இந்திய உணவு கலாச்சாரத்தில் ஊறுகாய்க்கு என்று தனி இடம் உண்டு. உணவின் சுவையை அதிகரிப்பதில் ஊறுகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு உணவு வகைகளுடன் ஊறுகாய் சேர்த்து சாப்பிடுவதில் ஒவ்வொருவருக்கும் அலாதியான இன்பம் உண்டு. நாம் சாப்பிடும் சாம்பார் சாதம், தயிர்சாதம், சப்பாத்தி போன்ற உணவுக்கு சைட் டிஷ்ஷாக ஊறுகாய் ஒன்று இருந்தால் போதும். ஒரு தட்டு சாதத்தையும் எளிதாக காலி செய்து விடலாம். அந்த அளவுக்கு சுவை தரக்கூடிய ஊறுகாயில் அந்தந்த ஊர்களுக்கு தகுந்தாற்போன்று எத்தனை எத்தனை வகைகள் உள்ளன! அந்த வகையில், நாம் நம் வீட்டில் இருக்கும் கொஞ்சம் பச்சை மிளகாயை வைத்து அசத்தலான ஒரு ஊறுகாய் செய்யலாமா? அதுவும் ராஜஸ்தானி ஸ்டைலில்? நமது ராணி நேயர்களுக்காக "ராஜஸ்தானி மிர்ச்சி காய்ச்சல்" என்ற சுவையான பச்சை மிளகாய் ஊறுகாயை செய்துகாட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் லோகேஷ்வரன் தமிழரசன்.

ராஜஸ்தானி மிர்ச்சி காய்ச்சல் ஊறுகாய் செய்முறை
முதலில் ஒரு கடாயை சூடாக்கி, அதில் 130 கிராம் கடுகு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், முழுதாக கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை அதில் போடவும்.
மிதமான தீயில் பச்சை மிளகாயை வறுக்கவும். மிளகாயின் தோல் லேசாக வெள்ளை நிறத்தில் வரும்போது எடுத்து விடவும். (சமைக்கும் போது நல்ல காற்றோட்டமான இடத்தில் சமைப்பது நல்லது. ஏனெனில் மிளகாய் நெடி ஏற வாய்ப்புள்ளது)
பச்சை மிளகாய் நன்றாக வெந்ததும் அதில் 4 கிராம் மஞ்சள் தூள் மற்றும் 85 கிராம் மஞ்சள் கடுகு பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறவும்.

பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்குதல்
அடுத்து, ஊறுகாய்க்கு தேவையான புளிப்பு சுவைக்காக ஆப்பிள் சிடர் வினிகர் சேர்க்கவும். வீட்டில் உள்ள சாதாரண வினிகரையும் பயன்படுத்தலாம். வினிகர் சேர்த்த பிறகு ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.
இப்போது, நாம் ஏற்கனவே வறுத்து பொடித்து வைத்துள்ள வெந்தயம், கருஞ்சீரகம், பெருங்காயம் மற்றும் மஞ்சுள் மாஸ்டர்ட் கலவையை இதனுடன் சேர்த்துவிட்டு, அடுப்பை அணைத்து விடவும்.

வறுத்து பொடித்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்க்கும் தருணம்
கடைசியாக, 4 கிராம் சாதாரண உப்பு மற்றும் 4 கிராம் கருப்பு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கருப்பு உப்பு இந்த ஊறுகாய்க்கு கூடுதல் சுவையை கொடுக்கும். அவ்வளவுதான்! சுவையான ராஜஸ்தானி மிர்ச்சி காய்ச்சல் ரெடி!
எப்படி சாப்பிடலாம்?
இந்த ஊறுகாய், தயிர் சாதம் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். வெறும் 10 நிமிடத்தில் ஈஸியாக செய்யக்கூடிய இந்த ரெசிபியை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்!

ராஜஸ்தானி மிர்ச்சி காய்ச்சல் ரெடி!
ஊறுகாயில் உள்ள நன்மைகள்
பச்சை மிளகாய் மற்றும் கடுகு எண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. வெந்தயம் செரிமானத்திற்கு உதவுகிறது. கருஞ்சீரகம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. மஞ்சள் தூள் சிறந்த கிருமி நாசினியாகவும், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. கருப்பு உப்பு உணவுக்கு தனித்துவமான சுவையை அளிப்பதோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் சேர்ந்து இந்த ஊறுகாயை சுவையானது மட்டுமல்லாமல், ஓரளவு ஆரோக்கியமானதாகவும் ஆக்குகிறது.
