இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சாதிக்க குடும்ப வறுமை ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் உலக கேரம் சாம்பியனான காசிமா. சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த இவருடைய அப்பா ஒரு ஆட்டோ ஓட்டுநர். குடும்ப கஷ்டத்தை பாராமல் தொடர் பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் ஜெயித்த காசிமா கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் சாம்பியன்ஷிப் வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். இந்த இளம்வயதில் இவ்வளவு பெரிய சாதனை படைக்க எப்படியெல்லாம் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டார்? கேரம் விளையாட்டிற்காக என்னவெல்லாம் தியாகம் செய்தார்? திறமையை வளர்க்க என்னவெல்லாம் செய்யவேண்டும்? என்பன குறித்து நம்முடன் உரையாடுகிறார்.


கேரம் பயிற்சியில் காசிமா

கேரம் விளையாட்டின்மீது எப்படி ஆர்வம் வந்தது?

என் அண்ணன் ஜூனியர் தடகள சாம்பியன். அவரைப் பார்த்துதான் நான் கேரம் விளையாடத் தொடங்கினேன். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் அவர் ஜெயித்துவிட்டு வரும்போது நிறையப்பேர் பாராட்டி பரிசு கொடுப்பார்கள். அதேபோல் எனக்கும் வேண்டுமென நினைத்தேன். அதனால் என் அப்பாவிடம் நானும் கேரம் விளையாட வேண்டும் என்று கேட்டேன். நான் ஆசைக்காக கேட்கிறேன் என நினைத்து அப்பா என்னை கிளாஸ் சேர்த்துவிட்டார். மேட்ச் போகும்போதும் கிளப்பில் ஒவ்வொருவரும் விளையாடும்போதும் நன்றாக உற்று கவனிப்பேன். நான் நன்றாக விளையாடுவதை கவனித்த ஒருசிலர் என் அப்பாவிடம் வந்து, ‘இவளுக்கும் நன்றாக பயிற்சி கொடுத்தால் கண்டிப்பாக ஜெயிப்பாள்’ என்று கூறினர். அதைக் கேட்டு என் அப்பாவும் என்னை போட்டிகளுக்கு அனுப்பினார். முதன்முதலில் பங்கேற்ற மாவட்ட போட்டியிலேயே ஜெயித்தேன். அடுத்து மாநில போட்டியில் ஜெயித்து, தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்றேன். அதிலும் ரன்னர் அப் பெற்றேன். இதைப்பார்த்த என் அப்பா பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பினார். அதனையடுத்து 2 முறை தொடர்ந்து தேசிய அளவில் வெற்றிபெற்றேன். அதன்பிறகு ஜூனியர், சப் ஜூனியர் போட்டிகளில் பங்கேற்று வென்றேன். என் அண்ணனை உலக சாம்பியனாக்க வேண்டும் என்பதுதான் அப்பாவிற்கு ஆசை. ஆனால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக அண்ணனால் கேரமை தொடர முடியவில்லை. அந்த நேரத்தில்தான் நான் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்று கூறினேன். அதேபோல் உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றேன்.

தினமும் எத்தனை மணிநேரம் பயிற்சி எடுப்பீர்கள்? அதற்காக என்னவெல்லாம் தியாகம் செய்கிறீர்கள்?

நான் பத்தாம் வகுப்புவரை ஒரு அரசுப்பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது பள்ளியில் எனக்கு நிறைய சப்போர்ட் இருந்தது. நிறைய நாட்கள் நான் பள்ளிக்கே போகமாட்டேன். நிறைய நாட்கள் மாவட்ட, தேசிய அளவிலான போட்டிகளுக்கு சென்றுவிடுவேன். அதேபோல் 11, 12ஆம் வகுப்புகள் படித்த மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியர்கள் பெரிதும் உதவினார்கள். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகூட எழுதவில்லை. அதேபோல் 12ஆம் வகுப்பிலும் நிறைய நாட்கள் போட்டிகளுக்கு சென்றுவிட்டேன். ஒருநாளைக்கு 8 மணிநேரம் கேரம் பயிற்சி எடுப்பேன்.

முதன்முதலாக உலக சாம்பியன் போட்டிக்காக வெளிநாட்டுக்குச் சென்ற அனுபவம் எப்படி இருந்தது?

