
நாம் நினைப்பதுபோல் "நடைப்போட்டி" எளிதல்ல! விதிமுறைகள் இதில் அதிகம்! ஜெயிப்பது கடினம்!
தென்கொரியாவில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கம் உள்பட 24 பதக்கங்களுடன் இந்தியா 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்போட்டித்தொடரின்முதல் போட்டியிலேயே இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்தார் தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன். 5 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து 60க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். ஆண்களுக்கான 20 கி.மீ நடைப்போட்டியில் செர்வின் செபாஸ்டியன் மூன்றாவது இடத்தை பிடித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான அமித் 5ஆம் இடத்தை பிடித்திருக்கிறார். ஆசிய தடகளப் போட்டிகள் குறித்தும், நடைப்போட்டி என்று நாம் எளிதாக நினைத்துவிடும் போட்டியின் கடுமையான விதிமுறைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிலேவில் தங்கம் வென்ற ரூபல் - நடைப்போட்டியில் வெண்கலம் வென்ற செர்வின் - தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்ற யர்ராஜி
ஆசிய தடகளப் போட்டிகள் - இந்தியா வென்ற பதக்கங்கள்
26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தென்கொரிய நாட்டின் குமியில் மே 27 முதல் மே 31 வரை 5 நாட்கள் நடைபெற்றன. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பிலும் 61 பேர் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 9 பேர். கடந்த 2 ஆண்டுகளாக தடகளப் போட்டிகளின்மீது அதிகப்படியான இந்திய வீரர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். மொத்தம் 5 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் மொத்தம் 30 பதக்கங்களுக்கான போட்டிகளில் பங்கேற்றனர். அதில் ஆண்களுக்கு 15, பெண்களுக்கு 14 மற்றும் கலப்பு அணிக்கு ஒரு பதக்கம் என்ற கணக்கில் கலந்துகொண்டனர். இவர்களில் அவினாஷ் சாபிள், பிரவீன் சித்ரவேல், அன்னு ராணி போன்ற ஆசிய பதக்கம் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களும் தேசிய சாம்பியன்களும் அடக்கம். 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் நாளிலேயே 20 கி.மீ பந்தய நடைப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் வெண்கலப் பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ரூபல் சவுத்ரி வெள்ளிப் பதக்கம் வென்று தென் கொரியா மேடையில் இடம்பிடித்த முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் கலந்துகொண்ட குல்வீர் சிங் அதிலும் தங்கம் வென்றார். கலப்பு ரிலேவில் இந்தியாவைச் சேர்ந்த ரூபல் சவுத்ரி, விஷால் டிகே, சந்தோஷ் குமார் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று தங்கள் வெற்றியை தக்கவைத்தனர். பெண்களுக்கான 4*400 மீட்டர் ரிலேவில் இந்தியா சார்பில் சுபா மற்றும் ரூபல் ஆகிய இருவரும் பங்கேற்று தங்கம் வென்றனர். பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜோதி யர்ராஜி பங்கேற்று வெற்றிபெற்றார். கடந்த 34 ஆண்டுகளில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றார். இப்படி இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் 20க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கின்றனர்.
நடைப்போட்டியில் வேகமாக செல்லும் செர்வின் செபாஸ்டியன்...
யார் இந்த செர்வின் செபாஸ்டியன்?
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியதுமே முதல் போட்டி ஆடவருக்கான நடைப்போட்டிதான். அதில் 15 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய நேரப்படி காலை 4.30 மணியளவில் தொடங்கிய இப்போட்டியில் 1 மணிநேரம் 21 நிமிடம் 13 நொடிகளில் 20 கி.மீ தூரத்தை கடந்து தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதில் இந்தியாவைச் சேர்ந்த அமித் 5ஆம் இடத்தை பிடித்தார். சீனாவைச் சேர்ந்த வாங்க் முதலிடத்தையும், ஜப்பானைச் சேர்ந்த கெண்டோ 2வது இடத்தையும் பிடித்தனர். வெண்கலம் வென்ற செர்வின் செபாஸ்டியன் ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருக்கிறார். ஏற்கனவே உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் 1:21:23 என்ற மணிக்கணக்கில் நடைப்பயிற்சி மேற்கொண்டு தங்கம் வென்றார். அதேபோல் 2022 மற்றும் 23இல் நடந்த தேசிய அளவிலான போட்டிகளிலும் தங்கம் வென்றிருக்கிறார். 2023ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 4வது இடத்தை பிடித்தார். 2024ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் மற்றும் அர்ஷ்ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். அதில் இருவரும் இலக்கை எட்டியபோதும் போட்டியின் தொடக்கநேரம் திருத்தப்பட்டதால் இருவரும் நீக்கப்பட்டனர். இந்த போட்டியில் 20 கி.மீ பந்தய நடைப்பயிற்சிக்கான தகுதி நேரம் 1:0:10 ஆகும். இதில் ஆரம்ப நேரம் திருத்தப்பட்டதால் செர்வினின் புதிய நேரம் 1:20:30 ஆக மாறியது. அதனையடுத்து இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இந்திய ஓபன் ரேஸ் போட்டியில் 1:20:03 என்ற நேரத்தில் இலக்கை அடைந்து வெண்கலம் வென்றார் செர்வின்.
நடைப்போட்டியில் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலம் வென்ற தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன்
நடைப்போட்டி விதிமுறைகள்
பொதுவாக நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போன்றவற்றின் விளையாட்டு விதிமுறைகள் குறித்து நிறையப்பேருக்கு தெரியும். ஆனால் நடைப்போட்டி குறித்த விதிமுறைகள் குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். நடைப்போட்டி என்பதும் தடகள விளையாட்டு வகைகளில் ஒன்று. ஆசிய தடகள நடைப்போட்டியை பொருத்தவரை சில முக்கிய விதிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் ஒரு கால் எப்போதும் தரையில் இருக்கவேண்டும். அதாவது மற்றொரு பாதத்தை தரையில் பதிக்கும்வரை ஒரு பாதத்தை தரையிலிருந்து சிறிதுகூட உயர்த்தக்கூடாது. அடுத்து ஒவ்வொரு காலையும் நேராக்கி சிறிது நேரம் நேராக வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற நடைப்போட்டிகள் 10 கி.மீ அல்லது 20 கி.மீ தூரத்திற்கு நடத்தப்படும். இந்த போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்படும். போட்டியின்போது நடுவர்கள் முழு பந்தயத்தையும் கவனிப்பர். போட்டியாளர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் எச்சரிக்கை விடுக்கப்படும் அல்லது போட்டியிலிருந்து வெளியேற்றப்படும் முடிவை எடுக்கவேண்டி இருக்கும். இப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை யார் முதலில் நடந்து கடக்கிறாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பை பொருத்தவரை மற்ற போட்டிகளைவிட நடைப்போட்டிகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.
