இயக்குநர்கள் திருமுருகன், குமரன் எடுத்த எல்லா சீரியல்களும் ஹிட்டுதான் - பாப் சுரேஷ்
ரேடியோ ஜாக்கியாக இருந்து வீடியோ ஜாக்கியாக மாறி, பின்னர் சீரியல் மற்றும் சினிமாக்களில் நடிகராக தனது திறமையை வெளிப்படுத்தி, தற்போது இயக்குநராக உயர்ந்துள்ள பிரபல நட்சத்திரம் பாப் சுரேஷ், ராணி நேயர்களுக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணல் உங்களுக்காக...
வீடியோ ஜாக்கியாக இருந்த நீங்கள் எப்படி சீரியல் நடிகரானீர்கள்?
நாமே எல்லாருமே ஒரு நல்ல கலைஞனாக வர பல்வேறு விதங்களில் முயற்சிப்போம். நானும் கூட அப்படித்தான் சினிமாத்துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டேன். இருக்கின்ற திறமையை வைத்து முதலில் ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் வீடியோ ஜாக்கி ஆகியபோது கிடைத்ததுதான் இந்த சினிமா சீரியல் நடிப்பு வாய்ப்புகள் எல்லாம்.
ரேடியோ ஜாக்கியாக இருந்து இயக்குநராக உயர்ந்துள்ள பாப் சுரேஷ்
சினிமாத்துறைக்கு வருவதற்கு குடும்பத்தினரின் எதிர்ப்பை எப்படி சமாளித்தீர்கள்?
எனக்கு காதல் திருமணம் என்பதால் எதிர்ப்பு என்பது அவ்வளவாக இல்லை. காரணம் நான் எனது மனைவியை காதலிக்கும்போதே எனது சினிமா ஆசையை சொல்லிவிட்டேன். ஆதலால் பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் இல்லை. மனைவியின் ஆதரவு எனக்கிருந்தது.
சீரியல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் நடிகை யார்?
எனக்கு என்னுடன் பயணிக்கும் அனைவரையுமே மிகவும் பிடிக்கும். அந்த வகையில் எனக்கு பிடித்தவர்கள் என்றால் அது என்னுடைய நண்பர்களான "நாளைய இயக்நர்கள்தான்". எனது நண்பர்கள் அனைவருமே இந்த தொழிலுக்கு வந்துவிட்டார்கள். எல்லோருமே என்னுடன் நட்பின் அடிப்படையில் அவர்கள் பண்ணும் படத்தினை பற்றி விவாதித்து என்னிடம் கருத்துகளை கேட்பார்கள். அப்படிப்பட்ட நல்லதோர் நட்பு வட்டம் எனக்கு உண்டு.
ஆர்.ஜே. பாலாஜியை முன்னோடியாக பார்க்கிறேன் - பாப் சுரேஷ்
ஆர்.ஜே. பாலாஜியை எப்படி பார்க்கின்றீர்கள்?
கடந்த சில வருடங்களாவே ஆர்.ஜே., வி.ஜே., சின்னத்திரை நடிகர்கள் என பலர் சினிமாவிற்கு வரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஒரு குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகரமான ஆர்.ஜே.வாக இருந்து, அதன் பிறகு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து பின்னர் வெற்றிகரமான ஒரு இயக்குநராக, நடிகர் சூர்யாவை வைத்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ள ஆர்.ஜே. பாலாஜி எனக்கு ஒரு முன்னுதாரணமாக உத்வேகமாக மாறியுள்ளார். அவர் ஆர்.ஜே.வாக இருந்தபோது சினிமாவை அந்த அளவிற்கு விமர்சித்துள்ளார். ஆனால் அவர் தற்போது சினிமாவிற்குள் வந்து நல்லதோர் படைப்பாளியாக இருக்கின்றார்.
உங்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் எது? கல்யாண வீடா? இ.எம்.ஐ.யா?
நான் நடித்ததில் எனக்கு இ.எம்.ஐ சீரியலில் மிகவும் வலுவான பாத்திரம் கிடைத்ததென்றே சொல்ல வேண்டும். அது ஒரு பலவகைப்பட்ட அழுத்தமான பாத்திரம் என்றே நான் கூறுவேன். அந்த சீரியலில் நான் ஐ.டியில் வேலை செய்வேன். வீட்டில் தற்கொலைக்கு முயல்வது மாதிரியான காட்சி இருந்தது. எனவே அது என்னை பொறுத்தவரையில் மிகவும் ஆழமான அழுத்தமான கதாபாத்திரம். ஆனால் மிகவும் ரசித்து மகிழ்ந்தது "தமிழும் சரஸ்வதியும்" சீரியல்தான். காரணம் அது எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த கதாபாத்திரத்தில் நான் காமெடியனாகவும் வில்லனாகவும் நடித்திருப்பேன்.
