இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மனித உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு என்றால் அது தோல்தான் (சருமம்). இது முழு உடலையும் உள்ளடக்கியது மற்றும் வெளி உலகத்திலிருந்து பாதுகாக்கிறது. எனவேதான் சருமத்தில் ஒரு இடத்தில் பிரச்சினை வந்தால்கூட உடல் முழுவதும் பரவிவிடுகிறது. எனவே சருமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ராணி ஆன்லைன் நேயர்களுக்கு இந்த வார ப்யூட்டி பகுதியில், சருமத்தை அழகாகவும், பத்திரமாகவும் பாதுகாப்பது எப்படி என டிப்ஸ் தருகிறார் அழகு கலை நிபுணர் வித்யா மைதிலி.

சரும பராமரிப்பு குறிப்புகள்

ஒரு நாளைக்கு 2 வேளை குளிப்பதுடன், முகத்தை 6 முறை கழுவ வேண்டும். இப்படி செய்யும்போது உடல் குளுமை அடைவதுடன், ஸ்கின்னும் நன்றாக இருக்கும். கோடைகாலத்தில் உடலில் வேர்க்குரு வந்துவிடும் என்று சிலர் கூறுவார்கள். மேலும் குளிர்காலம் தொடங்கும்வரை வேர்க்குரு பாதிப்பு இருக்கும் என்றும், ஆண்டுதோறும் இந்த தொந்தரவை அனுபவிப்பதாகவும் தெரிவிப்பார்கள். இதற்கு காரணம் பார்த்தோமானால், வேர்க்குரு வந்தபோது அவர்கள் ஏதாவது மெடிகேஷன் கிரீம் போட்டிருப்பார்கள். கிரீம் போட்டபோது வேர்க்குரு போயிருந்தாலும், அடுத்த வெயில் காலத்தில் அது திரும்பவும் வந்துவிடும். ஆனால் இப்படி வராமல் இருக்க, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது முக்கியம். இதற்கு சிறந்த தீர்வாக பாதாம் எண்ணெய் இருக்கும். காலையில் எழுந்தவுடன் உடல் முழுவதும் பாதாம் எண்ணெய்யை தடவ வேண்டும். முகத்திற்கு ஒரு டாட் அளவு எண்ணெய் போதுமானது. இதுபோல, அந்தரங்க பகுதி உள்பட உடல் முழுவதும் பாதாம் எண்ணெய்யை அப்ளை செய்ய வேண்டும். இதற்கு ஒரு 10 நிமிடம்தான் தேவைப்படும். ஆனால் உடலின் வறட்சி நீங்கி வேர்க்குரு பிரச்சினை வராது.


உடல் முழுவதும் பாதாம் எண்ணெய் தேய்த்து ஊறவைத்து குளித்தால் சரும வறட்சி நீங்கும்

அத்துடன் 35 வயதை கடந்தவர்களுக்கு உடல் வறட்சி என்பது ஏற்படும். காரணம், இயற்கையாகவே உடலில் எண்ணெய் சுரப்பு என்பது குறையும். இப்படியிருக்கும்போது தினமும், காலை எழுந்தவுடன் எப்படி பல் துளக்குவது போன்ற வேலைகளை செய்கிறோமோ, அதேபோன்று பாதாம் எண்ணெய்யை உடலில் தேய்த்து, சிறிது நேரம் ஊறவைத்து குளித்துவிடலாம். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். குளித்துவிட்டு வேறு மேக்கப் எதுவும் போடக்கூட வேண்டாம். அந்த குளியலே நல்ல அழகை தந்துவிடும்.

கண் கருமை நீங்க

சில பெண்கள் கண்களுக்கு காஜல் போடாமல் வெளியே செல்லமாட்டார்கள். அவர்களுக்கு கண்களுக்கு கீழே கருமை நிறம் தங்கிவிடும். அது என்ன செய்தாலும் போகாது. வழக்கமாக நாங்கள் மேக்கப் போடும்போது, ஒருவரை வயதானவராக காட்ட கண்களுக்கு கீழே நன்கு கருமை செய்துவிடுவோம். எனவே கண்களுக்கு கீழ் கருமை இல்லை என்றால் இளமையாக தெரிவீர்கள். இதற்கு என்ன செய்யலாம்? வைட்டமின் E ஆயில் காப்ஸ்யூல் நல்ல பலன் தரும். ஒரு காப்ஸ்யூலை இரண்டு கண்களுக்கும் பயன்படுத்தலாம். காப்ஸ்யூலில் உள்ள எண்ணெய்யை 2 கண்களையும் மூடி அப்ளை செய்யலாம்.

