
தங்க நகைக்கடன் பெற இனி என்ன செய்யலாம்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
தங்க நகைகளை வாங்குவதே அவசர தேவைக்கு அடகு வைக்கத்தான் என்பது இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களின் வாழ்க்கை முறையாக உள்ளது. நடுத்தர குடும்பங்களின் கையில் காசு இல்லாதபோது, உடனடியாக பணம் தேவை என்னும் சூழலில், பெரும்பாலானவர்கள் செய்வது, தங்க நகைகளை அடமானம் வைப்பதுதான். ஆனால் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெற இந்திய ரிசர்வ் வங்கி, அண்மையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடன் வழங்கும் நடைமுறைகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவும், பாதுகாப்பாக கடன்களை வழங்கவுமே இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்கம் வாங்குவது மட்டும் அல்ல, அதனை அடகு வைப்பதும் இனி கஷ்டம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

தங்கக்கட்டிகளை அடமானம் வைத்து கடன் பெற முடியாது - ஆர்பிஐ
வங்கிகளில் தங்க நகைக்கடன் பெறுவது முன்பு எப்படி இருந்தது?
வங்கிகளில் முன்பெல்லாம் நகையின் மதிப்பில் 85 சதவீதம்வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. அதுவும், நாம் வங்கிக்கு நகைகளை அடமானம் வைக்க சென்றால், நகை மதிப்பீட்டாளர் ஒருவர் வந்து நகைகளை மதிப்பீடு செய்வார். நகையின் தரத்தை சோதித்து அவர் சரி என்று சொல்லிவிட்டால் உடனடியாக கடன் வழங்கப்பட்டுவிடும். இதைத்தவிர, நகைக்கடனுக்கு என்று வேறு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் குடும்பங்கள், தங்களிடம் உள்ள நகைகளை வங்கிகளில் வைத்து, எளிதாக கடன் பெற்று வந்தனர். குறிப்பாக கோவிட் போன்ற காலங்களில், பெரும்பாலான குடும்பங்கள், இந்த நகைக்கடனை வைத்துதான் தங்கள் வாழ்க்கையையே நடத்தினர். இந்நிலையில்தான், நகைக்கடன் பெற ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.
புதிய விதிமுறைகள் என்ன?
நகைக்கடன் பெற இனி அந்த நகைக்கான ரசீது (அதாவது அந்த நகை வாங்கப்பட்டதற்கான பில்) உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
நகைக்கான தூய்மைச் சான்றிதழை வங்கியிடமிருந்து பெற வேண்டும். (தங்கத்தை மதிப்பீடு செய்யும் நடைமுறை வங்கிகளில் ஏற்கனவே உள்ள நிலையில், கூடுதலாக அதற்கு சான்றிதழை பெற வேண்டும்).
தங்க நகைகளுக்கு நகைக்கடன் கிடைக்கும். ஆனால், வங்கிகளால் விற்கப்படும் தங்க நாணயங்களை மட்டுமே அடமானம் வைக்க முடியும். பிற கடைகளில் வாங்கிய தங்க நாணயங்கள் ஏற்கப்படாது.
அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம்தான் கடனாக கிடைக்கும். அதாவது ரூ.1,00,000 மதிப்புள்ள தங்க நகை அடமானம் வைக்கப்பட்டால், ரூ.75,000 மட்டுமே கடனாக வழங்கப்படும்.
அடமானமாக பெறப்படும் தங்க நகைகளுக்கு 22 கேரட் தங்கம் அடிப்படையில்தான் கடன் வழங்கப்படும்.
தனிநபர் ஒரு கிலோ தங்கம் வரையில் மட்டுமே அடமானம் வைக்க முடியும். ஒரு கிலோவுக்கு மேல் நகையை அடகு வைக்க அனுமதி கிடையாது. தங்கக்கட்டிகளுக்கும் கடன் கிடைக்காது.
கடன் ஒப்பந்தத்தில் கடன் சம்பந்தமான அனைத்து தகவல்களும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். வங்கி நிர்வாகம் மற்றும் தனி நபர் என இருதரப்பினரின் கையெழுத்தும் கட்டாயம் இருக்க வேண்டும். நகைகளை ஏலத்துக்குக் கொண்டு செல்லும்போது அதுகுறித்த முழு தகவலையும் வங்கிகள் வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் வங்கி மீது வழக்கு தொடரலாம்.
வெள்ளிக் கட்டிகள், வெள்ளி ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்கப்படும். 999 தரத்திலான வெள்ளியை அடமானமாக வைத்து பயன்பெற முடியும்.
தங்க நகைக்கடன் பெற்றுள்ள மக்கள், அதனை திருப்பி செலுத்திய 7 வேலை நாட்களுக்குள், வங்கி அல்லது நிதி நிறுவனம், அடகு வைக்கப்பட்ட நகைகளை வாடிக்கையாளருக்கு திருப்பி தந்துவிட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 வீதம், வங்கி அல்லது நிதி நிறுவனம் வாடிக்கையாளருக்கு தர வேண்டும்.

