சிறு வயதிலேயே குடும்பத்திற்காக உண்மையாக "எதிர்நீச்சல்" போட்டவர்தான் நடிகை பிரியதர்ஷினி!
சின்னத்திரையின் நவரச நாயகி என்று அன்புடன் அழைக்கப்படும் பிரியதர்ஷினி, நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற குடும்பப் பாங்கான தோற்றத்தாலும், அழகான நடிப்பாலும் பலரையும் கவர்ந்தவர்.;
சின்னத்திரையின் நவரச நாயகி என்று அன்புடன் அழைக்கப்படும் பிரியதர்ஷினி, நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற குடும்பப் பாங்கான தோற்றத்தாலும், அழகான நடிப்பாலும் பலரையும் கவர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், நடிகையாகவும் உயர்ந்து, பல்வேறு நடன வடிவங்களில் சிறந்து விளங்கி வரும் இவர், நடிகையாக மட்டும் இல்லாமல் தந்தையின் அறிவுரைகளை ஏற்று, குடும்பப் பொறுப்புகளை திறம்பட கையாண்டு சிறந்த குடும்பத் தலைவியாகவும் பலருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார். இப்படி கலைத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்று எதிர்நீச்சல் போட்டு வலம்வரும் பிரியதர்ஷினி நாளை (ஜூன் 4) தன் 47வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், இவரது ஊடகப் பயணம், கலை ஆர்வம், கடின உழைப்பு, குடும்பத்திற்காக செய்த அர்ப்பணிப்பு ஆகியவை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கலையும் கடமையும்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த நீலகண்டன் - ஸ்ரீலதா தம்பதியரின் மூத்த மகளாக, 1978 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் நாள் சிங்கப்பூரில் பிறந்தவர் பிரியதர்ஷினி. இவருக்கு திவ்யதர்ஷினி என்ற தங்கையும், சுதர்சன் என்ற தம்பியும் உள்ளனர். சிவில் இன்ஜினியராக பணிபுரிந்த தந்தை நீலகண்டன், பிரியதர்ஷினியின் விருப்பங்களுக்கு எப்போதும் பக்க பலமாக இருந்திருக்கிறார். சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்த பிரியதர்ஷினிக்கு, பெற்றோர் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தனர். மேலும், பரதநாட்டியக் கலைஞர்களான மதுரை முரளிதரன் மற்றும் மணிமேகலை ஆகியோரிடம் 15 ஆண்டுகள் பரதநாட்டியம் பயின்ற பிரியதர்ஷினி, குச்சிப்புடியை குரு கல்யாணியிடமும், கதக்கலையை கிரியிடமும் பல ஆண்டுகள் கற்றுத் தேர்ந்தார். இப்படி பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக்களி எனப் பல்வேறு கலைகளில் பயிற்சி பெற்றதோடு மட்டுமல்லாமல், தனது குருவுடன் இணைந்து பல மேடைகளில் நடனமாடினார். நடனத்துடன், 'வீரத்தாய் வேலுநாச்சியார்', 'சிவகாமியின் சபதம்' போன்ற பல இதிகாச மேடை நாடகங்களிலும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
பரதநாட்டிய கலைஞராக மற்றும் குழந்தை நட்சத்திரமாக பாக்கியராஜுடன் பிரியதர்ஷினி
பிரியதர்ஷினியின் இந்த பன்முகத் திறமையை அறிந்த இயக்குநர் பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா பாக்கியராஜ், இவரை ஏழு வயதில் தனது கணவரின் ‘தாவணி கனவுகள்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். 1984 ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில், பாக்கியராஜின் ஐந்து தங்கைகளில் இளைய தங்கையாக சிறப்பாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு ‘உயிரே உனக்காக’, ‘இதயத்தை திருடாதே’, ‘குற்றவாளிகள்’, ‘நாகதேவதை’ போன்ற பல படங்களில் ஆண்டுக்கு ஒரு திரைப்படம் எனத் தொடர்ந்து நடித்து ஒரு பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். இதேவேளை சென்னை லேடீஸ் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்த பிரியதர்ஷினி, ராணி மேரி கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார். கல்லூரி படிக்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக அவரது தந்தை நீலகண்டன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமான நிலையில், குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் மூத்த மகளான பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்து மறைந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு பிரியதர்ஷினி குடும்பப் பொறுப்புகளை கையில் எடுத்து தந்தை கூறிய அறிவுரைகளின் படி நடக்க துவங்கினார்.
