
(09-08-1981 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
"கல்யாணப் பரிசு" படம் வெளிவந்தது. சென்னையில் காசினோ மற்றும் சில தியேட்டர்களில் திரையிட்டார்கள். படம் ஓகோ என்று போகும் என எதிர்பார்த்தோம்!. சாவித்திரி அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, "படம் குறைந்தது 25 வாரம் போகும். 50 வாரம் போனாலும் ஆச்சரியப்பட முடியாது" என்று சொல்லியிருந்தாள்!. ஆனால், முதல் மூன்று நாள் படத்தைப் பற்றி பேச்சே இல்லை. டைரக்டர் ஸ்ரீதருக்கும் வீனஸ் கிருஷ்ண மூர்த்திக்கும் முகம் சுருங்கிப் போய்விட்டது.
சக்கைப் போடு
மூன்று நாளைக்குப் பிறகு, ''கல்யாணப் பரிசு” திரையிடப்பட்ட தியேட்டர்களில் ஏகப்பட்ட கூட்டம். ஒரே களேபரம்!. ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் முன்னதாகவே விற்கப்பட்டுவிட்டன. 25 வாரமாக படம் கொட்டகை நிறைந்த காட்சியாக நடந்து கொண்டு இருந்தது. "சிறுவா! (இது ஸ்ரீதரின் செல்லப் பெயர்) இது உனக்கு முதல் படம்! படம் ஓடினது போதும்ப்பா. உனக்கு திருஷ்டி பட்டுவிடப் போகிறது. மற்றவர்கள் படத்தை வெளியிட முடியாமல் திண்டாடுகிறார்கள். நாம் படத்தை (கல்யாணப் பரிசை) நிறுத்தினால்தான். அவர்கள் படத்தை வெளிவிடுவார்களாம்" என்றார் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. அப்படியே படம் நிறுத்தப்பட்டது.
"கல்யாணப் பரிசு" படத்தில் விஜயகுமாரியுடன் ஜெமினி மற்றும் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி
கிசுகிசு
"கல்யாணப் பரிசு" மூலம் புதுக் கதாநாயகி சரோஜாதேவி, கன்னடத்துக் கிளி ஆனார். தயாரிப்பாளர்கள் சரோஜாதேவியின் வீட்டை மொய்த்தார்கள். எனக்கும் விஜயகுமாரிக்கும் நல்ல பெயர் கிடைத்தது. தங்கவேலு அண்ணன் ''காமடி" மன்னன் ஆனார். தயாரிப்பாளருக்குக் கொள்ளை லாபம். ஸ்ரீதருக்கு இமாலய வெற்றி. அப்போதும் "கிசுகிசு"வுக்கு குறைவு இருக்கவில்லை. ஜெமினி கணேசனுக்கும் சரோஜாதேவிக்கும் இடையே காதல்!. சரோஜா தேவியை சாவித்திரி செருப்பால் அடித்தார்!. இனிமேல், சரோஜா தேவியுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று சாவித்திரி உத்தரவு போட்டார்!. இந்தச் செய்திகளைப் படித்துவிட்டு, நானும் சாவித்திரியும் சிரித்தோமே தவிர, ஊர் வாய்க்காக நாங்கள் ஒருபோதும் மனதையும் உடம்பையும் கெடுத்துக்கொண்டது இல்லை.
"கல்யாணப் பரிசு" படத்தில் சரோஜாதேவியுடன் ஜெமினி - பாராட்டிய சாவித்திரி
ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்றால். "கல்யாணப் பரிசு" படத்தைப் பார்த்த சாவித்திரி, "உங்களுக்கு (ஜெமினி) என்னைவிட சரோஜாதேவி பொருத்தமாக இருக்கிறார். அவரோடு நிறையப் படங்களில் நடியுங்கள்" என்றாள். "பார்த்தால் பசிதீரும் என்ற படத்தில், சாவித்திரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சிவாஜி கணேசன், நான் எல்லோரும் சேர்ந்து நடித்ததை நீங்கள் நன்றாக ரசித்து இருப்பீர்கள்.
