
விமானத்துல தப்பா நடந்துப்பாங்க! கோவப்பட முடியாது! ஏர் ஹோஸ்டஸ் வேலை ஈசி இல்லை!
குஜராத்தில் அண்மையில் நடந்த விமான விபத்தில், அதில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் ஏறுவதற்கு முன் விமானப் பணிப்பெண் ஒருவர் எடுத்திருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. அதில், கேபின் க்ரூ பணியாளர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன், மகிழ்ச்சியாக விமானத்தில் ஏறுகின்றனர். அந்த மகிழ்ச்சி எல்லாம் சில நேரங்களில் வெடித்து சிதறி தீக்கிரையாகியது. இந்த நிலையில், விபத்தில் மரணமடைந்த 2 விமான பணிப்பெண்களின் குடும்ப சூழல் குறித்த தகவல் வெளியாகி மேலும் சோகத்தை இருமடங்காக கூட்டியுள்ளது. அந்த சோகக்கதை என்ன? பார்க்க ஸ்டைலாக, கை நிறைய சம்பளம் கிடைக்கும் விமானப் பணிப்பெண் வேலை நாம் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதானதா? அவர்களுக்கு உண்மையிலேயே எவ்வளவு நெருக்கடி இருக்கிறது? நெருக்கடிகளை தாண்டி தங்கள் பணியை அவர்கள் எவ்வாறு சிறப்பாக செய்கின்றனர்? போன்ற பல்வேறு தகவல்களை அலசி ஆராய்கிறது இந்தப்பதிவு.
பணி நேரத்தில் விமானப் பணிப்பெண்கள் ஃபோன் பயன்படுத்தவேக் கூடாதாம்
உயிரிழந்த விமானப் பணிப்பெண்கள்..
விபத்தில் உயிரிழந்த விமானப் பணிப்பெண்களில் ஒருவர் மணிப்பூரைச் சேர்ந்த லாம்னுந்தெம் சிங்சன் என்ற 26 வயது பெண் ஆவார். லாம்னுந்தெம் சிங்சனக்கு மூன்று சகோதரர்கள். இதில் மூத்த சகோதரர் நீண்ட நாள் நோய் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தந்தை இறந்ததில் இருந்து தாயும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மற்ற இரண்டு சகோதரர்களும் படித்து வருகின்றனர். மணிப்பூர் வன்முறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த குடும்பமே லாம்னுந்தெம் சிங்சனின் வருமானத்தை நம்பிதான் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில்தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்தது. மற்றொரு விமான பணிப்பெண் நந்தோய் சர்மா கோங்பிரைலட்பமின். 21 வயதான இந்த இளம்பெண் தனது பத்தொன்பது வயதில் பணியில் சேர்ந்துள்ளார். அவரும் அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தின் அடித்தளமாக இருந்துள்ளார். இந்த இரு விமானப் பணிப்பெண்களின் இறப்பும் அவர்களின் குடும்பத்தையே புரட்டிப்போட்டுள்ளது.
பணி நேரம் மணிக்கணக்கில் இருந்தாலும் ஃபோன் பேச முடியாது...
கேபின் க்ரூ பணியாளர்கள், வேலை நேரத்தில் அதாவது தாங்கள் விமானத்தில் பயணிக்கும்போது ஃபோன் பேசக்கூடாது என்பது பணி உத்தரவாம். மீறி ஃபோன் பேசினால் நடவடிக்கை பாயுமாம். எனவே வெளிநாட்டு விமானத்தில் பயணித்தாலும், அந்தப் பயணம் 15 மணி நேரங்களுக்கு மேல் நீடித்தாலும், குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்களிடம் அவர்களால் பேச முடியாது. "உதாரணத்திற்கு அபுதாபியில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானத்தில் விமானப் பணிப்பெண்களாக செல்பவர்கள், மூன்று நாட்களுக்கு வீடு திரும்ப முடியாது. பயண நேரம் 16 மணிநேரம் என்றால், அந்த நேரம் முழுவதும் ஃபோன் பேச முடியாது. ஃபோன் ஆஃப்-ல் தான் இருக்கும். இதுபோன்ற சூழல், வீட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை விட்டுவிட்டு வந்தவர்களுக்கு சிரமமாக இருக்கும். நாங்கள் விமானத்திலிருந்து தரையிறங்கி, எங்கள் தங்கும் இடத்திற்கு வந்து, பிறகு ஃபோனை ஆன் செய்து பார்த்தால்தான் வீட்டு நிலவரம் தெரியும். இப்படித்தான் விமான பணிப்பெண்களின் வாழ்க்கை இருக்கும்" என்று விமான பணிப்பெண்கள் தெரிவிக்கின்றனர். ஒரு தாயாக மனைவியாக, மகளாக என எல்லோருக்கும் இருக்கும் அதே குடும்ப பொறுப்புகள் தங்களுக்கும் இருக்கும் என்றும், ஆனால் வேலை என்று வந்துவிட்டால், பணி முடியும்வரை வீட்டை தொடர்புகொள்ளவே முடியாது என்தால், ஒருவித பதற்றம் இருந்துகொண்டே இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
உயரத்துக்கு ஏற்ற உடல் எடை மட்டுமே இருக்க வேண்டும்; எடை கூடக்கூடாது
மாதத்திற்கு பத்து நாட்கள்தான் வேலை... ஆனால் பணி நேரம் அதிகம்!
