மார்பில் வேர்க்கடலை, நெல்லிக்காய் அளவில் வலியில்லாத கட்டியாகத்தான் புற்றுநோய் தொடங்கும்!
புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன? மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? ரஷ்யா கண்டறிந்த புற்றுநோய் தடுப்பூசி உண்மையில் பயனளிக்குமா? புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கியுள்ளார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கென்னி ராபர்ட். மேற்காணும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலை காணலாம்.

செல்களின் அபரித வளர்ச்சிதான் புற்றுநோய்
புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
செல்களின் அபரித வளர்ச்சிதான் புற்றுநோய். ஒரு செல்லின் வளர்ச்சி குறிப்பிட்ட அளவுகோலில்தான் இருக்கவேண்டும். உடலில் ஒரு செல் அதிகமாக வளராமல் இருப்பதற்கும், நேர்க்கோட்டில் வளர்வதற்கும் ஒரு இயக்கமுறை உள்ளது. இந்த இயக்கமுறை கட்டுப்பாட்டை இழப்பதுதான் புற்றுநோய். புற்றுநோய் வர இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மரபுரீதியானது. இரண்டாவது ‘ஸ்போராடிக்’. திடீரென ஏற்படும் மரபணு மாற்றங்கள், உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் ஒரு தாக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வரும்.
மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணம் என்ன?
இயல்பாகவே ஹார்மோன் மாற்றங்களால் மார்பு வீக்கமடையும். இந்த ஹார்மோன் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதாவது சமநிலையை இழக்கும்போது மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. புகையிலை பயன்பாடு அதிகமாக இருப்பதால் ஆண்களுக்கு தொண்டை புற்றுநோய் வருகிறது.

வலி இல்லாத கட்டியாகத்தான் மார்பக புற்றுநோய் தொடங்கும்
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வே அதற்கான பயத்தை உண்டாக்கும். அநேக நேரங்களில் மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர். மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலி இல்லாத கட்டியாகத்தான் துவங்கும். வேர்க்கடலை அல்லது நெல்லிக்காய் அளவில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும். வலி இல்லாமல் வரக்கூடிய கட்டிகளை கவனமாக பார்க்கவேண்டும். ஏனெனில் வலியுடன் வரக்கூடிய கட்டிகள் புற்றுநோய் கட்டியாக இல்லாமல் இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
நீர்க்கட்டி, புற்றுநோய் கட்டியை வேறுபடுத்துவது எப்படி?
20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் தினமும் கைகளால் சுயமார்பு பரிசோதனை செய்யவேண்டும். ஏதேனும் மாற்றங்கள், அதாவது கட்டிகள், வீக்கம் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும். அப்போது மருத்துவர் அது நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியாக என்பதை கூறிவிடுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட கட்டியா என்பதை கண்டுபிடிக்க முடியும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேமோகிராம் எனப்படும் எக்ஸ்-கதிர் சோதனையை செய்து என்ன கட்டி என்பதை கண்டறியலாம். இதுதான் முதல்படி.

மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோய் கிடையாது - மருத்துவர் கென்னி
ரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயை அறியமுடியுமா?
ரத்த பரிசோதனையை வைத்து புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான நடைமுறை என்பது இல்லை. இரத்த பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய்களைக் கண்டறிய முடியும். ஆனால் மேமோகிராம் சோதனை மூலம் மார்பக புற்றுநோயை அடையாளம் காணலாம். மரபியல்ரீதியான அதாவது ஒருவருக்கு எந்த வயதில் புற்றுநோய் வந்ததோ, அவர்களின் சந்ததியினருக்கு அந்த வயதிலோ அல்லது அதற்கு 10 வருடங்களுக்கு முன்போ சில சோதனைகளை செய்து அவர்களுக்கு புற்றுநோய் வருமா என்பதை அறியமுடியும். ரத்தத்தில் தெரியக்கூடிய புற்றுநோய்கள் இருக்கின்றன.
அவற்றை சிஏ (CA-Cancer Antigen), CA-125 சோதனைகள் மூலம் அறியலாம். புற்றுநோயை உறுதிப்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் இந்த சோதனை முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். புற்றுநோயின் ஆரம்பநிலையிலோ, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது சிகிச்சை முடியும்போதோ, நம் ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் ரத்த சிவப்பணுக்களுடன் சுழற்சியில் இருப்பதைதான் Circulating DNA cells என சொல்வோம். இந்த சோதனையை நாம் அனைவருக்கும் செய்யமுடியாது.

