இளையராஜா & மணிரத்னத்தின் மறுமுகம்! சென்னை மெட்ரோ ரயில் புகைப்படங்கள் இவர்கள் எடுத்தது!
தி ஃபோட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ் (PSM), 1857ஆம் ஆண்டு, புகைப்படத்துறையின் ஜாம்பவான்களை உறுப்பினர்களாகக் கொண்டு நிறுவப்பட்டது. ராஜ்யசபா உறுப்பினரும் இசைஞானியுமான இளையராஜா, பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரும் இந்த புகைப்படக் குழுமத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஃபோட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ் உறுப்பினர்களுக்காக மாதந்தோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் இந்த குழுமத்தின் உறுப்பினர்கள், Photographic Society of America (PSA), Federation International de l’Art Photographique (FIAP) மற்றும் Federation of Indian Photography (FIP) போன்ற சர்வதேச புகைப்படக் குழுமங்களின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் பல்வேறு புகைப்படப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளனர்.
2025 SALON புகைப்படக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படம்
கான்ஃப்லுயன்ஸ் என்ற பெயரில், ஃபோட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ் சார்பில் வருடாந்திர புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது. உறுப்பினர்களை பாராட்டவும் ஊக்குவிக்கவும், அவர்கள் எடுத்தப் புகைப்படங்கள் அதில் காட்சிப்படுத்தப்படுகின்றன. புகைப்படக் கலையில் நாட்டமுள்ள அனைவருக்கும், புகைப்பட நுணுக்கங்களைக் கற்கும் வாய்ப்பாக இது அமைகிறது.
தேசிய மற்றும் சர்வதேச புகைப்படப் போட்டிகளும், ஃபோட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ் சார்பில் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், 26-வது தேசிய புகைப்படப் போட்டி, Federation of Indian Photography-ன் அங்கீகாரத்துடன் நடந்துகொண்டிருக்கிறது.
ஃபோட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ் உறுப்பினர்கள் எடுத்த புகைப்படங்கள் உள்பட, 110-க்கும் மேலான புகைப்படங்கள், இந்த ஆண்டின் Confluence 2025 புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
ஜூன் 1 2025 அன்று, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில், கண்காட்சியின் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை விருந்தினராக பிரபல ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன், கௌரவ விருந்தினராக துபாயிலிருந்து மூத்த புகைப்படக் கலைஞர் மொஹமத் அர்ஃபான் ஆசிஃப் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இவ்விழாவிற்கு, ஃபோட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ் அமைப்பின் தலைவர் G.N. ராமஸ்வாமி தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். அவரிடம் ராணி ஆன்லைன் நடத்திய நேர்காணலை பார்ப்போம்.
ஃபோட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் அமெரிக்கா நடத்திய போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் PSM-ல் உள்ளனர்
புகைப்பட கண்காட்சி மட்டும்தான் நடத்துகிறீர்களா? ஓவியக்கண்காட்சியும் நடத்துகிறீர்களா?
ஃபோட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ் என்பது புகைப்படங்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே. நாங்கள் நிறைய பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வகுப்புகள் எடுத்து புகைப்படம் எடுக்க சொல்லித்தருகிறோம். அந்த குழந்தைகள் எங்கள் அமைப்பில் உறுப்பினர் ஆவார்கள். எங்களிடம் 3 விதமான மெம்பர்ஷிப் இருக்கிறது. அவை, வாழ்நாள் உறுப்பினர்கள், வருடாந்திர உறுப்பினர்கள் மற்றும் மாணவ உறுப்பினர்கள். அந்த உறுப்பினர்களின் புகைப்படங்களை வாங்கி, அதில் உள்ள நல்ல புகைப்படங்களை தேர்வு செய்து இதுபோன்ற கண்காட்சிகளில் காட்சிப்படுத்துவோம்.
புகைப்படக் கலைஞர்களுக்கு உங்கள் அமைப்பில் ஏதேனும் தொழில் சொல்லித்தருகிறீர்களா?
தொழில் சொல்லித்தர மாட்டோம். அதற்குபதில், எங்கள் உறுப்பினர்களுக்காக மாதந்தோறும் வொர்க்ஷாப் மற்றும் கூட்டங்கள் நடத்துவோம். அந்த கூட்டங்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக பிரபல புகைப்படக்கலைஞர்களும் ஒளிப்பதிவாளர்களும் அழைக்கப்படுவார்கள். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவ முத்துக்கள் உறுப்பினர்களுக்கு விலைமதிப்பில்லா பொக்கிஷங்களாக அமைவதுண்டு. எங்கள் குழுமத்தில் எப்போதும் கிட்டும் ஆதரவினாலும் ஊக்கத்தினாலும், எங்கள் உறுப்பினர்கள், Photographic Society of America (PSA), Federation International de l’Art Photographique (FIAP) and Federation of Indian Photography (FIP) போன்ற சர்வதேச புகைப்படக் குழுமங்களின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் பல்வகைப் புகைப்படப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளனர்.
மொபைல் ஃபோனிலும் கூட அழகிய புகைப்படம் எடுக்கலாம் - G.N. ராமஸ்வாமி
எந்த மாதிரியான புகைப்பட தொகுப்பை கேட்டாலும் நீங்கள் தருவீர்களா?
தருவோம். எங்களிடம் எல்லா பிரிவுகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள். ஸ்டீட் புகைப்படக்கலைஞர்கள், வனவிலங்குகளை படம்பிடிப்பவர்கள், இயற்கையை படம்பிடிப்பவர்கள், கருப்பு வெள்ளை புகைப்படம் மட்டும் எடுப்பவர்கள் என பல்வேறு கலைஞர்கள் இருக்கிறார்கள்.
