கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் உண்டு! இப்போதுதான் சொல்கிறார்கள்!
உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துவருவதுடன், அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ் நிச்சயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என ராயப்பேட்டை அரசு மரத்துவமனையின் மருத்துவர் ஷேக் சுலைமான் மீரான் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அவர் ராணி நேயர்களுக்கு அளித்த நேர்காணலின் தொடர்ச்சியை பார்ப்போம்...
வழக்கமான சளி, காய்ச்சல் போல உருமாறிய கொரோனா வந்துசென்றுவிடும்
ஈஸினோஃபீலியா என்று சொல்கின்றார்களே இது ஆஸ்துமா சம்பந்தப்பட்டதா? அல்லது கொரோனாவுடன் சம்பந்தப்பட்டதா?
ஆஸ்துமா எனபது ஒவ்வாமையினால் வருகின்ற நோயாகும். நம்முள் ஒவ்வாமை இருக்கும்போது இரத்தத்தில் ஈஸினோஃபீல் அதிகமாக இருக்கும். அது ஒவ்வாமை எனப்படுகின்ற அலர்ஜியை தடுக்கும். ஆஸ்துமா இருந்தால்கூட அதனை இந்த ஈஸினோஃபீல் தடுக்கும். ஆனால் ஆஸ்துமா என்ற ஒவ்வாமை நோயானது பல்வேறு காரணங்களினால் வருகின்றது. உணவு, தூசி, புகை போன்றவற்றால் ஏற்படும். ஒவ்வாமையை தூண்டி மூச்சுவிட சிரமத்தை தரும். இதுபோன்ற நபர்களுக்கு கொரோனா தொற்று வரும்போது அவர்களுக்கு அது மேலும் மூச்சுவிட சிரமத்தை கொடுக்கும். ஆனால் தற்போது வந்திருக்கும் உருமாறிய கோரோனோவால் பெரியதாக எந்தவித பாதிப்பும் இல்லை.
மூச்சுக்குழல் அழற்சி மற்றும் நுரையீரல் அழற்சி போன்றவை கொரோனா வரும்போது வருமா?
கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலை தாக்கத்தின்போது சுவாச அமைப்பு முழுவதையும், நாசி முதல் நுரையீரல் வரையில் அது பாதித்தது. ஆனால் மூச்சுக்குழாய் அழற்சி என்பது உடலுக்கு ஒவ்வாத பொருள் மூச்சுக்குழாய்க்குள் செல்லும்போது, மூச்சுக்குழாய் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சுருங்கிவிடுகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். நுரையீரல் பாதிப்பு என்பது நிமோனியா போன்று சளி வெளிவருவது மட்டுமன்றி காய்ச்சல், இருமல், சளி, மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சனைகளையும் தரும். இதனை தொடர்ந்து நிமோனியா காய்ச்சலும் வரலாம். கொரோனா சமயத்தில் இது கோவிட் நிமோனியா என்று இருந்தது. தற்போது இருக்கும் கோவிட் என்றழைக்கப்படும் கொரோனாவால் அந்த அளவிற்கு பாதிப்பில்லை என்றே நாம் கூறலாம்.
3 நாட்களுக்கு மேல் சளி, காய்ச்சல் தீவிரமாக இருந்தால் பரிசோதனை அவசியம்
உருமாறிய கொரோனா நோய்த்தொற்று பரவல் முழுவதுமாக அகன்றுவிடுமா? இப்படியே தங்கிவிடுவமா?
இதனை நாம் ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தின்போது சொன்னதுதான். நாம் எல்லோரும் கொரோனாவோடு வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். நமக்கு எப்படி பொதுவான ஜலதோஷம் வந்து செல்லுமோ, அதேபோன்றுதான் இப்போது கொரோனாவும் வந்து செல்கிறது. இதனை நாம் ஒரு ஜலதோஷத்தை போல்தான் பார்க்க வேண்டும். அதற்குரிய சிகிச்சையை எடுத்தாலே போதுமானது. ஒருவேளை இது 3 நாட்களுக்கு மேலாக இருந்தாலோ அல்லது வீட்டில் வயதானவர்கள் இருந்தாலோ கவனத்துடன் அணுகுவது நல்லது. மேலும் இணை நோய் உள்ளவர்கள், டயாபட்டீஸ் நோயாளிகள், கேன்சர் உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் போன்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும்.