சென்னையில் மட்டுமே சுற்றிக்கொண்டிருந்த நான் வெளிநாட்டுக்கு போவேன் என்று நினைக்கவே இல்லை. போட்டிகளுக்காக வேறு மாநிலங்களுக்குத்தான் சென்றிருக்கிறேன். முதன்முதலாக அமெரிக்கா போகிறேன் என்றதும், அதுவரை டிவியில் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க விரும்பும் காசிமா...

உலகப்போட்டியில் ஜெயித்த தருணம் எப்படி இருந்தது?

இந்தியாவுக்காக வேறு நாட்டுக்குச் சென்று போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நிறையப்பேர் என்னை பாராட்டினார்கள். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் என்னை வாழ்த்தினார்கள். முதலமைச்சர் ‘தங்க மகளே’ என்று வாழ்த்தினார். அதுதான் மிகப்பெரிய கிஃப்ட்.

முதலமைச்சரிடம் விடுக்கவேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருக்கிறதா?

துணை முதலமைச்சர் ஏற்கனவே நிறைய உதவிகளை செய்திருக்கிறார். எனக்கு ரூ. 1 கோடி பரிசும் அறிவித்தார். அதற்காக நன்றி சொல்கிறேன். முதமைச்சர் என்னை வாழ்த்தியிருக்கிறார். அவரை நேரில் சந்திக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசை. என்னுடைய அண்ணாவிற்கு ஒரு அரசு வேலை கிடைத்தால் எங்களுடைய குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். எனக்கு கிடைத்த தொகையிலிருந்து அப்பாவின் கடனையெல்லாம் அடைத்து அவருக்கு ஒரு வீடும் வாங்கியிருக்கிறேன். அரசு வேலை கிடைத்தால் அது வாழ்நாள் ஆதாரமாக இருக்கும்.

உங்களைப் போன்று விளையாட்டு வீரர் ஆக விரும்புகிறவர்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

முதலில் கடின உழைப்பு வேண்டும். அடுத்து நம்மாலும் ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கை வேண்டும். பெற்றோரின் ஆதரவும் உதவியும் வேண்டும். நிறையப்பேர் பெற்றோரின் ஆதரவு இல்லாததாலேயே சாதிக்கமுடியாமல் இருக்கிறார்கள். இருந்தாலும் இப்போது கபடி, செஸ் போன்ற போட்டிகளில் நிறையப்பேர் கலந்துகொள்கிறார்கள். முதலில் பெற்றோர் அனுமதி கொடுத்தால்தான் வெளியே போகமுடியும்.

உங்களுடைய பெற்றோர் எப்படி உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்?

பெற்றோரின் ஆதரவு இருந்ததால்தான் உலக சாம்பியன்வரை போகமுடிந்தது. காலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து பயிற்சி செய்வோம். பள்ளிக்கு போகாமல், சாப்பிடாமல்கூட வீட்டிலேயே உட்கார்ந்து பயிற்சி எடுத்திருக்கிறோம். அதனால்தான் இந்த அளவிற்கு சாதிக்க முடிந்தது.

எதிர்காலத்தில் என்ன மாதிரியான சாதனைபடைக்க வேண்டுமென திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

ராஷ்மி குமாரி என்ற உலக சாம்பியன் இருக்கிறார். அவர் 3 முறை உலக சாதனை புரிந்திருக்கிறார். அந்த ரெக்கார்டை உடைக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.


கேரம் உலக சாம்பியன்ஷிப் வென்ற காசிமாவிற்கு ரூ. 1 கோடி பரிசுத்தொகை அறிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மற்ற நாடுகளிலிருந்து நன்கு பயிற்சிபெற்ற நிறைய போட்டியாளர்கள் கலந்திருப்பார்கள். அவர்களுடன் விளையாடும்போது சந்தித்த சவால்கள் என்னென்ன?

