மன்னிப்பு கேட்க முடியாது! கமலின் "தக் ரிப்ளை"க்கு பெருகும் ஆதரவு!
தமிழ் சினிமாவின் லெஜண்டரி நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் மாரடைப்பால் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே ‘தக் லைஃப்’ புரமோஷன் பணியில் ஈடுபட்டுவந்த கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதனால் கர்நாடகாவில் இந்த படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதுபோக இன்னும் பல சுவாரஸ்யங்களை சினி பிட்ஸ் பகுதியில் காணலாம்.
தனக்காக கல்லறை கட்டியிருந்த மறைந்த நடிகர் ராஜேஷ்
இறக்கும் முன்பே கல்லறை!
பிரபல நடிகரும் எழுத்தாளருமான ராஜேஷ் தனது 75வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவர் தான் இறப்பதற்கு முன்னரே தனக்காக கல்லறையை கட்டி வைத்திருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ராஜேஷ் லண்டனில் கார்ல் மார்க்ஸின் கல்லறைக்கு சென்றபோது அதைபார்த்து ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதனால் இந்தியா வந்ததும் அதேபோல் தனக்கும் ஒரு கல்லறை கட்டவேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். கார்ல் மார்க்ஸ் கல்லறையை பார்த்துவிட்டு வந்த 6 மாதத்தில் அவருடைய அம்மா இறந்துவிட, அதே கல்லறையை போன்று வால்ட் வைத்து கட்டி, அதில் தனது அம்மாவை அடக்கம் செய்திருக்கிறார். அப்போது ராஜேஷிற்கு வயது 40. இந்த மாதிரி கல்லறைகள் 5 வருடத்திற்கு ஒருமுறை கீழே போய்க்கொண்டே இருக்குமாம். இதனால் மேலே அடுத்தடுத்து உடல்களை அடக்கம் செய்யமுடியுமாம். அதே கல்லறையில்தான் தனது அம்மா மற்றும் மனைவியை அடக்கம் செய்திருக்கிறார். இந்நிலையில் அதே கல்லறையில் ராஜேஷின் உடலும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு
கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமா?
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் கலந்துகொள்ள, அந்த மேடையில் ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று கமல் பேசினார். இதனால் கமலின் பேச்சுக்கு கர்நாடகா அரசியல் தலைவர்கள் உட்பட அங்குள்ளவர்கள் கண்டனங்களை தெரிவித்ததோடு மன்னிப்பு கேட்கும்படி கூறினர். மேலும் ‘தக் லைஃப்’பை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று அம்மாநில திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கூறியிருக்கிறார். இருந்தாலும் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன் என்று கமல்ஹாசன் ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டார். கர்நாடகாவில் இப்படம் வெளியாகாத பட்சத்தில் பலகோடி இழப்பு ஏற்படும் என்றாலும் நடிகர் சங்கங்கள் உட்பட திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கணவர் மற்றும் குழந்தைகளுடன் நெதர்லாந்தில் நடிகை நயன்தாரா
ஜாலி டிரிப்பில் நயன் ஃபேமிலி!
திருமணத்திற்கு முன்பிருந்தே தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா. திருமணத்திற்கு பிறகும் அதை தொடர்ந்து பின்பற்றி வரும் இந்த தம்பதி, தங்களது இரட்டை மகன்களான உயிர் மற்றும் உலகையும் இப்போது எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்கின்றனர். தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘டாக்சிக்’, ‘ராக்காயி’, ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ என வரிசையாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நயன், இடையே சிறிது பிரேக் எடுத்துக்கொண்டு தனது குடும்பத்துடன் நெதர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு தனது மகன்கள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அவை தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
சிம்பு - மணிரத்னம் கூட்டணியில் முழுக்க முழுக்க காதல் படம் உருவாகவுள்ளதாக தகவல்
மீண்டும் மணிரத்னத்துடன் சிம்பு?
‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதேபோல் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியை வைத்து சிறிய பட்ஜெட் படமொன்றை இயக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதனை மணிரத்னம் மறுத்துவிட்டார். இந்நிலையில் சிம்பு - மணிரத்னம் கூட்டணியில் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டு அடுத்த படம் உருவாகவிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்காமல் தனியாக நடிக்கவிருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மணிரத்னத்தின் காதல் திரைப்படங்கள் அனைத்துமே இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன. இந்நிலையில் இந்த புதிய படம் அந்த வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் எஸ்.கேவின் ‘பராசக்தி’ படமும் வெளியாகவிருப்பதாக தகவல்
சிவகார்த்திகேயன் காரியவாதியா?
விஜய், அஜித் இருவரும் அரசியல், கார் ரேஸ் என தங்களுடைய ரூட்டை மாற்றிவிட்ட நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிலும் குறிப்பாக, விஜய்யே எஸ்.கே கையில் துப்பாக்கியை கொடுத்ததும் அவருடைய மார்க்கெட் தடாலடியாக ஏறிவிட்டது என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில் விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாகவிருக்கும் அதேசமயத்தில் எஸ்.கேவின் ‘பராசக்தி’ படமும் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எப்போதும் விஜய்மீது மரியாதை வைத்திருப்பதாக கூறும் சிவகார்த்திகேயன், தனது படத்தை அவருடைய படத்திற்கு போட்டியாக வெளியிட அனுமதிப்பது மிகவும் தவறானது என வருத்தம் தெரிவித்துவருகின்றனர் விஜய் ரசிகர்கள். அதேசமயம் விஜய்க்கு தான் இணையானவர் என்பதை நிரூபிக்க கிடைத்திருக்கும் கடைசி சான்ஸ் இது என்பதால்கூட எஸ்.கே இதற்கு ஓகே சொல்லியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. எப்படியாயினும் எஸ்.கே இப்படி செய்யும்பட்சத்தில் விஜய் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு குறையலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஃபகத்துடன் நடிக்க ஆசைப்படும் ஆலியா பட் & திரிஷா
ஃபகத்துடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகைகள் !
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆலியா பட். நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், மகள் ராஹா பிறந்த கையோடு மீண்டும் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இனிமேல் தனது குழந்தையையும் கருத்தில்கொண்டு கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கப்போவதாக கூறியிருந்த இவர், அதேபோல் சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்துவருகிறார். இந்நிலையில் அவரிடம் யாருடன் சேர்ந்து நடிக்க ஆசை என்று ஒரு நேர்காணலில் கேட்டபோது, நடிகர் ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார். ‘ஆவேஷம்’ தனக்கு பிடித்த படங்களில் ஒன்று எனவும், அதில் ஃபகத் நம்பமுடியாத மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதேபோல் நடிகை திரிஷாவிடம் சமீபத்தில் இதே கேள்வி கேட்கப்பட்டபோது அவரும் ஃபகத்துடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார். விரைவில் ஃபகத்துடன் இந்த நடிகைகள் இணையலாம் என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.