காதலும் வெற்றியும்
சிறுவயதிலேயே வெள்ளித்திரையில் தோன்றி கவனத்தைப் பெற்ற பிரியதர்ஷினி, தனது கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு தொலைக்காட்சித் துறையிலும் வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். அந்த சமயம் பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த அவர், ஒரு முறை தூர்தர்ஷனில் நடனமாடியபோது, அங்கு தயாரிப்பாளராக இருந்த கீதா என்பவர் இவரது குரல் வளத்தைக் கேட்டு, தொகுப்பாளராகப் பணியாற்ற அழைத்துள்ளார். இதன் விளைவாக, ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் 'மலரும் மொட்டும்' என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது . அப்போது பிரியதர்ஷினி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது தனது தங்கை டிடியையும் அழைத்துச் செல்வாராம். அங்கு டிடியின் சுறுசுறுப்பைக் கண்ட அந்நிறுவனம், அவருக்குக் குழந்தைகள் நிகழ்ச்சியில் நடிக்க வாய்பளித்துள்ளது. அந்த சமயம் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த டிடிக்கு அதுவே முதல் ஊடக அனுபவமாக அமைந்தது. பின்னர், அதே தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் மாறிய பிரியதர்ஷினி அதிலும் மக்களின் கவனத்தைப் பெற்றார். பிறகு 1998 ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘விழுதுகள்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் முதன் முதலாக நடித்த இவர், அதன் பிறகு ‘கோலங்கள்’,’வசந்தம்’, ‘கனவுகள் இலவசம்’, ‘எத்தனை மனிதர்கள்’, ‘அக்கினி பரீட்சை’, ‘மை டியர் பூதம்’ போன்ற பல தொடர்களிலும் நடித்து மிகவும் பிரபலமானார்.
தங்கை டி.டி மற்றும் கணவர் ரமணாவுடன் பிரியதர்ஷினி
இப்படி தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் வலம் வந்த பிரியதர்ஷினி, பின்னர் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மாறி நீண்ட காலம் அங்கு பணியாற்றினார். ரமணா கிஷோர் என்பவரை பிரியதர்ஷினி காதலித்தார். இந்தக் காதல் நீண்ட நாட்கள் நீடித்து திருமணத்திலும் முடிந்தது. ரமணா - பிரியதர்ஷினி தம்பதிகளுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார், தற்போது அவர் தென்னாப்பிரிக்காவில் ஏவியேஷன் துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "மானாட மயிலாட" என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை வென்ற இவர், "பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்" என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறந்த நடன மங்கை என்ற பட்டத்தையும் வென்றார். இது தவிர மயிலாப்பூர் அகாடமி விருது, பிகைன்ட்வுட்ஸ் விருது, சிறந்த நடன மங்கை விருது போன்ற பல விருதுகளையும் வென்றுள்ள பிரியதர்ஷினி, தர்ஷினி டான்ஸ் அகாடமி என்ற நடனப் பள்ளியையும், இந்தியன் சலங்கு என்ற இணையவழி நடனப் பயிற்சியையும் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இப்போதும் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, ஜீ தமிழ் போன்ற பல தொலைக்காட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் பிரியதர்ஷினி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் நடித்து மிகுந்த கவனம் பெற்று வருகிறார்.
எதிர்நீச்சல் தந்த அடையாளம்
எதிர்நீச்சல் சீரியல் குழுவினருடன் பிரியதர்ஷினி
90களில் இருந்தே பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், பல நெடுந்தொடர்களில் நடித்தும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த பிரியதர்ஷினிக்கு, ‘எதிர்நீச்சல்’ தொடர் மேலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த தொடரில் ஆதிகுணசேகரனின் தம்பி ஞானசேகரனின் மனைவியாக, ஆணாதிக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தில் சிக்கித்தவிக்கும் எண்ணற்ற இல்லத்தரசிகளின் பிரதிநிதியாகவே ரேணுகா எனும் கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருந்த பிரியதர்ஷினி தனது அபாரமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். குறிப்பாக துவக்கத்தில் தனக்கென எந்த முடிவுகளையும் எடுக்க முடியாமல், கணவரின் கட்டுப்பாட்டிலேயே வாழும் ஒரு சராசரிப் பெண்ணாக அவர் சித்தரிக்கப்பட்ட விதம், பலரின் மனதிலும் ஆழமாகப் பதிந்தது. பின் மெல்ல மெல்ல தனக்குள்ளேயே ஒரு வலிமையைப் பெற்றுக்கொண்டு, நியாயத்திற்காகக் குரல் கொடுக்கத் துணியும் ரேணுகாவின் மாற்றம் பிரியதர்ஷினியின் நடிப்பின் உச்சக்கட்டமாக அமைந்திருக்கும். இதில் பிரியதர்ஷினி எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், கதாபாத்திரத்தின் உணர்வுகளை உள்வாங்கி அவர் வெளிப்படுத்திய நடிப்பு, பல இல்லத்தரசிகளை ரேணுகாவுடன் எளிதில் ஒன்றிப்போக வைத்தது. மேலும் அவரது இயல்பான உடல் மொழி, நுட்பமான முகபாவணைகள், மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே பெற்றுத்தந்தது டன், ரேணுகா கதாபாத்திரத்தை வெறும் தொலைக்காட்சி கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல், வாழும் மனிதராகவே உணர வைத்தது.
