இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து விமர்சனங்களுக்கு உள்ளாகும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஹர்பஜன்சிங். சுழற்பந்து வீச்சாளரான இவர் அணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும் அவ்வப்போது போட்டிகளில் வர்ணனையாளராக இருக்கிறார். நடப்பு ஐபிஎல்லில் கூட அண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்து கருத்து தெரிவித்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். அந்த பிரச்சினை முடிவதற்குள் இந்திய அணியிலிருக்கும் வீரர்கள் குறித்து அடுத்து ஒரு கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். எம்.எஸ் தோனிக்கு மட்டும்தான் உண்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள். மற்ற வீரர்கள் சமூக வலைதளங்களில் காசு கொடுத்து ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறார்கள் என்று அவர் கூறியதுதான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக, விராட் கோலியின் ரசிகர்கள் இதைக்கேட்டு கொந்தளித்திருக்கின்றனர். இந்நிலையில் தேசதுரோகி தோனி என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.


வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கும் ஹர்பஜன்

ஹர்பஜன் சிங் பேசியது என்ன?

கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகளிலிருந்தே தோனியின் ஓய்வு குறித்து பேசப்பட்டு வருகிறது. இப்போது 18வது சீசன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தோனியால் முன்புபோல விளையாட முடிவதில்லை என்ற விமர்சனங்களும் கிர்க்கெட் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 17ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு இடையே நடக்கவிருந்த ஐபிஎல் போட்டியானது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அப்போது வர்ணனையாளராக இருந்த ஹர்பஜன் சிங் பேசியபோது, “மகேந்திர சிங் தோனிக்கு மட்டும்தான் உண்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மற்றவர்கள் எல்லாரும் சமூக ஊடகங்களில் காசு கொடுத்து ரசிகர்களை பெற்றிருக்கின்றனர். அவர்களை விட்டுவிடுங்கள். அதைப்பற்றி விவாதிக்கத் தொடங்கினால் அது வேறு திசையில் போய்விடும்” என்று கூறியிருந்தார். இந்த கருத்துதான் இப்போது மற்ற வீரர்களின் ரசிகர்களுடைய கோபத்தை தூண்டியிருக்கிறது.


தோனியை புகழ்ந்துபேசி கோலி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான ஹர்பஜன்

கொந்தளிக்கும் கோலி ரசிகர்கள்!

ஹர்பன் சிங் இவ்வாறு கூறியதற்கு மற்ற வீரர்களின் ரசிகர்களைவிட விராட் கோலியின் ரசிகர்கள்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட இந்தியர்களின் பட்டியலில் கோலி முன்னணியில் இருக்கிறார். 272 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவரை பின்தொடர்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த கோலி, சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். அதனால் வருத்தத்தில் இருந்த அவருடைய ரசிகர்கள் நடந்துவருகிற போட்டிகளில் கோலியின் 18ஆம் எண் டிஷர்ட் மற்றும் அவருடைய சாதனைகள் குறித்த டிஷர்ட்களை அணிந்துகொண்டு போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். ஹர்பஜன் சிங் தோனியை மட்டும் இவ்வாறு புகழ்வது சரியல்ல என்று கூறும் கோலி ரசிகர்கள் வேண்டுமென்றே அவரை தாக்கிவருவதாக சொல்லப்படுகிறது. எனினும் ஹர்பஜன் சிங் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளில் சிக்குவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே ஆர்.ஆர் அணியின் ஜோஃப்ராவின் பந்துவீச்சுக்கு கமெண்ட்ரி கொடுத்த இவர், லண்டனில் கருப்பு டாக்ஸியின் மீட்டர் வேகமாக ஓடுவதைப் போன்று இங்கு ஆர்ச்சரின் மீட்டரும் வேகமாக ஓடுகிறது என்று கூறினார். இந்த பேச்சு இனவெறியைத் தூண்டுவதாக கண்டனங்களை தெரிவித்துவந்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் அடுத்து தோனியை இழுத்து சர்ச்சையில் சிக்கவிட்டிருக்கிறார்.


ஐபிஎல் மேட்ச் ஒன்றில் கோலி மற்றும் தோனி - இந்தப்பக்கம் ஹர்பஜன் சிங்

குறிவைக்கப்படும் தோனி!

நடப்பு ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் கேப்டனாக அணியை வழிநடத்திவருகிறார் தோனி. இந்நிலையில் அவருடைய ஆட்டம் சரியில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் ஐபிஎல் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தான் இன்னும் ஐபிஎல்லில் விளையாடிக் கொண்டிருப்பதாகவும், எல்லா விஷயங்களையும் எளிமையாக வைத்துக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டையும் தனியாக பார்ப்பதாகவும், தற்போது தனக்கு 43 வயதாகிறது, ஜூலையில் 44 ஆகிவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார். அடுத்த ஐபிஎல்லுக்கு இன்னும் 10 மாதங்கள் இடைவெளி இருப்பதால் அதுவரை கடின உழைப்பைப் போட்டு அது கைகொடுத்தால் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இதனால் தோனி ஐபிஎல்லில் இருந்து எப்போது ஓய்வுபெறுவார் என்பது குறித்து கணிக்கமுடியவில்லை. நிலைமை இப்படியிருக்கையில் ஹர்பஜன் சிங் பேசியதற்கு பதிலாக சமூக ஊடகங்களில் தோனியை குறிவைத்து தாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். ‘தேசதுரோகி தோனி’ என்ற ஹேஷ்டேக்கை மற்ற வீரர்களின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்வது தோனி ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.


டி20 கிரிக்கெட் வரலாற்றில் 350 சிக்ஸர்கள் அடித்த 4வது வீரர் தோனி

தோனியின் சிக்ஸர் சாதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி, டி20 போட்டிகளில் 350 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்திருக்கிறார். இதன்மூலம் ரோஹித், கோலி வரிசையில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 350 சிக்ஸர்கள் அடித்த 4வது வீரர் என்ற இடத்தை பிடித்திருக்கிறார். நடப்பு ஐபிஎல்லில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு போகும் தகுதியை இழந்த முதல் அணி என்ற பெயரை சிஎஸ்கே எடுத்திருக்கிறது. இதற்கு தோனியின் வழிகாட்டுதல் சரியில்லை என்று சொல்லப்பட்டாலும் அவர் தனது சிறப்பான பங்களிப்பை அணிக்கு கொடுத்துவருகிறார். ஆரம்பத்தில் கடைசி ஓவர்களில் மட்டுமே களத்தில் இறங்கிவந்த தோனி, தொடர் தோல்விகளுக்கு பிறகு, களத்தில் நின்று ஆட ஆரம்பித்தார். இதனால் ஒன்றிரண்டு போட்டிகளில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8ஆம் வரிசையில் பேட்டிங் செய்த தோனி, நிதானமாக நின்று ஆடிய நிலையில், 17 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் ஒரு சிக்ஸர் அடிக்க, அது அவருடைய 350வது சிக்ஸராக அமைந்தது. டி20 போட்டியில் தோனியின் இந்த சாதனை ஒரு மைல்கல்லாக பார்க்கப்பட்டாலும் இந்த ஆண்டு ஐபிஎல்லை பொருத்தவரை தோனி தனது சிறந்த பங்களிப்பை வழங்கவில்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Updated On 27 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story