
சிவபெருமானின் உறைவிடம் - பாவங்களை போக்கும் ரிஷிகேஷ்!
இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில், தெய்வீக கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் ரிஷிகேஷ், உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமாகவும், சாகச விளையாட்டுகளின் மையமாகவும் திகழ்கிறது. "கடவுள்களின் வாசல்" என்று அழைக்கப்படும் இந்த அழகிய நகரம், அமைதியான சூழல், பழமையான கோவில்கள், யோகா-தியான மையங்கள் மற்றும் கண்கவர் இயற்கை காட்சிகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட புகழ் பெற்ற ரிஷிகேஷ் நகரின் வரலாறு, சுற்றுலா தலங்கள் மற்றும் உணவு முறைகள் குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்ப்போம்.
தொன்மை நாகரிகம்
பல்லாயிரம் ஆண்டுகாலப் பெருமை கொண்ட ரிஷிகேஷ், இந்துக்களின் புனித பூமியாக விளங்குகிறது. புராணக் கதைகளின்படி, ராமர் தனது வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்ததாகவும், லட்சுமணன் கங்கையைக் கடக்க சணல் கயிற்றால் பாலம் அமைத்ததால் இப்பகுதி "லக்ஷ்மண் ஜூலா" எனப் பெயர் பெற்றதாகவும் நம்பப்படுகிறது. மேலும், பரதர் இங்கு தவம் செய்ததால் "பரதக்ஷேத்ரா" என்றும் அழைக்கப்படுகிறது. இந்து மதத்தின் முக்கிய கேந்திரமாகத் திகழும் ரிஷிகேஷில், எண்ணற்ற முனிவர்கள், ரிஷிகள் ஞானம் பெற்றதாக பல தகவல்கள் உண்டு. இதனாலேயே இன்றும் பல ஆசிரமங்களும், யோகா மையங்களும் இப்பகுதியில் ஆன்மிகப் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளன.
தொங்கும் பாலமான லக்ஷ்மண் ஜூலா மற்றும் கங்கை நதிக்கரையில் யோகா பயிற்சி
சொல்லப்போனால் ரிஷிகேஷின் கலாச்சாரத்தில் ஆன்மிகமும் இயற்கையும் ஒன்றோடு ஒன்று ஒன்றிணைந்துள்ளன. இங்குள்ள மக்களின் எளிய வாழ்க்கை முறை இயற்கையோடு இயைந்ததாக உள்ளது. யோகா, தியானம், பஜனைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் அவர்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனாலேயே அமைதியான சூழலையும், ஆன்மிக அதிர்வுகளையும் அனுபவிக்க சுற்றுலாப் பயணிகளும், ஆன்மிக ஆர்வலர்களும் தொடர்ந்து ரிஷிகேஷிற்கு வருகை தருகின்றனர்.
ஆன்மிக பூமி
ஹிமாலயத்தின் மடியில் அமைந்திருக்கும் ரிஷிகேஷ், பல நூற்றாண்டுகளாக ஆன்மிகத்தின் உறைவிடமாகத் திகழ்கிறது. அடர்ந்த காடுகள் சூழ்ந்த அமைதியான இப்பகுதி, பண்டைக்காலம் முதலே முனிவர்கள் தவம் செய்யவும், ஞானம் பெறவும் உகந்த இடமாக விளங்குகிறது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் இது தொடர்பான பல குறிப்புகள் காணப்படுகின்றன. பல்வேறு காலகட்டங்களில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள், ரிஷிகேஷின் ஆன்மிகச் செழுமையை உணர்ந்து மேலும் வளர்ச்சிக்கு உதவினர். அதோடு கங்கை நதிக்கரையில் அமைந்திருப்பதால், இது புனிதத் தலமாகவும் போற்றப்படுகிறது. இதற்கு சாட்சியாக இன்றும் எண்ணற்ற பழமையான கோவில்களும், ஆசிரமங்களும் ரிஷிகேஷின் தொன்மையை பறைசாற்றுகின்றன.
கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மகரிஷி மகேஷ் யோகியின் ஆசிரமம்
இப்படி பல நூற்றாண்டுகளாக ஆன்மிகச் செல்வமாக இப்பகுதி திகழ்ந்து வந்த நிலையில், 1960-களில் நிகழ்ந்த ஒரு முக்கியமான சம்பவம் ரிஷிகேஷை உலக அரங்கில் கவனிக்க வைத்தது. காரணம் அந்த சமயம்தான் உலக புகழ்பெற்ற பிரிட்டிஷ் ராக் இசைக்குழுவான "தி பீட்டில்ஸ்" குழுவினர் மகரிஷி மகேஷ் யோகியின் ஆசிரமத்திற்கு வருகை தந்தார்கள். இச்சம்பவம் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வு, மேற்கத்திய நாடுகளில் ஆன்மிகத்தை தேடிக்கொண்டிருந்த பலரையும் ரிஷிகேஷை நோக்கி ஈர்க்கவும் செய்தது. இதன் விளைவாக, ரிஷிகேஷ் வெகு விரைவிலேயே சர்வதேச யோகா மற்றும் தியான மையமாக உருவெடுத்தது. அதோடு இதற்கு பிறகுதான் பழமையான கோவில்கள், ஆசிரமங்கள், யோகா மற்றும் தியான நிலையங்களுடன், நவீன தங்கும் விடுதிகள், பல்வேறு உணவு விடுதிகள் மற்றும் சாகச விளையாட்டுகளுக்கான மையங்களும் இங்கு அதிகளவில் வர தொடங்கின.
சுற்றுலா சொர்க்கம்
இமயமலையின் அடிவாரத்தில், புனித கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ரிஷிகேஷ், ஆன்மிகம், சாகசம், இயற்கையின் எழில் ஆகிய மூன்றின் சங்கமமாக திகழ்கிறது. "உலக யோகா தலைநகரம்" என்ற சிறப்புப் பெயர் பெற்ற இந்த நகரம், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ரிஷிகேஷில் உள்ள எண்ணற்ற கோவில்களும், ஆசிரமங்களும் மன அமைதியை நாடுபவர்களுக்கு ஒரு சிறந்த இடமாகும். குறிப்பாக திரிவேணி கட்டத்தில் ஒவ்வொரு மாலையும் நடைபெறும் கங்கா ஆரத்தியின் போது சூரிய அஸ்தமனத்தின் பொன்மயமான ஒளியில் கங்கை நதி ஜொலிக்கும் காட்சி, ஓர் அலாதியான ஆன்மிக அனுபவத்தை தருகிறது. மேலும், லக்ஷ்மண் ஜூலா மற்றும் ராம் ஜூலா போன்ற புகழ்பெற்ற தொங்கு பாலங்களில் பயணிக்கும்போது சுற்றிலும் உள்ள மலைகளின் ரம்மியமான காட்சிகளையும், கங்கையின் பாய்ந்தோடும் அழகையும் கண்டு ரசிக்க ஏற்ற இடம் என்றே சொல்லலாம். இதுதவிர நீலகண்ட மகாதேவர் கோவில், பரத் கோவில், ஸ்வர்க் ஆசிரமம், பர்மார்த் நிகேதன் ஆசிரமம் மற்றும் வசிஷ்டக் குகை போன்ற ஆன்மிகத் தலங்கள் அமைதியான தியானத்திற்கும், நம்முடைய அகத் தேடலுக்கும் உகந்த இடங்களாக விளங்குகின்றன.
