இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் வைத்து மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக மாணவியே கொடுத்த புகாரின்பேரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து கையிலெடுத்த நிலையில் வழக்கின் விசாரணையானது பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் சார் என்று அந்த நபர் யாரிடமோ போனில் பேசியதாக அந்த பெண் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த சார் யார் என எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் ஞானசேகரனின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் யாரிடமும் போனில் பேசவில்லை என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் ஞானசேகரனுக்கும் திமுக பிரமுகர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வழங்க 6 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என தொடர் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் இதன் தீர்ப்பானது 5 மாதங்கள் கழித்து மே 28ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில் ஞானசேகரன் குற்றவாளி என உறுதியான நிலையில், தண்டனை விவரமானது ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனைைய அறவித்த நீதிமன்றம், எவ்வித தண்டனைக் குறைப்புமின்றி அதனை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன்

அன்று நடந்தது என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பரை இரவு நேரத்தில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தன்னை போலீஸ் எனக்கூறி, இருவரும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்திருப்பதாகவும், அதை கல்லூரி டீனிற்கு அனுப்பிவிடுவேன் என்றும் மிரட்டியதுடன் மாணவனை அங்கிருந்து அனுப்பிவிட்டு மாணவியையும் மிரட்டி பாலியல் உறவில் வற்புறுத்தி ஈடுபடுத்தியுள்ளார். மேலும் அதை வீடியோவாக எடுத்து, வெளியே சொன்னால் சமூக ஊடகங்களில் பதிவேற்றிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறிய மாணவி, அவர்களின் ஆதரவோடு கோட்டூர்புர காவல்நிலையத்தில் தைரியமாக புகாரளித்தார். அந்த வழக்கை வைத்து கோட்டூர்புர மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கினர். மாணவி குறிப்பிட்ட அடையாளங்களை வைத்து அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவனை டிசம்பர் 24ஆம் தேதி போலீசார் கைதுசெய்தனர். அந்த நபர் அதே பகுதியில் இரவுநேர தள்ளுவண்டி பிரியாணிக்கடை வைத்து நடத்திவந்ததும், ஏற்கனவே 4 பெண்களை திருமணம் செய்து அதில் ஒரு மனைவியுடன் வாழ்ந்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுபோல் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து மிரட்டுவதையும் இவன் வழக்கமாக வைத்திருந்ததுடன், திமுக அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.


போலீசார் விசாரணையின்போது தடுக்கிவிழுந்து காயப்பட்ட ஞானசேகரன்

தாக்கல் செய்யப்பட்ட 100 பக்க குற்றப்பத்திரிகை!

இதனிடையே மாணவி அளித்த புகாரின் FIR கசிந்த நிலையில் அதுகுறித்து விளக்கமளிக்க சென்னை கமிஷ்னர் அருண் உட்பட பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் குறிப்பாக, ஞானசேகரன் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டபோது யாருடனோ போனில் சார் என்று குறிப்பிட்டு பேசியதாக மாணவி தெரிவித்திருந்தார். அந்த சார் யாராக இருக்கும் என்று கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றவேண்டுமென பலதரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில் டிசம்பர் 28ஆம் தேதி பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை விசாரணைக்காக நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சார் என்று ஞானசேகரன் குறிப்பிட்டது யாரை? என்பதை கண்டறிய ஞானசேகரனின் செல்போன் அழைப்புகள் மற்றும் விவரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் குற்றம் நடந்ததாக மாணவி குறிப்பிட்ட நேரத்தில் ஞானசேகரனின் செல்போனிலிருந்து யாருக்கும் எந்தவொரு போன்காலும் போகததால் அவன் பேசுவதுபோல நாடகமாடியதாக போலீசார் தரப்பில் சொல்லப்பட்டது. இதனிடையே இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு சார்பில் சென்னை சைதாப்பேட்டை 9வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு வழக்கானது மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.


11 பிரிவுகளின்கீழ் ஞானசேகரன்தான் குற்றவாளி என்று நிரூபணம் ஆகியுள்ளது - நீதிமன்றம்

தள்ளுபடி செய்யப்பட்ட ஞானசேகரன் மனு!

தன்மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும், எனவே தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் ஞானசேகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது ஏப்ரல் 8ஆம் தேதி மகளிர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், நிர்வாணப்படுத்துதல், மிரட்டல், அந்தரங்க புகைப்படம் எடுத்து வெளியிடதல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல் உள்ளிட்ட 12 பிரிவுகளின்கீழ் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பி.என்.எஸ்.எஸ் ஆகிய சட்டப்பிரிவுகளில் அன்றையதினமே குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி சாட்சியங்கள் கொடுத்தனர். ஞானசேகரன்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் சுமார் 75 ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. இதனையடுத்து மே 20ஆம் தேதி அனைத்துதரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், இருதரப்பினரும் தங்களது இறுதி வாதங்களை முன்வைத்தனர். ஞானசேகரனுக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் அறிவியல்ரீதியாக நிரூபணமான நிலையில், மே 28ஆம் தேதி வழக்கின் இறுதி தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில், வழக்கு பதிவு செய்யப்பட்ட 12 பிரிவுகளில் 11 பிரிவுகளின்கீழ் ஞானசேகரன்தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பை வாசித்தார். மேலும் தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.


30 ஆண்டுகள் சிறை தண்டனையை ஞானசேகரன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் - நீதிபதி ராஜலட்சுமி

தண்டனை விவரம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம், 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. மேலும், ஞானசேகரன் இந்த 30 ஆண்டுகள் சிறை தண்டனையை எவ்வித தண்டனைக் குறைப்புமின்றி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கும்படியும் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On 3 Jun 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story