‘லியோ’ படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இந்த அறிவிப்பை ‘தளபதி 68’ படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும் தமிழ் சினிமாவிலும் ட்ரெண்டாக வலம் வந்துகொண்டிருப்பவர் தளபதி விஜய். வரும் அக்டோபர் 19 அன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ‘லியோ’ வெளியாகும் முன்னரே தளபதி விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கவுள்ளார்? என்ற கேள்வி ‘லியோ’ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே ஆரம்பித்துவிட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த மே 21 - ஆம் தேதி விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏ ஜி எஸ் என்ட்ர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தால் ‘தளபதி 68’ திரைப்படம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்புக்கு பின்னர் தளபதி விஜய், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவில் சிலர் யு எஸ் ஏ வில் (லாஸ் ஏஞ்சல்ஸ்) உள்ள ஒரு ஸ்டுடியோவில் 3D VFx டீ ஏஜிங் கருவி மூலம் விஜய்யை ஸ்கேன் செய்து லுக் டெஸ்ட் எடுத்ததாக புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. ‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு இரட்டை கதாபாத்திரம் இருக்கும் என்று ரசிகர்களாலும் நெட்டிசன்களாலும் பேசப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் கடந்த 02.10.2023 தேதி சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ‘தளபதி 68’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான முதல் பூஜை நடத்தப்பட்டு 03.10.2023 முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என இயக்குநர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், “அக்டோபர் மாதம் இனிதாக ஆரம்பித்துவிட்டது. இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவையான ரோலர் கோஸ்டர் ரைடாக இருக்கப்போகிறது. படத்தின் பூஜை புகைப்படங்கள் நம்ம லோகேஷின் ‘லியோ’ ரிலீஸான பின்பு வெளியிடப்படும்" என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தளபதி 68 படப்பிடிப்பு இனிதே தொடங்கி தளபதி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்திருக்கிறது.

Updated On 6 Oct 2023 5:50 AM GMT
ராணி

ராணி

Next Story