தமிழ் திரையுலகில் ஏராளமான துணை மற்றும் குணச்சித்திர நடிகர்கள் உள்ளனர். ஆனால் எந்த குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த பாத்திரமாகவே மாறி வாழ்பவர்கள் ஒருசிலரே. அப்படி தனக்கென எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதை அப்படியே உள்வாங்கி கொண்டு, அப்படியே தன் நடிப்பை வெளிப்படுத்துபவர்தான் நடிகர் அருள்தாஸ். அவர் ராணி ஆன்லைன் நேயர்களுக்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் பகுதியை தற்போது பார்ப்போம்.

சடலமாக நடிப்பது குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் அருள்தாஸ்
இறப்பு காட்சிகள் நடிப்பது குறித்து வீட்டில் என்ன சொல்வார்கள்?
நான் மகான் அல்ல படத்தில் இறந்தது போல் நடித்ததை, முதல்முறை பார்த்தபோது வீட்டில் அதிர்ச்சி அடைந்தார்கள். குடும்பத்தினருக்கும் அப்படித்தான் இருந்தது. பின்னர் பழகிவிட்டது. ஷூட்டிங்கின்போது மூக்கில் பஞ்சு வைத்தாலும், சுவாசிப்பதற்கு ஏற்றவாறு கேப் விட்டுதான் வைப்பார்கள். அதுபோல ஐஸ் பெட்டியில் வைத்தாலும், கீழே கட்டைவைத்து காற்று வர மாதிரிதான் வைப்பார்கள். ஆனால் இறப்பு காட்சியில் நடிக்கும்போது, அந்த டேக் முடியும்வரை மூச்சை அடக்கியிருக்க வேண்டும், அவ்வளவுதான். பலமுறை ஸ்டண்ட் காட்சிகளில் அடிப்பட்டுள்ளது. எங்களைவிட ஃபைட்டர்ஸ் வாழ்க்கைதான் கடினம்.
புகைப்படக் கலைஞர், ஒளிப்பதிவாளர், இப்போது நடிகர்; எப்போது இயக்குநர் அவதாரம்?
இயக்குநராகும் எண்ணம் இல்லை. நடிப்பே எனக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய பரிசு. நடிப்பிலே இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில் எனக்கு நடிப்பு பற்றி ஒன்றும் பெரிதாக தெரியாது. டயலாக்ஸ் மனதில் நிற்காது. படங்கள் நடிக்க நடிக்கத்தான், கதாபாத்திரங்களை உள்வாங்கி கொண்டு, புரிந்து நடிக்க கற்றுக்கொண்டேன்.

நான் மகான் அல்ல திரைப்படத்தில் கார்த்தியுடன் அருள்தாஸ்
உங்களுக்கு கிடைத்த பெரிய பரிசு அல்லது பாராட்டு குறித்து சொல்லுங்களேன்?
ஒரு நடிகருக்கு கிடைக்கும் பெரிய பரிசே ரசிகர்கள்தான். பெரிய டெக்னீஷியன், மேக்கப் மேனாக இருந்தால் கூட வெளியே தெரியாது. ஆனால் திரையில்வரும் சின்ன கதாபாத்திரம் கூட ரசிகர்களுக்கு தெரியும். நான் இரண்டு துறைகளிலும் பணிபுரிந்துள்ளேன். நடிக்க ஆரம்பித்த பிறகுதான் பலரும் அடையாளம் கண்டனர். தமிழர்கள் உள்ள எல்லா ஊர்களுக்கும் சென்றுள்ளேன். எல்லா ஊர்களிலும் என்னை கண்டுபிடித்துவிடுவார்கள். பேரன்பை செலுத்துவார்கள்.
முதல் படத்தில் கார்த்தியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? எந்த நடிகருடன் நடிக்க ஆசை?
கார்த்தி அற்புதமான குணம் கொண்டவர். அவர் படத்தில் நடிக்கும்போது பதட்டத்துடனும், கூச்சத்துடனும் இருந்தேன். ஆனால் அந்த பயத்தை எல்லாம் போக்கி, இயல்பாக நடியுங்கள் என நிறைய ஊக்குவித்தார். இவர்களுடன்தான் நடிக்க வேண்டும் என எந்த எண்ணமும் இல்லை. எல்லோருடனும் நடிக்க வேண்டும். சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என யாரும் இல்லை. அப்படி நான் நினைத்தது இல்லை. இயக்குநர், கதை, கதாபாத்திரத்தை மட்டும்தான் நான் பார்ப்பேன். அதுபோல அறிமுக இயக்குநர், அனுபவமிக்கவர் எனவும் எந்த வேறுபாடும் பார்க்கமாட்டேன்.

