இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரையுலகில் தனது குரலாலும், சின்னத்திரையில் தனது நடிப்பாற்றலாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பன்முகக் கலைஞர் தீபா வெங்கட், வரும் ஜூன் 11-ஆம் தேதி தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்துவரும் இவர், 90களில் தொடங்கி இன்றைய 2K கிட்ஸ்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகையாகவே இருந்து வருகிறார். குறிப்பாக 'கோலங்கள்' தொடரில் 'உஷா' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குடும்பத்தலைவிகள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர், இன்றும் பலரால் 'கோலங்கள் உஷா' என்றே அழைக்கப்படுகிறார். அந்த அளவுக்கு தனது குரலாலும், நடிப்பாலும் தனி முத்திரை பதித்து சாதித்து வரும் தீபா வெங்கட்டின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வெற்றிகள் குறித்து விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

கலை உலகில் அறிமுகம்


'அப்பு' திரைப்படத்தின் வாயிலாக பின்னணி குரல் கலைஞராக முத்திரை பதித்த தீபா வெங்கட்

பிரபல டப்பிங் கலைஞர், நடிகை, ஆர்.ஜே என பன்முக திறமையாளராக வலம்வரும் தீபா வெங்கட், 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை ஒரு வங்கி ஊழியர் என்பதால், பணி நிமித்தமாக அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தது. இதன் காரணமாக, தீபாவின் குடும்பம் மும்பையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தது. சென்னையில் வளமான கலாச்சாரச் சூழலில் வளர்ந்த தீபா, தனது சிறு வயதிலேயே கலைத் துறையில் ஆர்வத்தை காட்டத் தொடங்கினார். சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த தீபா, பெற்றோரின் ஆதரவோடு நடனம், இசை, நாடகம் என பலவற்றையும் கற்றுக்கொண்டது அவரது பன்முகத் திறமைக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது. சொல்ல போனால் இவர் மும்பையில் இருந்த சமயத்திலேயே சில இந்தி கார்ட்டூன் நிகழ்ச்சிகளுக்கு டப்பிங் கலைஞராகப் பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தார். அதில் குறிப்பாக, 'மெயின் ஃபோன் ரகவாலா' என்ற இந்தித் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரத்திற்குப் பின்னணி குரல் கொடுத்ததன் மூலம் குரல் நடிகையாக மிகுந்த கவனம் பெற்றிருந்தார். இதனையடுத்து, பல சிறுவர் தொடர்களுக்கும் குரல் கொடுத்து வந்த தீபா, சென்னை வந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். 1994 ஆம் ஆண்டு வெளியான 'பாசமலர்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தீபா, இங்கும் நடிப்புடன் சேர்த்து டப்பிங் செய்யும் வாய்ப்புகளையே அதிகம் பெற்றார். அவரது குரலின் தனித்துவமும், வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறனும் அவரை டப்பிங் துறைக்கு மேலும் நெருக்கமாக்கின. ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களுக்கும், குழந்தை நட்சத்திரங்களுக்கும் குரல் கொடுத்து வந்த தீபா, பின்னர் முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினார். அந்த வகையில் 2000 ஆம் ஆண்டில், 'அப்பு' திரைப்படத்திற்காக நடிகை தேவயானிக்கு குரல் கொடுத்தது, இவரது டப்பிங் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழ் தவிர இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளும் இவருக்கு தெரியும் என்பதால், வெவ்வேறு மொழி படங்களுக்கும் டப்பிங் செய்து திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

டப்பிங் உலகின் ராணி


நயன்தாராவின் குரலாக ஒலிக்க தொடங்கிய தீபா வெங்கட்

தமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்தியமான குரல் வளத்தால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள தீபா வெங்கட், பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்து, அவர்களின் கதாபாத்திரங்களுக்கு ஜீவன் ஊட்டிய திறமையாளர் ஆவார். நயன்தாரா, தேவயானி, சினேகா, சிம்ரன், அனுஷ்கா, ஜோதிகா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன்) எனப் பல முன்னணி நடிகைகளுக்குக் குரல் கொடுத்துள்ள தீபா வெங்கட், ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடல்வாகு மற்றும் உடல் மொழிக்கு ஏற்றவாறு பேசி வேறுபாடு காட்டுவதில் கைதேர்ந்தவர். குறிப்பாக, நயன்தாராவுக்காக இவர் கொடுத்த குரல் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றது. ‘தனி ஒருவன்’, ‘மாயா’, ‘இது நம்ம ஆளு’, ‘அறம்’, ‘வேலைக்காரன்’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘ராஜா ராணி’, ‘பிகில்’, ‘ஜவான்’, 'இமைக்கா நொடிகள்' மற்றும் ‘அன்னபூரணி’ என நயன்தாரா நடித்த பெரும்பாலான திரைப்படங்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். அதேபோல் சிம்ரனுக்கும் ‘ஏழுமலை’, ‘வாரணம் ஆயிரம்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'அந்தகன்' உட்படப் பல படங்களுக்குப் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதில் குறிப்பாக, அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜா ராணி’ மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘மயக்கம் என்ன’ போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்று தந்தன. அதிலும், தீபா வெங்கட் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது 'நீர் பறவை' படத்தில் சுனைனா மற்றும் நந்திதா தாஸ் ஆகிய இரண்டு கதாநாயகிகளுக்கும் அந்தந்த வயதிற்கு ஏற்றவாறு டப்பிங் பேசி உணர்வுபூர்வமான காட்சிகளில் கலங்க வைத்திருந்த விதம் இவரது திறமைக்கும், தொழில் பக்திக்கும் மிக சிறந்த சான்று எனலாம்.

