
தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு அடிதடி கலாட்டா சம்பவம் அரங்கேறியுள்ளது. டான்சர் யூனியனில் நடந்த களேபரம்தான் அது. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் தினேஷ் மாஸ்டார்தான் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ‘லியோ’ திரைப்படத்தில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த தினேஷ் மாஸ்டர், அதனை கேட்ட நடன கலைஞரை தாக்கியதாக, சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள், சங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்...
லியோ திரைப்படத்தில்வரும் நான் ரெடிதான் பாடல் காட்சி
லியோ திரைப்படத்தில் ஆரம்பித்த பிரச்சனை!
நடிகர் விஜய்யின் “லியோ” திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் ரெடிதான்” என்ற பாடல், தளபதியின் ரசிகர்களை செமையாக ஆட்டம் போட வைத்தது. காரணம், அந்த பாடல் கேட்பதற்கு மட்டும் அல்லாமல் பார்ப்பதற்கும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. எனவே அந்த பாடலுக்கு நம்மில் பலரும் ரசித்து ஆட்டம் போட்டிருப்போம். அந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் தினேஷ். “நான் ரெடிதான்” பாடலை கூர்ந்து கவனித்திருந்தால் தெரிந்திருக்கும். அதில் ஏராளமான நடன கலைஞர்கள் ஆடியிருப்பார்கள். ஆம், அப்பாடலில் 1500 டான்சர்கள் நடனமாடியிருந்தனர். இந்த நிலையில் பாடலில் நடனமாடிய 1500 டான்சர்களுக்கும், சரியாக ஊதியம் தரப்படவில்லை எனவும், அந்த 1500 டான்சர்களை நடனமாட வைப்பதற்காக தினேஷ் மாஸ்டர் வாங்கிய ரூ.35 லட்சத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், டான்சர் யூனியனில் உள்ள பலரும் புகார் கூறியுள்ளனர்.
தனுஷின் ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால பாடலுக்கு தேசியவிருது பெற்ற தினேஷ் மாஸ்டர்
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் யார்?
பார்ப்பதற்கு எதார்த்தமான லுக், பீட்டுக்கு ஏற்ற வேகத்துடன் ரசிக்க வைக்கும் நடனம் என தனது சுறுசுறுப்பான அசைவுகளால் பிரபலமானவர் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். ராஜுசுந்தரம், பிரபுதேவா மற்றும் நாகேந்திர பிரசாத் சகோதரர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களின் பல்வேறு படங்களில் நடன கலைஞராக பணியாற்றினார். மாஸ்டர் பிரபுதேவாவின் குழுவில் மிகச்சிறந்த ஆட்டக்காரராக ஜொலித்தார். டான்சராக மட்டும் இருந்த தினேஷ், 2001ஆம் ஆண்டு வெளியான பிரபு தேவாவின் மனதை திருடிவிட்டாய் படத்தில் டான்ஸ் மாஸ்டராக உயர்ந்தார். 2001 முதல் தற்போதுவரை சுமார் 25 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் நடனம் அமைத்த பெரும்பாலான பாடல்கள் ஹிட்டுதான்.
தனுஷின் ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ஒத்த சொல்லால பாடல், வித்தியாசமான நடன அசைவுகளால் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தப்பாடலுக்கு அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அத்துடன் சூர்யாவின் அயன், விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் இவர் அமைத்த நடனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படங்களில் சிறந்த நடன இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார் தினேஷ். அத்துடன் ஈசன் படத்தில் பயங்கர ஹிட்டடித்த பாடலான ஜில்லா விட்டு பாடலுக்கும் தினேஷ்தான் நடனம். நடனம் தவிர சில படங்களில் தினேஷ் நடித்தும் உள்ளார். இந்தநிலையில், டான்சர் யூனியனின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மீது பல புகார்கள் எழுந்துள்ளன.
டான்ஸ் மாஸ்டர் தினேஷின் வீடியோ மற்றும் டான்சர் யூனியனில் நடைபெற்ற பிரச்சனை
தற்போது நடந்தது என்ன?