தொலைதூர பயணிகள் விமானங்களில் பயணிக்கும் விமான பணிப்பெண்களுக்கு மாதத்திற்கு பத்து நாட்கள்தான் வேலை இருக்குமாம். 20 நாட்கள் விடுமுறை இருக்குமாம். ஆனால் அவர்கள், வேலை இருக்கும் 10 நாட்களுக்கும் தொடர்ந்து 15 மணி நேரங்களுக்கு பணி செய்வார்களாம். அதாவது அபுதாபியில் இருந்து அமெரிக்கா செல்ல பதினாறு மணிநேரம் ஆகிறதென்றால், தரையிறங்கிய பின் அங்கு ஒரு நாள் முழுவதும் ஹோட்டலில் இருந்து ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் பதினாறு மணிநேரம் பயணம் மேற்கொள்வார்களாம். அமெரிக்கா பயணம் மேற்கொண்டால் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டுமாம். ஏனெனில் நாடுகளின் நேரங்களுக்கு ஏற்ப, செயற்பாடுகளை உடல் ஏற்றுக் கொள்ளவேண்டும். இருந்தபோதிலும் இது ஒரு நல்ல வேலைதான் என்கின்றனர் விமான பணிப்பெண்கள். இந்த வேலையில், நல்ல சம்பளம், நிறைய சலுகைகள் உண்டாம். குடும்பத்தினருக்கு இலவச டிக்கெட்டுகள், இனஸ்சூரன்ஸ், டிக்கெட் தள்ளுபடி என நிறைய சலுகைகள் கிடைக்குமாம். சர்வதேச ஏர்லைன்ஸ் ஒன்றில், தனுக்கு ஆரம்ப சம்பளமே ஒரு லட்சத்து என்பதாயிரம் என்றும், எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நான்கு லட்சத்து ஐம்பது ஆயிரம் சம்பளம் வாங்கியதாகவும் ஒரு ஏர் ஹோஸ்டஸ் தெரிவித்துள்ளார்.
விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அதிகம்...
விமான பணிப்பெண்களுக்கு கொடுக்கப்படும் ஆடைகளுக்கு ஏற்ப அவர்களது உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உயரத்துக்கேற்ப உடல் எடை இருக்க வேண்டும். குறிப்பிட்ட உடல் எடையை தாண்டினால், வார்னிங் கொடுப்பார்கள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு உடல் பரிசோதனை இருக்கும். அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றால்தான் வேலையை தொடர முடியும். இல்லையெனில் மூன்று மாத ட்ரெய்னிங் ப்ரோகிராமிற்கு மாற்றிவிடுவார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு தேர்வு இருக்கும். எல்லோரும் அவர்களை பார்த்து, அழகாக இருக்காங்க, ஹீல்ஸ் போட்ருகாங்க, எவ்வளவு ஈஸி என நினைப்பார்கள். ஆனால் உள்ளே எவ்வளவு வேலை செய்கிறார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும்.
பார்பி டால் வேலை போன்று இருந்தாலும் விமானப் பணிப்பெண்கள் வேலையில் சவால்கள் அதிகம்
திடீரென பயணத்தின் போது யாருக்காவது நெஞ்சு வலி ஏற்பட்டால், அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் மருத்துவர்கள் இல்லை. ஆனால் பார்த்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதுமே ஒரு பதற்றம் இருக்கும். அவர்கள் பயந்தால், விமானத்தில் இருக்கும் அத்தனை பயணிகளும் பயப்படுவார்கள்.
