இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு, டப்பிங் யூனியன் சந்தா போன்ற பிரச்சனைகளால் சின்மயி தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இன்றி இருந்தார். இடையே, லியோ படத்தில் நடிகை த்ரிஷாவிற்கு டப்பிங் பேசியிருந்தார். இந்த சூழலில்தான் அண்மையில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முத்தமழை பாடலை, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி மேடையில் பாடினார். சின்மயி குரலில் பாடலை கேட்ட ரசிகர்கள், இந்த குரலையா இத்தனை ஆண்டுகள் தடை செய்தீர்கள்? என்று பொங்கியெழுந்தனர். விளைவு, தற்போது இணையம் முழுவதும் சின்மயிதான் ட்ரெண்ட். சின்மயிக்கு பலதரப்பட்டவர்கள் ஆதரவு அளித்துவரும் நிலையில், இசையமைப்பாளர், பாடகர், கவிஞர் என பன்முகங்களைக்கொண்ட கங்கை அமரன் பகிரங்க ஆதரவு தெரிவித்து, தனது நீண்டகால நண்பரான வைரமுத்துவை கடுமையாக விமர்சித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்து மீதான சின்மயியின் புகார் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், வைரமுத்துவை குற்றவாளி போல கங்கை அமரன் எப்படி பேசலாம்? வைரமுத்துவை பற்றி பேச கங்கை அமரனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்று மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிமன்றம் மூலம் தொடர்ந்து போராடுவேன் என்று சின்மயி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


ஒரு தெய்வம்தந்த பூவே பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான சின்மயி

பாடகி சின்மயி ஸ்ரீபதா

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஒரு தெய்வம் தந்த பூவே" என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார் சின்மயி. முதல் பாடலிலேயே தன் திறமையை நிரூபித்த சின்மயிக்கு அடுத்தடுத்து அமைந்த பாடல்களும் அற்புதமானவை. ஏ. ஆர். ரஹ்மானின் இசையிலேயே நிறைய பாடல்களை பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. குறிப்பாக குரு படத்தின் தேரே பினா மற்றும் மையா மையா பாடல்கள் சின்மயியை எங்கோ அழைத்துச்சென்றன. அதன்பின்னர் அன்பில் அவன், எனதுயிரே எனதுயிரே, சர சர சாரகாத்து, எந்த பக்கம் காணும்போதும் என்று அவர் பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் அடித்தன. சின்மயி குரலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உருவானது.


சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவுக்கு பின்னணி குரல் கொடுத்த சின்மயி

சின்மயி, பாடகி மட்டுமல்ல...

சின்மயி, சிறந்த பாடகி மட்டுமல்ல; திறமையான டப்பிங் கலைஞரும்கூட. சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவிற்கு, உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகர்ஜிக்கு, சத்தம் போடாதே படத்தில் பத்மபிரியாவிற்கு, தாம் தூம் படத்தில் கங்கனா ரனாவத்திற்கு, ஜெயம் கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு, சக்கரக்கட்டி திரைப்படத்தில் வேதிகாவிற்கு, வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டிக்கு, விண்ணைத்தாண்டி வருவாயா, 96, லியோ உள்ளிட்ட படங்களில் த்ரிஷாவிற்கு என பல திரைப்படங்களில் ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு சின்மயி பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். பல்வேறு மொழிகளை கற்றுத்தேர்ந்துள்ள சின்மயி, பிரபல தொலைக்காட்சியில் பாடல் போட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், வானொலி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.


வைரமுத்துவுக்கு எதிராக மீ டூ புகார் சின்மயி அளித்தபோது...

மீ டூ-வுக்கு குரல் தந்த சின்மயி!

