
ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை யாராலும் மறக்கமுடியாது. பொதுமக்கள் வந்துசெல்கிற சுற்றுலா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதற்கு இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இரு நாடுகளும் மாறி மாறி தொடர் தாக்குதல் நடத்திவந்த நிலையில், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஒருவழியாக உலக நாடுகள் தலையிட்டு பொதுமக்களை அச்சுறுத்தாத வண்ணம் சண்டையை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தன. அந்த கோரிக்கையை ஏற்று சண்டை கைவிடப்பட்டாலும் தீவிரவாதிகளை அழிக்கும் வேட்டை தொடரும் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்தவர்களே நாட்டுக்குள் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக புகார்கள் எழுந்தன. புகாரின்பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர், ஹரியானாவைச் சேர்ந்த யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா.
இந்தியாவில் இருந்துகொண்டே இந்தியாவை காட்டிக்கொடுத்த தேசதுரோகிகள்
பணம் பெற்று பரப்புரை!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்கள் உள்நாட்டுக்காரர்கள்தான் என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் புலனாய்வு அமைப்புகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டன. அதில் மே 4ஆம் தேதி, அமிர்தசரஸைச் சேர்ந்த ஃபலாக்ஷர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகியோர் முதலில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து பஞ்சாபைச் சேர்ந்த குசாலா என்ற பெண் மற்றும் யாமீன் முகமது ஆகிய 2 பேர் கடந்த 11ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அடுத்த 15ஆம் தேதி சுக்ப்ரீத் சிங் மற்றும் கரன்பிர் சிங் ஆகியோர் கைதாகினர். இவர்கள் எல்லாருமே பணத்துக்காக வேலை செய்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. பஞ்சாப் மட்டுமல்லாமல் ஹரியானாவிலும் அதே நாளில் 4 பேர் கைதாகினர். அதேபோல் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நவுமன் இலாஹி என்ற இளைஞரும் அதேநாளில் கைதுசெய்யப்பட்டார். இதற்கு அடுத்த நாள் ஹரியானாவைச் சேர்ந்த கல்லூரி மாணவரான தேவேந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூ-டியூபர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். ஜோதியை அடுத்து மேலும் 3 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கும் டெல்லியில் அமைந்திருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த டேனிஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்குமே டேனிஷ், பாகிஸ்தான் நாட்டை சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் செய்திருந்ததுடன், அங்குள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் இவர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இவர்கள் அனைவருமே இந்தியாவின் முக்கிய ராணுவ தகவல்கள், விமானப்படை தளங்கள், ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் இருப்பிடங்கள் உள்ளிட்ட பல தகவல்களை அவர்களுக்கு வழங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவர்கள் பாகிஸ்தானிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக தங்களது சமூக ஊடகங்களில் பரப்புரையில் ஈடுப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹரியானாவைச் சேர்ந்த யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா
முக்கிய குற்றவாளியான யூ-டியூபர்!
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த குற்றத்தில் 12 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தாலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார் ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா. Travel with JO என்கிற பெயரில் யூ-டியூப் சேனல் வைத்திருக்கும் இவர், பல நாடுகளுக்குச் சென்று வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சென்றுவந்த வீடியோக்களை அவர் பதிவிட்டிருக்கிறார். அதில் குறிப்பாக, பாகிஸ்தான் தூதரகத்தின் டின்னர் பார்ட்டியிலும் இவர் கலந்துகொண்ட வீடியோவை மார்ச் 30ஆம் தேதி பதிவிட்டிருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் பாகிஸ்தானின் தேசிய தினத்தன்று நடைபெற்ற இஃப்தார் பார்ட்டிக்கு தான் அழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதே வீடியோவில் டேனிஷ் என்பவர் ஜோதி மல்ஹோத்ராவை அங்குள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவர் ஏற்கனவே பலமுறை பாகிஸ்தானுக்கும், ஒரு முறை சீனாவுக்கும் சென்று வந்திருக்கிறார். இந்த ஆதாரங்களை வைத்து ஜோதியை கைதுசெய்த காவல்துறை அவருடைய செல்ஃபோன் மற்றும் லேப்டாப்பை பரிசோதித்ததில், அதில் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் இருப்பதாக கூறியிருக்கின்றனர். குறிப்பாக இந்திய ராணுவ தகவல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 152இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தீவிரவாதிகளுடன் தொடர்பா? என ஜோதி மல்ஹோத்ராவிடம் தீவிர விசாரணை
கைதான மற்றவர்களின் விவரங்கள்!
