கார சாரமான கடம்பா மீன் வறுவல்!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கென்றே பிரத்யேகமான, தனித்துவமான சில உணவு வகைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் கூந்தல் உலர்த்தியது (Squid dry fry).;

Update:2025-06-03 00:00 IST
Click the Play button to listen to article

கன்னியாகுமரி என்றதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகளும், முக்கடல் சங்கமிக்கும் அழகும்தான். ஆனால், இந்த மாவட்டத்திற்கென்றே பிரத்யேகமான, தனித்துவமான சில உணவு வகைகளும் உண்டு. அவற்றில் ஒன்றுதான் கூந்தல் உலர்த்தியது (Squid dry fry). பொதுவாக கடலோரப் பகுதிகளில் மீன் உணவுகள் பிரபலம் என்றாலும், கூந்தல் உலர்த்தியது அதன் தனித்துவமான சுவைக்காகவும், எளிமையான செய்முறைக்காகவும் பலரின் விருப்பமான டிஷ்ஷாக இருக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான டிஷ்சை எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பதை நமக்கு செய்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு.


கூந்தல் உலர்த்தியது செய்முறை

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

வாணலி சூடானதும், 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும், சோம்பு சேர்த்து பொரிய விடவும்.

காரத்துக்காக நறுக்கிய பச்சை மிளகாய் போடவும்.

இதனுடன் இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் நசுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கவும்.


பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்குதல் 

நான்காக வெட்டிய சின்ன வெங்காயத்தை (சின்ன வெங்காயம் மட்டுமே பயன்படுத்தினால் சுவை கூடும்) சேர்த்து வதக்கவும்.

விருப்பப்பட்டால் நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் சேர்த்து, மொத்தமாக அனைத்தையும் நன்கு வதக்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் (தலா ஒரு சின்ன டீஸ்பூன் அளவு) சேர்த்து, மசாலா வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். இந்த மசாலாக்கள் நன்கு குக் ஆக வேண்டும். இல்லையென்றால் பச்சையாக இருக்கும்.

சுத்தம் செய்து வைத்துள்ள கடம்பா மீனை மசாலாவுடன் சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.


கழுவி வைக்கப்பட்டுள்ள கடம்பா மீனை மசாலாவோடு சேர்த்து வதக்கும் தருணம்

கேரள ஸ்டைலில் கொடம்புளி பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இதற்குப் பதிலாக நறுக்கிய தக்காளி (2 தக்காளி) சேர்க்கவும்.

இந்தக் கலவையை நன்கு கலந்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.

சுமார் 5-10 நிமிடங்களில் தண்ணீர் சுண்டி, கடம்பா மீன் வெந்துவிடும். அளவுக்கு அதிகமாக வேக விடக்கூடாது.

இல்லையென்றால் கடம்பா மீன் ரப்பர் போன்று ஆகிவிடும். இது 5 நிமிடத்திலேயே நன்கு சாஃப்டாக வெந்துவிடும்.

மீன் நன்கு வதங்கி காய்ந்த பிறகு, காரத்துக்காகவும், ரோஸ்ட் சுவைக்காகவும் சிறிதளவு மிளகுத்தூள் (2 சின்ன ஸ்பூன் அளவு) சேர்த்து நன்கு கிளறவும்.


சுவையான (கூந்தல் உலர்த்தியது) கடம்பா வறுவல் ரெடி

இறுதியாக, வாசனைக்காகவும், சுவைக்காகவும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, மீண்டும் சிறிதளவு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

இப்பொழுது சுவையான கூந்தல் உலர்த்தியது தயார். சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும்.

கூந்தல் உலர்த்தியதில் உள்ள நன்மைகள்

கடம்பா மீன் (Squid) புரதச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதில் குறைந்த அளவு கொழுப்பும், அதிக அளவு வைட்டமின்களும், தாதுக்களும் (B12, செலினியம், இரும்புச்சத்து போன்றவை) நிறைந்துள்ளன.

புரதச்சத்து: உடலில் செல்களின் புத்துயிர்ப்புக்கு தேவையான புரதச்சத்து இதில் அதிகம் உள்ளது. தசைகளின் வளர்ச்சிக்கும் இது உதவும்.

குறைந்த கொழுப்பு: ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு ஏற்றது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: வைட்டமின் B12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், இரத்த சிவப்பணு உற்பத்திக்கும் உதவுகிறது. செலினியம் நோய் எதிர்ப்பு சக்திக்கு வலு சேர்க்கிறது.

இரும்புச்சத்து: இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.

செலினியம்: இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும்.

இந்த ரெசிபியில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய், பூண்டு, இஞ்சி, மிளகு போன்ற பொருட்களும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. தேங்காய் எண்ணெய் நல்ல கொழுப்புச்சத்தை கொண்டது. பூண்டு மற்றும் இஞ்சி, நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுவதுடன், செரிமானத்திற்கும் நல்லது. மிளகு, ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

Tags:    

மேலும் செய்திகள்