
இந்தியாவை பொறுத்தவரை சினிமா மற்றும் அரசியல் என்பது ஒன்றுக்குள் ஒன்றாகிவிட்டது. பெரும்பாலான சினிமா பிரபலங்கள் அரசியலிலும் இருக்கின்றார்கள். அந்தவகையில் தமிழகத்தின் மதுரையில் நடந்த முருகன் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள்? குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் இதில் கலந்துகொள்வாரா? என்றெல்லாம் மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். அந்த வகையில், இந்தவார ராணி ஆன்லைன் சினி பிட்ஸ் பகுதியில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்தின் முருகன் மாநாடு பங்கேற்பு, குபேரா பட ரிலீஸ் ரியாக்ஷன், ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் ஸ்ரீ, பாடகி சொன்ன பாலியல் குற்றச்சாட்டு, திருமண மோசடியில் ஈடுபட்ட நடிகை, ஆர்யா வீட்டில் நடந்த ரெய்டு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பார்க்க இருக்கிறோம்.
முருகர் மாநாட்டில் பங்கேற்காத ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் ஏன் பங்கேற்கவில்லை?
மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22ம் தேதி பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன் என பாஜக தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் என பலரும் இதில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என கடைசி நேரம்வரை தகவல்கள் வெளியான நிலையில், அவர் கலந்துகொள்ளவில்லை. அரசியலில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று நினைப்பதாலேயே ரஜினிகாந்த், மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் மாநாட்டில் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர் ஆன்மிகவாதிதான் என தெரிவித்தார்.
பிரபாஸ் படத்திற்கு போடப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சினிமா செட்
ஆசியாவிலேயே மிகப்பெரிய சினிமா செட்... யாருடைய படத்திற்கு தெரியுமா?
கல்கி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி ராஜாசாப்’. ஹாரர் கலந்த காமடி ஜார்னரில் உருவாகி உள்ள இப்படத்தில் பிரபாஸுடன், நிதி அகர்வால், மாளவிகா மோகனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்தை இயக்குநர் மாருதி இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 5ம் தேதி படம் ரிீலஸாக உள்ள நிலையில், சமீபத்தில் டீசர் வெளியானது. இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு சுவாரஸ்ய தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு காக்ககாக்க, சிறுத்தை, பையா உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றிய ராஜீவன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் இப்படத்திற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய பங்களா செட்டை உருவாக்கியுள்ளார். 42 ஆயிரம் சதுர அடியில் அரண்மனைபோல் உருவாக்கப்பட்ட இந்த சினிமா செட்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய சினிமா செட் எனக் கூறப்படுகிறது.
காஸாவில் பசியால் வாடும் குழந்தைகளை பார்த்து மனம் பாரமாவதாக பேசிய நடிகர் ஜேவியர் பார்டெம்
4கே தொழில்நுட்பத்தில் இனப்படுகொலை... காஸாவிற்கு ஆதரவாக பேசிய ஜேவியர் பார்டெம்!
கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீன போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. காஸா மீது நாளுக்கு நாள் மோசமாக தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. மேலும் காஸாவிற்கு மற்ற நாடுகள் உதவும் மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்த கொடூர செயலால், காஸாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர். இஸ்ரேலின் இந்த இனப்படுகொலை நடவடிக்கையை கைவிட பல நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அவ்வப்போது நடிகை, நடிகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு குரல் கொடுக்கும் பலர் தொழில்ரீதியாக இழப்பையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் 4கே தொழில்நுட்பத்தில் இஸ்ரேலின் இனப்படுகொலையை நாம் அனைவரும் வேடிக்கை பார்த்து வருவதாக ஸ்பேனிஷ் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் ஜேவியர் பார்டெம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து குழந்தைகளும் பட்டினியால் செத்துமடியும் புகைப்படங்களை நாம் பார்க்கிறோம். காஸா தற்போது எட்டியுள்ள இந்த நிலையை கண்டுவரும் வலியை என்னால் விவரிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
திருமண மோசடியில் ஈடுபட்டதாக நடிகை ரிஹானா மீது குற்றச்சாட்டு
திருமண மோசடி புகாரில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ரிஹானா. மேலும் பொன்னி தொடரிலும் நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்தியாகவும், பொன்னியில் ஹீரோவுக்கு அம்மாவாகவும் நடித்தார். இந்நிலையில் இவர் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை மோசடி செய்து திருமணம் செய்துகொண்டதாகப் புகாரில் தெரிவித்துள்ளார். முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெறாமல், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக ராஜ் கண்ணன் கூறியுள்ளார். இதுவரை தன்னிடமிருந்து ரூ.18 லட்சம் மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பணத்திற்காக ஒருவரின் மனதுடன் விளையாடக்கூடாது. நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜ் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். துதொடர்பாக இதுவரை ரிஹானா தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மீண்டும் ஃபாமுக்குவந்த நடிகர் ஸ்ரீ
ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் ஸ்ரீ!
தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் ஸ்ரீநடராஜன். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் மெலிந்த உடல், கலரிங் செய்த நீண்ட தலைமுடி என ஆள் அடையாளம் தெரியாமல், வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் எங்கே இருக்கிறார்? அவருக்கு என்ன ஆனது? என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இறுகப்பற்று படத்தில் சம்பளம் சரியாக தராததே இதற்கு காரணம் எனவும் பலரும் கூறினர்.
இதற்கு இயக்குநரும், நடிகர் ஸ்ரீயின் நண்பருமான லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்து, ஸ்ரீ விரைவில் குணமடைவார் என கூறியிருந்தார். இதன்பிறகு ஸ்ரீ குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீ ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் ஒரு புதிய நாவல் எழுதியுள்ளதாகவும், ‘மே ஐ கம் இன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த நாவலை அமேசான் கிண்டில் தளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
க்ளோஸ் ப்ரெண்ட் எனக்கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாடகி ஜோனிதா வருத்தம்
“நிறைய பாலியல் தொல்லைகள் வந்துள்ளன” - பாடகி ஜோனிதா காந்தி!
இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத்தின் செல்லம்மா, அரபிக்குத்து பாடல்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர் பாடகி ஜோனிதா காந்தி. மேலும் ஹிந்தியில் வெளியான வாட் ஜும்கா? பாடலின் மூலமும் ஹிட் அடித்தார். தொடர்ந்து பல்வேறு இசை கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோனிதா, "தான் பாலியல் ரீதியாக பல துன்புறுத்தல்களை சந்தித்தாக கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், நான் ஒருநாள் இன்ஸ்டாகிராமில் என்னை டேக் செய்திருந்தவர்களின் ஸ்டோரியை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னை க்ளோஸ் ப்ரெண்ட் லிஸ்டிஸ் சேர்த்து ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதை திறந்து பார்த்தபோது, தனது அந்தரங்க உறுப்பை பகிர்ந்து பின்னணியில் எனது போட்டோவை வைத்திருந்தார். அது எனக்கு அதிர்ச்சியை தந்தது. இதுபோன்ற விஷயங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் இதுவும் ஒருவகையான பாலியல் துன்புறுத்தல்தான். நான் உடனடியாக அவரை ப்ளாக் செய்து, ரிப்போர்ட் செய்தேன்" என்று தெரிவித்தார்.
குபேரா படத்திற்கு கலவையாக வரும் விமர்சனங்கள்
எப்படி இருக்கிறது குபேரா?
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ‘குபேரா’. இப்படத்தின் மூலம் நடிகர் நாகார்ஜுனாவுடன் முதல்முறையாக தனுஷ் இணைந்து நடித்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவான இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
படத்தில் தனுஷ் யாசகர் வேடத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே நடிப்பில் சிறந்து விளங்கும் தனுஷ் இப்படத்தின் மூலம் இன்னொரு கட்டத்திற்கு சென்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை தனுஷ் வாங்குவார் என்றும் கூறி வருகின்றனர். ஒருபுறம் தனுஷின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், மறுபுறம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாது எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. என்னதான் கருத்துகள் மாறுபட்டவாறு வந்தாலும் வசூலில் மந்தமில்லையாம்.
தனக்கும், ரெய்டு நடந்த ஹோட்டலுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்த ஆர்யா
ஆர்யா வீட்டில் ஐடி ரெய்டு!
நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் ஆர்யா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் கேப்டன். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை ஆர்யா தயாரித்து இருந்தார். தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத்தாண்டி, பா. ரஞ்சித் இயக்கத்தில் 'வேட்டுவம்' படத்திலும், 'ஆனந்தன் காடு' படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார்.
இந்தநிலையில் ஜூன் 18-ஆம் தேதி சென்னையில் உள்ள ஆர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அதேவேளையில் பிரபல ஹோட்டலிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தனக்கும், வருமான வரித்துறை சோதனை நடக்கும் உணவகங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆர்யா விளக்கமளித்தார்.