என்னுடைய பயிற்சிதான் எனக்கு கைகொடுத்தது. கேரமை பொருத்தவரை மைண்ட் ஃப்ரியாக இருக்கவேண்டும். கவனம் முழுவதும் விளையாட்டிலேயே இருக்கவேண்டும். ஜெயித்தே ஆகவேண்டும் என்பதைவிட நம்முடைய சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவேண்டும் என்று நினைத்து விளையாண்டாலே போதும். உலக சாம்பியன் விளையாடியபோது குவாட்டர் ஃபைனலில் இருந்துதான் எனக்கு கடினமாக ஆரம்பித்தது. மாலத்தீவு வீரர் ஒருவருடன் விளையாடினேன். அடுத்து செமி ஃபைனலில் அமெரிக்க வீரருடன் போட்டிபோட்டேன். ஃபைனலில் இந்தியாவைச் சேர்ந்தவருடன்தான் விளையாடினேன். அதுதான் மிகவும் கடினமாக இருந்தது.

எத்தனை போட்டியாளர்களை கடந்து ஜெயித்தீர்கள்?

முதலில் லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். அதில் 5 பேருடன் விளையாடி வெற்றிபெற வேண்டும். அதில் வெற்றிபெற்றால்தான் நாக் - அவுட் தொடங்கும். எல்லாப் போட்டிகளிலும் வெற்றிபெறுபவர்களுக்கு இடையே குவாட்டர்ஸ், செமி ஃபைனல் மற்றும் ஃபைனல்ஸ் இருக்கும். இதுபோன்று இப்போதுவரை நிறையப் போட்டியாளர்களை சந்தித்திருக்கிறேன்.

இப்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? அங்கும் பாராட்டுகள் கிடைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

எஸ்.ஐ.டி கல்லூரியில் பி.ஏ கார்ப்பரேட் எகனாமிக்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு உலக சாம்பியன் தங்களுடைய தோழி என்று மகிழ்ச்சியாக சொல்வார்கள். பள்ளியிலிருந்தே நாங்கள் அனைவருமே ஃப்ரண்ட்ஸ்தான்.


கேரம் உலக சாம்பியன்ஷிப் கோப்பையுடன் வீராங்கனை காசிமா

நீங்கள் வசிக்கும் காசிமேடு பகுதியில் உங்களுடைய வெற்றியை எப்படி வரவேற்றார்கள்?

ஒரு திருவிழா போன்று கொண்டாடினார்கள். இந்த பகுதி முழுவதும் பேனர் வைத்து, பூக்கள், மாலைகள் போட்டு, நடனமாடி வரவேற்பு கொடுத்தார்கள். மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த கொண்டாட்டம் வீட்டிற்கு வரும்போது இரவு 12 மணி ஆகிற்று. இங்கு இருப்பவர்கள் எல்லாருமே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

உலகப் போட்டியில் சாம்பியன் வென்றதை எப்படி அறிவிப்பார்கள்?

எல்லாமே பாயிண்ட்ஸ்தான். ஒரு போர்டுக்கு 12 பாயிண்டுகள். அப்படி மொத்தம் 25 பாயிண்டுகள். அதை யார் ஜெயிக்கிறாரோ அவர்தான் வின்னர் என்பது அப்போதே தெரிந்துவிடும்.

உங்களுடைய குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்.

என்னுடைய அப்பா ஒரு ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டித்தான் எங்களை வளர்த்தார். என் அப்பாவிடம் 40 பேர் பயிற்சி எடுக்கிறார்கள். அதில் நான் மட்டுமல்லாமல் 16 தேசிய சாம்பியன், 25 மாநில சாம்பியன் மற்றும் 2 சர்வதேச சாம்பியன் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ஜூனியர் டெஸ்ட் சீரிஸ் வின்னர், இன்னொன்று நான் வேர்ல்டு சீனியர் லெவலில் ஜெயித்திருக்கிறேன். அம்மா ஹவுஸ்ஃபைப். அக்கா 12ஆம் வகுப்பு படித்திருக்கிறார். அண்ணா பி.ஏ படித்துவிட்டு கேரம் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

வரும்காலத்தில் கேரம் பயிற்சி பட்டறை தொடங்க வாய்ப்பிருக்கிறதா?

அப்பா ஏற்கனவே பயிற்சிக்கூடம் வைத்திருக்கிறார். நான் வெற்றிபெற்று துணை முதலமைச்சரை சந்தித்தபோது, நாங்கள் ஏற்கனவே பயிற்சிபெறும் இடத்தில் சொந்தமான பயிற்சிக்கூடம் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவரே வந்து திறந்துவைத்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

Updated On 3 Jun 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story