
பெரும் பொருட்செலவு மற்றும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும் பல படங்கள் ரசிகர்களை ஏமாற்றி தோல்வி அடையும் நிலையில், சில படங்கள் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் இன்றி திரைக்குவந்து சக்கப்போடு போடும். அந்த வகையில் கன்னடத்தில் உருவாகி தென்னிந்திய மொழிகளில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பை பெற்று பம்பர் ஹிட் அடித்த படம்தான் 2022ல் வெளியான ‛காந்தாரா'. திரைப்படத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டியே கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். நாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார். மிக மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூல் சாதனை படைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‛காந்தாரா சாப்டர் 1' என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது காந்தாரா படத்தின் முந்தைய கதைக்களத்தை வைத்து படம் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதில்தான் இப்போது பிரச்சனையே. ஒன்று இரண்டு பிரச்சனை அல்ல... தொடர் மரணங்கள்வரை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. நம்பினால் நம்புங்கள் என்றுக் கூறிதான் இதனை சொல்ல வேண்டும். அப்படி என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்...

காந்தாரா படத்திற்காக தேசிய விருது பெற்ற ரிஷப் ஷெட்டி
இந்தியாவையே மிரட்டிய காந்தாரா வெற்றி!
கே.ஜி.எஃப் வெற்றிப்படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம்தான் காந்தாரா. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, அவரே நடித்து, வெறும் ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான காந்தாரா படம், இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றதால், ரூ.400 கோடிக்கும்மேல் வசூல் செய்தது. நில உரிமையையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் இப்படம் பேசியிருந்தது. படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
கர்நாடக மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. வழக்கமாக விவசாயக் கூலிகள், பொதுமக்கள், நிலப்பிரபுக்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் என இவர்களை வைத்தே நில உரிமை குறித்து திரைப்படங்களில் பேசப்பட்டுவந்த நிலையில், அதிலிருந்து வேறுபட்டு பாமர மக்களின் கடவுள் நம்பிக்கையின் மூலமாக நில அரசியலை பேசியது காந்தாரா. கடவுள் நம்பிக்கையின் மூலம் நில அரசியல் கையாளப்பட்டவிதம் கவனம் ஈர்த்தது என்றே சொல்லலாம்.
இப்படி மெகா ஹிட் அடித்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் சற்றும் தயங்கவில்லை. அடுத்த பாகத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று அறிவித்துவிட்டது. காந்தாரா படத்தின் முதல் பாகம்தான் நாம் அனைவரும் பார்த்துள்ளோம். தற்போது எடுக்கப்பட்டுவரும் இரண்டாம் பாகம், முதல் பாகத்திற்கு முன்பு என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை விளக்கும் வகையில் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திற்கு பெயர் ‛காந்தாரா சாப்டர் 1' என்று வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து மரணமடைந்த ‛காந்தாரா சாப்டர் 1' படத்தின் 2 நடிகர்கள்
நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்!
நம் சினிமா துறையில் ஒரு மித் உண்டு. அதாவது ஜீசஸ் படம் எடுப்பவர்கள், ஜீசஸாக நடிப்பவர்கள், ஐயப்பன் உள்ளிட்ட சுவாமிகளின் படம் எடுப்பவர்கள், தீவிர பேய் படம் எடுப்பவர்கள் ஆகியோர் இறந்துபோகிறார்கள், தொடர்ந்து மரணிக்கிறார்கள் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டது. இதனால் அதுபோன்ற படங்கள் நிறைய எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து இந்த விஷயம் காந்தாரா படத்துடன் பொருத்திப்பார்க்கப்படுகிறது. காந்தாரா இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டிருந்த 2 நடிகர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
இதில் நடிகர் ராகேஷ் பூஜாரி, உடுப்பி அருகே நித்தே என்ற கிராமத்தில் உறவினர் ஒருவரின் திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்(மே 11). அவருக்கு வெறும் 34 வயதுதான். நடிகர் ராகேஷ் பூஜாரி, 2020ஆம் ஆண்டு ஜீ கன்னட டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியான கில்லாடிகலு சீசன் 3 என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர். அதனால் கன்னட மக்களிடையே பயங்கர ஃபேமஸாக இருந்துள்ளார்.
மேலும் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகராக நடித்து வந்த கபில் என்பவர் உயிரிழந்தார்(மே 6). படப்பிடிப்பில், மதிய உணவு இடைவெளியின்போது நடிகர் கபில், கொல்லூர் சௌபர்ணிகா ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்பகுதியில்தான் ஷூட்டிங் நடந்துக்கொண்டிருக்கிறது. அப்போது ஆற்றில் திடீரென நீர் வரத்து அதிகரித்ததால், அவர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் தேடி உடல் மட்டும்தான் கிடைத்தது. என்ன நடந்தது என்று யாருக்குமே புரியவில்லை.

