இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வெயில் காலம் வந்துவிட்டாலே மாம்பழ சீசன் களைகட்டும். இனிப்பான மாம்பழங்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும். மாம்பழங்களை சாதாரணமாகச் சாப்பிடுவது, ஜூஸாக அருந்துவது தவிர, மாம்பழத்தில் செய்யக்கூடிய ஒரு சிறப்பு வகை குழம்புதான் இந்த மாம்பழ புளிசேரி (Mango Pulissery) அல்லது மாம்பழ மோர் குழம்பு. கேரளாவில் மிகவும் பிரபலமான இந்த டிஷ், புளிப்பு, இனிப்பு, காரம் என பல சுவைகளின் கலவையாகும். சூடான சாதத்துடன் இதைச் சாப்பிட்டால், அதன் சுவையே அலாதியானது. அப்படிப்பட்ட இந்த மாம்பழ புளிசேரியை வீட்டில் எளிமையாக செய்து சாப்பிடுவது எப்படி என்பதை நமக்கு செய்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் திருப்பதி.


மாம்பழ புளிசேரி செய்முறை

மாம்பழத்தை வேகவைத்தல்

* முதலில் மாம்பழத்தைத் தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழம், பச்சை மிளகாய் (முழுதாக), 2 பூண்டு பற்கள், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் 300 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

* பாத்திரத்தை மூடி, மிதமான தீயில் 15-20 நிமிடங்கள் மாம்பழம் மென்மையாகும் வரை வேகவிடவும்.

தேங்காய் விழுது அரைத்தல்

* மாம்பழம் வெந்து கொண்டிருக்கும்போது, ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், 4 பூண்டு பற்கள், அரை பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு மையாக அரைத்து தனியாக வைக்கவும்.


மாம்பழம், பச்சை மிளகாய் வேகவைத்தல் மற்றும் அதில் தேங்காய் கலவை சேர்த்தல்

குழம்பு தயாரித்தல்

மாம்பழம் நன்கு வெந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். (சின்ன வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிச் சேர்ப்பது, சாப்பிடும்போது ஒரு தனித்துவமான "க்ரஞ்சி" தன்மையைத் தரும்.)

நன்கு கலந்து, வெங்காயம் சற்று மென்மையாகும்வரை மேலும் சில நிமிடங்கள் வேகவிடவும். இந்த சமயத்தில், மாம்பழத்தில் இருந்து வரும் நீர் மற்றும் சேர்த்த தண்ணீர் சேர்ந்து ஒரு கெட்டியான பதம் கிடைக்கும்.

இப்போது அரைத்துவைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, தேங்காயின் பச்சை வாசனை போகும்வரை மிதமான தீயில் நன்கு கிளறி விடவும். தேங்காய் வேகும்போது மாம்பழம் மேலும் மென்மையாகும்.

குழம்பு ஓரளவுக்கு சூடானதும், அடுப்பை அணைத்து, மாம்பழ புளிசேரியை சற்று ஆறவிடவும். (சூடாக இருக்கும்போது தயிர் சேர்த்தால் திரிந்துவிடும்).

தயிர் சேர்த்தல்

* குழம்பு சற்று ஆறியதும், தயிரைச் சேர்த்து நன்கு கிளறவும். மாம்பழத்தின் புளிப்பைப் பொறுத்து தயிரின் அளவை மாற்றிக் கொள்ளலாம். மாம்பழம் அதிகம் புளிப்பாக இருந்தால் தயிர் குறைவாகச் சேர்க்கலாம். இனிப்பு மாம்பழம் என்றால் தயிர் சற்று அதிகமாகச் சேர்க்கலாம்.

* தயிர் சேர்த்த பிறகு மீண்டும் அடுப்பில் வைத்து சூடுபடுத்தக்கூடாது.


தேங்காயின் பச்சை வாசனை போகும்வரை மிதமான தீயில் கிளறி விடவும்

தாளிப்பு தயாரித்தல்

* ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.

* எண்ணெய் சூடானதும், கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

* கடுகு பொரிந்ததும், கிள்ளிய காய்ந்த மிளகாய், மெல்லியதாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறத் தேவையில்லை, சற்று கண்ணாடி பதம் வந்தாலே போதும்.

இறுதி சேர்த்தல்

* தயார் செய்த தாளிப்பை, தயிர் சேர்த்த மாம்பழ புளிசேரி மீது கொட்டவும்.

* மேலாக, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

* மாம்பழ புளிசேரி தயார்! சுடச்சுட சாதத்துடன் பரிமாறி மகிழலாம்.


சுவையான மாம்பழ புளிசேரி தயார்

மாம்பழ புளிசேரியின் நன்மைகள்

* ஊட்டச்சத்து நிறைந்தது: மாம்பழம் வைட்டமின் சி, ஏ, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* செரிமானத்திற்கு உதவும்: தயிர், மாம்பழம் மற்றும் சீரகம் ஆகியவை செரிமானத்திற்கு உதவும்.

* புத்துணர்ச்சி: வெயில் காலத்தில் இந்த புளிப்பு, இனிப்பு, காரம் கலந்த சுவை உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

* பாரம்பரிய உணவு: இது கேரளாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. இது ஒரு வித்தியாசமான சுவை அனுபவத்தை வழங்கும்.

* இந்த மாம்பழ சீசனில், உங்கள் வீட்டில் இந்த சுவையான மாம்பழ புளிசேரியை செய்து பார்த்து, குடும்பத்தாருடன் மகிழுங்கள்!

Updated On 10 Jun 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story