பாடல், டப்பிங், நிகழ்ச்சித் தொகுப்பு என பிஸியாக ஓடிக்கொண்டிருந்த சின்மயி, கடந்த 2018-ஆம் ஆண்டு மீ டூ இயக்கத்தின் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வைரமுத்து தன்னை கட்டியணைத்தார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், "வைரமுத்து என்னை கட்டிப்பிடித்து அணைத்தபோது, நான் அப்படியே உறைந்துவிட்டேன். என்னவோ தப்பா இருக்கு என்று தோணியது. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. ஒரு நிமிஷம் அப்படியே நின்றுவிட்டேன். என் மூளை வேலை செய்யவில்லை. பின் பதறியடித்து ஓடினேன். என் அம்மா கீழே இருந்தார். என் அம்மா அங்கு இருக்கிறார் என்று தெரிந்தே அந்த ஆளு இப்படி செய்தார். என் அம்மா என்னை எப்போதும் தனியாக விடமாட்டார். நான் மேலேதானே போயிருக்கிறேன்னு கீழே இருந்தாங்க. ஓடிவந்து என்னிடம் வைரமுத்து நடந்துகொண்ட விதம்பற்றி என் அம்மாவிடம் சொன்னேன். உன் கேரக்டர் என்னனு சோதிக்க இப்படி செய்ராறோ என்னவோ? இவரெல்லாம் பெரிய ஆளு, எதாவது சொன்னா, கொலைகூட பண்ணிட்டு போயிடுவாங்க என்று என் அம்மா கூறினார்" என்று தெரிவித்திருந்தார்.


முத்தமழை பாடலை மேடையில் பாடிய தருணம்...

இந்த குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சின்மயிக்கு தமிழ் சினிமாவில் பல தடைகள் ஏற்பட்டன. டப்பிங் யூனியன் பிரச்சனை, ரெட் கார்டு என தமிழ் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சுமார் 7 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சின்மயி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பணியாற்றி வந்தார்.

முத்தமழையால் மீண்டும் ஃபேமஸான சின்மயி!

தமிழில் டப்பிங் பேசாமல் இருந்து வந்த சின்மயியை, தடைகளை மீறி லியோ படத்தில் த்ரிஷாவிற்காக பின்னணி குரல் கொடுக்கவைத்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனால் சில சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில்தான் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடினார். இது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியது. இன்றுவரை சின்மயியின் அந்த பாடல் வீடியோ ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு எங்கு திரும்பினாலும் சின்மயிதான். இதனால் பல்வேறு வலைதள ஊடகங்கள் சின்மயி பேசிய பழைய வீடியோக்களை தற்போது வெளியிட்டு வருவதுடன், அவரிடம் புதிதாக பேட்டி எடுத்தும் வருகின்றன. அந்த வகையில் சின்மயியை வைத்து அண்மையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கங்கை அமரன் கலந்துகொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.


சின்மயி குற்றச்சாட்டின்பேரில் வைரமுத்துவுக்கு எதிராக கருத்து தெரிவித்த கங்கை அமரன்

சின்மயிக்கு கங்கை அமரன் பகிரங்க ஆதரவு!

நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன், "வைரமுத்து மிகச்சிறந்த கவிஞர் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் நல்ல மனிதன் இல்லை" என்று கூறினார். அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆங்கர், சார், வைரமுத்துவின் நீண்டகால நண்பரான நீங்கள், இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டதற்கு, "நாங்கள் எல்லாம் நண்பர்கள்தான். அவர் நண்பராக இருந்தார் என்பதால் அவர் செய்த தவறை நான் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா? ஒரு பெண்ணாக தனக்கு நடந்த பிரச்சனைகளை பேசும் சின்மயிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்." என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும் சின்மயியிடம் வைரமுத்துவை கிண்டல் செய்தும் பேசினார் கங்கை அமரன். "ஏம்மா இல்லாததை எல்லாம் சொல்லி இப்படி பண்றே! இப்ப சொல்றேம்மா, வைரமுத்து தங்கமான ஆளு! யாரிடமும் அவர் தப்பா நடந்துகிட்டதே இல்லை! வைரமுத்து எவ்வளவு நல்லவர்! அவரை போய் நீங்கள் இப்படி சொல்லலாமா?" என்று கிண்டல் செய்தார்.


