
2025 ஐபிஎல் முடிந்தும், விடாமல் தொடரும் சோகம் மற்றும் சர்ச்சைகள்!
2025 ஐபிஎல் சீசன் முடிந்துவிட்டபோதிலும் அதுதொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல்முறையாக கோப்பையை வென்றது, அதன் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் திக்குமுக்காட வைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி, முழுவதுமாக ஒரு நாள்கூட நீடிக்கவில்லை. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அந்த சோகத்திலிருந்து வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, இறுதி போட்டியில் பஞ்சாப் அணி தோற்றதற்கு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரே காரணம் என்றும், அவர் கிரிமினல் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்படி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள 18-வது ஐபிஎல் சீசன் கடந்துவந்த பாதையை ஆரம்பம் முதல் இறுதிவரை பார்ப்போம்...
லீக் சுற்றுடன் வெளியேறிய சென்னை - ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்ற மும்பை
ஐபிஎல் லீக் போட்டிகள்
2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. ஐபிஎல் தொடருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மோசமான தோல்விகளை சந்தித்து ஆரம்ப சுற்றிலேயே முதல் ஆளாக வெளியேறியது. தொடர்ந்து 71 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மும்பை, குஜராத், பெங்களூர், பஞ்சாப் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றன.
குவாலிஃபயர் சுற்றுகள்
குவாலிஃபயர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனையடுத்து எலிமினேட்டர் சுற்றில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றிபெற்று குவாலிஃபயர் 2 சுற்றுக்கு தகுதி பெற்றது. போட்டியிலிருந்து குஜராத் வெளியேறியது.
தொடர்ந்து குவாலிஃபயர் 2 சுற்றில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். மேலும் இந்த வெற்றியின் மூலம் ஸ்ரேயாஸ் பல சாதனைகளுக்கு வழிவகுத்தார். ஒரு கேப்டனாக மூன்று அணிகளை ஐபிஎல் தொடரின் இறுதிச்சுற்றுக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் 11 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாபை இறுதிச்சுற்றுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மும்பை அணி இதுவரை 200 ரன்களுக்கு மேல் எடுத்து தோற்றது இல்லை என்ற சாதனை இந்த போட்டியின் மூலம் முறியடிக்கப்பட்டது.
ஸ்ரேயாஸ் ஐயர் - பும்ரா
இறுதிப்போட்டி
யார் 2025 ஐபிஎல் வெற்றியாளர் மகுடம் சூடப்போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, 18 ஆண்டுகளாக கோப்பை கனவை கையில் இறுகப் பற்றியிருந்த இரு அணிகள் போட்டிக்குள் நுழைந்தன. இதனால் இறுதிப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 3-ஆம் தேதி இறுதிப்போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர், பஞ்சாபின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முடிவில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது.
191 என்ற இலக்கை எளிதாக எட்டி, பஞ்சாப் வெற்றிப் பெற்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம் பெங்களூர் 6 ரன்கள் வித்தியாசத்தில், 17 ஆண்டுகளுக்கு பின்னர் 18-ஆம் ஆண்டில் தன் கனவை நிறைவேற்றி கோப்பையை கைப்பற்றியது. இதனால் பெங்களூர் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் மறுபக்கம் பஞ்சாபின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். காரணம், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற வாக்கில் போட்டி சென்று கொண்டிருந்த போது, 2 ரன்களுக்கு ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஆட்டமிழப்பு பஞ்சாப் அணிக்கு பெரும் அடியாக அமைந்தது. அதுபோலவே பலரும் ஸ்ரேயாஸே அணியின் தோல்விக்கு காரணம் என குற்றம் சாட்டினர்.
2025 ஐபிஎல் கோப்பையுடன் கோலி - இறுதி ஆட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறியபோது ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கிரிமினல்!
பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றவர் கேப்டன் ஸ்ரேயாஸ் என்று ரசிகர்கள் புகழ்ந்த நிலையில், இறுதிப்போட்டி தோல்விக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. தோல்வியை தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு குற்றவாளி என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாப் அணியின் தோல்வி குறித்து பேசிய அவர், "இந்த இறுதிப் போட்டியில் ஒரே ஒரு கிரிமினல் இருந்தார். அது ஸ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன். அவர் எப்போதெல்லாம் நன்றாக விளையாடி இருக்கிறாரோ, அப்போதெல்லாம் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இருக்கிறது. யார் ஒருவரும் போட்டியை விட பெரியவர் இல்லை.
அவருக்குப் பிறகு அந்தப் போட்டியில் விளையாடுவதற்கு அணியில் சரியான வீரர்கள் இல்லை. இந்திய அணியில் இரண்டு சிறந்த ஃபினிஷர்கள் மட்டுமே இருந்தார்கள்; ஒருவர் தோனி, மற்றொருவர் யுவராஜ் சிங். இருவரது வெற்றி சதவீதம் 92 ஆகும். யுவராஜ் சிங்கின் வெற்றி சதவீதம் 98 ஆகும். யுவராஜ் சிங் 72 போட்டிகளை தனி ஆளாக வென்று கொடுத்து இருக்கிறார்.
நீங்களே சொல்லுங்கள், இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி இருந்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும். எனக்கு நிறைய கோபம் வருகிறது. நேற்று என்ன நடந்தது என்பதை யாரும் பார்க்க மாட்டார்கள். நாளை என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இன்று என்ன நடக்கிறதோ, அதைப் பற்றி மட்டும்தான் மக்கள் பேசுவார்கள்” என தெரிவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் மீதான இவரது குற்றச்சாட்டு பெரும் கவனம்பெற்ற நிலையில், ரசிகர்கள் பலரும்கூட ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்த விதத்தை விமர்சித்துள்ளனர். இதற்காகவா நாங்கள் எல்லாம் விழுந்துவிழுந்து ஐபிஎல் போட்டியை பார்க்கிறோம் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொண்டாட்டத்தில் பெங்களூர் அணி - கூட்ட நெரிசலில் ரசிகர்கள்
பெங்களூர் சோகம்
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்ற பெங்களூர் ராயல் அணியை கவுரவிக்கும் வகையில் ஜூன் 4-ஆம் தேதி பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் என தகவல் பரவியதால் அங்கு ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தினர் தடுப்பு அரண்களை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சித்ததால் அங்கு காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆனாலும், லட்சக்கணக்கில் திரண்ட ரசிகர்களை காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நெரிசலில் மூச்சுத் திணறி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெற்றிக் கொண்டாட்டம் சோக சம்பவமாக மாறியது, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இவ்வளவு கூட்டம் வரும்போது முறையான நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் அல்லவா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அதற்கு, 50,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கில் மக்கள் வந்துவிட்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ஆர்சிபி அணி மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விராட் கோலி மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
