இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒவ்வொரு பெரிய ஹீரோக்களுக்கும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருக்கும். தங்களுடைய ஹீரோ படம் என்றால் கொண்டாடித் தீர்ப்பதுடன், அவர்களுக்கு இணையாக இருக்கும் மற்ற ஹீரோக்களை போட்டியாகவே பார்ப்பார்கள். மேலும் அவர்களுடைய ரசிகர்களுடன் மோதல் போக்கையும் கடைப்பிடிப்பார்கள். ஆனால் இதுபோன்ற போட்டிகளுக்கு ஒருசிலர் அப்பாற்பட்டு இருப்பர். அவர்களில் ஒருவர்தான் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லால். பொதுவாகவே பெரிய ஹீரோ என்றாலே சோலோ பர்ஃபாமன்ஸ் கொடுக்கத்தான் ஆசைப்படுவார்கள் என்ற பிம்பம் இருக்கும். ஆனால் மோகன் லாலை பொருத்தவரை தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல கதையாக இருந்தால் உடனே நடித்துக்கொடுப்பார். குறிப்பாக, மற்ற பெரிய ஸ்டார்களுடன் இணைந்து நடிப்பதற்கு தயக்கம் காட்டமாட்டார். அந்த வரிசையில் மம்முட்டி, ரஜினி, விஜய், பிருத்விராஜ், அக்‌ஷய்குமார், பிரபாஸ் என நிறையப்பேர் இருக்கின்றனர். இப்போது அதில் இணையவிருக்கிறார் சிவகார்த்திகேயன். எஸ்.கே 24 படத்தில் மோகன் லாலும் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய்யின் ரூட்டை சிவகாத்திகேயன் அப்படியே ஃபாளோ செய்வதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜில்லா படத்தில் மோகன் லாலுக்கு மகனாக விஜய் நடித்த நிலையில், எஸ்.கே 24 படத்தில் மோகன் லாலுக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.


சினிமாவில் கதாநாயகர்களாக அறிமுகமான நேரத்தில் கமல்ஹாசன், மோகன்லால், ரஜினிகாந்த்

மோகன்லால் தி லெஜன்ட்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்லால். இவருடைய உறவினரும் இயக்குநருமான உன்னிகிருஷ்ணன் பிள்ளையின் வழிகாட்டுதலால் தனது 18வது வயதில் முதன்முதலாக திரையில் தோன்றினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் அப்போது வெளியாகவில்லை. இருப்பினும் அந்த படத்தின்மூலம் ‘மஞ்சில் விரிஞ்ஞ பூக்கள்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான ரஜினி பின்னாளில் எப்படி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தாரோ அதேபோலவே முதலில் வில்லனாக அறிமுகமான மோகன் லாலும் 5 ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்து மோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம்வந்தார். 70, 80களில் தமிழில் எப்படி ரஜினி - கமல் காம்போ பிரசித்தமோ அதேபோல் மலையாளத்தில் மம்முட்டி - மோகன் லாலின் காம்போவும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதுமட்டுமல்லாமல் சுரேஷ் கோபியுடன் மோகன் லால் சேர்ந்து நடித்த ‘மணிச்சித்ரதாழு’ படமும் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றது.


7 படங்களில் இணைந்து நடித்துள்ள மோகன் லால் - மம்முட்டி

மம்முட்டி - மோகன் லால் எவர்க்ரீன் காம்போ

ஆதிரத்னம், அனுபந்தம், வர்தா, அடிமகள் உடமகள், கரையில்லா காட்டு போலே, ஹரிகிருஷ்ணன்ஸ் மற்றும் டிவெண்டி 20 ஆகிய 7 படங்களில் மம்முட்டியும் மோகன் லாலும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஆரம்பத்திலிருந்தே மம்முட்டி - மோகன் லால் இடையேயான நட்பு என்பது 45 ஆண்டுகளுக்கும் மேலாக மரியாதையாகவும் சுமுக போக்குடனும் இருப்பதை கேரள திரையுலகம் நன்கு அறியும். சமீபத்தில்கூட மம்முட்டிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதையடுத்து மோகன் லால் அவருக்காக சபரிமலைக்கு சென்று வேண்டுதல் செய்தார். இருவருக்குமிடையேயான நட்பு என்பது மிகவும் ஆழமானது என்பதை ஒரு பேட்டியில் மோகன் லால் கூறியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் இருவரும் சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், இல்லாவிட்டால் 2, 3 நாட்களுக்கு ஒருமுறை ஃபோன் செய்து பேசிக்கொள்வதாகவும் பகிர்ந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்முட்டியும் மோகன் லாலும் மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். மகேஷ் நாராயணா இயக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக MMMN என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினம் மற்றும் இங்கிலாந்து என மாறி மாறி நடந்துவரும் நிலையில், வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபரில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜில்லா மற்றும் ஜெயிலர் படங்களில் மோகன் லால்

விஜய் மற்றும் ரஜினியுடன்...

மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் மோகன் லால். 2014ஆம் ஆண்டு வெளியான ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன் லால். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அதேபோல் மோகன் லாலுக்கு அங்கிருக்கும் மவுசு குறித்து சொல்லவே தேவையில்லை. இதனால் இந்த இருவரையும் ஒரே படத்தில் இறக்கினால் டபுள் வசூல் சாதனை புரியலாம் என்று திட்டமிட்டே அந்த படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. எப்படியாயினும் எதிர்பார்த்ததை போன்றே சிவனும் சக்தியும் சேர்ந்து மாஸ் கிளப்பிவிட்டனர். கேரளாவின் முன்னணி கதாநாயகனான மோகன் லால் 10 ஆண்டுகளுக்கு முன்பே விஜய்க்கு அப்பாவாக நடிக்க ஒத்துக்கொண்டது குறித்து அப்போது பெருமளவில் பேசப்பட்டது. இந்நிலையில் விஜய் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறார். அவருடைய கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்திலும் மோகன் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், அதில் மோகன் லாலும் இணைந்திருப்பது அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. விஜய் மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் மோகன் லால். அந்த படத்தில் பான் இந்தியா ஸ்டார்கள் பலர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் மோகன் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடிப்பது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார் அவர்.


மோகன் லாலுக்கு மகனாகும் சிவகார்த்திகேயன்

எஸ்கேவுக்கு அப்பாவாகும் மோகன்லால்?

விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கும் அப்பாவாக நடிக்க மோகன் லால் கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்து விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் எஸ்.கே 24 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில்தான் மோகன் லாலும் இணைந்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க அவர் ஓகே சொல்லிவிட்ட நிலையில், மற்ற நடிகர்களுடனும் கால்ஷீட் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. அப்பா - மகன் உறவை மையப்படுத்திய கதை இது என்று சொல்லப்படுகிறது. தமிழ் தவிர, தெலுங்கிலும் அக்‌ஷய் குமார், பிரபாஸுடன் இணைந்து நடித்துவருகிறார் மோகன் லால். ‘கண்ணப்பா’ என்ற புராண கதையை நடிகர் விஷ்ணு மஞ்சு தயாரித்து நடிக்கிறார். அதில் பல பான் இந்தியா நடிகர்கள் இணைந்திருந்தாலும் மோகன் லாலின் கிராதா என்ற கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சியே 2 நிமிடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மலையாளத்திலும் கடந்த மார்ச் மாதம் வெளியாகி மாபெரும் வசூல்சாதனை புரிந்த ‘எம்புரான்’ படத்தில் மோகன் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அந்த படத்தை இயக்கிய பிருத்விராஜும் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார். இவர்களுடைய காம்போவில் அடுத்த படத்திற்காக மோலிவுட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படி எல்லா மொழிகளிலும் வயது வித்தியாசம் பாராமல் அனைத்து நடிகர்களுடனும் திரையை பகிர்ந்துகொள்வதற்கு மோகன் லால் எந்த ஈகோவும் பார்க்காததாலேயே உலகம் முழுக்க தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார்.


கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சிவகார்த்திகேயன் - இந்தப்பக்கம் லால் ஏட்டன்

விஜய்யின் ரூட்டை ஃபாளோ செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

சினிமாவில் தொடர்ந்து வெற்றிவாகை சூடுவது எப்படி என்ற சூட்சுமத்தை சிவகார்த்திகேயன் கற்றுக்கொண்டு விட்டார் என இயக்குநர் ராஜகுமாரன் ஒருமுறை கூறியிருந்தார். அதற்கேற்ப தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் கிராஃப் இயல்பாகவே உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் கையிலிருந்து சிவகார்த்திகேயன் துப்பாக்கியை வாங்கிய பின்னர் இவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. இந்தநிலையில், ஜில்லாவில் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்த லால் ஏட்டனை, தன்னுடைய அடுத்த படத்தில் தந்தையாக்கியுள்ளார். இந்த படத்தில் மோகன் லால் நடித்தால், அது படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மோகன் லால் மூலம், கேரளாவில் தனது மார்க்கெட்டை இன்னும் உயர்த்திக் கொள்ளலாம் என சிவகார்த்திகேயன் நினைப்பதாக சொல்லப்படுகிறது.

Updated On 27 May 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story