கண் கருமை பிரச்சினை நீங்க ஆலோவீரா ஜெல்லும் பயன்தரும். ஆனால் சிலருக்கு ஆலோவீரா ஜெல் அலர்ஜியை ஏற்படுத்தும். அவர்கள், ஃப்ரெஷ்ஷான கற்றாழையை பயன்படுத்தலாம். கற்றாழையை தோல்நீக்கி நான்கைந்து முறை நன்கு அலசி, அதனை துருவியோ அல்லது மிக்சியில் போட்டு அரைத்தோ, அதன் சாறை கண்களை மூடிக்கொண்டு பூசினால்போதும். இவ்வாறு தினமும் செய்ய நேரம் இல்லை என்பவர்கள், கற்றாழை சாற்றை எடுத்து, வைட்டமின் E ஆயிலை சேர்த்து, ஃப்ரிட்ஜில் ஐஸ் க்யூப் போல ஃப்ரீஸ் செய்துவிடலாம். தேவைப்படும்போது, ஐஸ் க்யூபை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.


வெள்ளரிக்காயும் கற்றாழையும் கண்களின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்

இரவு படுக்கைக்கு செல்லும்போது கண்களுக்கு வெள்ளரிக்காயை வைக்கலாம். தோலைநீக்கிவிட்டு ரவுண்டாக கட் செய்து கண்களைமூடி மேலே வைத்து, ஏதாவது காட்டன் துணியை லேசாக கட்டிவிட்டால் போதும். இது சருமம் மற்றும் கண்களுக்கு நல்லது. செல்பேசியை அதிக நேரம் பார்ப்பது, இரவு கண்விழித்து வேலை செய்வது, கணினியை அதிக நேரம் பார்த்து பணி செய்வது போன்றவற்றால் கண்களுக்கு கீழே லேசாக கருமை வரலாம். அவர்களுக்கு வெள்ளரிக்காய் டிப்சை ஃபாளோ செய்யலாம். மிடில் ஏஜ்களில் இருப்பவர்களும் இந்த குறிப்பை பின்பற்றினால், கண்களுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

சிலருக்கு கண்களுக்கு அருகில் நிறைய சுருக்கங்கள் இருக்கும், அவர்களும் வெள்ளரிக்காயை பயன்படுத்தலாம். உளுந்து மாவையும் வெள்ளரிக்காயையும் சேர்த்து பேஸ்ட் மாதிரி அரைத்து பேக்காக போடலாம். கண்களை மூடிக்கொண்டுதான் போட வேண்டும். இந்த பேக்கை போடுவதுன் மூலம், ஸ்கின் டைட்டனிங் ஆவதுடன், சருமமும் பளிச்சிடும்.

கண்களுக்கு காஜல் போடுபவர்கள், அதனை அழிக்கும்போது தேங்காய் எண்ணெய் தடவி டிஷ்யூ பேப்பரில் துடைத்துஎடுக்கலாம். துடைக்கும்போது கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக துடைக்க வேண்டும். அத்துடன் கண்களில் ஏதாவது பட்டுவிட்டால், கண்களை போட்டு கசக்காமல் நல்ல தண்ணீரில் கண்களை கழுவி, டிஷ்யூ பேப்பரில் துடைக்கலாம். பிறந்த குழந்தைக்கு முகம் துடைக்கும்போது எவ்வளவு மென்மையாக ஹேண்டல் செய்வோமோ, அதேபோன்றுதான் நம் கண்களை பார்த்துக்கொள்ள வேண்டும்.


உடலை குளிர்ச்சியாக்க உதவும் இட்லி பூ - குடலை சுத்தம் செய்து முகப்பருவை நீக்க உதவும் இயற்கை பானம்

முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு!

கண்களுக்குப்பிறகு முக அழகை பார்க்கலாம். முகத்திற்கு பிரச்சினை முகப்பரு. முகப்பருவை நீக்க எல்லாமே செய்துவிட்டேன், ஆனாலும் எந்த பலனும் இல்லை என்று சிலர் கூறுவார்கள். அவர்கள் என்ன செய்யலாம்? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. அதற்கேற்க அகம் மிகவும் சூடாகிவிட்டால், அதன் எதிரொலி முகத்தில் தெரியும். இதற்கு இட்லி பூ நல்ல பலன்தரும். 4 இட்லி பூவை சுடுதண்ணீரில் போட்டுக்குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும். அத்துடன் வாரத்திற்கு இரண்டுமுறை வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது அப்ளை செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வயிறு சுத்தமாக இல்லையென்றால் முகப்பரு பிரச்சினை வரும். கட் இஷ்யூ இருப்பவர்களுக்கு கண்டிப்பாக சருமத்தில் பிரச்சினை இருக்கும். அது சோரியாசிஸாக இருக்கலாம். முகப்பருவாகவும் இருக்கலாம். எனவே கட்டை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். குடலை சுத்தம் செய்ய நிறைய மருந்து சாப்பிடவேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் உள்ள பொருட்களே போதும். சீரகம், ஓமம், கடுக்காய் தோலை அளவாக எடுத்து, அதனை பவுடராக அரைத்து, இரவு படுக்கைக்கு செல்லும்முன் சுடுதண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்துவந்தால் குடல் பிரச்சினைகளை சரியாகும்.

மீண்டும் சந்திப்போம்...

Updated On 3 Jun 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story