இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய விசேஷ நாட்களில் வைகாசி விசாகமும் ஒன்று. வைகாசி மாதத்தில்வரும் விசாக நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று, பல பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகளை ஏந்தி, கந்தனின் அருளைப் பெற சுப்பிரமணியர் கோயில்களுக்கு பாத யாத்திரை மேற்கொள்கின்றனர். அறுபடை வீடுகள் மட்டுமின்றி, பிற முருகன் ஆலயங்களுக்கும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுவது உண்டு. அவ்வளவு சிறப்பவாய்ந்த வைகாசி விசாகம் குறித்து ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த் பகிர்ந்துள்ள தகவல்கள் உங்களுக்காக...


வைகாசி மாதத்தில்வரும் விசாக நட்சத்திரத்தில் வைகாசி விசாகம் கொண்டாடப்படும்

தகப்பன் சுவாமியான முருகப்பெருமானை வழிபட பல்வேறு நாட்கள் உள்ளபோது, வைகாசி விசாகம் ஏன் மிக மிக சிறப்பானதாக பார்க்கப்படுகிறது?

ஆம், வருகிற ஜூன் 9-ம் தேதி வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று சந்திரன் ஆனவர் துலாம் ராசியிலிருந்து விருச்சகத்திற்கு செல்லவிருக்கிறார். தற்போது உள்ள சூழலில், குருவும் புதனும் மிதுனத்திலே கூடியிருக்கிறார்கள். எப்போதுமே குரு புதன் கூடியிருந்து அதே சூழலிலே விசாக நட்சத்திரத்தை ஐந்தாம் பார்வையாக கண்ணுற்றுவிட்டால், அது ஒரு பெரிய நன்மையை தரும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோன்ற நன்னாளிலே மனதார முருகப்பெருமானை வழிபட்டு முருகா, முத்துக்குமாரா, வடிவேலா, சண்முகா, கந்தா, குகா, கடம்பா, கார்த்திகேயா, சண்முகத்துவாழ் அரசே, என் அப்பனே என்று மனதார வழிபட்டுவிட்டால் எப்பெரும் துயரே ஆயினும் அது பொடிபடும் என்பது ஆன்றோர் வாக்கு.

முருகப்பெருமானுக்கு காவடி, பால் குடம் எல்லாம் எடுக்கிறார்களே? அவற்றின் சிறப்பு என்ன?

தற்போதுள்ள கால சூழலிலே கேது கிரகமானது சிம்மத்திலும், கும்பத்திலே ராகுவும் வீற்றிருக்கிறார்கள். கும்பம் என்று சொன்னால் பானையை குறிக்கும். அதேபோல் சந்திரன் என்பது பாலை குறிக்கும். துலாம் ராசியானது இருதோளில் சுமக்கக்கூடிய காவடியை குறிக்கும். எனவே வைகாசி விசாகத்திலே பால் குடம் எடுப்பது, காவடி தூக்குவது எல்லாமே ஏதோ ஒரு வகையிலே முருகப்பெருமானை போற்றக்கூடியதாக அமைவதுடன், பெரிய பரிகாரமாகவும் திகழ்வதை நாம் நம் அனுபவத்திலே உணரலாம்.


பால்குடம் எடுத்தும் காவடி தூக்கியும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

