க்கை குறித்தும், குழந்தை குறித்தும் மனம் திறந்துள்ளார். மேலும் சிறுவயதில் தான் அனுபவித்த துன்பங்கள், தனது குடும்பம், நண்பர்கள் என பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.


வலிமை படத்தில் நடிகர் அஜித்துடன் சைத்ரா

சீரியல்கள் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த சைத்ரா!

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான "கல்யாணம் முதல் காதல் வரை" என்ற சீரியல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார் சைத்ரா. அதற்கு முன்பு கன்னட சீரியலில் சைத்ரா நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் முதல் சீரியலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுதந்துவிட்டது. கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஆரம்பத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். அவர் அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகியபிறகு, அவருக்கு பதிலாக சைத்ரா ரெட்டி அந்த சீரியலில் அறிமுகமானார். முதல் சீரியல் சில மாதங்களில் முடிந்தாலும், அடுத்து அவர் வில்லியாக நடித்த "யாரடி நீ மோகினி" சீரியல் நல்ல அடையாளத்தை கொடுத்தது.

வில்லியாக இருந்தாலும் மக்களுக்கு பிடித்துவிட்டால் பிடித்ததுதான். அந்தவகையில் சைத்ராவுக்கு மக்கள் அதிகமான சப்போர்ட் கொடுத்துவந்தனர். அந்த சீரியல் முடிவடைந்த சமயத்தில் சன் டிவியில் இருந்து ப்ரைம் டைம் சீரியலுக்கு அவருக்கு வாய்ப்பு வந்தது. அதுதான் "கயல்" சீரியல். கயல் சீரியல் மூலமாக பல குடும்பங்களில் மகளாக கலக்கிக் கொண்டிருக்கிறார் சைத்ரா. டெலிவிஷன் ரேட்டிங் பாயின்டில் கயல் சீரியல் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. சீரியல்கள் ஒருபுறம் என்றால், கிடைக்கிற கேப்பில் சினிமாவிலும் அஜித்துடன் "வலிமை" திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் சைத்ரா.


தான் வாங்கிய பென்ஸ் காருடன் கணவருடன் போஸ் கொடுக்கும் சைத்ரா!

இப்படி சீரியல், சினிமா மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் சைத்ரா. சோஷியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் நன்கு பரிச்சயமான முகம் இவர்.

‘மிடில் கிளாஸ் கூட இல்ல... அதைவிட’

சைத்ரா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், தன்னைப்பற்றிய கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். "எனது அப்பா ஒரு டெய்லர். நான் எங்கேயும், எந்த மேடையிலும் இதை இதுவரை சொன்னதில்லை. நாங்கள் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்துதான் வந்தோம். எனது அப்பாவின் தொழில் மீது எனக்கு தாழ்ந்த எண்ணம் கிடையாது. ஆனால் கஷ்டப்பட்டு வந்தோம்னு சொல்றதுக்கு எனக்கு விருப்பமும் கிடையாது. ஏனென்றால் சிம்பதி கிரியேட் பண்ண எனக்கு பிடிக்கவில்லை. சிறு வயதில் கஷ்டப்பட்டாலும் சந்தோஷமாகத்தான் இருந்தோம். எங்க அம்மாவும் துணிதான் தைத்துக்கொண்டிருந்தார்.

நாங்க நடுத்தர குடும்பம் கூடக் கிடையாது. அதைவிட மோசமான நிலையில்தான் இருந்தோம். வீட்டு வாடகை கொடுக்கக்கூட எங்களிடம் காசு இருக்காது. எங்க அப்பாகிட்ட ஃபோன் கூட இருக்காது. வேலைக்கு போனா எப்போ திரும்ப வருவார் என்றுகூட தெரியாது. ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட நாங்கள் ரொம்ப ஆசைப்படுவோம். ஒரு ரூம் அளவுதான் எங்கள் வீடு இருக்கும். அதுக்குள்ளேயேதான் பாத்ரூம், கிச்சன், எல்லாமே இருக்கும். எங்கள் வீட்டில் டிவி கூட கிடையாது. பக்கத்து வீட்டுக்கு போய்தான் டிவி பார்ப்பேன். இப்படி கஷ்டப்பட்டு வந்ததால்தான் ஒரு பொருளின் மதிப்பு எங்களுக்கு தெரிகிறது. நானும், எனது அக்காவும் பள்ளியில் ஃபீஸ் கட்டாமல், க்ளாஸுக்கு வெளியே நிற்போம். ஹால் டிக்கெட் இல்லாமல் கூட நான் ஃபைனல் எக்ஸாம் எழுதப்போனேன். எப்போதுமே பரிட்சைக்கு அரைமணி நேரத்திற்கு முன்னால், பரிட்சை ஃபீஸ் கட்டாமல் ப்ரின்ஸிபிள் ரூமில் நிற்போம்.


