இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்றானது உலகம் முழுவதும் பரவி அனைவரின் வாழ்வையுமே புரட்டிப்போட்டது. லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு, பொருளாதார மந்தநிலை என அனைத்துமே தலைகீழாக மாறியது. அதிலிருந்து ஒருவழியாக அனைவரும் மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட இன்னும் உலகளவில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மீண்டும் NB.1.8.1 என்ற உருமாறிய கொரோனா உலகளவில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்திவருவதால், மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், 2019, 20ஆம் ஆண்டுகளில் பரவிய வீரியமிக்க கொரோனா வைரஸை போன்றே இந்த வைரஸ் இருக்குமா? இதன் விளைவுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்து நம்முடன் உரையாடுகிறார் மருத்துவர் ஷேக் சுலைமான்.


உலகளவில் பரவிவரும் NB.1.8.1 என்ற உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா அச்சுறுத்தக்கூடியதா? அல்லது மக்கள் பயமில்லாமல் இருக்கலாமா?

பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் வைரஸ் என்றாலே உருமாறிக்கொண்டேதான் இருக்கும். அப்படி உருமாறும்போது கொரோனா என்ற ஒரு வைரஸ் மனிதனை தாக்கியது. இப்போது உருமாறியிருக்கும் கொரோனாவானது சாதாரண சளிகாய்ச்சல் போன்றதுதான். இதனால் தலைவலி, காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் 3 அல்லது 4 நாட்கள் இருந்துவிட்டு போய்விடும்.

வீரியமிக்க கொரோனாவைப் போன்று இப்போது உருமாறியிருக்கும் கொரோனாவாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் வருமா?

நீரிழிவு, இதய நோய், கேன்சர் போன்றவற்றுக்கு சிகிச்சை எடுப்பவர்கள் மற்றும் வேறு பிரச்சினை இருப்பவர்களுக்குத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் வரும். இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினருக்கு கொரோனாவால் பெரிய தொந்தரவுகள் இருப்பதில்லை. மிகவும் வயதானவர்களுக்குத்தான் தீவிரமடைய வாய்ப்புகள் இருக்கின்றன. கொரோனாவால் உயிரிழப்பு என்பது இப்போதைய உருமாற்றத்தில் இல்லை. இணை நோய்களால்தான் உயிரிழப்புகள் வரலாம்.


உருமாறிய கொரோனாவால் பெரிய ஆபத்து இல்லை என்றபோதிலும் முகக்கவசம் அணிவது பரவலை தடுக்கும்

உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் என்னென்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?

கொரோனா பாசிட்டிவ் ஆனபிறகோ அல்லது இருமல், சளி, காய்ச்சல் வந்தாலோ மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும். இதனால் நம்மிடமிருந்து மற்றவருக்கு பரவாது. அதேபோல் கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தால் மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். மூன்று நாளைக்கு தொடர்ந்து காய்ச்சல் மாத்திரை போட்டுக்கொண்டிருந்தாலே நமது உடலே சரியாகிவிடும். அப்படி இல்லாதபட்சத்தில் மருத்துவரை அணுகி கொரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இருந்தாலும் இந்த உருமாற்றம் குறித்து பயப்படத் தேவையில்லை.

சாதாரண தலைவலி வந்தாலே நிறையப்பேருக்கு கொரோனா பயம் வருகிறது. அவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?

இப்போதைய உருமாற்றம் சாதாரண சளி, காய்ச்சல் போன்றதுதான். பயம் வந்தால் பரிசோதனை மேற்கொள்ளலாம். அதேசமயம் அறிகுறியே இல்லாமல் இருப்பவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டாலும் கொரோனா பாசிட்டிவ் ஆக வாய்ப்புகள் இருக்கின்றன.

கோவிட் - 19 வந்து சரியான பிறகு அடுத்தடுத்த அலைகள் வந்து அச்சுறுத்தின. அதேபோன்று இந்த முறையும் இருக்குமா?