பொதுவாக ராசிக்கு எட்டாவது இடத்திலே சந்திரன் செல்வது சந்திராஷ்டமம் என்று சொல்லப்படுகிறது. இந்த சந்திராஷ்டமத்திற்கு பல்வேறு பரிகாரங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் மிகச்சிறந்த பரிகாரம் எதுவென்று தெரியுமா? முருகனை வழிபடுவதுதான். கும்பம் என்று சொல்லக்கூடிய பானைக்கு நேர் எதிர் இடமான கடகத்திலே பால் என்று சொல்லக்கூடியது சந்திரனை குறிக்கும். பால்குடம் ஏந்தி அருகில் உள்ள முருகன் ஆலயத்துக்கு சென்று, மனதார அவனை வேண்டி பால் அபிஷேகம் செய்யச்செய்ய உங்கள் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், கண்டக தோஷம் உள்ளிட்ட எப்பெரும் தோஷமும் சந்தோஷமாக மாறும். 18 புராணங்களில் மிகப்பெரிய புராணம் என்று சொல்லக்கூடிய ஸ்கந்த புராணம், அரியதொரு நன்மைகளை முழுமையாக அருளும். அதனால்தான் கந்தப்பெருமான் நமது சொந்தப்பெருமான் என்று சொல்வார்கள். மேலும் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் கிடையாது. எனவே எப்பொழுது நீங்கள் முருகா என்று மனதார வழிபடுகிறீர்களோ அன்றுமுதலே உங்கள் வாழ்க்கையிலே பெரும் நன்மைகள் சேரத்துவங்கும்.

வைகாசி விசாக விரத வழிபாட்டு முறையை பற்றி சொல்லுங்கள்? விரதம் இருக்க முடியாவதவர்கள் என்ன செய்யலாம்?

ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது கடன் வம்பு வழக்கு நோய்களை குறிக்கும். ஆறாம் இடம் வயிற்றையும் குறிக்கும். ஒரு பழமொழி உண்டு. "லங்கணம் பரம ஔஷதம்" என்பார்கள். எப்பொழுதெல்லாம் விரதம் இருக்கிறோமோ அந்த விரதத்தின் பயனாக ஆரோக்கியம், ஆயுள், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நமது ஆன்றோர் வாக்கு.


சிவாயநம சிவாயநம என்று நமசிவாய மந்திரத்தை உச்சரித்தால் சங்கடங்களை தீர்த்துவிடுவான் முருகன்

அந்த வகையில் முருகப்பெருமான் அவதரித்த நாளிலே விரதம் இருப்பது ஆரோக்கியம், ஆயுள், ஐஸ்வர்யத்துடன் ஆகச்சிறந்த பலன்களை தந்துவிடும். எனினும் விரதம் இருந்து அன்றைய தினம் கந்தனை வழிபட முடியாவிட்டாலும், முருகா என்று மனதார ஒருமுறை சொன்னாலும்போதும், மனமுருகி நமக்கு அருள்பாலித்துவிடுவான். மேலும் வைகாசி விசாகத்தன்று அறிந்தோ அறியாமலோ சிவாயநம சிவாயநம என்று நமசிவாய மந்திரத்தை நாவிலே ஏற்றி இறைவனின் கரத்தை பற்றிக்கொண்டால், சங்கரன் நம் சங்கடங்களை தீர்த்துவிடுவான். முக்தி மோட்சம் போன்றவையும் மனிதனுக்கு கிடைத்துவிடும். அதேபோன்று வைகாசி விசாகத்தன்று நமசிவாய மந்திரத்தை ஜெபித்துவந்தால், கட்டாயம் பொருளாதாரத்திலே பெரும் மேன்மைகள் கிடைக்கும்.

வைகாசி விசாகம் அன்று கோயிலுக்கு சென்று முருகனை வழிபட முடியாதவர்கள், வீட்டிலேயே வழிபடுவது எப்படி?

கோயிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் வீட்டிலேயே ஸ்கந்தனை மனதார வழிபடலாம். தந்தைக்கு உபதேசம் செய்து குருவாக உயர்ந்து இரண்டும் கலந்த திருஉருவாக விளங்கக்கூடிய ஆறுமுகன், நமக்கு எப்போதும் ஆறுதலை தருவான். பன்னிருக்கரங்களால் நம்மைக்காத்து கரைதேற்றிவிடுவான். அப்படிப்பட்ட தூயவன் மயிலோனை வீட்டிலேயே மனதிலே நினைத்து ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய என்று குரு குகனை 108 முறை அழைக்கலாம்.