சின்னத்திரை தோழிகள்

இந்த சூழலில்தான் எனக்கும், எங்க அக்காவுக்கும் ஒரு எண்ணம் இருந்தது. என்ன ஆனாலும் அம்மா, அப்பாவை கஷ்டப்படவிடக்கூடாது. அவங்க எங்க போக வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களை அங்கு கூட்டி செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதற்கான பலத்தையும் கடவுள் எங்களுக்கு கொடுத்தார். இப்போது எங்க அப்பா, அம்மா சந்தோஷமா இருக்காங்க. இப்போ டைம்பாசுக்காகத்தான் வேலை பாக்குறாங்க. என்னுடைய முதல் நாடகத்தின்போதே என் அம்மா, அப்பாவுக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்துவிட்டேன்." என்று தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தான் பென்ஸ் கார் உள்பட 2 கார்கள் வைத்துள்ளதாகவும், தனது கணவர் 2 கார்கள் வைத்துள்ளதாகவும் சைத்ரா கூறியுள்ளார்.

ஷபானாவுடன் என்ன சண்டை?

ஷபானாவுடன் சண்டை குறித்து பேசிய சைத்ரா, என்னுடைய கல்யாண ரிசப்ஷன் புடவை ஷபானாதான் வாங்கி கொடுத்தாள். ரிசப்ஷன் அப்போ எனக்கு மேக்கப் போட்டுவிட்டது ரேஷ்மா. காஸ்டியூம் ஷபானா. நான் சும்மா போய் நின்றேன். அவ்வளவுதான். நட்சத்திராதான் என்னுடைய ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட். நிறைய பேர், எங்க ஃப்ரெண்ட்ஷிப், சீரியல் முடியும்வரைதான் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி கிடையது. எங்களுக்குள்ளும் சண்டைவரும். இப்போ, எங்களுக்கும் ஷபானாவுக்கு இடையில் ஒரு சின்ன சண்டைதான். இது ஒரு சின்ன விஷயம். சீக்கிரம் சரியாகிவிடும். யார்தான் சண்டை போடமாட்டாங்க? ஆனால் சண்டையை வெளியே சொல்லமாட்டார்கள். அவ்ளோதான் என்றுக் கூறினார்.


கர்ப்பமாக இருக்கும் நட்சத்திரா - இந்தபக்கம் சைத்ரா ரெட்டி

எல்லோர் வீட்டிலும் குழந்தை ப்ரஷர் இருக்கும்!

எனக்குதான் முதலில் திருமணம் நடந்தது. எனவே முதலில் குழந்தை யாருக்கு என்றுதான் எல்லோரும் கேட்பார்கள். அதேபோல்தான் என்னிடமும் கேட்டார்கள். நான் இப்போதைக்கு இல்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் நட்சத்திரா, தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷமான செய்தியை சொன்னவுடன் எங்களுக்கு எல்லாம் மிக்க மகிழ்ச்சி. அதேநேரம் மீண்டும் என்னிடம்வந்து எல்லோரும் எப்போ குட்டி சைத்துவ பார்க்க போறோம்னு கேக்குறாங்க. எல்லோர் வீட்டிலும் குழந்தை பற்றி கேட்பார்கள். குறிப்பாக மாமியார் வீட்டில் கேட்பார்கள். ஆனால் என் கணவர் ஆகட்டும், அவரின் பெற்றோர் ஆகட்டும், யாருமே என்னை கேட்டது இல்லை. இதுவரைக்கும் எங்களுக்கு ப்ரஷர் இல்லை. ஆனா கண்டிப்பா நடக்கும். அதற்கென்று ஒரு டைம் வரும். அப்போ இருந்த தலைமுறை வேற.. இப்போ இருக்கும் தலைமுறை வேற.. இப்போ எல்லாமே போட்டியாக உள்ளது. அடுத்த ஆண்டு அல்லது அதற்கும் அடுத்த ஆண்டு, கண்டிப்பாக இரண்டு வருஷத்தில் நாங்கள் குழந்தை ப்ளான் பண்ணிவிடுவோம் என்றும் சைத்ரா தெரிவித்துள்ளார்.

Updated On 10 Jun 2025 10:19 AM IST
ராணி

ராணி

Next Story