அப்பாவின் அறிவுரை
பிரியதர்ஷினி கல்லூரியில் கல்வி பயின்று வந்த நேரத்திலேயே, அவரது தந்தை நீலகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மோசமான நிலைக்குச் சென்றுள்ளார். தன் உடல்நலம் சீராகக் குறைந்து வருவதை உணர்ந்த அவர், குடும்பத்தின் மூத்த மகளான பிரியதர்ஷினியை அழைத்து சில முக்கிய அறிவுரைகளை வழங்கினாராம். அப்போது அவர், தான் மறைந்த பிறகு குடும்பத்தைக் கட்டிக்காப்பது உன் கடமை என்றும், புகைபிடிக்கவோ, மது அருந்தவோ, யாரிடமும் கடன் வாங்கவோ கூடாது என்றும், குறிப்பாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது, யூக விளையாட்டுகளில் பணத்தை முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க முயற்சிப்பது கூடாது என்றும் அறிவுரை கூறி, அதற்காக சத்தியமும் அவரிடம் வாங்கினாராம். இப்படி அறிவுரைகள் வழங்கப்பட்ட சில நாட்களிலேயே தந்தை நீலகண்டன் உடல்நலக் குறைவால் மறைந்துவிட, பிரியதர்ஷினியின் குடும்பம் பொருளாதாரரீதியாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தந்தைக்கு அளித்த சத்தியத்தைக் காப்பாற்றும் நோக்கில், பிரியதர்ஷினி நல்ல முறையில் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என உறுதி எடுத்து தன் குடும்பத்தினரின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததோடு, இன்றுவரை அப்பாவிற்கு அளித்த சத்தியத்திலிருந்து மீறியது இல்லையாம்.
குடும்பப்பாங்கான இருவேறு தோற்றங்களில் பிரியதர்ஷினி
குறிப்பாக தந்தை அளித்த அறிவுரைப்படி, இன்றுவரை புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பதில் பிரியதர்ஷினி மிகக் கவனமாக இருந்து வருவதோடு, நண்பர்கள் மது அருந்தும்போது கூட, அவர் அங்கிருந்து விலகி வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வாராம். ஏன், இன்றைய காலகட்டத்தில் பலர் வருமானத்திற்கு மீறி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் நிலையில், பிரியதர்ஷினி அவற்றை முற்றிலும் தவிர்த்து தன் சொந்த காசில்தான் இன்றுவரை தனக்குத் தேவையான விஷயங்களை வாங்கி வருகிறாராம். அதிலும் ஆன்லைன் பர்ச்சேஸ் என்பது அவருக்கு அறவே பிடிக்காதாம். எப்போதுமே சில்லறை வர்த்தகத்தைதான் விரும்பக்கூடிய நபராம். இதுதவிர அன்று முதல் இன்றுவரை தந்தை சொன்ன வார்த்தையைப் பின்பற்றி அவர் மீது அளவற்ற பாசம் கொண்டுள்ள பிரியதர்ஷினி, தனது பெயருடன் தந்தையின் பெயரையும் இணைத்து, தனது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் "பிரியதர்ஷினி நீலகண்டன்" எனப் பதிவிட்டு வருவதையே வழக்கமாகக் கொண்டு வருகிறார். இப்படி கலை, கடமை, பொறுப்பு, மற்றும் குடும்பப்பாசம் என அனைத்திலும் தனித்துவமான ஒரு மங்கையாக பயணித்து வரும் பிரியதர்ஷினி, தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த புதிய ஆண்டின் புதிய துவக்கம் பிரியதர்ஷினிக்கு மேலும் பல வெற்றிகளைப் பெற்று தர நாமும் வாழ்த்துவோம்!