இளையராஜா மீது விமர்சனம் வந்தபோது கங்கை அமரன் வாய் திறக்காதது ஏன்? - சேகுவேரா

கங்கை அமரனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

கங்கை அமரனின் இந்தப் பேச்சு புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்மந்தமே இல்லாமல் இவர் ஏன் இவ்விவகாரத்துக்குள் வருகிறார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக பிரபல பத்திரிகையாளர் அந்தணன் வெளியிடுள்ள வீடியோவில், "சின்மயி தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி பேசுவதற்கு அத்தனை உரிமையும் உண்டு. அவர் நீதிமன்றம் சென்று இந்த விஷயத்தை முடிக்க வேண்டும். ஆனால் சம்மந்தமே இல்லாமல் கங்கை அமரன் ஏன் பேசுகிறார்? அவர் யோக்கியரா? அந்த நட்பு வட்டத்தில் யாரெல்லாம் என்ன செய்தார்கள் என்பது திரைத்துறையில் பலருக்கும் தெரியும். பிரபல கவிஞரின் மகள் வாழ்க்கை சின்னாபின்னமானது யாரால் என்பது கங்கை அமரனுக்கு தெரியும்" என்று இளையராஜாவையும் மறைமுகமாக பேசியுள்ளார்.


மீண்டும் வைரமுத்து பெயரை குறிப்பிட்டு ட்வீட் போட்ட சின்மயி

இதனிடையே பத்திரிகையாளர் சேகுவேரா அளித்துள்ள பேட்டியில், "சின்மயி விஷயத்தில் அநீதி நடந்திருந்தால், அந்த அநீதியை கங்கை அமரன் கண்ணால் பார்த்திருக்க வேண்டும் அல்லது ஒரு பெண்ணாக இருந்து, அந்த அநீதியால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்கையில் இத்தனை வருடகாலம் வைரமுத்துவுடன் நட்பில் இருந்துவிட்டு, இப்போது வந்து ஏன் குறை சொல்ல வேண்டும்? இத்தனை ஆண்டுகள், கங்கை அமரன் கோமாவிலா இருந்தார்? ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை சமூகம் முடிவு செய்யட்டும். இளையராஜாவுக்கு அந்தப்புரம் இருப்பதாக மற்றொரு மூத்த பத்திரிகையாளர் விமர்சித்தபோது, கங்கை அமரன் அப்போது ஏன் வாய் திறக்கவில்லை? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வைரமுத்து பேரை குறிப்பிட்டு மீண்டும் ட்வீட் போட்ட சின்மயி!

வைரமுத்து குறித்து கங்கை அமரன் பேசிய பேச்சு பெரும் விவாதமாக போய்க்கொண்டிருக்க, வைரமுத்து பேரை குறிப்பிட்டு சின்மயி மீண்டும் ட்வீட் போட்டுள்ளார். அதில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வைரமுத்துவின் பெயரை கூறியது தான்மட்டுமல்ல; 16 முதல் 17 பெண்கள் இருப்பதாக சின்மயி கூறியுள்ளார்.

சின்மயி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தனக்கு கிடைத்த ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி என்றும், ஆனால் முக்கியமான ஒன்றை நினைவூட்ட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் குரல் முற்றிலும் மழுங்கடிக்கப்பட்டதால், தான் மிகுந்த வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், தாங்கள் அனைவரும் கேட்பது ஞாயம் என்றும், தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி கனவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க விரும்புவதாகவும், அதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ள சின்மயி, தமிழ் சினிமாவில் தன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யும்வரை தொடர்ந்து போராடப்போவதாக உறுதிபட தெரிவித்துள்ளார்.

Updated On 17 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story