
90-களில் இந்திய தொலைக்காட்சியை கலக்கிய 'சக்திமான்' தொடர், மீண்டும் வெள்ளித்திரையில் உயிர்பெற இருக்கிறது. இந்த அறிவிப்பு, 90'ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்லாமல், நவீன கால சினிமா ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. இந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் முதலில் ரன்வீர் சிங் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளன. மலையாளத்தில் வெற்றிகரமான சூப்பர் ஹீரோ படமான ‘மின்னல் முரளி’ யை இயக்கிய பாசில் ஜோசப் இப்படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான தகவலை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
புதிய சக்திமானாக அல்லு அர்ஜுன்
90களில் குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பிடித்த சூப்பர் ஹீரோ சக்திமான், தற்போது வெள்ளித்திரையில் உயிர்பெற தயாராகி வருகிறார். நடிகர் முகேஷ் கண்ணா நடித்த இத்தொடர், இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்திய பெருமையைப் பெற்றது. அதன் மகத்தான வரவேற்பை தொடர்ந்து, சக்திமானை ஒரு திரைப்படமாக உருவாக்கும் முயற்சி நீண்ட காலமாகவே இருந்து வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட இது குறித்த சின்ன வீடியோ கிளிப் வெளியாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டு முகேஷ் கண்ணாவே அதிகாரப்பூர்வமாக இப்படத்தை அறிவித்தார். முதலில், இந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் கூட தொடங்கியிருந்த சமயத்தில்தான், ரன்வீர் சிங் திடீரென இப்படத்திலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. ரன்வீர் சிங் விலகியதற்கான காரணம் குறித்துப் பல யூகங்கள் நிலவி வந்த நேரத்தில், முகேஷ் கண்ணாவே ஒரு பாட்காஸ்டில், ரன்வீர் சிங்கின் முகம் சக்திமான் கதாபாத்திரத்திற்கு தேவையான மாசற்ற தன்மையை பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது ரன்வீர் சிங்கின் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
சக்திமானாக அன்று முகேஷ் கண்ணா, இன்று அல்லு அர்ஜுன்
ரன்வீர் சிங் விலகலுக்கு பிறகு, சக்திமான் திட்டம் ஒருவித இழுபறியில் இருந்த நிலையில்தான், தற்போது தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுன் பெயர் வலுவாக அடிபடுகிறது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அல்லு அர்ஜுன், தனது சமீபத்திய படங்களான 'புஷ்பா: தி ரைஸ்', 'புஷ்பா: தி ரூல்' மூலம் பான் இந்தியா அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். இத்தகைய நடிகர் சக்திமான் போன்ற ஒரு ஐகானிக் கதாபாத்திரத்தில் நடிப்பது, படத்தின் வீச்சுக்கு மிகப் பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சுவாரஸ்யமாக, முகேஷ் கன்னாவே ஒருமுறை அல்லு அர்ஜுன் சக்திமான் வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கருத்து தெரிவித்திருந்தது, அல்லு அர்ஜுன் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இது வெறும் ரீபூட் மட்டுமல்லாமல், ஒரு முழுமையான இந்திய சூப்பர் ஹீரோ யுனிவர்ஸிற்கான தொடக்கம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் சூப்பர் ஹீரோக்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் நோக்கத்தைக் கொண்டுள்ள இத்திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் எப்படி தெய்வீக சக்திகளை பெற்று அநீதிக்கு எதிராக போராடி மனிதகுலத்தின் பாதுகாவலனாக மாறுகிறான் என்பதை மையமாகக் கொண்டிருக்கும்.
பாசில் ஜோசப் – அல்லு அர்ஜுன் கூட்டணி
மின்னல் முரளி திரைப்படம் மூலம் இந்திய சூப்பர் ஹீரோ சினிமாவுக்குப் புதிய பரிமாணத்தை அளித்த இயக்குநர் பாசில் ஜோசப், அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனுடன் 'சக்திமான்' படத்திற்காக கைகோப்பதாக சமீபத்தில் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த பட்ஜெட்டிலும் சிறப்பான கதைக்களம், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் கலாச்சார அடையாளங்களுடன் ஒரு தனித்துவமான சூப்பர் ஹீரோ படத்தை உருவாக்க முடியும் என்பதை 'மின்னல் முரளி' மூலம் பாசில் ஜோசப் நிரூபித்தார். அப்படத்தின் எதார்த்தமான சித்தரிப்பு, சூப்பர் ஹீரோவின் மன உணர்வுகள் மற்றும் உச்சகட்ட காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. குறிப்பாக, ஒரு அசல் சூப்பர் ஹீரோ கதைக்கு பாசில் ஜோசப்பின் இயக்கம் புதியதொரு உயிரோட்டத்தை கொடுத்த விதம் அனைவராலும் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், தற்போது பாசில் ஜோசப் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணி 'சக்திமான்' படத்திற்காக இணைவது, சினிமா வட்டாரங்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
'மின்னல் முரளி' பட இயக்குநர் பாசில் ஜோசப்புடன் இணைய உள்ள அல்லு அர்ஜுன்
இந்த பிரம்மாண்டமான கூட்டணி, இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்திச் செல்லும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'சக்திமான்' படத்திற்கு குறைந்தபட்சம் ரூ1000 கோடி முதல் ரூ1500 கோடிவரை பட்ஜெட் தேவைப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டை தாங்கும் சக்தி இந்தியாவில் அல்லு அர்ஜுன் போன்ற ஒரு சில நடிகர்களுக்கே உள்ளது. அதேபோல, 'மின்னல் முரளி' ஒரு OTT வெளியீடாக இருந்தாலும், அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்கு கதை மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இயக்குநர் பாசில் ஜோசப் இந்தப் படத்தில் மிகத் தெளிவாக உணர்த்தியிருந்தார். அதே திறமையுடன் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய ஸ்டார் பவரை இணைக்கும்போது, 'சக்திமான்' ஒரு அசாதாரணமான திரைப்படமாக உருவாகும் வாய்ப்புகள் மிக அதிகம். இந்தக் கூட்டணி, 'சக்திமான்' கதையை மீண்டும் உயிர்ப்பிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு புதிய, அசல் சூப்பர் ஹீரோ கதையை உருவாக்கும் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது எனலாம்.