ரத்த பரிசோதனையை மட்டும் வைத்து புற்றுநோயை உறுதிப்படுத்த முடியாது
புற்றுநோய் இருந்து, பின்னர் முழுவதும் மறைந்து, பின்னர் மீண்டும் வந்து, சிகிச்சையை தொடரவேண்டும் என்பவர்களுக்கு மட்டும்தான் ரத்த பரிசோதனை எடுக்க அனுமதி உண்டு. மற்றபடி பொதுமக்களுக்கு ஒரு ரத்த பரிசோதனை மூலம் மட்டும் புற்றுநோய் உள்ளதா? இல்லையா என்பதை சொல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. புரோஸ்டேட் புற்றுநோய்க்கு Prostate-Specific Antigen சோதனை, சினைமுட்டைப்பை புற்றுநோய்க்கு CA-125 சோதனை, ரெக்டம் அல்லது குடல் புற்றுநோய்க்கு CA ரத்தப் பரிசோதனை உள்ளது. ஆனால் இந்த சோதனைகள் மூலம் கட்டி வருவதற்கு முன்பு புற்றுநோயை கண்டறிய இயலாது. புற்றுநோயின் அறிகுறிகள் இல்லாதசமயத்தில், யாருக்காவது சோதனையின் முடிவுகள் அசாதாரணமாக இருந்தால், பின்னர் கட்டி தொடர்பான ஸ்கேன்கள் எடுக்கலாம். கட்டியை சீக்கிரம் கண்டறிவதற்கான சோதனை முறைகள் உள்ளன. வருவதற்கு முன்பு செய்வதற்கான சோதனைகள் இல்லை.
புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
பெரும்பாலான புற்றுநோய்களுக்கு காரணிகள் உள்ளன. ஜீன்வழியாக தொடரும் புற்றுநோயை தவிர்க்க இயலாது. 8 மணிநேர தூக்கம், சரியான உடல்எடை, புகை மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பது, உடல்பருமனை தவிர்ப்பது மூலம் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 9-14 வயதிற்குள் உள்ளோருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியதன் மூலம் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் குறைந்துள்ளது. வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகைபிடிப்பது. புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை தவிர்த்தாலே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை தவிர்த்துவிடலாம். இவைதான் பொதுவாக தவிர்க்கவேண்டியவை.

ரஷ்யாவின் என்டரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பு கருவி கிடையாது - மருத்துவர் கென்னி
‘என்டரோமிக்ஸ்’ போன்ற புற்றுநோய் தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வழங்கப்படாதது ஏன்?
‘என்டரோமிக்ஸ்’ ஒரு mRNA தடுப்பூசி. விலங்குகளிடம் கோலோரெக்டர் கேன்சருக்கு இதை பயன்படுத்தி பயனுள்ளதாக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கான முழுமையான தகவல்கள் இன்னும் இல்லை. அவர்கள் வெளியிட்ட தரவுகள்படி ஆரம்பநிலையில் இதனால் பயன் உள்ளது. ஆனால் இது புற்றுநோய் வருவதை தடுக்குமா என்றால் தடுக்காது. புற்றுநோய் வந்தவருக்கு இதை பயன்படுத்தும்போது, புற்றுநோயை முழுமையாக குறைக்குமா? என்பதை கண்டறியத்தான் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது. ஆனால் 80 சதவீதம் புற்றுநோய் அறிகுறிகள் இருக்கிறது என தெரியவந்துள்ளது. இது சிகிச்சைக்கான ஒரு கருவிதான். இதை கிளியோபிளாஸ்டோமா என சொல்லக்கூடிய மூளை புற்றுநோய்க்கும், லெமலோனா என சொல்லக்ககூடிய தோல் புற்றுநோய்க்கும் கொடுப்பதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் புற்றுநோய் வருவதை இது தடுக்காது. இது ஒருவகையான நோய் எதிர்ப்பு சிகிச்சை (Immunotherapy). நம்முடைய சொந்த நோய் எதிர்ப்பு சக்தியை மரபணு பொறியியல் (Genetic engineering) மூலம் புற்றுநோய்க்கு எதிராக திருப்பும்போது புற்றுநோயை முழுமையாக குறைப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படும் என்பதுதான் இதன் உள் அர்த்தம். ஆனால் புற்றுநோய் தடுப்பு கருவி கிடையாது.