இந்த அமைப்பிலிருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் இருக்கிறார்களா?
நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக ராஜசேகர் என்பவர் Photographic Society of America நடத்திய சர்வதேச புகைப்படப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். இதுபோன்ற உலகளவில் பெயர்சொல்லும் ஏராளமான புகைப்பட கலைஞர்கள் இருக்கிறார்கள். அதுவும் குழந்தைகள் முதல் 70, 80 வயதானவர்கள் வரை எங்கள் குழுவில் இருக்கிறார்கள் என்பது சிறப்பு.
உங்களால் மறக்கமுடியாத ஃபோட்டோகிராஃபர் மற்றும் ஃபோட்டோகிராஃபி?
ஃபோட்டோகிராஃபி என்று சொன்னால், நான் வனவிலங்குகளைதான் முக்கியமாக புகைப்படம் எடுத்து வருகிறேன். எனக்கு இமயமலை சென்று பறவைகளை படம்பிடிப்பது ரொம்ப பிடிக்கும். மிகவும் பனிசூழ்ந்த அதுபோன்ற சேலஞ்சிங்கான இடத்தில் புகைப்படம் எடுப்பது த்ரில்லாக இருக்கும். மேலும் புகைப்படம் எடுக்க நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாது. காலையிலேயே சென்றுவிடுவோம். ஏனென்றால் நாம் எதிர்பார்க்கும் சரியான ஷாட் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம். சூரிய வெளிச்சம், இருட்டு, வெயில், பனி, மழை என்று பல்வேறு கால சூழலுக்கு இடையே ஒரு புகைப்படத்திற்காக காத்திருக்க வேண்டும். ஒரே ஒரு புகைப்படத்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். அப்படியே காத்திருந்தாலும், நாம் நினைப்பது போன்று புகைப்படம் கிடைக்கவும் செய்யலாம். சில நேரம் கிடைக்காமலும் போகலாம். எனவே நாம் முயற்சியை கைவிட்டுவிடக்கூடாது. தொடர்ந்து பொறுமையுடன் இருந்து சாதிக்க வேண்டும்.
அனைத்துவிதமான புகைப்படங்களையும் எடுக்கும் நபர்கள் PSM குழுவில் உள்ளனர் - G.N. ராமஸ்வாமி
குறிப்பிட்ட கேமராக்களில்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமா? மொபைலிலும் எடுக்கலாமா?
தாராளமாக மொபைல் ஃபோனிலும் கூட புகைப்படம் எடுக்கலாம். நிறையபேர் மொபைலிலேயே நல்ல புகைப்படங்களை எடுக்கிறார்கள். எனவே இப்போது நிறைய புகைப்படங்கள் மொபைல் மூலமே கிடைக்கின்றன.
ஃபோட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ்-க்கு என்ன மாதிரியான அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன?
எங்களுடையது மிகப் பழமையான அமைப்பு என்பதால் அனைத்து தரப்பிலும் அங்கீகாரம் இருக்கிறது. அனைத்து புகைப்பட போட்டிகளிலும் எங்கள் உறுப்பினர்கள் பங்குபெற இது வழிவகை செய்கிறது.
புகைப்படம் தொடர்பாக வெளிநாடுகளுக்கு செல்வீர்களா?
போவோம். நிறைய உறுப்பினர்கள் செல்கிறார்கள். நானும் அடுத்து சீனா செல்கிறேன். எந்த இடத்தில் ஃபோட்டோகிராஃபி வாய்ப்பு இருக்கிறதோ அந்த நாடுகளுக்கு செல்வோம். எங்கள் உறுப்பினர்கள் நிறைய புகைப்படங்களை கென்யா, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று எடுத்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு PSM குழு புகைப்படம் எடுத்துள்ளது - G.N. ராமஸ்வாமி
ஃபோட்டோகிராஃபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ், எத்தனை பிரிவுகளில் கண்காட்சியை நடத்துகிறது?
7 பிரிவுகளில் புகைப்படக் கண்காட்சியை நடத்துகிறோம். கலர், கருப்பு வெள்ளை, லேண்ட்ஸ்கேப், போட்ரேட், வனவிலங்குகள், கோயில்கள், நினைவுச்சின்னங்கள் ஆகிய பிரிவுகளில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.
வளரும் புகைப்படக் கலைஞர்களுக்கு நீங்கள் தரக்கூடிய அறிவுரை என்ன?
புகைப்படங்களை பற்றி தெரிந்துக்கொள்ள தற்போது நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆன்லைனில் நிறைய வீடியோக்களை பார்த்துக்கூட கற்றுக்கொள்ளலாம். புத்தகங்களும் நிறைய உள்ளன. எனவே ஃபோட்டோகிராஃபியில் விருப்பம் உள்ளவர்கள், நம் பணிகளுக்கு இடையே அதற்கென நேரம் ஒதுக்கி, தீவிர கவனம் செலுத்த வேண்டும். நான் கூடுதலாக ஒரு விஷயத்தை பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சென்னை மெட்ரோ ரயில் வந்தபோது, புகைப்படம் எடுக்க எங்கள் குழுவைதான் அந்நிறுவனம் அழைத்தது. வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் எங்கள் குழு எடுத்த புகைப்படங்கள் பெரிய சைஸில் தற்போதும் உள்ளன.