கொரோனா நம்மைவிட்டு போகவே இல்லை. போனால்தான் திரும்ப வருவதைப் பற்றி யோசிக்கமுடியும். ஏற்கனவே நிறையப்பேருக்கு கொரோனா வந்திருக்கும் அல்லது தடுப்பூசி செலுத்தியிருப்பார்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி இருக்கும். உருமாறிய கொரோனாவுக்கு எதிராக மட்டும் எதிர்ப்பு சக்தி இல்லாததால் மிகவும் லேசான அறிகுறிகளுடன் வந்துபோகும்.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சுகாதார கட்டுப்பாடுகள் அவசியம்

முன்பு கொரோனா வந்தபோது ஆவி பிடித்தல், மஞ்சள், விக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தினர். இப்போது வந்திருக்கும் கொரோனாவிற்கும் அவை தேவையா?

அவற்றையெல்லாம் செய்தால் அறிகுறிகளின் தாக்கம் குறைவாக இருக்கும். இதற்கென்று பெரிதளவில் சிகிச்சை தேவையில்லை. ஏனென்றால் இது ஒரு வைரஸ். வைரஸ் உடலுக்குள் செல்லும்போது உடலே ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்து அவற்றை அழித்துவிடும். தலைவலி, காய்ச்சலுக்கு பாரசிட்டமால் போடுவதுபோன்று மூக்கடைப்பு இருக்கும்போது ஆவி பிடிப்பதோ, எதிர்ப்பு சக்திக்காக மஞ்சள் எடுத்துக்கொள்வதோ தவறில்லை.

கொரோனாவின் தாக்கம் யாருக்கெல்லாம் அதிகமாக இருக்கும்?

சிறுவர்கள், இளம்வயதினர் மற்றும் நடுத்தர வயதினருக்கு போதுமான நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறது. வயதானவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நீரிழிவு நோயாளிகள் மற்றும் கேன்சர் சிகிச்சை எடுத்தவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தோர் போன்றவர்களுக்கு கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.

கொரோனாவை தடுக்க மாஸ்க் அணிய சொல்கிறார்கள். ஆனால் மாஸ்க் அணியும்போது நம்முடைய மூச்சுக்காற்றே அடைப்பதுபோன்று இருப்பதாக சொல்கிறார்களே. இது எதனால்?

மாஸ்க் அணிந்தாலும் உடலுக்கு தேவையான காற்று உள்ளே செல்லும். அதனால் மாஸ்க்கை தவிர்க்க வேண்டாம். அதேபோல் சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துகொள்ளுதல், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு செல்லாமல் இருத்தல் போன்றவை நோய் பரவலை தடுக்கும்.


சுவாச மண்டலம் ஆரோக்கியம்பெற காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகள் உட்கொள்ள வேண்டும்

ஆரோக்கியமான சுவாச மண்டலம் பெற என்ன செய்யவேண்டும்?

உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். சிறுவயதிலிருந்தே நன்றாக உடற்பயிற்சி மேற்கொண்டாலே போதும். ஜங்க் உணவுகளை தவிர்த்து, காய்கறிகள், பழங்கள், முட்டை போன்றவற்றை சாப்பிட்டாலே நுரையீரலின் செயல்பாடு நன்றாக இருக்கும்.

உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்?

உணவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எந்த நோய் வந்தாலும் எதிர்ப்புசக்தி அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஊட்டசத்துமிக்க நல்ல ஆகாரங்களை சாப்பிடலாம். குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்தாலே போதும்.

ஏசி அறையிலேயே உட்கார்ந்து வேலைசெய்பவர்களுக்கு உருமாறிய கொரோனா வரும் வாய்ப்புகள் இருக்கிறதா?

ஒரே அறையில் 100 பேர் அமர்ந்து வேலைசெய்தால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும். எனவேதான் மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும். ஏசியின் ஃபில்டர் நன்றாக சுத்தமாக்கப்பட்டிருந்தால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் அதிலிருக்கும் தூசுகளால் கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது.

Updated On 3 Jun 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story