இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீபத்தில் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் கலக்கிய திரைப்படம்தான் நடிகர் சூரியின் ‘மாமன்’. கார்த்தியின் மெய்யழகனுக்கு பின், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இப்படம் அமைந்தது. மாமன் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அப்படத்தில் இடம்பெற்றிருந்த கதாபாத்திரங்கள். நடிகர் சூரி, ஜஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண், நடிகை விஜி சந்திரசேகர் என அனைவரின் நடிப்பும் கதையை மேலும் மெருகூட்டியது. ஒருசில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களான நடிகை, நடிகையரை தாண்டி , துணை கதாபாத்திரங்களின் நடிப்பும், காதலும் ரசிகர்களிடையே கவனம் ஈர்க்கும். அவ்வாறு மாமன் படத்தில் சூரி, ஜஸ்வர்யா லட்சுமி கதாபாத்திரங்களை தாண்டி கவனம் ஈர்த்தவர்கள்தான் ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் இணை. இப்படத்தில் இவர்களின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில், மாமன் படம் குறித்தும், அதில் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்தும், திரைத்துறையில் தன்னுடைய பயணங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் விஜி சந்திரசேகர். பேட்டியில், தனது சின்னத்திரை அனுபவம் குறித்து பேசியுள்ள அவர், நடிகை ராதிகாவின் சீரியல் ஒன்றில் நடித்ததற்கு இன்றுவரை சம்பளம் வராமல் ரூ.18 லட்சம் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த விஜி சந்திரசேகர்

தொடங்கிய திரைப்பயணம்…

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக தனது முதல் படத்தில் அறிமுகமானார் விஜி சந்திரசேகர். முதல் படமே நல்ல வெற்றியை தேடி தந்தாலும், படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் விஜி. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ‘கிழக்கு சீமையிலே’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்தார். இவ்வாறு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில், பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரையிலும் 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார் நடிகை விஜி. பல விருதுகளும் வென்றுள்ளார். தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

மனம் நிறைந்த படம்...

விஜி சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில், "மிகவும் மனம் நிறைந்த படம் மாமன். நானும், ராஜ்கிரணும் ஒரு கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடித்து இருக்கிறோம். பலரும் இப்படத்தை தங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி கொள்கின்றனர். எங்க அம்மா, பாட்டி, அப்பத்தா இப்படித்தான் இருந்தார்கள் என பேசுகிறார்கள். ‘விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் கெட்டுப்போக மாட்டோம்’. அதுதான் வாழ்க்கையில் முக்கியம். நாங்கள் நடித்த பல சீன்கள் படத்தில் வைக்கப்படவில்லை. அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆண் பிள்ளைகள் இதை சொன்னால் கோபித்து கொள்வார்கள்; ஒரு வீட்டில் பெண் என்பவள் முக்கியமானவள். எவ்வளவு சுத்தமாக வீடு இருந்தாலும், பெண் இல்லையென்றால் அது ஒரு குறையாகத்தான் இருக்கும். இந்த படத்தில் கூட அதனை காட்டியிருப்பார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், காட்சிகள் அனைத்தும் ரியலிஸ்டிக்காக இருந்ததுதான். படத்தில் காட்டப்பட்டுள்ள ஃபேமிலி சென்டிமெண்ட், மதர் சென்டிமெண்ட் என எல்லாமே ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் அப்படியே எவர்க்ரீனாக இருக்கும்" என்று தெரிவித்தள்ளார்.


மாமன் திரைப்படக் காட்சி மற்றும் கணவருடன் விஜி சந்திரசேகர்

இந்த விஷயத்துக்காக மட்டும்தான் நானும், என் கணவரும் சண்டை போடுவோம்...