நடிகைகளில் மனோரமா ஆச்சி பிடிக்கும் - அருள்தாஸ்
இரத்த தானம் கூட செய்கிறீர்கள் என கேள்விப்பட்டுள்ளோம்...
இரத்த தானம் என்பது நல்ல விஷயம். இதில் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு வரவேண்டும். பலருக்கு இரத்தம் தேவைப்படும். ஒருவரின் உயிர்காக்க நான் ஒரு சிறிய உதவி செய்தேன் என்பது மனநிறைவுதானே.
எந்த நடிகை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?
நடிகைகள் அனைவரும் நன்றாகத்தான் நடிக்கிறார்கள். நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்தவர் மனோரமா ஆச்சி. அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் மனோரமா நடித்திருப்பார். அவர்கள் அளவு யாரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததில்லை. பெண் சிவாஜி கணேசன் அவர். உண்மைக்கு நெருக்கமாக நடித்திருப்பார்கள். நடிப்பு போலவே தெரியாது. நாகேஷ், எம்.ஆர்.ராதா வரிசையில் நடிகைகள் என்றால் மனோரமாதான்.

காமெடி யார் செய்தாலும் பிடிக்கும் - நடிகர் அருள்தாஸ்
திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் குறித்து....
எந்த பிரச்னைக்கும் வன்முறை ஆயுதம் ஆகாது. சாதாரணமாக ஒருவரை கொலை செய்கின்றனர். வாழ்க்கை முழுக்க சிறையில் கழிக்கின்றனர். வன்முறை என்பது தவறான விஷயம். அதை எப்போதும் கையிலெடுக்கக்கூடாது. போதை, வன்முறை என்பது இளைய தலைமுறையினரை எளிதில் பாதிக்கும். நல்ல தொழில் செய்து முன்னேறி, குடும்பத்தை காப்பாற்றுவதுதான் ஒருவனுக்கு அழகு. அதுதான் பேரழகு. படத்தில் காட்டப்படும் பாட்டில்கள் எல்லாம் சுகர்கிளாஸ்தான். அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இப்போதெல்லாம் செயற்கை இரத்தம் விற்கிறார்கள்; அப்படி இல்லையென்றால் மேக்கப் டிபார்ட்மெண்ட் அதை பார்த்துக் கொள்வார்கள்.
படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக வருத்தமாக இருக்கும். சில படங்களுக்கு கடினமாக உழைத்திருப்போம். ஆனால் திரையங்கில் வந்து பார்க்கும்போது, அது சரியாக போகவில்லை என்றால் கஷ்டமாக இருக்கும். இது எல்லோருக்கும் மிகப்பெரிய வலி. நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருக்குமே அது பெரியவலி. சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் எனக்கு நெருக்கம். எளிதாக வேலை வாங்குவார். எனக்கு ரொம்ப பிடிக்கும். காமெடி யார் செய்தாலும் பிடிக்கும். நாகேஷ், எம்.ஆர்.ராதா, வடிவேலு இவர்கள் எல்லாம் வாழ்க்கையோடு கலந்தவர்கள். காமெடி நடிகர்கள் அனைவரும் நம் வாழ்க்கையின் மன அழுத்தத்தை குறைப்பவர்கள். உண்மையில் அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். சாதிப்பதற்கு நிறைய உள்ளது. லட்சியங்கள் உள்ளன. இறைவன் புண்ணியத்தில் என் திரைவாழ்க்கையில் எந்த எதிர்ப்பும், எந்த தடங்கலும் வந்ததில்லை. எனக்கு யாரும் போட்டி இல்லை. நாம் பேரன்பை செலுத்தினால், அவர்களும் பேரன்பை செலுத்துவார்கள்.
