
விமான விபத்தை கணித்த பெண் பயணி! விமானிகள் அறையின் குரல்பதிவு கிடைத்தது!
வாழ்க்கை மிகப்பெரியது என்று நாம் அனைவரும் நினைப்போம். ஆனால் வாழ்க்கை மிகச் சிறியது என்று சில விஷயங்கள் நம் மண்டையில் ஓங்கி அடித்து உணர்த்திவிடும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் கடந்த 12-ஆம் தேதி நடந்தது. பல வண்ண கனவுகளுடன் பறந்த குழந்தைகள், மகன், மகள், பேரக்குழந்தை உள்ளிட்ட உறவுகளை பார்க்க காத்திருந்த பெரியவர்கள், சுற்றுலா முடித்துவிட்டு தாய்நாட்டுக்கு திரும்ப நினைத்தவர்கள், கணவனுடன் சேரவும் - மனைவியை பார்க்கவும் ஏங்கிக்கிடந்தவர்கள், குடும்பத்துடன் புது வாழ்க்கைக்கு ஆயத்தமானவர்கள், பணியில் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் என பல்வேறு ஆசைகளை சுமந்திருந்த 241 பேரின் வாழ்க்கையும் ஒரு நொடியில் வெடித்துச்சிதறி தீக்கிரையாகியது. ஆம், வாழ்க்கை எத்தனை நிச்சயமற்றது! ஏர் இந்தியா விமான விபத்தை அறிந்த அனைவருக்கும் கண்டிப்பாக உள்ளுக்குள் மிகப்பெரிய பயம் வந்திருக்கும். பிறப்பென்றால் இறப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் இப்படி ஒரு விபத்தில் உயிர்போகக்கூடாது என்றே நினைப்போம். ஆள் அடையாளமே தெரியாமல், டிஎன்ஏ டெஸ்ட் மூலம் மட்டுமே அடையாளம் காணப்படும் அளவுக்கு இப்படி மரணம் வரக்கூடாது. இந்த விபத்தை பார்த்த அனைவரும் சோகத்தில் மூழ்கிய மறுகனம் உடனடியாக தோன்றிய கேள்வி, எப்படி நடந்தது? என்ன ஆனது? இதற்கான விடையை கண்டுபிடிக்கத்தான் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் காரணம் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்தப்பிய பயணி ரமேஷ்
ஜூன் 12-ஆம் தேதி நடந்தது என்ன?
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் - போயிங் 787 ட்ரீம்லைனர், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிற்பகல் சுமார் 1:30 மணிக்கு புறப்பட்ட சில நிமிடங்களில், மேகனிநகர் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இந்தியர்கள், பிரிட்டன் நாட்டவர், போர்ச்சுகல் நாட்டவர், கனடாவைச் சேர்ந்தவர், விமானப் பணியாளர்கள், விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் ஒரு பயணியைத் தவிர 241 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக அவர் திட்டமிட்டிருந்திருக்கிறார்.
இந்த விபத்தில், இந்தியாவில் பிறந்து பிரட்டன் குடியுரிமை பெற்ற விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஆண் பயணி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குஜராத்தின் புருச்சைச் சேர்ந்த பூமி சௌகான் என்ற பெண் பயணி ஒருவர், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டு உயிர்பிழைத்துள்ளார். அதேநேரம், பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்கள், சாலையில் நடந்து சென்றோர் என்று பொதுமக்களும் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் இழந்துள்ளனர். இதனால் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270-ஐ கடந்தது.
ஃப்ளைட் ரேடார் 24 என்ன சொல்கிறது?
விமானக் கண்காணிப்பு தளமான ஃப்ளைட் ரேடார் 24-ன் கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமான கண்காணிப்பில் பெறப்பட்ட தரவுகளின்படி, விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கிடைத்ததுதான் கடைசி சிக்னல். சிக்னல் இருந்தபோது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி 'மேடே அழைப்பு' விடுத்ததாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு விமானியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. விமானம் விபத்தில் சிக்கி விழுந்து வெடித்து சிதறியது.
விபத்திற்கு விமானிகளின் தவறு காரணமாக இருக்கலாம் என விமானப்படை முன்னாள் அதிகாரி சந்தேகம்
"மே டே" என்று கூறினால் கதை முடிந்தது!
பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தை குறியீடுகளில், மே டே என்பது விமான பயணங்களின் போது யாரும் கேட்கவே கூடாத வார்த்தை. என்ஜின் முழுமையாக செயலிழந்து, உயிருக்கே ஆபத்தான மிகவும் அவசர சூழலில், பைலட்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பைலட் மூன்றுமுறை மே டே என்று சொல்லியதுடன், நோ பவர், நோ த்ரஸ்ட் என்று சொல்லியிருக்கிறார்.
பைலட்டுகளின் ரகசிய வார்த்தைகள்
பைலட்களும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும் ஒருபோதும் வார்த்தைகளை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பொதுவான ரகசிய மொழிகள் உள்ளன. விபத்துக்களை தவிர்ப்பதுதான் இதன் அடிப்படை நோக்கம். அதில்தான் "மே டே" என்ற வார்த்தையை ஏர் இந்தியா விமானி கூறியிருந்தார்.
"மே டே"-வை தவிர இன்னும் சில வார்த்தைகளும் உள்ளன. அடுத்து, "பேன்-பேன்" என்பது அவசர சூழ்நிலையை குறிக்க கூடிய ஒரு வார்த்தைதான். எனினும் மே டே அளவிற்கான அவசர சூழல் கிடையாது. அதற்கு கீழ் நிலையில் உள்ள அவசர சூழல் என்று கருதலாம். ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. "வில்கோ" என்பது will comply என்பதன் சுருக்கம். எங்களுக்கு தகவல் கிடைத்துவிட்டது. அதனை செய்கிறோம் என்பதை தெரிவிப்பதற்கு விமானங்களின் பைலட்கள் வில்கோ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். "ஸ்டாண்ட்பை" என்பது தயவு செய்து காத்திருங்கள் என்பதை குறிக்கிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்களோ அல்லது பைலட்களோ, பிஸியாக இருக்கும் நேரங்களில் ஸ்டாண்ட்பை வார்த்தையை பயன்படுத்துவார்கள். "டெட்ஹெட்" என்பது விமானத்தின் ஊழியர்களில் யாராவது ஒருவர், பயணிகளின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தால், அதை குறிப்பதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்
விபத்துக்கான காரணம் என்ன?
விமானம் புறப்படும்போது, தரையிறங்கும் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட வேண்டும். இறக்கையில் இருக்கும் ஃபிளாப்ஸ் எனப்படும் அமைப்புகள் விரிந்த நிலையில் தாழ்வாக இருக்க வேண்டும். மேலும், விமானம் மேலே எழும்பிய சில நொடிகளில் "கியர் அப்" என்று விமானி கூறுவார். அதனைக்கேட்டு துணை விமானி, ஒரு லீவரை இழுத்து தரையிறங்கும் சக்கரங்களை உள்ளே இழுக்க வேண்டும். அதுதான் லேண்டிங் கியர். லேண்டிங் கியரைதான் துணை விமானி உள்ளே இழுக்க வேண்டும். ஆனால், ஏர் இந்தியா விமானத்தில் துணை விமானி தவறுதலாக கியருக்கு பதிலாக ஃபிளாப்ஸை இழுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது ஃபிளாப்ஸை மேலே இழுத்திருக்கலாம் எனப்படுகிறது. ஃபிளாப்ஸ் கீழே இருந்தால்தான் விமானம் மேல் நோக்கி செல்லும். ஃபிளாப்ஸ் மேலே இருந்தாலோ அல்லது டேக் ஆஃப் செய்யும் போது சமமாக இருந்தாலோ விமானம் கீழ் நோக்கி செல்லும் என்று விமானப்படை முன்னாள் அதிகாரியான ரியான் போடன்ஹெய்மர் என்பவர் கூறி உள்ளார். விமானம் புறப்பட்டு 30 வினாடிகளுக்குப் பிறகும், தரையிறங்கும் சக்கரங்கள் வெளியே இருந்ததையும், ஃபிளாப்ஸ் உள்ளே இழுக்கப்பட்டதால் இறக்கைகள் சமமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இவரின் கூற்றுக்கு பலரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏனென்றால் விமானத்தில் இருந்த 2 பைலட்டுகளுமே ஆயிரக்கணக்கான மணி நேரங்கள், விமானம் ஓட்டிய எக்ஸ்பீரியன்ஸ்டு பைலட்டுகள் என்று கூறப்படுகிறது.