தங்க நகை வாங்கியதற்கான ரசீது இருந்தால் மட்டுமே இனி கடன் கிடைக்கும்
புதிய கட்டுப்பாடுகள் ஏன்?
நகைக்கடனுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை இந்திய ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்குவதில் காணப்படும் முறைகேடுகளை தடுக்கவும், திருட்டு நகை அடமானங்களை ஒழிக்கவும் புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
விதிமுறையில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன?
நடுத்தர குடும்ப மக்கள், தாங்கள் வாங்கும் நகைகளுக்கு அண்மைக்காலமாகத்தான் ரசீதை வாங்குகின்றனர். ஏழை எளிய மக்கள் இன்றும் கூட ரசீதை பெறுவது இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் அவர்கள் 10 சவரன், 15 சவரன் என்று பெரிய நகைகளை வாங்குவதே இல்லை என்றே சொல்லலாம். தங்களால் முடிந்த அளவுக்கு சில கிராம்களில் மட்டுமே நகைகளை வாங்குகின்றனர். அவற்றை எளிதாக அடமானமும் வைத்து பணம் பெற்று வந்தனர். இந்நிலையில்தான், நகைகளை அடமானம் வைக்கும்போது, அவற்றை வாங்கிய ரசீதை கொண்டுவர வேண்டும் என்று ஆர்பிஐ கிடக்குப்பிடி போட்டுள்ளது.
மேலும் நம் நாட்டில் திருமணத்திற்கு பெண்களுக்கு சீராக பெற்றோர் போடும் நகைகளுக்கும், பரிசு பொருளாக மற்றவர்கள் கொடுக்கும் நகைகளுக்கும் பெரும்பாலான வீடுகளில் ரசீது இருக்காது. முன்பெல்லாம் ரசீது பற்றிய விழிப்புணர்வும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. எனவே பெரும்பாலான குடும்பங்களில் அவர்கள் வைத்துள்ள நகைகளுக்கு ரசீது இருக்காது என்பதே நிதர்சனம். அண்மைக்காலங்களில் நகை வாங்கியவர்கள் மட்டுமே அதற்கான ரசீதை எடுத்துவைத்திருப்பர். இதனால் ரசீது கொண்டுபோய் தங்க நகைக்கடன் பெறுவது சிரமமே.

தங்கத்தை போன்று வெள்ளிக்கும் இனி வங்கிகள் கடன் கொடுக்கும் - ஆர்பிஐ
அத்துடன் தங்க நாணயங்களை வாங்கி சேமிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதனை வங்கிகளில் மட்டுமே வாங்கியிருக்க மாட்டார்கள். நிச்சயம் பல்வேறு கடைகளில் வாங்கியிருப்பார்கள். அப்படியிருக்கையில் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் என்பதும் நடைமுறை சாத்தியமற்றது.
ஒரே ஒரு நல்ல விஷயம்!
இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளில் வரவேற்கப்பட வேண்டிய ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், வெள்ளி ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் என வெள்ளிக்கும் கடன் வழங்குவதுதான். ஆனால் வெள்ளியின் மதிப்பு தங்கத்தைவிட மிகக் குறைவாக இருப்பதால் பலரும் இந்த கடனை நாடுவதில்லை.
கட்டுப்பாடுகள் மக்களை பாதிக்கும்?
நகைக்கடனுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்போது வங்கியை நாடாமல் அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை நாட வேண்டிய சூழலுக்கு ஏழை எளிய மக்கள் தள்ளப்படுவார்கள். இது பொருளாதார கஷ்டத்தில் உள்ள மக்களை மேலும் பலவீனப்படுத்தும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இதே கருத்தைதான் அடகுக்கடை நடத்தும் சிலரும் முன்வைக்கின்றனர். கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்போது வங்கியை நாடாமல் தனி நபர்களைத் தேடும் நிலை உருவாகும். இதன்மூலம் அதிக வட்டி வசூலிக்கும் நபர்களிடம் எளிய மக்கள் சிக்கிக்கொள்வார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அடமானம் வைத்திருக்கும் நகைகளை முழுவதும் மீட்டப் பிறகுதான் மீண்டும் அடமானம் வைக்க முடியும்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
அடமானம் வைத்திருக்கும் நகைகளை முழுவதும் மீட்டப் பிறகுதான், மீண்டும் அந்த நகைகளை அடமானம் வைக்க முடியும். பழைய நகைகளை மீட்காமல் அப்படியே அடமானக் காலத்தை நீட்டிக்க முடியாது என்று கடந்த மாதம்தான் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த அதிர்ச்சியில் இருந்து தாங்கள் வெளிவருவதற்குள், மேலும் ஒரு பேரதிர்ச்சியை, பேரிடியை, ரிசர்வ் வங்கி தங்கள் தலையில் இறக்கியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் நகைகளை, வசதியில்லாதவர்களும், பணம் தேவைப்படுபவர்களும், நெருக்கடி சூழலில் உள்ளவர்களும் மட்டுமே அடமானம் வைப்பதாகவும், வசதியுள்ளவர்கள் வங்கி லாக்கர்களைத்தான் நாடுவதாகவும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கந்து வட்டி, மீட்டர் வட்டி உள்ளிட்ட கொடுமைகளுக்குள் மக்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் வங்கிக்கடன் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் தற்போதைய புதிய கட்டுப்பாடுகள், மக்களை மீண்டும் தனியார் வட்டி நபர்களிடம் சிக்க வைக்கும் பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