பாப் சுரேஷ் இயக்கிய இரவின் கண்கள் திரைப்படக் காட்சி
இரவின் கண்கள் படம் நீங்கள் இயக்க காரணமென்ன? இதுபோன்ற திகில் படங்களை இனிவரும் காலங்களில் இயக்குவீர்களா?
நிச்சயம் இயக்குவேன். அதற்கான முயற்சிகளும் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. நாளைய இயக்குநருக்கு பிறகு நாம் ஏன் ஒரு அரைமணி நேர குறும்படத்தை தயாரிக்க கூடாது என்று யோசித்தேன். அதனை தொடர்ந்து ஒரு வெப் சீரிஸ் முடித்தேன். "லெட்ஸ் பிரேக் அப்" என்பதை குறும்படமாக தயாரித்து துபாயில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டேன். ஆனால் அதனை அவர்கள் ஒரு படமாகவே யூ டூப் சேனலில் வெளியிட்டுவிட்டனர். இதனையறிந்த நாளைய இயக்குநர்களில் ஒருவரான பாலா என்னை மிகவும் பாராட்டினார். அவர் நிறைய அறிவியல் புனைக் கதைகளை எழுதி தயாரித்துள்ளார். அப்படி என் ஒரு சில நண்பர்களால் பணம் போட்டு எடுக்கப்பட்டதே "இரவின் கண்கள்" என்ற திரைப்படமாகும். இது A I (செயற்கை நுண்ணறிவு) தொடர்புடைய திகில் படமாக அமைந்தது.
உங்களுடன் சேர்ந்து பணி செய்தவர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார்?
அப்படி பார்த்தல் ராஜ் மியூசிக்-ஐ என்னால் மறக்க முடியாது. எனது கல்லூரி நாட்களை போன்றே அதுவம் இருந்தது. ஒன்றுமே தெரியாமல் நான் மீடியாவை கற்றுக்கொண்டதே அங்குதான். அப்போது என்னுடன் அங்கு பணிபுரிந்த பலர் தற்போது நல்ல நிலைமையில் உள்ளனர். எனக்கு மிகவும் பிடித்தது மறக்கமுடியாதது என்றால் அதுதான்.
சீரியல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்?
எனக்கு நிறையபேர் பிடிக்கும். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சீரியல் நடிகர் தீபக் மிகவும் பிடிக்கும்.
பிடித்த சீரியல் நடிகை?
தற்போது சீரியல்களுக்கு நிறைய புதுமுக நடிகைகள் வந்துவிட்டனர். அதில் எனக்கு நான் நடித்த "தமிழும் சரஸ்வதியும் " சீரியலில் நடித்துள்ள நடிகைகள் மீரா, நட்சத்திரா ஆகியோரை மிகவும் பிடிக்கும்.
இயக்குநர் திருமுருகன் - நடிகர் விஜய்
மிகவும் பிடித்த இயக்குநர்கள் என்றால் யாரைக் கூறுவீர்கள்?
எனக்கு இயக்குநர்களிலேயே திருமுருகன் மற்றும் குமரனை மிகவும் பிடிக்கும். காரணம் இருவருமே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல் இயக்குநர்களாக உள்ளனர். இவர்கள் தொட்ட எல்லா சீரியல்களுமே ஹிட்டடித்துத்துள்ளன. இயக்குநர் திருமுருகன் கொடுத்த சீரியலின் TRP ரேட்டிங்கை போன்று இந்தியாவில் வேறு எந்த சீரியலும் TRP ரேட்டிங்கை கொடுக்கவில்லை. இயக்குநர் குமரனை பொறுத்தவரையில் அவர் தற்போது இயக்கிவரும் "சிறகடிக்க ஆசை" உட்பட அனைத்து சீரியல்களுமே நம்பர் 1-ஆக வந்துள்ளது.
இயக்குநர்கள் திருமுருகன் மற்றும் குமரனிடமிருந்து சீரியல்களில் நடிக்க அழைப்பு வந்தால் போவீர்களா?