தினேஷ் மீது பெரும் ஊழல் சர்ச்சை எழுந்துள்ளது. பெரும்பாலான பிரபல நடன இயக்குநர்கள் இவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். லியோ படத்தின் தயாரிப்பாளரிடம் நான் ரெடிதான் பாடலுக்காக பல லட்சம் வாங்கியதாகவும், ஆனால் அந்த பணத்தை பாடலில் நடனமாடியவர்களுக்கு தராமல், முறைகேடு செய்ததாகவும்தான் இவர்மீது முதலில் குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில், புகார் அளித்த கனடாவை சேர்ந்த நடன இயக்குநர் ஒருவரை சமரசம் பேசுவதாக அழைத்து தினேஷ் மாஸ்டர் தாக்கியதாக தற்போது கூறப்படுகிறது. நடனக் கலைஞரை தினேஷ் மாஸ்டர் மற்றும் நடன சங்க நிர்வாகிகள் அடித்த சிசிடிவி வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நடன இயக்குநர் சங்க உறுப்பினர்கள், தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக டான்சர் யூனியனின் துணைத்தலைவர் கல்யாண் மாஸ்டரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தினேஷ் மாஸ்டர் ஊழல் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளதாகவும், அவர் பெண் நடன கலைஞர்களை நடத்திய விதமும் சரியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இப்பிரச்சனை தொடர்பாக பேச டான்சர் யூனியன் கூடியபோது, தினேஷ் மாஸ்டர் தனது ஆதரவாளர்களுடன் வந்து அனைவரையும் வெளியேற்றி அட்டகாசம் செய்ததாக சங்க உறுப்பினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தினேஷ் மாஸ்டரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அவர் பதிலளிக்காமல் சென்றுவிட்டார். இதனையடுத்து இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாஸ்டர் கல்யாண் தலைமையிலான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தினேஷ் மாஸ்டரை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், லியோ படத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே டான்ஸ் மாஸ்டர் சாந்தி உள்ளிட்டோர் டான்சர் யூனியனில் நடந்த பிரச்சனை குறித்து பேசியுள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. டான்சர் அனுராதா, அவரது மகளான அபிநயஸ்ரீ உள்ளிட்டோரும், நடன கலைஞர் தாக்கப்பட்ட விவகாரம், டான்சர் யூனியனில் நடந்த மோதல் ஆகியவற்றுக்கு தினேஷ் மாஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லியோ பட விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நடன இயக்குநர் தினேஷ்
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் விளக்கம்
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடன இயக்குநர் தினேஷ், "லியோ விவகாரத்தில் 1500 பேர் நடனம் ஆடியிருப்பார்கள். அதில் நடன சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் 500 பேர்தான். அவர்களுக்கு முறையாக சேர வேண்டிய சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது. வெளிமாநிலங்களில் இருந்துவந்து நடனமாடிய 1000 பேருக்கு சம்பளம் கொடுப்பது குறித்து லியோ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஃபெப்சி அமைப்பு சேர்ந்து முடிவெடுத்தார்கள். அதன்படி அவர்களுக்கு சம்பளம் போய் சேர்ந்ததா என்பது எனக்கு தெரியாது. அதை கவனிப்பது என் வேலை கிடையாது. பாட்டுக்கு நடனம் அமைப்பது மட்டும்தான் என் பணி. மேலும் நடன இயக்குநராக 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பணியாற்றுவது அவ்வளவு எளிது கிடையாது. ஒரு பாட்டுக்கு நடனம் அமைப்பது மிகவும் கடினம் . நடன அசைவுகள், முதலில் நடிகருக்கு பிடிக்க வேண்டும். பின்னர் இயக்குநர், தயாரிப்பாளர் என்று அனைவருக்கும் பிடிக்க வேண்டும். எனவே நடன டென்ஷனில் இருக்கும் தன்னிடம்வந்து, சம்பளப் பிரச்சனையை சொல்வது சரியல்ல" என்று தினேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