விமானியான தனது கணவர், வீட்டுக்கு விருந்தினர் மாதிரிதான் வந்துபோவார் என்று விஜி கூறியுள்ளார். "எனது வீட்டுக்காரர் விருந்தினர் மாதிரிதான்; அவரது வேலை அப்படி. தெரிந்துதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னுடைய வேலையும், சில நேரங்களில் அப்படித்தான் இருக்கும். தொடர்ந்து ஷுட் இருக்கும். இரவு நேரங்களிலும் வேலை இருக்கும். எங்களுக்குள் சண்டை வரும்; சின்ன சின்ன சண்டை. பிரிந்துவிடலாம் என்ற அளவுக்கு சண்டை வராது. பிள்ளைகளை திட்டக்கூடாது எனக் கூறுவார். குழந்தைகள் விஷயத்தில்தான் எங்களுக்குள் வாதம் நடக்கும். நான் அவர்களை கண்டிக்கும்போது நீங்கள் எதுவும் கேட்கக்கூடாது என கணவரிடம் கூறிவிடுவேன். ஏனென்றால் குழந்தைகள் நம்மை மதிக்கமாட்டார்கள் எனக் கூறுவேன். இந்த விஷயத்தில்தான் எங்களுக்குள் வாதம் நடக்கும். எப்பொழுதுமே கணவன், மனைவி இடையேயான ஒரு சண்டை மறுநாள் வரை நீடிக்கக்கூடாது. அன்னைக்கு இரவுக்குள் அல்லது நான்கைந்து மணிநேரத்தில், ஒருவர் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். சண்டை மறுநாள் தொடர்ந்தால், உறவில் இடைவெளி விழ ஆரம்பிக்கும். அறுபது, எழுபது வயசுல பயம் வர ஆரம்பித்துவிடும். அந்த பயம் வரும்போது ஒருவரை விட்டு ஒருவர் இருக்கமாட்டார்கள். ஒன்றாக சாப்பிட காத்திருப்பார்கள். இளமை காலத்தைவிட, வயதாகும்போது காதல் அதிகரிக்கும்" என்று விஜி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அன்னதானத்தை போல அன்பும் ஒரு தானம்தான்!

பாசத்தை பற்றி பேசியுள்ள நடிகை விஜி, தான் மிகவும் பாசக்காரி என்று கூறியுள்ளார். அதிக பாசத்தை காட்டுவது தனது இயல்பு என்றும், பாசம் வைத்தவர்கள் தன்னை பிரிந்துவிட்டால், அவர்கள் இறந்துபோனதை போல கஷ்டப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். அன்னதானம், கல்விதானம் மாதிரி அன்பும் ஒரு தானம் என்றும், ஒருவர் மீது அன்புக் காட்டுவது, அவர்களை சரியான பாதையில் வழிநடத்து ஆகியவை சேவை என்றும் கூறியுள்ளார். தன்னுடைய தாய்மாமாவின் அன்பு குறித்து பேசிய விஜி, விடுமுறை நாட்களில் விஜயவாடா செல்லும்போது தங்கள் மீது மாமா, அவ்வளவு அன்பு செலுத்துவார் என்றும், அங்கு போனாலே வானத்திற்கும், பூமிக்கும் அவர் குதிப்பார் என்றும், அந்தளவு தங்களை கவனித்துக் கொள்வார் என்றும், அவர் தற்போது இறந்துவிட்டார் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.


நடிகை விஜி சந்திரசேகரின் குடும்ப புகைப்படம்

அந்த மாதிரி சீன்ல எல்லாம் இனிமேல் நடிக்கக்கூடாதுனு சொல்லிட்டாரு...

குடும்பமாக மாமன் படம் பார்த்துவிட்டு காரில் வந்தபோது, அனைவரும் அமைதியாக இருந்ததாகவும், ஒருவர் கூட பேசவில்லை என்றும், தான் இறந்த சீனை பார்த்து அவர்கள் வருத்தப்பட்டதாகவும், ‘இந்த மாதிரி சீன் இனி பண்ணக்கூடாது’ என கணவர் சொன்னதாகவும், விஜி தெரிவித்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு அந்தக் காட்சியில் நடித்ததாகவும், காய்ச்சல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நேரத்தில், 10 குடத்திற்கும் அதிகமான குளிர்ந்த நீர் தலையில் ஊற்றப்பட்டதாகவும், விஜி கூறினார். வசனங்கள் பேசி நடித்துவிடலாம்; இறந்தவர்மாதிரி நடிப்பது ரொம்ப கஷ்டம் என்றும் விஜி குறிப்பிட்டார்

சூரி இயல்பான மனிதர்...

"சூரி இயல்பான மனிதர். மனதில் ஒன்று, வெளியில் ஒன்று என பேசமாட்டார். ஒரு நடிகர் மாதிரியே தெரியமாட்டார். பக்கத்துவீட்டு, எதிர்வீட்டுக்காரர் மாதிரிதான் தோணும். கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவ்வளவாக அவருடன் நடிக்கவில்லை. இந்த படத்தில்தான் அவருடன் அதிக சீன்கள். எல்லோருக்கும் மரியாதை கொடுப்பார். அன்பானவர். இயல்பாகவே அவர் அப்படித்தான். மாமன் படத்திற்கு பிறகு அனைவரும் குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்தனர்" என்று விஜி சந்திரசேகர் கூறியுள்ளார்.


நடிகர் சூரி, மிக மிக இயல்பான நல்ல மனிதர் - விஜி சந்திரசேகர்

திரைத்துறையை விட்டு விலக நினைத்தேன்...