உருமாறிய கோரோனோவால் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?
முதலாவது இந்த உருமாறிய கொரோனா என்பது சற்று லேசான கொரோனாவாகும். உருமாறி வந்திருக்கும் கொரோனா வைரஸ் பலமிழந்துள்ளதால், அது உடனடியாக வந்துவிட்டு சென்றுவிடும் இதனால் பாதிப்பு ஏதும் இல்லை என்றே நாம் கூறலாம்.
கொரோனா தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக அமெரிக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிக்கலாம்?
வைரஸை பொறுத்தவரையில் நோயெதிர்ப்பு சக்தி என்பது நமக்கு முதலில் அந்த நோய் வந்துவிட்டு சென்றிருக்க வேண்டும் அல்லது நாம் நோயெதிர்ப்பு ஊசி மருந்துகளை செலுத்திக் கொண்டிருத்தல் வேண்டும். இயற்கையிலேயே கடவுள் நமக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை கொடுத்திருக்கின்றார். அந்த நோயெதிர்ப்பு சக்தி கோரோனோ முதல் மற்றும் இரண்டாம் அலை தாக்கத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்டதால்தான் நமது உடல் நிலை பாதிக்கப்பட்டது. பொதுவாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம் .
உருமாறிய கொரோனா என்பது மேலும் பரவக்கூடிய நோய் தொற்றுகளில் ஒன்றா?
இது தொற்று நோய்களில் ஒன்றுதான். ஒருவரிடத்திலிருந்து மற்றவரிடத்திற்கு எளிதில் பரவக்கூடியது. இது வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றவருக்கும் வரக்கூடிய ஒன்றாகும். எனவேதான் நாம் வீட்டுக்கு வெளியே சென்று வந்தவுடன் நமது வீட்டிலுள்ள வயதான பெரியவர்களை கவனத்துடன் பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லா காலங்களிலும் வரும் ஜலதோஷத்தைப் போன்றே இதுவும் வந்து சென்றுவிடும்.
கொரோனா தொற்றிலிருந்து வீட்டிலுள்ள வயதானவர்களை கவனத்துடன் பார்த்துக் கொள்ளவேண்டும்
கொரோனா தொற்று எப்போது முழுமையாக மறையும்?
கொரோனா நோய் இந்த உலகைவிட்டு போகாது. இதனோடு நாம் வாழப்பழகிக் கொள்ளவேண்டும். இந்த கொரோனா உருமாறி உருமாறி அதனுடைய வீரியம் குறைந்துவிடும். அது எப்போதாவது நமது நோயெதிர்ப்பு சக்தியை தாக்கும்போது அது நமக்கு வரும். அதிர்ஷ்டவசமாக அது இப்போது லேசான கொரோனாவாக உருமாறி வந்துள்ளது. அதனால் இதற்கு பயப்படவேண்டிய அவசியம் இல்லை.
கொரோனா என்பது சீனாவின் ஒரு உயிரி ஆயுதம் என்று சொல்கின்றார்களே? உண்மையா?
நிச்சயமாக இல்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதே உண்மை. இந்த சார்ஸ் கோவிட் என்பது சீனாவில் வருவதற்கு முன்பே அமெரிக்காவிலும் வந்திருக்கின்றது. இதற்கு முன்பே இரண்டு சர்வதேச பரவல் (Pandemic ) என்பது வந்துள்ளது. இதில் சீனாவை நாம் குறை கூற முடியாது. அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படவுமில்லை. கோவிட் 19 என்பது சீனாவின் ஹூகான் மாநிலத்திலிருந்து வந்ததாக சொன்னாலும் கூட அது அதற்கு முன்பே இருந்துள்ளது என்பது மட்டுமே உண்மை.
மருந்து பொருட்களை விற்பனை செய்யவே இப்படிப்பட்ட நோய்கள் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுவது உண்மையா?