சவால் நிறைந்த 'சக்திமான்' வேடம்
அல்லு அர்ஜுன் 'சக்திமான்' கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இது அவருக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் முகேஷ் கண்ணா தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் 'சக்திமான்' கதாபாத்திரத்திற்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். அவரது உடல் மொழி, குரல், மற்றும் அப்பாவியான கங்காதர் தோற்றம் என அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. எனவே, அல்லு அர்ஜுன் இந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் அசல் கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதுவரை, இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் 'கிரிஷ்' திரைப்படம் மட்டுமே தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுள்ளது. 'சக்திமான்' பழைய தலைமுறைக்கு நன்கு அறிமுகமான கதாபாத்திரம் என்றாலும், இன்றைய தலைமுறையினருக்கு அதன் தாக்கம் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களான ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன் போன்ற படங்களின் ஆதிக்கம் நிலவும் இக்காலத்தில், 'சக்திமான்' படத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பது ஒரு பெரிய சவாலாகவே இருக்கும்.
சக்திமானாக புதிய அவதாரம் எடுக்க தயாராகும் அல்லு அர்ஜுன்
ஆகையால், சக்திமான் திரைப்படக் குழுவினர் ஒரு கவர்ச்சிகரமான கதைக்களத்தை உருவாக்க வேண்டும். அத்துடன், உயர்தரமான விஷுவல் எஃபெக்ட்ஸ், அதிரடியான சண்டைக் காட்சிகள், மற்றும் வலுவான உணர்வுபூர்வமான உள்ளடக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு சிறப்பான திரைப்படத்தை தர வேண்டும். இந்த முறையும் கதையில் சக்திமானின் எதிரியான தம்ராஜ் கில்விஷ் மீண்டும் வருவதால், அந்தக் கதாபாத்திரத்தையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம். சக்திமான் மற்றும் கில்விஷ் இடையேயான மோதல் வெறும் சண்டையாக இல்லாமல், ஒளிக்கும் இருளுக்கும், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான ஒரு தார்மீக மற்றும் ஆன்மீக யுத்தமாக சித்தரிக்கப்படுவது மிக அவசியம். இது பார்வையாளர்களுக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தர வேண்டும். இத்தகைய அம்சங்களை படக்குழுவினர் நிச்சயம் ஆராய்ந்து, 'சக்திமான்' படத்திற்கு ஒரு ஆழமான பரிமாணத்தை சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பான் இந்திய அளவில் எதிர்பார்ப்பு
பான் இந்திய நட்சத்திரங்களாக வசூல் சாதனை படைத்துவரும் பிரபாஸ், அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் 'சக்திமான்' வேடத்தில் நடிப்பது உறுதியானால், இது வட இந்திய மற்றும் தென் இந்திய சினிமாக்களுக்கு இடையேயான தடைகளை உடைத்து, ஒரு கலாச்சார சங்கமத்தை உருவாக்கும். பான் இந்தியா திரைப்படங்கள் மூலம் பிரபாஸ் உட்பட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் பெறும் அமோக வரவேற்பை பெற்று ஏற்கனவே இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய திசையை வகுத்துள்ளனர். இந்த சூழலில், அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த 'சக்திமான்' திரைப்படம் இந்திய சூப்பர் ஹீரோ பாணியை உலகளாவிய மேடைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிப்பதாக கூறப்படுவதால், படத்திற்கு சர்வதேச வெளியீட்டு வாய்ப்புகளும், உயர்தர தொழில்நுட்ப ஆதரவு கிடைக்கும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் போன்ற ஒரு முன்னணி நடிகருடன் ஒரு புதிய, அசல் சூப்பர் ஹீரோ படம் உருவானால், அது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளையில், 'சக்திமான்' என்ற தலைப்பின் மீதான உணர்வுபூர்வமான பிணைப்பு இருந்தாலும், புதிய அசல் சூப்பர் ஹீரோ கதைகளுக்கான சாத்தியக்கூறுகள் இன்னும் பிரகாசமாக இருக்க வேண்டியது அவசியமாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தக் கூட்டணி உண்மையில் உருவானால், இந்திய சூப்பர் ஹீரோக்களின் சகாப்தத்தில் ஒரு புதிய அத்தியாயம் பிறக்கும். இது நடக்குமா? சாத்தியமாகுமா? மற்றும் 'சக்திமான்' இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் புயலைக் கிளப்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