ஆரோகணம் எனது திரைவாழ்க்கையின் சிறந்த படம் என்றும், இன்றும் தான் எங்குப் போனாலும் அதைப்பற்றி பேசுவார்கள் என்றும், நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், ஆனால் அதற்கான வரவேற்பு கிடைக்கவில்லை என்றும், ஆனால் அதைப்பற்றி தான் கவலைப்பட்டது இல்லை என்றும் விஜி தெரிவித்துள்ளார். "பலரும் என்னை பிரபல நடிகைகளுடன் ஒப்பிட்டு, அவர்களைவிட நன்றாக நடிக்கிறீர்கள் எனக்கூறுவர். ‘அவங்க நடிக்கிறாங்க... நீங்க அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தீங்க’ என சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு தரும் சம்பளம் எனக்கு கிடைக்காது. அது ரொம்ப கஷ்டமாக இருக்கும். நிறைய நேரங்களில் திரைத்துறையை விட்டே விலகிவிடலாம் என நினைப்பேன். வெயில், மழை என அனைத்து காலங்களிலும் நடிப்போம்; சம்பளம் சரியாக வராது. இது ஒரு பெரிய பிரச்சனை திரைத்துறையில்; சம்பளம் வாங்குவதற்கு போராட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

18 லட்சம் சம்பள பாக்கி... அந்த பிரபல நடிகை ஏமாத்திட்டாங்க...

"சில நடிகைகள் முதலில் சம்பளம், பிறகுதான் நடிப்பேன் என கறாராக இருப்பார்கள். நான் அப்படி செய்யமாட்டேன். சம்பள விஷயத்தில் கறாராக இருக்க மாட்டேன். நடித்து முடித்த பிறகும் பலர் என்னிடம் சம்பளம் பிறகு தருகிறேன், சனிக்கிழமை தருகிறேன் என்று சொல்வார்கள். அதுபோல எத்தனையோ சனிக்கிழமை போய்விட்டது. யாரும் எனக்கு சம்பளத்தை தரவில்லை. சம்பளம் கொடுத்தால்தான் நடித்து கொடுப்பேன் எனக்கூற எனக்கு மனது வரவில்லை. நான் ஒரு சீரியலில் நடித்துக்கொடுத்து 8 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சம்பளம் வரவில்லை. நானும் பலமுறை கேட்டுவிட்டேன். இப்போது தருகிறேன், பிறகு தருகிறேன் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிகை ராதிகா நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டது. இதனால், அந்த சீரியலில் இருந்து ராதிகா விலகிவிட்டு, அவருடைய கதாபாத்திரத்தில் என்னை நடிக்க சொன்னார்கள். நான் முதலில் மறுத்தேன்; எனக்காக இதில் நடிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அவர் எனக்கு ஒரு அக்கா மாதிரி. அவர் சொன்னதால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த சீரியலில் இரவும், பகலாக நடித்துக் கொடுத்தேன். ஆனால், திடீரென அந்த தொடரை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். அந்த சீரியலை நிறுத்தப் போகிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது.


ராதிகாவின் சீரியலில் நடித்ததற்கு ரூ.18 லட்சம் சம்பள பாக்கி இருக்கிறது - நடிகை விஜி

கடைசிநாள் ஷுட்டிங்கிற்கு யாரும் வரமாட்டோம் என சக நடிகர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம் கெஞ்சி, அவர்களை வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். அவர்களிடம் நான் லீட் ரோலில் நடிக்கிறேன். என்னிடம் சொல்லாமல் ஷூட்டிங்கை நிறுத்த மாட்டார்கள் என சொன்னேன். ஆனால் 8 மணிக்கு ஷூட்டிங் முடியும்போது இன்னைக்குதான் கடைசி நாள் ஷூட்டிங் என என்னிடம் சொன்னார்கள். அதனால் மிகவும் மனவேதனை அடைந்தேன். எனக்கு ரூ.18 லட்சம் பாக்கி தர வேண்டும். அது சின்ன தொகை கிடையாது. இந்த துறை உண்மையானது கிடையாது. ஆனால் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். யாரோ ஒரு சிலரால் உங்கள் மனது உடையும். இதுபோல பல காரணங்களால் பலரும் இந்த துறையை விட்டு செல்கின்றனர. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பார்கள். ஆனால், முன்வினைப்பயன் என ஒன்று இருக்கிறது. அது யாரையும் சும்மாவிடாது. அதற்கு அனைவரும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். நாம் கொடுக்க, கொடுக்கதான் நம்மிடம் அது வரும். அது அன்பாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி. அதனால்தான் நான் தாராளமாக இருப்பேன். என் நெற்றியில் ஏமாளி என்று எழுதி இருக்கிறது போல, அதனால்தான் பலரும் என்னை ஏமாற்றுகிறார்கள். ஆனால் இதற்கு பிறகு நான் கறாராக இருக்கப் போகிறேன்” என சிரித்தபடியே கூறியுள்ளார் விஜி சந்திரசேகர்.

Updated On 24 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story