அப்படி பார்த்தால் பல முக்கிய மருந்து கம்பெனிகள் இருப்பதென்னவோ அமெரிக்காவில்தான். ஃபைசர், மோடோனா போன்ற எல்லா கம்பெனிகளுமே அமெரிக்காவை சார்ந்தவைதான். ஆனால் இந்த கூற்றில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.
இரத்த ஓட்டம் தடைபடுதல் போன்ற பக்கவிளைவு கொரோனா தடுப்பூசியில் இருக்கிறது?
கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு, பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றதே?
ஒரு தடுப்பு மருந்து என்றால் அதில் சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இதில் சாதகங்களை அதிகமாக்கி பாதகங்களை குறைத்து கொடுக்க வேண்டும். அமெரிக்காவில் செய்யப்பட்ட நிறைய ஆய்வுத் தகவல்களின்படி கொரோனா தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். அதனை இப்போத சொல்கிறார்கள். அதாவது இரத்தம் உறையும் தன்மை, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகளாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மருந்து என எடுத்துக்கொண்டாலே விளைவு மற்றும் எதிர்விளைவு என்று இருக்கும். இதுதான் அறிவியல். இந்த நோய் தடுப்பு மருந்து போடப்படவில்லையென்றால் ஒருவேளை இன்னும் கூட கொரோனா நோய் தடுக்கப்படாமல் கட்டுப்பாடுகளின்றி போயிருக்கலாம். எனவே எல்லா மருந்துகளுக்கும் பக்கவிளைவுகள் என்பது நிச்சயம் உண்டு. இதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
வேறு என்னென்ன பக்கவிளைவுகள் ?
வேறு பக்கவிளைவுகள் என்று சொன்னால், கை கால் வலி, உடல் சோர்வு மற்றும் உடலில் சக்தி குறைதல் போன்றவை ஏற்படும். மேலும் தனது உடலே தனக்கு எதிராக மாறும் ஆட்டோ இம்யூன் நோய்களால் சீறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படலாம். பயப்படக்கூடியது என்றால் அது இரத்த ஓட்டத்தை தடைசெய்வது ஆகும். மூளைக்கு இரத்தம் செல்வது தடைப்பட்டால் அது பக்கவாதமாகவும், இதயத்திற்கு இரத்தம் செல்வது தடைப்பட்டால் மாரடைப்பாகவும், கால்களுக்கு இரத்தம் செல்வது தடைப்பட்டால் கேங்க்ரீன் என்று சொல்லப்படும் புண்ணாகவும், நுரையீரலுக்கு இரத்தம் செல்வது தடைப்பட்டால் மூச்சுவிடுவதில் சிரமமாகவும் மாறும்.
கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அவசியம்
முந்தைய காலகட்ட கொரோனாவின்போது தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டது போன்று தற்போது இந்த உருமாறிய கொரோனாவிற்கும் தடுப்புஊசிகள் போடவேண்டுமா?
தற்போது இந்த உருமாறிய கொரோனாவிற்கு தடுப்பு ஊசி மருந்துகள் கண்டறியப்படவில்லை என்றாலும்கூட, தடுப்பு ஊசி மருந்துகள் அமெரிக்காவில், வயதானோர், இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டும் பரிந்துரை செய்யப்படுகின்றது. எனவே தற்போது லேசான கொரோனாவின் தாக்கம் மட்டுமே உள்ளது என்பதால் வீரியமிக்க மருந்துகள் தேவைப்படாது.
தற்போது சளி காய்ச்சல் உள்ளவர்கள், தங்களுக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளவர்கள் போன்றோருக்கு ஒரு மருத்துவராக நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
இது உருமாறிய கொரோனாதான். லேசான கொரோனா என்பதால் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. இது வந்துவிட்டு சென்றுவிடும். என்றாலும், எல்லோருமே முகக்கவசம் அணிந்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமான ஒன்று. வயதானவர்கள் கவனத்துடன் இருக்கவும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். கிருமி நாசினியைக் கொண்டு கைகளை நன்றாக கழுவுதல் போன்ற செயல்களால் இந்த உருமாறிய கொரோனா பரவுதலை நாம் தடுக்கலாம்.