ஜோதி மல்ஹோத்ரா தவிர குசாலா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை உளவு பார்த்து அதுகுறித்த விவரங்களை டெல்லியில் இருந்த பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிவித்துவந்திருக்கிறார். இவருடைய யு.பி.ஐ பணவரிவர்த்தனைமூலம் டேனிஷ் இவருக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம், மற்றொரு முறை ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ. 30 ஆயிரம் பணம் அனுப்பியிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த ஷாஹ்சாத் என்ற நபர் சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் நிர்வாகிகளுக்கு தெரிவிக்க அங்கு பலமுறை அவர் போய்வந்திருக்கிறார். அமிர்தசரஸை சேர்ந்த ஃபலாக்ஷர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய 2 பேரும் ராணுவ பகுதிகள் மற்றும் விமான தளங்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் ராணுவத்தின் நடவடிக்கைகளையும் அவர்களுக்கு தெரிவித்து வந்துள்ளனர். இந்தியாக் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்ததற்காக பஞ்சாபைச் சேர்ந்த யாமீன் முகமது என்பவருக்கு பாகிஸ்தானிலிருந்து பலமுறை ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் சுக்ப்ரீத் சிங் மற்றும் கரன்பிர் சிங் ஆகிய இருவரிடமிருந்து 3 செல்ஃபோன்கள் மற்றும் .30 போர் எடையுள்ள எட்டு லைவ் கார்ட்ரிட்ஜ்களை போலீசார் மீட்டிருக்கின்றனர். குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூரின் போது, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரிலுள்ள முக்கிய இடங்களின் விவரங்கள் குறித்தும், ராணுவ நடமாட்டம் குறித்தும் பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஹரியானாவின் பானிபட்டைச் சேர்ந்த நாமன் இலாஹி என்ற நபர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சில முக்கிய தகவல்களை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களிடம் பகிர்ந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். முதுகலை பட்டதாரியான தேவேந்தர் சிங் என்பவர் ஆயுதங்களுடன் தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்ட குற்றத்திற்காகவும், கடந்த ஆண்டிலிருந்து பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் பாட்டியாலாவிலிருக்கும் ராணுவ கட்டுப்பாட்டுப்பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பியிருக்கிறார் இவர். ஹரியானாவைச் சேர்ந்த அர்மான் நீண்ட நாட்களாக இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்கள்மூலம் பாகிஸ்தான் அலுவலகத்திற்கு அனுப்பி வந்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த முகமது டாரிஃப் என்ற நபரும் ராணுவ ரகசிய தகவல்களை பாகிஸ்தான் அலுவலகத்திற்கு பகிர்ந்ததுடன், சிம் கார்டு கொடுப்பதற்காக பாகிஸ்தான் சென்று வந்ததையும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த டேனிஷ் என்பவருடன் ஜோதி மல்ஹோத்ரா - கடும் நடவடிக்கை பாயும் என போலீசார் உறுதி
இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை பெறுவதற்காக பாகிஸ்தான் இதுபோன்ற யுக்திகளை பின்பற்றியிருப்பதாகவும், ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, வேவுபார்த்த நபர்களை கைதுசெய்ததும் ஒருவகையான போர்தான் என்றும் தெரிவித்திருக்கிறார் காவல்துறை அதிகாரி ஷஷாங் குமார் சவான். கைதுசெய்யப்பட்ட அனைவருமே பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அங்கிருந்து எவ்வளவு பணம் வாங்கியிருக்கின்றனர்? இன்னும் என்னென்ன தகவல்களை பகிர்ந்திருக்கின்றனர்? என்பது குறித்த தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. தேசத்திற்கு துரோகம் செய்த இந்த குற்றவாளிகளின் மீது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது விரைவில் தெரியவரும்.