முருகனை மனதிலே நினைத்து ஓம் சரவணபவாய என்று மனமுருகி வணங்கலாம்

சொல்ல சொல்ல இனிக்குதய்யா முருகா என்ற பாடலுக்கு ஏற்ப, முருகன் என்பவன் நம்மை தடுத்தாட்கொள்பவன். அவனின் கந்த புராணத்தை படிக்கும்போது நமக்கு கிடைக்கும் செய்தி என்ன தெரியுமா? தாரகாசூரன், சூரபத்மன், சிங்கமுகன் போன்றோர் தன்னை எதிர்த்தபோதும் சூரபத்மனை வதைத்து தன் வாகனம் ஆக்கிக்கொண்டார். சேவற்கொடி ஆக்கிக்கொண்டார். சிங்கமுகனையோ அன்னை பராசக்திக்கு வாகனமாக்கினார். அதேபோல தாரகாசூரனை ஐய்யனாருக்கு வாகனம் ஆக்கினார். எந்த நிலையிலும் முருகன் தன்னை எதிர்த்தவர்களுக்குக்கூட தீங்கு இழைத்தது கிடையாது. ஏதோ ஒரு வகையில் அவர்களை காப்பாற்றி, கரைத்தேற்றி வாழ்க்கையிலே வளம் பெற செய்திருக்கிறார். நலம்பெற செய்திருக்கிறார். அதனால்தான் அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற மகான்களை நினைக்கும்போதே, அவர்களின் பக்தி நிலையினாலே மனம் நமக்கு களிப்புற்று முருகா முத்துகுமரா என்று அழைக்கத்தொடங்கிவிடுகின்றோம். முருகனை வணங்கும்போது அடியார்களையும் போற்றி வணங்க வேண்டும். எனவே வைகாசி விசாகத்தன்று கோயிலிலோ, வீட்டிலோ அல்லது மனதிலோ முருகனை வழிபடும்போது, அவனது அடியார்களையும் வழிபட வேண்டும்.

வைகாசி விசாகத்தன்று என்ன மந்திரத்தை மனதில் சொல்லலாம் அல்லது கேட்கலாம்?

முருகனை போற்றி எழுதப்பட்ட கந்தசஷ்டி கவசத்தை உங்கள் உள்ளத்திலோ இல்லத்திலோ பாடலாம், அல்லது அதனை ஒலிக்கவிட்டு காதால் கேட்கலாம். இதைத்தாண்டி வைகாசி விசாகத்தன்று முக்கியமாக சொல்ல வேண்டிய மந்திரத்தை பார்க்கலாம். "ஓம் முருகா.. ஓம் முருகா.. ஓம் முருகா.. நமஸ்தே நமஸ்தே மகாசக்திபானே... நமஸ்தே நமஸ்தே லசத்வஜ்ரபானே... நமஸ்தே நமஸ்தே கடிங்ஞாஸ்தபானே... நமஸ்தே நமஸ்தே சூடாவீஷ்டபானே.. ஓம் முருகா.. ஓம் முருகா... ஓம் முருகா..." என்ற மந்திரத்தை வாயை திறந்து சப்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லி முருகனை வணங்கலாம்.


வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு ஏதாவது இனிப்பு படைத்து வழிபடலாம்

வைகாசி விசாகத்தன்று என்னவெல்லாம் செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக்கூடாது?

வைகாசி விசாகத்தன்று விரதமிருந்து முருகனின் திருவுருவத்தை தரிசிக்கலாம். வீடுகளில் அல்லது கோயில்களில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யலாம். கந்த சஷ்டி கவசம், சுப்ரமணிய புஜங்கம், சண்முக கவசம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். முருகனை நினைத்து மனமுருக பிரார்த்திக்கலாம். முருகனுக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடலாம்.

அதேபோன்று வைகாசி விசாகம் என்பது ஒரு முக்கிய திருவிழா என்பதால், அன்றாட முக்கிய பணிகளை அன்றைய தினம் செய்யாமல் இருக்கக்கூடாது. பழைய உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. விரதத்தின் போது கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பாவ செயல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

Updated On 3 Jun 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story