காந்தாரா படத்தில் பஞ்சுருளி தெய்வமாக ரிஷப் ஷெட்டி
மரணங்களுக்கு முன் விபத்து
இதனை பார்ப்பவர்கள் 2 மரணங்கள்தானே என்று கேட்கலாம். சற்று பொறுங்கள். இன்னும் நிறைய அச்சுறுத்தும் விஷயங்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் காந்தாரா 2 படப்பிடிப்பு கொல்லூரில் நடந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக 20 துணை நடிகர்கள் மினி பேருந்து ஒன்றில் ஷூட்டிங் ஸ்பாட் சென்று நடித்து முடித்துவிட்டு திரும்பியுள்ளனர். ஆனால் ஷூட்டிங் முடிந்து திரும்பியபோது அவர்களின் பேருந்து மிகப்பெுரிய விபத்தில் சிக்கியது. அந்த பேருந்து தலைகுப்புற முழுவதும் கவிழ்ந்தது. நல்ல வேளையாக இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால் பலருக்கு நல்ல காயம் ஏற்பட்டது. இத்துடன் மற்றொரு விபத்தும் நடந்துள்ளது. இந்த படத்திற்காக பெரிய செட் ஒன்றை போட்டுள்ளனர். எல்லா பெரிய செட்டிலும் விபத்து ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த செட் நன்கு உறுதியாக போடப்பட்டும் விபத்து நடந்துள்ளது. அந்த மொத்த செட்டுமே அடையாளம் தெரியாமல் கொலாப்ஸ் ஆகியுள்ளது.
முன்னதாக மற்றொரு பிரச்சனையையும் படக்குழு சந்தித்துள்ளது. காட்டுப்பகுதியில்தான் ‛காந்தாரா சாப்டர் 1' படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்திற்காக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஃபாரஸ்ட் ரீஜியன்குள் எப்படி வெடி பொருட்களை பயன்படுத்தலாம் என்று அங்குள்ள உள்ளூர் மக்கள் ஒன்றுகூடி படக்குழுவினருடன் சண்டை போட வந்துவிட்டார்களாம். உள்ளூர் வாசிகள் ஒருபக்கம் பேச, படக்குழு ஒருபக்கம் பேச விஷயம் மோதலாகியிருக்கிறது. அதன்பிறகு வனத்துறை அதிகாரிகள் வந்து படக்குழு மீது வழக்குப்பதிவே செய்துவிட்டார்களாம். அவர்கள் வந்தபிறகுதான் கிராமவாசிகளுக்கும், படக்குழுவுக்கும் இடையேயான பிரச்சனையே தீர்ந்ததாம். இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழு சிரமத்திற்கு உள்ளாகியது.

‛காந்தாரா சாப்டர் 1' படத்தின் போஸ்டர்
வனமக்களை ஏமாற்றினால் மரணம்?
காந்தாரா படத்தில் வனமக்களை ஏமாற்றினால் அவர்கள் திடீரென மரணம் அடைவதுபோல காட்டப்பட்டிருக்கும். அது கடவுளின் செயல்போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், ‛காந்தாரா சாப்டர் 1' படப்பிடிப்பில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை சிலர் காந்தாரா முதல் பாக கதையுடன் பொருத்தி சொல்லி வருகின்றனர். பஞ்சுருளி தெய்வம் பழிவாங்கி வருவதாக கூறுகின்றனர். படத்தில் காட்டப்படும் பஞ்சுருளி என்பது ஒரு வனதேவதை. படத்திற்காக அந்த கேரக்டருக்கு அந்த பெயர் வைக்கப்படவில்லை. அது கற்பனை கிடையாது. நிஜத்தில் அந்த பெயரில் கன்னட மலைவாழ் மக்கள் வனதேவதையை வழிபடுகின்றனர். பன்றி ஆவி தெய்வம் என்று இது சொல்லப்படுகிறது.
திட்டமிட்டபடி படம் வெளியாகுமா?
’காந்தாரா சேப்டர் - 1’ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டதால், திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், எங்களை நம்புங்கள் என்றும், திட்டமிட்டபடி அக்டோபர் 2-ம் தேதி உலகளவில் காந்தாரா இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