சின்னத்திரையில் முத்திரை


'தில்' திரைப்படத்தில் விக்ரம் மற்றும் 'கோலங்கள்' சீரியலில் தேவயானியுடன் தீபா வெங்கட்

டப்பிங் கலைஞராக மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள தீபா வெங்கட், அதிலும் தனி முத்திரை பதித்தவர் ஆவார். வெள்ளித்திரையில் தீபா வெங்கட்டின் பயணம் என்பது, அஜித்குமார் நடித்த 'பாசமலர்கள்' திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. பிறகு அஜித் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த 'உல்லாசம்' திரைப்படத்திலும் நடித்த இவர், 'உள்ளம் கொள்ளை போகுதே' படத்தில் பிரபுதேவாவின் சகோதரியாகவும், 'தில்' படத்தில் விக்ரமின் சகோதரியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக இந்த இரண்டு படங்களிலும் அவரது யதார்த்தமான நடிப்பும், அண்ணன்-தங்கை பாசத்தை வெளிப்படுத்திய விதமும் பரவலான பாராட்டுகளை அப்போது பெற்றன. இது தவிர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா', 'குடைக்குள் மழை', 'கண்டேன் காதலை' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்த தீபா வெங்கட் பிறகு சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானார். 1996-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான 'இப்படிக்கு தென்றல்' என்ற நெடுந்தொடரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், 2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மிகவும் பிஸியான சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார். குறிப்பாக, 'கோலங்கள்' தொடரில் இவர் ஏற்று நடித்த 'உஷா' என்ற கதாபாத்திரம் அவருக்கு மிகப் பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. இது தவிர 'ரமணி Vs ரமணி', 'சித்தி', 'கோபுரம்', 'அண்ணாமலை', 'கஸ்தூரி', 'தர்ம யுத்தம்', 'மெட்டி ஒலி' என 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள தீபா, 80க்கும் மேற்பட்ட சீரியல் கதாபாத்திரங்களுக்கும் தனது குரலால் டப்பிங் பேசி கவனம் பெற்றார். மேலும் நடிப்பு மற்றும் டப்பிங்கை தாண்டி, ஒரு ரேடியோ ஜாக்கியாகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள இவர், சமீபகாலமாக தனது பணிகளை குறைத்துக் கொண்டுள்ளார்.

விருதுகளும் அங்கீகாரமும்


பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு குரல் கொடுத்த தீபா வெங்கட்

தீபா வெங்கட்டின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஐடி துறையில் பணியாற்றும் ராஜகோபால் என்பவரை நான்கு வருடங்கள் காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் 2010 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணம் மற்றும் குழந்தைகள் காரணமாக, தனது கலை வாழ்க்கையில் சில காலம் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார். இந்த இடைவெளிக்குப் பிறகும் கூட, அவர் தனது கலைப் பயணத்தை தொடர்ந்தார். 'மயக்கம் என்ன', 'இமைக்கா நொடிகள்', 'கேம் ஓவர்' போன்ற பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்து, தனது தனித்துவமான குரலால் ரசிகர்களைக் தொடர்ந்து கவர்ந்தார். தீபா வெங்கட் தனது கலைப் பயணத்தில் பல அங்கீகாரங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். 2007-ஆம் ஆண்டில், தமிழக அரசு சார்பில் அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இது அவரது கலைச் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். இது தவிர கோல்ட் ஐகான் விருது உட்பட எண்ணற்ற தனியார் விருதுகளையும் வென்றுள்ள தீபா, 2011 ஆம் ஆண்டில், ‘மயக்கம் என்ன’ திரைப்படத்திற்காக நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த குரல் நடிகைக்கான விருதை வென்றார். மேலும் ‘இமைக்கா நொடிகள்’, ‘கேம் ஓவர்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற திரைப்படங்களுக்காகவும் சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் விருதுகளை பல மேடைகளில் வென்ற தீபா, இன்றும் வெவ்வேறு தளங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து மிளிர்ந்து வருகிறார். இப்படி தனது குரலாலும், நடிப்பாற்றலாலும் தமிழ் திரையுலகிற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்து வரும் தீபா வெங்கட்டின் கலைப் பயணம் மென்மேலும் தொடர நாம் வாழ்த்துவதோடு, இன்னும் பல வெற்றிகளைக் கண்டு, சிகரங்களை அடைய இந்த பிறந்தநாளில் ராணி குழுமம் வாழ்த்துகிறது.

Updated On 10 Jun 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story