இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அக்குபஞ்சர் என்பது மருந்து, மாத்திரைகள் இன்றி, அறுவை சிகிச்சைகள் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாக உள்ளது. அப்படிப்பட்ட அக்குபஞ்சர் முறையில் எந்தெந்த உடல் பிரச்சனைகளுக்கு எல்லாம் சிகிச்சை அளிக்கப்படுகிறது? நோயின் தாக்கத்தில் எவ்வளவு சதவீதம் இந்த சிகிச்சையில் குணப்படுத்த முடியும்? முகுதுத்தண்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சரில் தீர்வு உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் அக்குபஞ்சர் நிபுணர் லூதர் சேத்.


செர்விக்கல் வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அக்குபஞ்சரில் சிகிச்சை உள்ளது - லூதர் சேத்

முதுகுத்தண்டு பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சர் முறையில் முறையான தீர்வு உள்ளதா?

முதுகுத்தண்டுதான் நமது முழு உடலையும் தாங்குகிறது. கடந்த காலங்களிலும் முதுகுத்தண்டு பிரச்சனைகள் இருந்தன. ஆனால் சமீப காலமாக இந்த பிரச்னைகள் அதிகரித்துள்ளன. செர்விக்கல் பெயினால் (கழுத்து வலி) பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். முதுகெலும்பின் இடுப்புப் பகுதியில் உள்ள எல்4 மற்றும் எல்5 என்ற இரண்டு எலும்புகள் இடம்மாறும்போது அல்லது ப்ரோலாப்ஸ் (ஒரு உறுப்பு அதன் இடத்திலிருந்து விலகுவது அல்லது நழுவுவது) ஆகும்போது ஏற்படும் நரம்பு சுருக்கத்தால் பலரும் படுக்க, நிற்க, உட்கார முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுமாதிரியான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களை மருந்து இல்லாமல், அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக குணப்படுத்தியுள்ளோம்.

முதுகுத்தண்டு காயங்களின் அசௌகரியங்களில் இருந்து வெளிவர அக்குபஞ்சர் முறையில் தீர்வு உள்ளதா?

விபத்தில் சிக்கி முதுகுத்தண்டில் காயமடைந்தவர்கள் பொதுவாக அக்குபஞ்சர் சிகிச்சைக்கு வருவதில்லை. விபத்தால் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருந்தால், பல்வேறு பிரச்சனைகள் இருக்கும். அதனால் அக்குபஞ்சர் முறையை அவர்கள் தேர்வு செய்வதில்லை. ஒருவேளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, மீண்டும் வலிகள் இருந்தால் அக்குபஞ்சர் முறைக்கு வரலாம். ஆனால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை (ஆபரேஷன்) ஏதேனும் மேற்கொண்டிருந்தால், அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிப்பது கடினம். அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்தால் சிகிச்சை அளிக்கலாம்.


சயாட்டிக் வலிக்கும் அக்குபஞ்சரில் தீர்வு காண முடியும் - லூதர் சேத்

முதுகுத்தண்டு பிரச்சனைகள் வருவதற்கான காரணங்கள் என்ன?

விபத்தினால் முதுகுத்தண்டு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. விபத்தை தவிர்த்து பார்தோமானால் முதுகுத்தண்டு பிரச்சனை வர இரண்டு, மூன்று காரணங்கள் உள்ளன. மஸ்குலர் அட்ராபியால் (முதுகெலும்பு தசைச் சிதைவு) முதுகுத்தண்டு பிரச்சனைகள் வரலாம். அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வது, சோம்பேறித்தனமாக உடலை இன் ஆக்டிவாக வைத்திருப்பது போன்றவைகளாலும் முதுகுத்தண்டு பிரச்சனைகள் வரலாம். ஆனால் இதனை சரிசெய்யலாம். உடல் சூட்டால் வரும் பிரச்சனைகளையும் சரிசெய்யலாம். அதேநேரம் வெளிவிஷயங்களால், அதாவது விபத்து போன்றவற்றால்வரும் முதுகுத்தண்டு பிரச்சனைகளை அக்குபஞ்சர் முறையில் குணப்படுத்துவது கடினம். இயற்கையாக தோன்றும் பிரச்சனைகளை சரிசெய்யலாம். ஆறு மாதத்தில் பிரச்சனைக்கான காரணத்தை கண்டுபிடித்து முழுமையாக குணப்படுத்திவிடலாம்.

சயாட்டிக் வலிக்கு அக்குபஞ்சர் முறையில் தீர்வு காண முடியுமா?

சயாட்டிக் என்பது முதுகெலும்பின் கீழ் பகுதியில் இருந்து கால்வரை செல்லும் சயாட்டிக் நரம்பில் ஏற்படும் வலி அல்லது எரிச்சல் ஆகும். காலின் பின்பக்கத்தில் உள்ள நரம்புகள் பலவீனம் அடையும்போது நம்மால் நடக்க, ஓட, உட்கார முடியாது. இந்த பிரச்சனை ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. இதற்கு அக்குபஞ்சர் முறையில் தீர்வு காணலாம். ஆரம்பகட்டத்திலேயே இதற்கு தீர்வு காணலாம்.

முதுகுத்தண்டு வீக்கம், நீர்க்கட்டிகளை சரி செய்ய முடியுமா?

இதுபோன்ற கட்டிகள் பலபேருக்கு உருவாக பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதனை சரிசெய்துவிடலாம்.