ஆன்மிகம், சாகசம் மற்றும் இயற்கை எழிலின் சங்கமமாக திகழும் ரிஷிகேஷ்
அதேபோல் சாகசப் பிரியர்களுக்கும் ரிஷிகேஷ் ஒரு அற்புதமான தலமாக விளங்குகிறது. கங்கை ஆற்றில் மேற்கொள்ளப்படும் வெள்ளை நீர் ராஃப்டிங் சாகசப் பயணிகளிடையே உற்சாகத்தை கொடுப்பதோடு, சவாலான நீரோட்டங்களில் மிதந்து செல்லும் அனுபவம் அலாதியான மகிழ்ச்சியையும் தருகிறது. இது தவிர மலையேற்றம், பாறை ஏறுதல், பங்கீ ஜம்பிங், ஜிப்லைனிங் போன்ற பல்வேறு சாகச விளையாட்டுகளும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்து வருகிறது. மேலும் கங்கை நதிக்கரையிலும், மலைப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் கேம்பிங் வசதிகள், சாகச விளையாட்டுகளுடன் இணைந்து, இயற்கையின் மடியில் தங்கும் அனுபவத்தையும் தருகின்றன. யோகாவின் உலக தலைநகரம் என்ற பெயருக்கேற்ப, ரிஷிகேஷ் எண்ணற்ற யோகா மற்றும் தியான மையங்களையும் கொண்டுள்ளது. அமைதியான சூழலில் யோகா மற்றும் தியானம் செய்ய உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு குவிகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச யோகா திருவிழா இங்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். பல ஆசிரமங்கள், யோகா, தியானம் மற்றும் ஆன்மிகக் கல்விக்கான பல்வேறு வகையான பயிற்சிகளை இங்கு வழங்குகின்றன.
இதையும் ரசியுங்கள்
ராஜாஜி தேசிய பூங்கா - ரிஷிகேஷில் ஃபேமஸான மோமோஸ் உணவு
இப்படி அசத்தலான சாகசம் மற்றும் ஆன்மிகத்தை தாண்டி ரிஷிகேஷ் அருகே உள்ள ராஜாஜி தேசிய பூங்காவில் யானைகள், புலிகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகளைக் கண்டு மகிழலாம். மேலும், 1968 இல் புகழ்பெற்ற பீட்டில்ஸ் குழுவினர் தங்கியிருந்த பீட்டில்ஸ் ஆசிரமம் இப்போது ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு பலரையும் கவர்ந்து வருகிறது, அதேபோல் கங்கையின் அழகிய காட்சியுடன் சூரியன் அஸ்தமிக்கும் அழகிய காட்சியை ரசித்த வண்ணமே. ரிஷிகேஷிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குஞ்சாபுரி கோயிலிலிருந்து இமயமலையின் மிகவும் அழகான காட்சிகளைக் காண்பதும் ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். பொதுவாகவே ரிஷிகேஷில் பெரும்பாலும் சுத்தமான சைவ உணவே பரிமாறப்படுகிறது. இங்குள்ள உணவகங்களில் இந்திய மற்றும் சர்வதேச சைவ உணவுகளான பன்னீர் டிக்கா, சப்ஜி, டால் மக்கானி போன்ற வட இந்திய உணவுகளையும், சௌமின், மோமோஸ் போன்ற சர்வதேச உணவு வகைகளையும் சுவைக்கலாம். யோகா மற்றும் தியானத்திற்கான மையமாக இருப்பதால், பல உணவகங்கள் சுகாதாரமான மற்றும் சத்தான உணவுகளை வழங்குகின்றன. கங்கைக் கரையில் அமைந்துள்ள சில உணவகங்களில் அமர்ந்து உணவருந்தும்போது, கங்கையின் அழகிய காட்சியையும், அமைதியான சூழலையும் ஒருசேர அனுபவிக்கலாம். இவ்வாறு ஆன்மிக அமைதி, சாகச உற்சாகம் மற்றும் இயற்கையின் அழகை ஒருசேர அனுபவிக்க விரும்பும் எவருக்கும் ரிஷிகேஷ் ஒரு மறக்க முடியாத பயணத்தை நிச்சயம் வழங்கும்.