அந்தப் படத்தில் "அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் கண்ணல்லோ" என்று பாட்டுப் பாடி கொஞ்சிய சாவித்திரி, இன்று பேச்சு இல்லாமல் (15 மாதமாக மூச்சு மட்டும்தான் இருக்கிறது) ஊமையாகக் கிடக்கிறாளே, இதை விதியின் விளையாட்டு என்பதா? அல்லது கொடுமை என்பதா?
தனி விமானம்
1961-ல் நான் காஷ்மீரில் "தேனிலவு" படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது, டைரக்டர் ஸ்ரீதர், நடிகர் -நடிகைகள் எல்லோரையும், தனி விமானத்தில் ஸ்ரீநகருக்கு அழைத்துப் போனார் (மே 4-ந் தேதி).
என்னோடு (ஜெமினி) மனைவி பாப்ஜியும், மூன்று குழந்தைகளும் வந்தார்கள். (அப்போது சாவித்திரி சென்னையில் படப்பிடிப்பில் இருந்தாள்.) ஸ்ரீநகரில் நாங்கள் தங்குவதற்கு, ராஜ்பாக் என்ற இடத்தில் ஒரு பெரிய வீட்டை எடுத்து இருந்தார், ஸ்ரீதர். அங்கு சென்ற சில நாளில், சாவித்திரியும் ஸ்ரீநகருக்கு வருவதாக இருந்தது. நாங்கள் தங்கி இருந்த வீட்டில் வேறு அறைகள் இல்லை. ஸ்ரீதரிடம் இன்னும் ஓர் அறை ஒதுக்கிக் கேட்கவும் எனக்கு மனம் இல்லை.
முதல் மனைவி பாப்ஜி மற்றும் சாவித்திரியுடன் ஜெமினி
எனவே, வாடகைக்கு வேறு இடம் தேடினேன். நாங்கள் இருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில், காத்ரி என்ற நண்பர் இருந்தார். இவர், காஷ்மீர் அரசாங்கத்தில் ஓர் உயர் அதிகாரி என்பது, அவரிடம் பேசிய பிறகு தான் தெரிந்தது. அவரிடம் சென்று. உங்கள் அவுட் அவுஸ் காலியாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அதை எனக்கு வாடகைக்குத் தரமுடியுமா? என்று கேட்டேன். அந்த அதிகாரியோ, மிகவும் பெருந்தன்மையுடன், நீங்கள் அவுட் அவுசில் தங்க வேண்டாம். எங்கள் குடும்ப நண்பராக, எங்களோடு தங்கலாம். நீங்கள் தங்குவதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம் என்று என்னை குளிர வைத்தார். அது மட்டுமா? அவரே விமான நிலையத்துக்கு ஜீப்பைக் கொண்டு போய், சாவித்திரி, அவள் அம்மா, குழந்தை, நர்சு எல்லோரையும் அழைத்து வந்தார்.
ராஜ உபசாரம்
ஸ்ரீநகரில் ஒரு மாதம் தங்கி இருந்த சாவித்திரி, ஜெமினி
காத்ரியின் வீட்டில் எங்களுக்கு ராஜ உபசாரம் நடந்தது. அவர் வீட்டுப் பெண்கள் எல்லோரும் "முகத்திரை" அணிபவர்கள். ஆனால், "உங்களுக்கு முன்னால் எங்களுக்கு "முகத்திரை” தேவை இல்லை. நீங்கள் எங்களுக்கு அண்ணா, அண்ணி மாதிரி" என்று முகத்திரையை அகற்றிவிட்டார்கள். அவர்கள் முகத்திரையை அகற்றிய பிறகுதான், அவர்களுடைய கொள்ளை அழகு தெரிந்தது. ஆப்பிள் கன்னங்கள். சுண்டி இழுக்கும் விழிகள். சிவந்த வதனம்!
கள்ளங்கபடம் இல்லாத உள்ளம் படைத்த அந்தக் குடும்பத்தினரோடு, நானும் சாவித்திரியும் ஒரு மாதம் தங்கியிருந்தோம்!. அப்போது, சென்னையில் டைரக்டர் பீம்சிங்கிடம் இருந்து ஒரு "தந்தி" வந்தது!
(தொடரும்)