முதுகுத்தண்டு வளைவு பிரச்சனைகளையும் அக்குபஞ்சரில் சரி செய்யலாம் - லூதர் சேத்

முதுகெலும்பு தேய்மானத்தை அக்குபஞ்சரில் சரிசெய்யலாமா?

முதுகெலும்பு தேய்மானம் என எதுவும் கிடையாது. செரப்ரோபைனல் ப்ளூய்டு (மூளை தண்டுவட திரவம்) என்ற திரவம் மூளையை சுற்றிக்கொண்டு இருக்கும். இத்திரவம் முதுகுப்பகுதியின் எல்லா எலும்புகளிலும் இருக்கும். உடல் சூட்டால் இந்த திரவம் உறிஞ்சப்படும்போது, இந்த எலும்புகள் ஒன்றோடுஒன்று உராய்ந்து கொள்ளும். இதுதான் பிரச்சனை. எலும்பு தேய்மானம் என தனியாக எதுவும் கிடையாது. அதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்துவிடலாம்.

இடுப்பு வலிக்கு அக்குபஞ்சர் முறையில் தீர்வுகள் உள்ளதா? தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதே..

தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு இந்த பிரச்சனைகள் பொதுவாக உள்ளன. ஆனால் எல்லா ஓட்டுநர்களுக்கும் இந்த பிரச்சனை வருவதில்லை. நீண்ட தூரம் ஓட்டுபவர்களுக்கே இந்த பிரச்சனை ஏற்படுகிறது. ஏற்கனவே இடுப்பு வலி இருப்பவர்களுக்கு வாகனம் ஓட்டுவதால் இன்னும் வலி அதிகமாகிறது. இதனை அக்குபஞ்சர் சிகிச்சையில் சரி செய்ய முடியும்.

முதுகுத்தண்டு வளைவிற்கு அக்குபஞ்சர் முறையில் நிரந்த தீர்வு உண்டா?

முதுகுத்தண்டு பிரச்சனை எலும்பு சம்பந்தப்பட்டது. இவ்வளவு பிரச்சனைகளுக்கும் சிறுநீரகம்தான் காரணம். உடல்சூட்டை கட்டுப்படுத்துவது சிறுநீரகம்தான். இது நம் யாருக்கும் தெரிவதில்லை. உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொண்டால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். உட்காருவதால் முதுகுவலி யாருக்கும் வருவதில்லை. உடலின் உள்ளே உள்ள பிரச்னைகள், அவ்வாறு வெளிவரலாம்.

இவற்றையெல்லாம் தடுக்க என்னதான் வழி?

உடலைவிட சிறந்த மருத்துவர் யாருமில்லை. உடல் சொல்வதை கேட்டால் போதும். தூக்கம் வருகிறது, பசிக்கிறது என எல்லாவற்றையும் உடல் நமக்கு சொல்லும். அப்படி உடல் சொல்லும்போது, அதனை உடனே செய்துவிட வேண்டும். அவற்றை தவிர்க்கும்போது நமக்கு வியாதி ஏற்படுகிறது. தாகம் எடுத்தால், தண்ணீர் குடிக்க உடல் நினைவூட்டுகிறது. நாம் குடிக்காவிட்டால் அது சிறுநீரகத்தை பாதிக்கும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது சிறுநீரகத்தை பாதுகாக்க முடியும். சீறுநீரகத்தை சரியாக பார்த்துக் கொண்டால் போதும். இதயம், மூளை, முதுகுத்தண்டு என அனைத்தும் நல்லவிதமாக தானாக செயல்படும். உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நல்லது நெல்லிக்காய். சுரைக்காய் சிறுநீரகத்திற்கு நல்லது. உடலில் உள்ள கெட்ட நீரை சுரைக்காய் வெளியேற்றும். வெள்ளரிக்காய் உடலுக்கு நீர்த்தன்மையை அளிக்கும். நீர் சம்பந்தப்பட்ட உணவுகள் சிறுநீரகத்திற்கு நல்லது. இரவு நேரத்தில் நன்றாக தூங்க வேண்டும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவே நம் உடல் நலத்திற்கு ஆதாரம்.


உடலுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி அவசியம்

எலும்புகளுக்கு என தனி சிகிச்சைகள் உண்டா?

எலும்பு சம்மந்தமாக வரும் பிரச்னைகள் அனைத்தும் சிறுநீரகம் சம்மந்தப்பட்டவையே. எலும்புகளின் பலவீனம்தான் அது. உடலுக்கு சரியான புரோட்டீன் நாம் கொடுக்காவிட்டால், எலும்பிலிருந்து அதனை எடுத்துக்கொள்ளும். இதனால் எலும்பு பலவீனமாகும். ஆரோக்கியம் என்பது எளிதான வழி. நாம் உடலுக்கு தேவையானதை செய்யமாட்டோம், ஆனால் ஆரோக்கியம் மட்டும் வேண்டும் என்போம். அது எப்படி? ஆரோக்கியத்தையும் மருத்துவர் அளிப்பார் என்றால் எப்படி நடக்கும்? அந்த நம்பிக்கையில் இருந்து விடுபட வேண்டும். மருத்துவர் சிகிச்சை அளிப்பார். உடலில் சக்தி இருந்தால், ஆரோக்கியம் திரும்பும். நல்ல உணவுகள், உடற்பயிற்சி, சிந்தனைகள் ஆகியவை ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், கோபம், பொறாமை, கவலை, பயம் போன்றவற்றை கட்டுப்படுத்தினாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.

Updated On 24 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story