
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் வயது வித்தியாசமெல்லாம் கிடையாது. பிறந்த குழந்தை முதல் மூதாட்டி வரை என அனைத்து வயதினரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த குற்றங்களுக்கெல்லாம் தண்டனை அளிக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் நாளுக்கு நாள் குற்றங்கள் பதிவு செய்யப்படுவதுதான் அதிகரித்துள்ளதே தவிர, குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில், தமிழகத்தின் பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சுந்தரவேல், குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
வாயில் மண்ணை அள்ளிப்போட்டு நடந்த கொடூரம்
ஜூன் 17ம் தேதி, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 80 வயதான மூதாட்டி சாலையில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சாலை ஓரத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 4 இளைஞர்கள், அவரை அங்குள்ள சவுக்குத் தோப்பிற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது அவர் கூச்சலிட்டுள்ளார். ஆனால் அவர் வாயில் மண்ணை அள்ளிப்போட்டு இந்த கொடூரம் நடைப்பெற்றுள்ளது. தொடர்ந்து அவர் கை, காதுகளில் அணிந்திருந்த நகைகளையும் அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கிடந்த மூதாட்டியை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கடலூர் மாவட்ட காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவர் காடாம்புலியூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு சென்ற போலீசார், முந்திரி காட்டில் இருந்த சுந்தரவேலை சுற்றி வளைத்தனர். அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் போலீசாரை, சுந்தரவேல் தாக்கியுள்ளார். இதனையடுத்து பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுந்தரவேல் காலில் சுட்டார். பின்னர் காயமடைந்த போலீசார் மற்றும் குற்றவாளி சுந்தரவேலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சக போலீசார், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மூவரையும் தேடி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒன்றிரண்டு வாரங்களில் இதுபோன்ற சம்பவங்கள், நாடு முழுவதும் பல இடங்களில் நடந்துள்ளன.
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் 11ம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்துகொடுத்து 2 மாணவர்கள் உட்பட 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய 8 மற்றும் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட 20 வயது இளைஞர் ஒருவரையும் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரம் சிறுமி வழக்கில் கைதானோர்
சென்னை
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த சிறுவன், வீட்டில் தண்ணீர் கேன் போடுவது போல் சென்று பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியை காதல் செய்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தனது நண்பர்கள் சிலரையும் அழைத்துவந்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளார். இதனால், சிறுமி உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அதனை கண்ட பெற்றோர்கள், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து இந்த வழக்கில் 8 சிறுவர்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் இந்த வழக்கில் அச்சிறுமியின் தாயாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவே, தாய் நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறுமியின் தாய் மற்றும் சிறுவர்கள் உட்பட 13 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் & குழந்தைகளின் மாதிரிப்படம்
கோயம்புத்தூர்
கோவையில் 17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். கடந்த பிப்ரவரியில் ஒருநாள் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பாட்டி, உக்கடம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இச்சம்பவம் குறித்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மறுநாள் அச்சிறுமி வீடு திரும்பினார். சிறுமி வீடு திரும்பிய தகவலை அறிந்த போலீசார், அச்சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 7 பேர் கொண்ட கும்பலால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்ததில், அவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானவர்கள் எனவும், நட்பாக பேசி குனியாமுத்தூர் பகுதிக்கு வரவழைத்து சிறுமிக்கு பாலியம் தொல்லை அளித்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து இதில் சம்பந்தப்பட்ட கோவை - பாலக்காடு சாலையில் உள்ள கல்லூரி மற்றும் சரவணம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்களின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா
கடந்த ஜூன் 15ம் தேதி ஒடிசாவில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் 10 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவிடாய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆண் நண்பருடன் சென்ற 20 வயது கல்லூரி மாணவியான அவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தின் ஹரி சந்தன்பூரில் 17 வயது சிறுமி ஜூன் 16ம் தேதி இரவு, வீட்டிற்கு அருகே உள்ள இடத்திற்கு திறந்தவெளி கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அவர் மறுநாள் அதிகாலைவரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இறுதியில், ஹரிசந்தன்பூருக்கு அருகே மரத்தில் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் காலையில் சடலமாக மீட்கப்பட்டார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிறுமி கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது இந்த வாரத்தில் மட்டும் ஒடிசாவில் நடைபெற்ற மூன்றாவது கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம். ஒடிசாவில் 2023ஆம் ஆண்டைவிட 2024ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்திருப்பதாக அம்மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை என மக்கள் ஆதங்கம்
உத்தரப்பிரதேசம்...
கடந்த ஏப்ரல் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, தனது நண்பர் ஒருவருடன் பாருக்கு சென்றுள்ளார். அங்கு அந்த மாணவர் தனது நண்பர்களை வரவழைத்து மாணவிக்கு, குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 7 நாட்கள் மாணவியை வெவ்வேறு ஹோட்டல்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசம்
மத்தியப்பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், 15, 16 மற்றும் 17 வயதுடைய 3 சிறுமிகளும், 21 வயதுடைய பெண்ணும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு, ஆண் ஒருவருடன் வீடு திரும்பினர். அப்போது அங்கு பைக்கில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியது. இதனால் அச்சமடைந்த ஐந்து பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் பெண்கள் நான்கு பேரையும் அருகில் இருந்த காட்டிற்கு இழுத்து சென்று அந்த 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. அவர்களுடன் இருந்த அந்த ஆண் அவர்களை மீட்க முயன்ற நிலையில், அவரை அடித்து விரட்டினர். இதனைத்தொடர்ந்து அவர் சென்று போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்தனர்.