எனவே விமான விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும், பயணிகளின் லக்கேஜ் எடையை சரிபார்ப்பதில் தவறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அளவுக்கு அதிகமான எடையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விமானங்களில் பயணிகளின் இருக்கைகளுக்கு கீழ் பகுதியில்தான் லக்கேஜூகள் வைக்கப்படும். அவ்வாறு வைக்கப்படும் பொருட்களின் எடை சரிசமமாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட வேண்டும் என்பதுடன், அவை நன்றாக பொருத்தி வைக்கப்பட வேண்டும். அவ்வாறு லக்கேஜூகள் பொருத்திவைக்கப்பட்ட பின், அந்த இடத்தில் அவை சரியாக பொருந்தாமல் அனைத்து பொருட்களும் முன்னோக்கி சென்றாலும் பிரச்சனை ஏற்படுமாம்.
விபத்து பகுதியில் நடைபெறும் ஆய்வு
போயிங் விமானத்தில் தரமற்ற உதிரி பாகங்கள்?
அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்த மாடலை 14 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், 2014-ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவில் இணைந்தது. அதில் மொத்தமாக 256 இருக்கைகள் உள்ளன. இந்நிலையில், விமானத் தயாரிப்பில் முறையான தர நிலைகளை போயிங் நிறுவனம் பின்பற்றுவதில்லை என்ற அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ஜான் பர்னெட் என்பவரின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது. போயிங் நிறுவனத்தில் 32 ஆண்டுகள் பணியாற்றிய அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். போயிங் நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் அவர் பல ஆதாரங்களை கொடுத்திருந்தார்.
அமெரிக்காவின் வடக்கு சார்ல்ஸ்டன் தொழிற்சாலையில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது, விமானங்களை வேகமாக தயாரிக்கும்படி உத்தரவிடப்பட்டதால், தொழிலாளர்கள் கடும் அழுத்தத்தில் இருந்ததாகவும், தரம் குறைவான உதிரி பாகங்களை விமானங்களில் பொருத்தியதாகவும் அவர் 2019-ஆம் ஆண்டே கூறியிருந்தார். இதன் விளைவாக அவர்கள் தயாரிப்பு முறையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் சமரசம் செய்துகொள்ள நேர்ந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் ஆய்வு செய்தபோது அவற்றில் சில உண்மை எனக் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பல விஷயங்கள் சரியாக வேலை செய்யவில்லை என பயணி ஒருவர் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தது நினைவுக்கூறத்தக்கது.
விமானத்தில் ஏதோ சரியில்லை என கணவருக்கு ஃபோன் செய்த பயணி யாஸ்மின்
விமானிகள் அறையின் குரல்பதிவு மீட்பு!
விமான விபத்து புலனாய்வு அமைப்பானது, ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. விமானத்தின் கருப்புப் பெட்டி ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது, விமானிகள் அறையின் குரல்பதிவு கருவியும் மீட்கப்பட்டு, இரண்டுமே பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக, விமான விபத்து புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த விமானம் அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதால், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமானது, சர்வதேச நெறிமுறைகளின் கீழ், இந்திய விசாரணை அமைப்பைப்போலவே மற்றொரு விசாரணையை தனியாக நடத்தி வருகிறதாம். எனவே விபத்துக்கான காரணம் விரைவில் தெரியவரும் என நம்பப்படுகிறது.
விபத்தை கணித்த பெண் பயணி யார்?
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பரோடாவைச் சேர்ந்த 51 வயதான யாஸ்மின் வோரா என்ற பெண் பயணி, லண்டனில் வசிக்கும் தனது இரண்டு கர்ப்பிணி மருமகள்களைப் பார்ப்பதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக யாஸ்மின், சில உறவினர்களுடன் விமானம் ஏறியுள்ளார். யாஸ்மினை அவரது கணவர்தான் விமான நிலையத்திற்கு வந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். விமானத்தில் ஏறிய யாஸ்மின், விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு கணவரை தொலைபேசியில் அழைத்து, விமானத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்றும், விமானத்தில் ஏதோ சரியில்லை என்றும், எதுவுமே மனதிற்கு சரியாக படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு யாஸ்மினின் கணவரோ சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்...!