தவறாக பேசுபவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு ட்ரெய்னிங்
எல்லாத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கும். விமானத்தில் இருக்கும் முன்னூறு பேரில் பத்து பேராவது தங்களிடம் வந்து பேசுவார்கள் என்று பணிப்பெண்கள் கூறுகின்றனர். எங்கிருந்து வருகிறீர்கள், காஃபி குடிக்க போலாமா என பேசுவார்களாம். ஃபோன் நம்பர் கேட்பார்களாம். உடலை தொடுவது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற செயல்களையும் சில பயணிகள் செய்வார்களாம். உடனடியாக அவர்களிடம் விமான பணிப்பெண்கள் கடுமையாக நடந்துக்கொள்ள முடியாது. அவ்வாறு பேசுபவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு ட்ரெய்னிங் கொடுக்கப்படும். வேலைக்கு ஒரு மாதத்திற்கு முன் அதற்கான பயிற்சி வழங்கப்படும். தவறாக நடந்து கொள்பவர்களிடம் எப்படி பேசவேண்டும்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என கூறுவார்களாம். எனவே அதுபோன்ற பிரச்சனைகளை ப்ரபஷனலாக கையாளுவோம் என ஏர் ஹோஸ்டஸ் தெரிவிக்கின்றனர்.
தனது தனிப்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள ஏர் ஹோஸ்டஸ் ஒருவர், " இதுமாதிரியான நிகழ்வு எனக்கும் நடந்துள்ளது. ஒருமுறை என்னுடைய சக ஊழியருக்கும், பயணருக்கும் சண்டை. நான் மேனேஜராக இருப்பதால் என்னை அழைத்துப் பேசினார்கள். பேக்கை மேலே வைக்க முடியாது என நான் கூறினேன். அதற்கு என்னை கொன்றுவிடுவேன், நான் உன்னை பாலியல் வன்கொடுமை செய்திடுவேன் என ஒருவர் மிரட்டினார். இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது. நாங்கள் உடனே போலீஸுக்கு போன் பண்ணி சொல்லிடுவோம்.
நிறைய விஷயங்களுக்காக பயணிகள் விமானப் பணிப்பெண்களிடம் சண்டையிடுவார்களாம்
ஜன்னல் சீட்டுக்கு எல்லாம் சண்டை போடுவார்கள். 150 இடங்களுக்கு மேல் சென்றுள்ளேன். அந்தந்த நாடுகளுடைய கலாச்சாரங்கள், அவர்களுடைய உணவு வகைகள் என அனைத்தையும் பார்த்துள்ளேன். பணிப்பெண்கள் அனைவரும் ஒரு ஒரு நாட்டை சேர்ந்தவர்களாக இருப்போம். நாட்டின் பெயரை கேட்கும்போது, அங்கு போகும்போதுதான் இப்படி ஒரு நாடு இருக்கிறதா என தெரியும். பயணங்கள் மேற்கொள்ள மேற்கொள்ள நிறைய கற்றுக்கொண்டேன். இயல்பாகவே நாம் அனைவரும் நினைப்பது வெளிநாட்டவர்கள் என்றால் திறந்த மனப்பான்மை கொண்டவர்கள் என நினைக்கிறோம். ஆனால் அவர்களிலும் பலர் இந்தியாவை போலவே சாஸ்திரம், சம்பிரதாயம் என்றுதான் இருப்பார்கள்.
விமான நிலையத்தில் நாங்கள் விமானம் ஏறுவதுற்கு செல்லும்போது, பணிப் பெண்களான எங்களைத்தான் அனைவரும் பார்ப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் கெத்தாக நடந்து செல்வோம். ஆனால் எங்களுக்குள்ளும் தனிப்பட்ட பிரச்சனைகள் நிறைய இருக்கும். கடன் பிரச்சனை, காதலரோடு, கணவரோடு, குடும்பத்தில் என நிறைய பிரச்சனைகள் இருக்கும். இதையெல்லாம் விமானத்தில் நாங்கள் பேசிக்கொள்வோம். வேலையை முடித்துவிட்டு நிறைய பேர் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருப்பார்கள். பார்ப்பதற்கு மட்டும்தான் ஓஹோ, ஆஹா என எங்கள் வாழ்க்கை தெரியும். ஆனால் நாங்களும் சராசரி மனிதர்களின் வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறோம். விமான பணிப்பெண் சீருடையை கழற்றினால் நாங்களும் வீட்டிற்கு சென்று சமைப்பது, வீட்டு வேலை என சராசரி வாழ்க்கையே வாழ்கிறோம். அந்த சூட்கேட்ஸ், ஹீல்ஸ் என எங்களை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் எங்களுடைய வேலை, பார்பி டால் வேலை என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அதிலும் நிறைய கவலைகள் உள்ளது எங்களுக்கு மட்டுமே தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.