நிச்சயமாக செல்வேன். ஏனென்றால் இவர்கள் இருவரிடமிருந்தும் ஒவ்வென்றையும் நாம் கற்றுக்கொள்ளலாம். இயக்குநர் திருமுருகன், நேரடியான காட்சிகளை எடுக்கும் இடத்தில் ஒற்றை ஷாட்களில் நிறைய விஷயங்களை படப்பிடிப்பு செய்வார். அதுவும் சாதாரண வெளிச்சத்தில் கிராமங்களில் அந்த படப்பிடிப்பை நடத்துவார். இயக்குநர் குமரனை பொறுத்தவரையில் அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் உண்டு. காமெடி கலந்த ரசனையோடு படப்பிடிப்பு செய்வார். இவர்கள் இருவருக்குமே தனித்த தனியான படப்பிடிப்பு பாணி உண்டு.
பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நீங்கள் நடிக்க விரும்பும் நடிகர்கள் யார்? அஜித், விஜய் உள்ளிட்டோர் அழைத்தால் செல்வீர்களா?
நிச்சயமாக செல்வேன். இதில் நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார். அவரது கடைசிப் படமான ஜனநாயகனும் தற்போது முடிந்துவிட்டது. நடிகர்கள் அஜித், சூர்யா என எந்த நடிகர்கள் அழைத்தாலும் அவர்களுடன் இணைந்து நடிப்பேன். காரணம் அவர்களுடன் அமர்ந்து உரையாடுவதிலும், நடிப்பதிலும் பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்; அஜித் ரேஸிங்கில் கவனம் செலுத்துகிறார் - பாப் சுரேஷ்
நடிகர் விஜய் புதிய கட்சி ஆரம்பித்திருப்பதை ஒரு கலைஞனாக நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
நடிகர்கள் எல்லோருக்குமே ஆசைகள் இருக்கும். அந்த வகையில் ஒருகட்டத்தில் சினிமா என்பது போரடிக்கக்கூடும். விஜய், நிறைய வருடங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கின்றார். ஒரு கட்டத்தில் நாம் அடுத்த நிலைக்கு கடந்து செல்லவேண்டும் என்ற ஆசை ஏற்படும். இதே போன்றுதான் நடிகர் ரஜினியும் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும்போதே ஆன்மிகத்தில் தனக்கென்று ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டார். அதாவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பல படங்களில் பிசியாக ஓய்வின்றி நடித்து கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர் கதாநாயகன் என்ற நிலையில் இருந்து இறங்கி துணை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தபோது அவர் நடிகர் ரஜினியிடம் சொன்னது, "பரவாயில்லை நீ நடித்து கொண்டிருக்கும் போதே ஆன்மிகத்திற்குள் சென்று பயணிக்க தொடங்கிவிட்டாய்" என்பதுதான். அதேபோன்று நடிகர் அஜித்தும் சினிமாவைத் தவிர்த்து பைக் ரேசில் கலந்து கொண்டுள்ளார். சினிமாவில் தொடர்ந்து நடித்தாலும் அலுப்புத்தட்டும். எனவே அவரவர்க்கு என்று மற்றோரு மாற்று வழி அல்லது பொழுதுபோக்கு இருப்பதில் தவறில்லை. அதேபோன்றுதான் நடிகர் விஜய்யும் அரசியலில் ஈடுபட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். தேர்தல் என்பதும் ஐபிஎல் மேட்ச் பார்ப்பதை போன்றுதான். திறமை இருப்பவர்கள் 4, 6 என நன்கு விளையாடி விளாசித் தஙளளுவார்கள்.
நடிகர் விஜய், தேர்தலில் ஜெயித்தால் நல்லாட்சியைத் தருவார் என்று நம்புகின்றீர்களா?
அதனை நாம் சொல்லமுடியாது. புதியதாக ஆட்சிக்கு வர விரும்பும் எல்லோருமே நல்லாட்சியைக் கொடுக்கவேண்டும் என்றே நினைக்கின்றனர். மக்களும் அதையே எதிர்பார்க்கின்றனர். அவர் நல்லாட்சி கொடுக்கட்டும். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அது தெரியும். மற்றபடி ஒரு கலைஞனாக அவர் அடுத்த கட்டத்திற்கு சென்று இருப்பதையே நான் மகழ்ச்சியுடன் காண்கிறேன்.